Unordered List

11 ஜனவரி 2013

சென்னையில் ஜெயமோகன் உரை - விழா படங்கள்


ஒரு ஞாயிறு மாலை. சென்னையில் ஜெயமோகன் உரை என்று அந்த விழாவுக்கு ஆஜரானேன். அது உயிர்மை பதிப்பகம் நடத்திய ஒன்பது புத்தகங்களுக்கான வெளியீட்டு விழா.

இலக்கியம் மற்றும் பதிப்பகத் துறைக்கு போதுமான ஆதரவு இல்லாத நிலையிலும் உயிர்மை தனது அக்கறையினால் புத்தக வெளியீடு மற்றும் விழாக்கள் என நடத்தி வருவதாக தனது வரவேற்பு உரையில் மனுஷ்யபுத்திரன் கூறினார்.  புத்தகத்தை வெளியிடுவதோடு மட்டும் நின்றுவிடாமல் அதை அறிமுகப்படுத்த விழா எடுத்து, வாசகர்கள் முக்கிய ஆளுமைகளின் பேச்சைக் கேட்க தளம் அமைத்து தரும் அவரின் சேவை பாராட்டத்தக்கது.

மூன்று அமர்வுகளாக நடந்தது அந்த விழா. ஒரு அமர்வுக்கு மூன்று புத்தகங்களாக ஒன்பது புத்தகங்கள் வெளியீடு. முதலில் நடந்த கவிதை புத்தகங்கள் வெளியீட்டுக்குப் பின்னர் நாவல்கள் வெளியீடு நடந்தது. சிவகாமி எழுதிய 'உண்மைக்கு முன்னும் பின்னும்" என்ற நாவல் பற்றி  ஜெயமோகன் அறிமுக உரை வழங்கினார்

புத்தகம் வெளியீடு

ஜெயமோகன் பேச எழுந்ததும் அரங்கில் கொஞ்சம் சலசலப்பு. சட்டென கூட்டம் அதிகரிப்பதை கவனிக்க முடிந்தது. பலர் வெளியே நின்றிருந்தனர் போல.  பலத்த எதிர்பார்ப்பு இடையில் அவரது பேச்சு ஆரம்பித்தது.

அரசு, அது செயல்படும் முறை, அந்த அரசை இயக்கும் உண்மையான விசை, அந்த விசையின் இயல்பு என்று அறிமுகப்படுத்தியவர், இதைப்பற்றி இதுவரை வந்துள்ள முக்கிய படைப்புகளையும் தொட்டுக்காட்டி பேசியபோது, இந்த நாவலின் தளம், இலக்கிய வரிசையில் இதன் இடம் எனத் தெளிவாகத் தெரிந்தது.

பின்னர் இந்த நாவல் எந்த வகையில் கவனிக்கத்தக்கது என்று சுட்டிக்காட்டிய அவர் நாவலின் சில உச்சங்களையும் தொட்டுக்காட்டினார்.  அது பார்வையாளர்களுக்கு நாவலைப்பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை அளித்ததுடன், இந்த துறையில் இருக்கும் பல படைப்புகளைப் பற்றிய ஒரு திறப்பாகவும் அமைந்தது.

முழு உரை இங்கே.. மாபெரும் இயந்திரம்

----

ஆறு மணிக்கு விழா என நினைத்து ஐந்தரை மணிக்கெல்லாம் நான் அரங்குக்கு சென்றுவிட்டேன், ஆனால் அங்கு இருந்தது ஓரிருவர் மட்டுமே. ஞாயிறு மாலை சென்னையில் இலக்கியத்துக்கு அவ்வளவுதான் கூட்டம் வரும் போல என எண்ணினேன். ஆனால்.  ஆனால் கூட்டம் தொடங்கியபோது நிறைந்த அரங்கு, ஜெயமோகன் பேச்சின்போது உச்சகட்ட எண்ணிகையை அடைந்தது. அவர் பேசிய அரைமணிநேரமும் அந்த அரங்கின் கவனம் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருந்தது.

பழ.நெடுமாறன், இயக்குனர்கள்   ஞானராஜசேகரன், லிங்குசாமி, தங்கர் பச்சான் என பல ஆளுமைகள் கலந்து கொண்டனர்.

இயக்குனர் லிங்குசாமி, இப்போதுள்ள வேளைகளின் நெருக்கடியினால் தான் படிக்கும் நேரம் குறைந்து வருவதாக வருத்தப்பட்டார், எனினும் சமீபத்தில் தான் படித்த ஜெயமோகனின் "அறம்"  சிறுகதைத் தொகுப்பின் சில கதைகளை சொல்லி அது தனக்குத் தந்த  அனுபவத்தை பரவசத்துடன் பகிந்துகொண்டார்.



இந்தக்கூட்டமும், கவனிப்பும் புத்தக கண்காட்சி தொடங்கும் நேரத்தில் ஒரு முக்கியமான தொடக்கமாக அமைந்தது, அரசு மற்றும் வேறு ஆதரவுகள் இல்லாவிட்டாலும், தரமான வாசகர்கள் ஆதரவு இருந்தால் இலக்கியம் தானாக வளரும் என்ற நம்பிக்கையுடன்.

சென்னை - 6-1-2013