Unordered List

08 ஏப்ரல் 2013

பாக்கிஸ்தான் இல்லாத IPL, ரசிகர்கள் கோபம் - கிரிக்கெட் பரபரப்பு


கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத மேட்ச்  என்று ஒன்று இருக்கும். அது இந்தியா ஆஸ்திரேலியாவுடனோ அல்லது பாக்கிஸ்தானுடனோ ஜெயித்த விளையாட்டாக இருக்க வாய்ப்பு அதிகம். அதிலும் பாகிஸ்த்தான் என்றால் இன்னும் சிறப்பு. அந்த நாட்டுடன் நமக்கு இருக்கும் கிரிக்கெட் தொடர்பு அப்படிப்பட்டது.

என்னதான் பிரச்சனை இருந்தாலும் அந்த நாட்டுடன் நமக்கு இருக்கும் தொடர்பை அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியாது. பாக்கிஸ்தான் அரசுகளும் இந்தியாவை எப்பொதுமே மறப்பதில்லை. அப்படியே நாம் மறந்தாலும் குண்டுவெடிப்பு, கடத்தல் என்று ஏதாவது செய்து நம் கவனத்தை ஈர்க்கத்தவறுவதும் இல்லை.

இப்படியிருக்கையில் கிரிக்கெட்டின் உலகத்திருவிழாவாக நடக்கும் ஐ.பி.எல்- பாக்கிஸ்தானை மட்டும் மறந்துவிட்டு நடப்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை. அரசியல்ரீதியாக நமக்கு அந்த நாட்டோடு பிரச்சனை இருப்பது உண்மைதான். ஆனால் அதை விளையாட்டோடு கலப்பது விளையாட்டு அல்ல.

தமிழர்களைப் பார்த்து இந்தியர்கள் அனைவரும் பாடம் கற்க வேண்டிய நேரம் இது. நமக்கு இலங்யையுடன் எந்த வருத்தம் இருந்தாலும் அதை போராட்டத்தோடு விட்டுவிட்டு ஐ.பி.இல் ஜோதியில் கலந்து நமது விளையாட்டு உணர்வை எப்படிக்காட்டுகிறோம் என்பதை அனைவரும் காணவேண்டும்.

ஆனால் இலங்கை அணியினர் சென்னையில் விளையாடவில்லையே என சிலர் வருந்தலாம். ஆனால் இந்த அவமானத்தைத் துடைக்க,  இலங்கையின் சங்கக்காரா தலைவராக இருக்கும் “உதயசூரியன்” அணியும், அதனுடன் நமது ஸ்ரீகாந்த்தும் வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.  இந்த போட்டிகளை அனைவரும் தொலைக்காட்சியில் கண்டு களிக்கிறார்கள் என்பதையும் மறுக்கமுடியாது.

தயவு செய்து நம்மைபோல மற்ற இந்தியர்களும் விளையாட்டை விளையாட்டாக நினைத்து பாக்கிஸ்தான் அணியையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே கிரிக்கெட்டை உயிராக நினைக்கும் ரசிகர்களின் குரலாகும். வேண்டுமானால் அந்த அணியினர் காஷ்மீரில் நடக்கும் போட்டிகளில் மட்டும் கலந்துகொள்ள தடை விதித்துக்கொள்ளலாம் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியா, பாக்கிஸ்தானை இப்படி தனிமைப் படுத்திவந்தால், அது சீனாவுடன் கிரிக்கெட் விளையாடப்போய்விடும் வாய்ப்பும் இருப்பதாக சில ராஜதந்திர நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக சீனாவில் பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படுவதாகவும் மலிவு விலை பேட் மற்றும் பந்துகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.