Unordered List

16 டிசம்பர் 2013

இவன் வேற மாதிரி - இவன் வேற மாதிரி அரசியல்வாதி

ஒரு அமைச்சர் இருக்கிறார், அதுவும் அவர் சட்ட அமைச்சர். அவருக்கு சட்ட கல்லூரியில் சில மாணவர்களைச் சேர்க்கவேண்டியிருக்கிறது. நீங்கள் என்ன நினைப்பீர்கள், அவர் தனது பதவியை பயன்படுத்தி ஏதாவது செய்வார் என்றுதானே. ஆனால் அவர் அப்படியல்ல, மாறாக அவர் அந்த கல்லூரி முதல்வரை கல்லூரியிலேயே சந்தித்து வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் அந்த கல்லூரி முதல்வர், அமைச்சரை உதாசீனமாகப் பேசி மறுத்து அனுப்பி விடுகிறார்.

இப்போதே தெரிந்துவிடுகிறது, இதுஒரு வித்தியாசமான படம் என்று.

சரி.. இப்போது அந்த அமைச்சர் என்ன செய்வார் என்று எதிர்பார்க்கிறீர்கள், தனது அதிகாரத்தை பயன்படுத்துவார் என்று தானே, அதுதான் இல்லை,  தனக்குத் தெரிந்த சில மாணவர்களிடம் சொல்கிறார். அவர்கள் மற்ற சில மாணவர்களை  தாக்குகிறார்கள். அது எதற்க்கென்று தெரியவில்லை. எந்த அடிப்படையில் தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் அந்த அமைச்சருக்கு எந்த பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. (செய்தியில் பார்த்த சட்ட கல்லூரிப் பிரச்சனையை படத்தில் வைக்க விரும்பியது நல்லது தான். ஆனால் அதன் பிண்ணனியை கொஞ்சமாவது இயக்குனர் ஆராய்ச்சி செய்திருக்கலாம்.)

இது இப்படி இருக்க அந்த அமைச்சருக்கு இன்னொரு பிரச்சனை. அவரது தம்பி சிலரைக் கொலை செய்து  விடுகிறார்.இப்போது என்ன நினைப்பீர்கள், அமைச்சர் தனது பதவியை பயன்படுத்தி தம்பியை கைது செய்யவிடாமல் செய்துவிடுவார் என்று தானே, அப்படியே கைதானாலும் சாட்சிகளைக் கலைத்து விடுதலை ஆக்கிவிடுவார் என்று தானே. அதுவும் இல்லை, அந்தத் தம்பி கைதும் ஆகி, தண்டனையும்  பெற்றுவிடுகிறார்.என்ன அதிசயம், தமிழ் நாட்டில் இப்படி நடக்குமா என்று ஆச்சர்யத்துடன் நாம் பார்க்கிறோம்.

வாழ்க்கை முழுவதும் சிறையிலிருக்கப்போகும் தம்பியை பதினைந்து நாள்  பரோலில் மட்டுமே எடுக்கிறார் அந்த அமைச்சர், இதுவே அதிகபட்சமாக அவர் செய்யக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் அந்த அப்பாவி அமைச்சரின் அவல வாழ்க்கையில் இன்னும் சில பிரச்சனைகளும் வருகின்றன.

----------

அதே ஊரில் தமிழ் சினிமாவின் பார்முலா படி வேலைக்குப் போகாமல் ஒருவர் சுற்றிக்கொண்டு இருக்கிறார், எனவே அவர் தான் ஹீரோ என்று நமக்கு புரிகிறது.

ஹெல்மெட் கூட போடாமல் ஊரெல்லாம் பைக்கில் சுற்றி வருகிறார்.
ஒருநாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் மீது உச்சா போகிறார். அதை மாடியிலிருந்து ஹீரோயின் பார்த்து கண்டிக்க, அவர் நேராக ஹீரோயின் வீட்டுக்குள் சென்று உச்சா அடிக்கிறார், பாத்ரூமில் தான். இதைக் கண்டு ஹீரோயின் இம்ப்ரெஸ் ஆகி காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். வாவ்.

பிறகு அவர் ஒரு இடத்தில வேலைக்கு போய், முதல் நாளே ஒரு போட்டோ எடுத்து ஒரு விளம்பர ஐடியா கொடுக்கிறார், உண்மையிலேயே அது மிக மொக்கையாக இருக்கிறது என்பது நமக்கே தெரிகிறது. அதை அந்த மேனேஜர் பக்குவமாக எடுத்துச் சொல்லியும் கேட்காமல், அங்கிருத்து சில அழகு மீன்களை திருடிக்கொண்டு சென்று விடுகிறார்.

இப்படிப்பட்ட பொறுப்பான ஹீரோவுக்கு, அந்த அப்பாவி அமைச்சர் மீது கோபம் ஏற்படுகிறது. ஆனால் அமைச்சர் எந்த தப்புமே செய்யவில்லையே என்ன செய்வது என்று யோசித்து,  பரோலில் வந்த அமைச்சரின் தம்பியை சட்டவிரோதமாக கடத்தி அமைச்சரை சிறை செல்ல வைக்கிறார். போலீசும் அமைச்சரைக் கடுமையாக நடத்தி அவரை சட்ட விரோதமாக கொலை செய்கிறது.

