Unordered List

24 மார்ச் 2013

தமிழ் மனத்தின் கதறல் - பாலாவின் பரதேசி

ஹாலிவுட்டில் முன்னரே வெளியாகியிருந்தாலும் இயக்குனர் டராண்டினோவின் “ஜாங்கோ அன்செயிண்ட்” (django unchained) இந்த இந்த வாரம் தான் இந்தியாவில் வெளியாகிறது.  பாலாவின் “பரதேசி” உடன் இந்தப் படம் வெளியாவது ஒரு ஆச்சர்யமான coincidence தான்.

வரலாற்றில் இருப்பது பெருமிதம் மட்டும் அல்ல. அதில் இருப்பது  நமது முன்னோர்களின் கண்ணீரும் தான் என்பதை புரிந்துகொண்டு, மற்றவர்கள் பேசக்கூட தயங்கும் வரலாற்றின் சில கருப்பு பக்கங்களைப் புரட்டுபவை  என்பதே இந்த இரு படங்களுக்கு இடையே உள்ள பொது அம்சம்.

அமெரிகாவின் கருப்பு சரித்திரமான அடிமைமுறைபற்றி அதிரடியாகப் பேசும் படம் “ஜாங்கோ அன்செயிண்ட்”.   இதில் ஒரு முக்கிய பாத்திரம் வில்லன் வீட்டில் தலைமை அடிமையாக இருக்கும் கருப்பின ஸ்டீபன்.  சாமுவேல் ஜாக்சன் மிக சிறப்பாக நடித்திருப்பார்.   அடிமைத்தனத்தின் முழு வடிவமான அவர் அடிமை முறைக்கு எதிரான ஒரு சிறிய செயலைக்கூட பொருத்துக்கொள்ள முடியாதவராக இருப்பார்.



கதையின் படி  கருப்பினத்தைச் சேர்ந்த ஹீரொ, வெள்ளைக்கார வில்லனின் விருந்தாளியாக தங்க வருவார். வெள்ளையர்களுக்கும் அதில் சங்கடம் இருந்தாலும், வியாபார நிமித்தமாக அதை சகித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த ஸ்டீபனால் அதை சகித்துக்கொள்ளவே முடியாது.  வெள்ளையர்களை விட அவரது பதட்டம் மிக அதிகமாக இருக்கும். ஒரு கருப்பினத்தைச் சேர்ந்தவன் எப்படி விருந்தாளியாக இருக்க முடியும் என தனது வெள்ளைக்கார முதலாளியிடன் சண்டையிடும் அளவுக்குச் செல்வார். 

பரதேசி படத்தின் மத மாற்ற காட்சிகள் பற்றி பொங்குபவர்களைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. இவர்களது பதட்டம் ஆசர்யமளிக்கிறது.  மற்றவர்கள் சொல்ல முடியாத வரலாற்றைச் சொல்ல ஒருவருக்கு தைரியம் இருக்கும்போது அதைப் பார்ப்பதற்கு எதற்கு நமக்கு இந்தப் பதட்டம்.

கொஞ்சம் நகைச்சுவையுடன் வரும் அந்தப்பகுதிதான் உண்மையில் மிக சோகமான செய்தியைத் தருகிறது.  தமிழ் சினிமாவில் குத்துப்பாட்டு என்று இருக்கும் இலக்கணத்தையே மாற்றியெழுதியிருக்கிறார் பாலா. அந்தப் பாடலில் காட்டப்படும் மக்களின் நிலையும் பாடலின் முடிவாக நீளும் சோக இசையும் மனத்தை உலுக்குபவை. தன் தாய் நோயால் இறக்கும் தருவாயில் ஏதும் புரியாமல் பக்கத்தில் அமர்ந்திருக்கும் குழந்தையின் கையில் இருப்பது ஒரு புதிய பொம்மை.



”ஒரு வக்கீலாக இருந்த்துகொண்டு காந்தி ஏன் சட்டத்தை மீறுகிறார்?” என ஆச்சர்யப்படுவார் ஒரு வெள்ளையர். ஆளும் வர்க்கத்தின் தரப்பை இந்த காட்சியே சொல்லிவிடுகிறது.  

கிராமத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து செல்லும் ஆரம்பக்காட்சியிலேயே நாம் அந்தக்கால கட்டத்துக்குச் சென்று விடுகிறோம். நமது சந்தோஷம், துக்கம், பேராசை, ஏமாளித்தனம், கோழைத்தனம், சோகம் என அனைத்தையும் அனுபவிக்கிறோம். 

அந்த எளிய மக்களும், வறண்ட பூமியும், அந்த பஞ்ச காலத்திலும் மக்களின் இயல்பான குறும்பும் கொண்டாட்டமும் கலந்த வாழ்க்கையும் நம் கண்முன் விரிகின்றன.

இந்த மக்கள் கூட்டம் ஒரு கங்காணியிடம் ஏமாந்து, தன் கூட்டத்தில் ஒருவன் சாகும் தருவாயில்கூட குரலெழுப்பமுடியாமல் செல்வது தான் நமது நாடு அடிமைப்பட்டிருந்ததின் வரலாறு.

எவ்வளவு கொடுமைகள் நடந்தாலும், நல்லது எதுவும்  நடக்காது என்று தெரிந்திருந்தாலும் கணக்கு தீர்க்கும் அந்த நாளை ஒவ்வொரு வருடமும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் மக்கள் உணர்த்துவது எதை?

