Unordered List

28 டிசம்பர் 2017

ரஜினியைக் கவனித்தல்

காலையில் இந்தச் செய்தித்தாள்களின் படங்களை  நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. நமக்குப்பிடித்த ஒருவரை உலகமே முக்கியமாகப் பார்ப்பதில் வரும் மகிழ்ச்சி அது. ஆனால் நேற்று ரஜினி பேசிய உரையின் பதினாலு நிமிடங்களில் வெறும் நான்கு நிமிடங்கள் மட்டுமே அரசியலைப் பற்றி பேசினார், அது  முக்கிய பத்திரிக்கைகளின் தலைப்புச்செய்தியாக இருக்கிறது. மக்கள் தங்கள் கேட்க விரும்புவதைக் கேட்கிறார்கள்



தற்போதைய அரசியல் சூழலில் தங்கள் குரலைப் பதிவு செய்ய பலரும் பொதுக்கூட்டம், ப்ரஸ் மீட், பத்திரிக்கைகள் பேட்டி மற்றும் சமூக வலைத்தள நடவடிக்கைகள் என கடும் முயற்சிகள் செய்துகொண்டிருக்கும் நிலையில் வேறொரு நிகழ்ச்சியில் வெறும் 4 நிமிடம் பேசியது இவ்வளவு பரபரப்பாகி இருப்பது ரஜினியின் செல்வாக்கை காட்டுகிறது.





"இந்த முறையும் ஏமாற்றி விடுவார், வெறுப்பாக இருக்கிறது" என்றும் சில குரல்கள். "அவர் வரவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? அவர் வந்தால் உடனடியாக ஆதரிப்பீர்களா" என்று கேட்டால் பதிலில்லை. ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அவருக்கு வெறுப்படைய காரணம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ரஜினி சொல்வதை சொல்லட்டும், அதை கவனிக்கலாம் எனவே பொதுவாக மக்கள் ஆர்வத்துடன் இருப்பதை கவனிக்க முடிகிறது. அவர் என்ன சொல்லவேண்டும் என முடிவு செய்து காத்திருப்பவர்கள் தான் என்ன நடந்தாலும் வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

ஒருமுறை பாகிஸ்தான் நமது இந்திய ராணுவ வீரர்கள் சிலரை முறை தவறிக்கொலை செய்தது; இந்தியாவைக் கடுமையாகச் சீண்டும் செயல் அது. உடனே பதிலடி கொடுக்கப்போகிறோமா, என்ன செய்யப்பபோகிறோம் என இந்திய ராணுவத் துணைத் தளபதியிடம் கேட்கப்பட்டது. அந்த சூழலில் அவர் சொன்ன பதில் மிக உறுதியானது.


"பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியை நாம் நினைக்கும் இடத்தில், நாம் நினைக்கும் நேரத்தில் கொடுப்போம் என்றார். (will respond to Pakistan at time and place of our choosing). எதிரி எதிர்பார்க்கும் செயலைத் தவிர்த்து, நமது செயல்பாட்டை முடிவெடுப்பதை நாமாகவே செய்வதில் இருப்பதில் இருக்கும் உறுதி அது.

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றி எழுப்படும் எதிர்மறைக் கேள்விகள், கிண்டல்கள் அனைத்தும் அவரை சீண்டும் செயல்கள் தான். அவர்களுக்கு இன்று ரஜினியும் அப்படி ஒரு பதிலைச் சொல்லி இருக்கிறார்.