Unordered List

விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஏப்ரல் 2013

பாக்கிஸ்தான் இல்லாத IPL, ரசிகர்கள் கோபம் - கிரிக்கெட் பரபரப்பு


கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத மேட்ச்  என்று ஒன்று இருக்கும். அது இந்தியா ஆஸ்திரேலியாவுடனோ அல்லது பாக்கிஸ்தானுடனோ ஜெயித்த விளையாட்டாக இருக்க வாய்ப்பு அதிகம். அதிலும் பாகிஸ்த்தான் என்றால் இன்னும் சிறப்பு. அந்த நாட்டுடன் நமக்கு இருக்கும் கிரிக்கெட் தொடர்பு அப்படிப்பட்டது.

என்னதான் பிரச்சனை இருந்தாலும் அந்த நாட்டுடன் நமக்கு இருக்கும் தொடர்பை அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியாது. பாக்கிஸ்தான் அரசுகளும் இந்தியாவை எப்பொதுமே மறப்பதில்லை. அப்படியே நாம் மறந்தாலும் குண்டுவெடிப்பு, கடத்தல் என்று ஏதாவது செய்து நம் கவனத்தை ஈர்க்கத்தவறுவதும் இல்லை.

இப்படியிருக்கையில் கிரிக்கெட்டின் உலகத்திருவிழாவாக நடக்கும் ஐ.பி.எல்- பாக்கிஸ்தானை மட்டும் மறந்துவிட்டு நடப்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை. அரசியல்ரீதியாக நமக்கு அந்த நாட்டோடு பிரச்சனை இருப்பது உண்மைதான். ஆனால் அதை விளையாட்டோடு கலப்பது விளையாட்டு அல்ல.

தமிழர்களைப் பார்த்து இந்தியர்கள் அனைவரும் பாடம் கற்க வேண்டிய நேரம் இது. நமக்கு இலங்யையுடன் எந்த வருத்தம் இருந்தாலும் அதை போராட்டத்தோடு விட்டுவிட்டு ஐ.பி.இல் ஜோதியில் கலந்து நமது விளையாட்டு உணர்வை எப்படிக்காட்டுகிறோம் என்பதை அனைவரும் காணவேண்டும்.

ஆனால் இலங்கை அணியினர் சென்னையில் விளையாடவில்லையே என சிலர் வருந்தலாம். ஆனால் இந்த அவமானத்தைத் துடைக்க,  இலங்கையின் சங்கக்காரா தலைவராக இருக்கும் “உதயசூரியன்” அணியும், அதனுடன் நமது ஸ்ரீகாந்த்தும் வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.  இந்த போட்டிகளை அனைவரும் தொலைக்காட்சியில் கண்டு களிக்கிறார்கள் என்பதையும் மறுக்கமுடியாது.

தயவு செய்து நம்மைபோல மற்ற இந்தியர்களும் விளையாட்டை விளையாட்டாக நினைத்து பாக்கிஸ்தான் அணியையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே கிரிக்கெட்டை உயிராக நினைக்கும் ரசிகர்களின் குரலாகும். வேண்டுமானால் அந்த அணியினர் காஷ்மீரில் நடக்கும் போட்டிகளில் மட்டும் கலந்துகொள்ள தடை விதித்துக்கொள்ளலாம் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியா, பாக்கிஸ்தானை இப்படி தனிமைப் படுத்திவந்தால், அது சீனாவுடன் கிரிக்கெட் விளையாடப்போய்விடும் வாய்ப்பும் இருப்பதாக சில ராஜதந்திர நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக சீனாவில் பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படுவதாகவும் மலிவு விலை பேட் மற்றும் பந்துகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

13 ஆகஸ்ட் 2012

ஒலிம்பிக் - விளையாட்டெனும் மனிதகுல அவலம்


இவ்வளவு பெரிய நாடு, ஆனால் இவ்வளவு தான் பதக்கங்கள், என்று ஆதங்கப்படும் சிலர், இவ்வளவு கிடைத்ததே நாட்டுக்குப் பெருமை என பெருமிதப்படும் சிலர். ஆனால் இவர்களிருவரும் கவனிக்க மறந்தது. இந்த விளையாட்டுப்போட்டிகளின் பின்னுள்ள மனிதகுல அவலத்தை.

சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்ததன் காரணமாக, இப்பொதெல்லாம் முகத்தைப் பார்த்தாலே அவர் என்ன விளையாட்டு விளையாடும் ‘வீரர்’ என்று கண்டுபிடிக்க முடிகிறது, அல்லது அவர்கள் உடலைப் பார்த்து.

ஏன் ஒரு குத்துச்சண்டை வீரரின் உடலமைப்பு அதே வயதுடைய ஒரு நீச்சல் வீரரின் உடலமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்று நாம் யோசித்ததுண்டா? காரணம் மிக எளிது. பல வருடங்களாக கடுமையான பயிற்சிகளில் மூலமாக இந்த உடலமைப்பை அடைகிறார்கள். ஆனால் இது இயல்பான ஒன்று அல்ல. இவர்களுக்கு ஏன் ஒரு இயல்பான மனித வாழ்க்கை வாழும் உரிமை மறுக்கப் படுகிறது? இயற்கைக்கு மாறான இந்தச் செயலை செய்யத் தூண்டுவதுதான் விளையாட்டின் நோக்கமா?