பேரனையும் அவனது காதலியையும் அவர்களது குழந்தயையும் கூட பாதுகாக்கும் அந்தபாட்டி, அந்த அடிமை வாழ்விலும்கூட தனது குழந்தையுடன் தன்மானத்துடன் வாழும் பெண், தனது மனைவி பாதிக்கப்பட்டாலும் அவளை விரும்பும் கணவன் என மனித மனத்தின் உயரங்களையும் பார்க்கிறோம்.

மனத்தைக் கனக்கச்செய்யும் இந்தப் படத்தை ஏன் பார்க்கவேண்டும் என நான் கூட யோசித்ததுண்டு.  ஆனால் உண்மையில் இந்தப்படம் பார்த்தபின் தான் மன பாரம் குறைந்ததுபோல இருக்கிறது. கூட்டம் கூட்டமாக பக்கத்து நாட்டில் தமிழர்கள் கொல்லப்படும்போதும் ஏதும் செய்யமுடியாமல், அதைப் பற்றி பேசக்கூட முடியமல் இருந்த நமக்கும், இந்த படத்தின் பத்திரங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

கடைசியில் பரதேசியின் அந்தக்கதறல், நமது கதறல்.  நமக்காக பேச, நமக்காக வருத்தப்பட, நமக்காக கதற வந்தவன் இந்தப் பரதேசி.

11 மார்ச் 2013

அழித்தலில் ஆரம்பம்

தன்னைப் பார்க்க பல தர்க்கக் கேள்விகளுடன் வந்திருந்த அந்த ஞான யோகிக்கு சிவன் ஒரு மந்திரத்தை உபதேசித்தார்  

அந்த மந்திரத்தை அங்கே சென்றுகொண்டிருந்த ஒரு புழுவை நோக்கி சொல்லச் சொன்னார். யோகியும் சிவன் சொல்லியபடி செய்ய அந்த புழு அங்கேயே செத்துவிழுந்தது. அதிர்ந்தார்  யோகி.   

கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிய சிவன், மீண்டும் அந்த மந்திரத்தை அங்கே பறந்துகொண்டிருந்த ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியைப் பார்த்து சொல்லச்சொன்னார். ஏற்க்கனவே புழுவுக்கு அந்த மந்திரத்தால் ஏற்பட்ட நிலையைப் பார்த்திருந்த யோகி கொஞ்சம் தயங்கினார் இருந்தாலும் சிவனின்  சொற்படி அந்த மந்திரத்தை  வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து சொல்ல அதுவும் உடனடியாக இறந்தது.  

யோகி கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.  

"சிவனே என்ன இது"  என கதறினார்.  

சிரித்த சிவன் அடுத்து பார்த்தது அங்கு வந்த ஒரு மான்குட்டியை.  

"யோகியே அந்த மான்குட்டியை நோக்கி மந்திரத்தை சொல்லுக" என்றார்.

பலமுறை மறுத்த யோகி கடைசியில் சிவனின் சொல்லை மீறமுடியாமல் அந்த மானைப் பார்த்தும் மந்திரத்தைச் சொல்ல அதுவும் இறந்தது. ஒன்றும் புரியாமல் யோகி தவித்துக்கொண்டிருக்க ஒரு பெரியவர் கைக்குழந்தையுடன் சிவனிடம் ஆசிவாங்க வந்தார்.  

இப்போது சிவன் மந்திரத்தை சொல்லச் சொன்னது அந்த குழந்தையை நோக்கி. யோகியால் அதற்குமேல் முடியவில்லை. இதை என்னால் செய்ய முடியாது. இன்னொரு அழிவை என்னால் பார்க்க முடியாது என்று மறுத்துவிட்டார்.  

அப்போது அந்த அதிசயம் நடந்தது. அந்த குழந்தை யோகியை நோக்கி பேச ஆரம்பித்தது.  

"தயவு செய்து அந்த மந்திரத்தை சொல்லுங்கள்" என்றது.  

"புழுவாக இருந்த நான், வண்ணத்துப்பூச்சியானேன், பின்னர் அதிலிருந்து மான்குட்டியானேன், அதிலிருந்து மனிதனாகிவிட்டேன். இன்னொரு முறை நீங்கள் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நான் மனிதனிலிருந்து புனிதனாகிவிடுவேன்" என்றது அந்தக் குழந்தை.

யோகிக்கு அப்போதுதான் தான் செய்தது புரிந்தது. அழிவு என்று நினைப்பதெல்லாம் அழிவல்ல, அது இன்னும் மேலான ஒன்று பிறப்பதற்கான வழியாகவும் இருக்கலாம் என்று.  

----  

நேற்றைய மகா சிவராத்திரி இரவில் ஜக்கி வாசுதேவ் சொன்ன இந்தக் கதை நாம் நவீன  மேலாண்மைத் துறையில் அன்றாடம் பேசும் பல "comfort zone" போன்ற பல   கருத்துகளை எளிதாகத் தொட்டுச் செல்கிறது. யோசிப்பவர்களுக்கு இன்னும் அதிக அர்த்தங்களைக் கொடுக்கிறது இந்தக் கதை.  

சிவன் அழிப்பவன் தான். தான் என்று நாம் நினைக்கும் அனைத்தையும் ஒவ்வொரு கணமும் அழித்துக்கொண்டேயிருப்பவன். அழிவை நினைத்து அஞ்சாதவனுக்கு, தன்னுள் சிவன் இருப்பதை உணர்ந்தவனுக்கு நேற்றைய சுமையை சுமந்துசெல்லும் கட்டாயம் இல்லை. அவன் நித்தமும் புது மனிதன்.