Unordered List

26 ஆகஸ்ட் 2013

செத்தவன் சொன்னது


அவனை எனக்கு முன்பே தெரியாதென்பதில்லை, அவன் செத்துவிட்டான் என்பதில் யாருக்கும் சந்தேகமேதுமில்லை, ஆனால் அவன் மரணத்தில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே அவனே பேச ஆரம்பித்ததும் ஒரு வகையில் நல்லதே.

எல்லோரையும் போலவே சிறுவயதில் அவனுக்கும் அந்த பயம் இருந்திருக்கிறது, சிறுவயதில் தான் பயம் என்று சொன்னதும், விவரம் தெரிந்தபின் அந்த பயத்தைக்கடந்துவிட்டான் என்று பொருளல்ல. விவரம் தெரிவதென்பது பயங்களை சிறப்பாக ஒளித்துவைப்பது என்பது தானே. பயத்தை ஒழிப்பது கடினமே தவிர ஒளிப்பது இல்லையே.

ஆனால் எலோருக்கும் இருக்கும் அந்த மரண பயத்தை அவன் எப்படிக்கடந்தான் எனக்கேட்டேன். மரண பயத்தை வெல்ல ஒரே வழி மரணம்தான் என்றான். நல்ல பதிலாகத்தான் தோன்றியது. அதை எப்படி நிகழ்த்திக்கொண்டான் எனக்கேட்டேன்.

சில திருமணங்கள் தானாக நடப்பது போலத் தோற்றமளித்தாலும், எல்லாமே நடத்தி வைக்கப்படுபடுபவைதான். சில வெளிப்படையாகத்தெரியும் சில தெரியாது, மற்றபடி வித்தியாசமேதுமில்லை. அதுபோலத்தான் மரணங்களும். மற்ற மரணங்களைப்பற்றி அவன் பேச அவனது தார்மீகம் இடம்கொடுக்கவில்லையென்றாலும், அவனது சொந்த மரணத்தைப் பற்றி பேச அவனை யார் தடுப்பது. தற்கொலைதான் இங்கே குற்றம், மரணமல்ல.

அவனது மரணத்துகாக தங்கள் உயிர், பொருள் ஆவியனைத்தும் கொண்டு உழைத்தவர்கள் பலர். அதனால் யாரால் வந்தது வந்தது அந்த மரணம் என்று யாருக்கும் தெளிவாகத்தெரியவில்லை. அதுவே அவனது மரணத்தின் மர்மம். மரணத்தை அவன் மிக விரும்பியேற்றுக்கொண்டான் என்றாலும், மரணத்தைவிட அந்த மர்மம் அவனுக்கு மிக விருப்பமாக ஆனதாகத்தெரிவித்தான். இதில் என்ன வேடிக்கையென்றால், இன்னும் பலர் அவனது மரணத்துக்காக முயற்ச்சிசெய்து கொண்டிருப்பதுதான். ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டவனை இன்னும் பலர் கொல்ல முயற்சிப்பதைப்பார்பதே அவனது வேடிக்கை. இதுவே அவன் பேச ஆரம்பித்ததின் நிமித்தமுமாகக்கூட இருக்கலாம்.

(இன்னும் சொல்வான்)