இந்த விளையாட்டுப்போட்டிகளின் வரலாறு என்ன? அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

காட்டில் திரிந்த ஆதி மனிதனுக்கு தேவையாயிருந்த ஒரு முக்கியமான குணம், வேட்டையாடும் கொலை குணம். மனிதன் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தபின், தனக்கு உயிர்பயம் வந்தபின்னர், தனக்காக சண்டையிட செய்ய படை வீரர்களை உருவாக்கினான், அவர்களின் சண்டையைப் பார்த்து வெற்றிக் களிப்படைந்தான். உயிருக்கும் ஆபத்தில்லை, கொலை செய்த திருப்தியும் கிடைக்கிறது.அந்தப் படை வீரர்களின் மரண பயத்தை குறைக்கவும், தனது குற்ற உனர்வைத் தவிர்க்கவும், நாட்டுப் பெருமை மற்றும் தலைவன் பெருமை போன்ற விழுமியங்கள் உருவாக்கப் பட்டன. அதாவது நாட்டுப் பெருமைக்காக சிலர் உயிர் இழந்தாலும் சரி, அதைப் பற்றி அனைவரும் பெருமைதான் படவேண்டும். இரு தரப்பிலும் மக்கள் ஆரவாரமிட்டு மகிழ்ந்தனர்.

கொஞ்சம் நாகரீக முன்னேற்றத்துக்குப் பிறகு, இதிலும் நடக்கும் உயிர் இழப்புகளை தவிர்க்க அடுத்தகட்டமாக ஒரு குறிப்பிட்ட விதிகளுடன் இவை விளையாடுப் போட்டிகளாகப்பட்டன. அதாவது எதிராளியைக் கொல்வதே வெற்றி என இருந்த நிலையில், ஒரு இலைக்கை அடைவதே வெற்றி என்னக்கொள்ளப்பட்டது. இதில் எதிராளியைக் கொல்வது என்னதான் தவிர்க்கப்பட்டாலும், வெற்றி அடைபவரின் வெற்றிக் களியாட்டமும்,தோற்றவரை மரணத்துக்கு இணையாக அவமானப் படுத்துவதும் தொடர்கிறது.





அப்படியென்றால் விளையாட்டு இயற்கையான ஒரு செயல்பாடு இல்லையா?

அப்படியும் சொல்ல முடியாது. குழந்தைகள் முதலில் ஆரம்பிப்பது விளையாட்டு தான்.விளையாடும் குழந்தைக்கு மட்டுமல்லாமல் வேடிக்கை பார்க்கும் நம் மனத்துக்கும்ஒருசேர மிக மகிழ்ச்சியை அளிப்பது அது. ஆனால் விளையட்டு எங்கே விபரீதமாகிறது?

குழந்தைகள் விளையாடில் விதிகள் கிடையாது. வெற்றி தோல்வி கிடையாது. முக்கியமாக தான் ஜெயிக்க இன்னொருவரை தோற்க்கடிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. தானாக விளையாடும் குழந்தைகளுக்கு பெரியவர்கள் விளையாட்டுப் போட்டிகளை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும்போது முதல் பாடமே இன்னொருவரை தோற்க்கடிப்பது தான். தனது மகிழ்ச்சி மற்றவரின் அவமானத்தில்தான் உள்ளது என உணர வைப்பதே இந்த விளையாட்டுப்போட்டிகள் தான்.

...


விளையாடின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? முக்கியமாக இந்த மூன்றை சொல்லலாமா?


  • உடல் ஆரோக்யம்
  • மனதுக்கு மகிழ்சி
  • ஒற்றுமை உணர்வு


ஒரு விளையாட்டுகாக தங்கள் உடலை அமைப்பையே பயிற்சிகளின் மூலம் மாற்றி, உடல் ஆரோக்யத்துக்காக விளையாட்டு என்ற நோக்கத்திலிருந்து மாறி, விளையாட்டுக்காக உடல் என்ற பரிதாப நிலையை அடைகிறார்கள்.

இந்த விளையாட்டுகள் மகிழ்சியை அளிக்கிறதா அல்லது வெறியை அளிக்கிறதா என்று தெரிந்துகொள்ள பெரிய ஆராய்சியெல்லாம் செய்யத்தேவையில்லை.

போட்டியும் பொறாமையும் வெறியும் இருக்கும் இவ்வித்தில் ஒற்றுமைக்கு இடம் ஏது? அப்படியெ ஒற்றுமை இருந்தாலும் அதுவும் ஒரு எதிரியை வீழ்த்துவதற்காகத் தான் இருக்கும்.

பிரமாண்டமான இந்தப் போட்டிகள், இவ்வளவு நாகரீக மாற்றங்களையும் மதிப்பீடுகளையும் தாண்டி, நம் மனதில் மிச்சமிருக்கும் சகமனிதனை வென்று களியாட்டமிடும் ஆதிமனிதனின் வெறிக்கான ஆதாரமாகவே உள்ளன. .....



உங்கள் நாட்டுப்பற்றை காட்ட வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அதற்காக சிலரை பலிகடாவாக்க வேண்டாமென்கிறேன். அரசனின் நல்வாழ்வுக்காக தன் தலையை வெட்டிக்கொண்டு நாட்டை பெருமைப்பட வைத்த ‘நடுகல்’ வீரர்களுக்கும்,  இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?