Unordered List

20 ஆகஸ்ட் 2011

அண்ணா வழி


அண்ணா ஹசாரே ஆதரவு கட்சி, எதிர்ப்புக் கட்சி, அவரை சந்தேகப் படும் கட்சி என்று இந்த மூன்றில் ஒரு கட்சியில் இல்லாத யாருமே இப்போது இல்லை போலிருக்கிறது.

எங்கும் அவர் பற்றிய பேச்சுதான்

ரஜினி படம் வரும் பொது எல்லோரும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பிடித்தவர்கள் ஒரு மணிநேரம் பேசினால், பிடிக்காதவர்கள் பலமணிநேரம் பேசுவார்கள். அதுபோல ஒரு பரபரப்பு ஆகிவிட்டது நம்ம அண்ணா ஹசாரே கதை.



இவர் விஷயத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால். இவர் ஒரு மிகப்பெரிய விவாதத்தை நமக்கெல்லாம் மறு அறிமுகம் செய்து வைத்துவிட்டார் .அரசியல் கட்சி சார்பில்லாத ஒருவரால் மக்களை ஒரு விவாதம் நோக்கி திருப்பமுடியும் என்பதே ஒரு ஆச்சார்யமான நிகழ்வு தான்.

நாமெல்லாம் இவர் பெயரை கேள்விப்பட்டே கொஞ்சம் நாள் தான் ஆகிறது. அதற்குள் நமது தினசரி அரட்டையில் (அல்லது விவாதத்தில்) இவர் ஒரு முக்கிய இடம் பிடித்துவிட்டார் என்பதே அவரது வெற்றி தான்.

சரி.. அண்ணா ஹசாரே சொல்லும் லோக்பால் உனக்கு முழு சம்மதமா என்று யாராவது என்னைக் கேட்டால் அல்லது யாருமே கேட்காவிட்டாலும், உண்மையில் பிரதமரை இந்த வரம்புக்குள் கொண்டுவருவது சரியல்ல என்பதே எனது கருத்து. நாட்டின் தலைவருக்கு கண்டிப்பாக விதிவிலக்குகள் இருக்கவேண்டும். மற்றும் சில கருத்துக்களிலும் கொஞ்சம் கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

அப்படியென்றால் நானும் அவரை சந்தேகப் படும்கட்சியா? கண்டிப்பாக இல்லை.

ஊழலை நாமெல்லாம் நமது அன்றாட வாழ்கையில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டு பலகாலமானநிலையில், ஊழல் ஒரு குற்றமே என இவர் புதிதாக சொல்வது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது, நாமும் பங்குகொள்ளக் கூடியது என்பது தான் எனது கருத்து.

அவரைப் பற்றி கேலி செய்து திட்டிக் கொண்டாவது அவரைப் பிடிக்காதவர்களும் ஊழலைப் பற்றி விவாதிக்கட்டும். வேறு வழியில்லை. உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அண்ணா உங்கள் சிந்தனையில் வந்துவிட்டார். அண்ணா ஹசாரே பற்றி பேசுபவர்கள் எல்லோரும் கண்டிப்பாக ஊழல் பற்றி யோசித்தே ஆக வேண்டும். இது தான் புதிய அண்ணா வழி.



---------------------------------------------



ஒரு பன்ச் உடன் முடிக்கலாம் என்று யோசித்ததில் பல பன்ச்கள் இலவசமாகவே கிடைத்தன.

அண்ணா ஹசாரே பற்றியும், காந்திய போராட்டங்கள் பற்றியும் இந்தப் பரபரப்புகெல்லாம் முன்பிருந்தே தொடர்ந்து எழுதிவருபவர் ஜெயமோகன். அவரது பஞ்ச் சில..


" அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான்."

"காந்தியப்போராட்டம் என்பது எதிரிக்கு எதிரானது அல்ல. நம்முடைய உள்ளே உள்ள பலவீனத்துக்கு எதிரானது."

"போராட்டத்தின் வெற்றி என்பது உண்மையில் அதன் மூலம் மக்களிடம் உருவாகும் ஆழமான கருத்தியல் மாற்றமேயாகும்."

"சத்தியாக்கிரக போராட்டத்தின் படிமம் மலை ஏறுவதுதான். எவரெஸ்டில் ஏற வேண்டுமென்றால் முதலில் வீட்டுக்கு முன்னால் உள்ள முதல் மேட்டை ஏறியபடித்தான் ஆரம்பிக்க வேண்டும். ஏறும் ஒவ்வொரு மலையும் அதைவிட பெரிய மலையில் ஏறுவதற்கான படியாகவே இருக்கிறது."

கடைசியாக..

"காந்திய வழி வெற்றிகரமானதா என்பதை நாம் விவாதிக்கலாம். ஆனால் அதைவிட்டால் வேறு வழியே இல்லை என்பதில் மட்டும் விவாதிப்பதற்கே ஏதுமில்லை"



சில இணைப்புகள்:

அண்ணா ஹசாரே-1
அண்ணா ஹசாரே-2