அடுத்தடுத்த பிரச்சனைகளில் அமைச்சரின் தம்பியை ஹீரோ கொலை செய்ய அதையும் போலீஸ் சட்டவிரோதமாக  மறைக்கிறது.

---

எந்த நிலையிலும் பதவியை துஷ்பிரயோகம் செய்யாத வித்தியாசமான அமைச்சரைச் சுற்றிவரும் கதையே இவன் வேற மாதிரி.

அவர் அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவோ, சட்டத்தை மீறியதாகவோ எந்த ஒரு காட்சியும் இல்லை.  அமைச்சர் தம்பியும் தான் செய்த தவறுகளுக்கு சட்டத்தின்முன்   தண்டனையை அனுபவிக்கிறார்.
ஆனால் ஹீரோ சிறிய சட்ட மீறல்களில் ஆரம்பித்து கொலைகள் வரை செய்தாலும் எந்த தண்டனையும் அவருக்கு இல்லை. எந்த மனசாட்சி உறுத்தலும் இன்றி அவர் சிரிக்க படம் முடிகிறது.

இவன் வேறு மாதிரி -  உண்மையிலேயே ஒரு வித்தியாசமான படம், திருந்த நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம்.

09 டிசம்பர் 2013

திருடுபோய்க் கொண்டிருப்பது

"டேய்ய்ய்....."

சென்னை சாந்தி தியேட்டர் வளாகத்தில் இருக்கும் சரவணபவனில் சாவகாசமாக ஒரு  மதிய உணவை முடித்துவிட்டு, நானுண்டு எனது செல்போனுண்டு என  நடந்து  வந்துகொண்டிருந்த நான் அந்தக் குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

அவருக்கு ஒரு நாற்பத்தைந்து வயது இருக்கலாம். கையிலிருந்த கருப்புப்பை அவர் ஒரு விற்பனைப்  பிரதிநிதியாக இருக்கலாமென  சொல்லியது, அவரது முகத்தில் கோபம் பரவியிருந்தது.

அவர் பார்த்த திசையில் நானும் பார்த்தேன். ஒரு பத்து பையன்கள் ஓடிக்கொண்டிருந்தனர். எதோ பள்ளி சீருடையில் இருந்தனர்.  அவர் மறுபடியும் கோபமாக குரல்கொடுக்க ஓடிக்கொண்டிருந்த இரு பையன்கள் நின்று நிதானமாகத் திரும்பினர், "என்ன" என்பது போல் தெனாவெட்டாக  அவரைப் பார்த்தனர்.

அதுவரை கோபமாக இருந்த அவர் முகம் கொஞ்சம் மாற்றமடைந்தது, அதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தோன்றியது. ஒரு அடி பின்னல் வைத்தார். அருகிலிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்து
"பட்டப்பகல்ல இப்படி எடுத்துட்டு ஓடுறாங்க.. எலோரும் பார்த்துகிட்டு இருக்கீங்களே.." என்று குமுறினார். இப்பொது குரல் மிகவும் மட்டுப்பட்டே இருந்தது, இருந்தாலும் இழப்பின் வலி அந்தக் குரலில் இருந்தது. எனக்கு நிலைமை கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.



இப்படி ஒரு அனுபவத்தைப் பற்றி எனது நண்பன் ஒருமுறை சொல்லியிருந்தான்.

பஸ்ஸில் சென்ற அவனது செல்போன் திருடப்பட்டு விட்டதை கவனித்து இருக்கிறான். உடனடியாக ஒரு கும்பல் இறங்குவதையும் கவனித்துவிட்டு, உடனடியாக அவனும் இறங்கியிருக்கிறான்.பேருந்து புறப்பட்டுவிட, ஐந்தாறுபேர் இருந்த அந்த கும்பலும் அவனும் மட்டும் அந்த பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறார்கள்.

இவன்  கவனித்ததைக் கவனித்த அவர்களில் வாட்டசாட்டமான   ஒருவன் "என்ன" என்று கேட்க. இவன் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு திரும்பியிருக்கிறான். வேறென்ன செய்ய?

அவர் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். இழப்பும் கையறு நிலையும் அவரது முகத்தில் தெரிந்தது.  இங்கே திருடு போயிருக்கிறது என்றும் அதற்குக் காரணம் யாரென்றும் தெரிந்தாலும் திருடுபோனது என்ன என்று எனக்கு தெரியவில்லை.



ஓடிக்கொண்டிருந்த அந்த பையன்கள் இப்போது மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். எங்களைப் திரும்பி பார்த்த அவர்களின் கண்களிலும் ஏளனம் கைகளில் கரும்பு.

ஆம், அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் கரும்பு இருந்தது. அப்போது தான் கவனித்தேன். அருகிலிருந்த அந்த கரும்பு ஜூஸ் எந்திரத்தின் அருகே சாக்கில் கட்டப்பட்ட ஓரிரு கரும்புகள் மட்டும் இவர்கள் எடுத்தது போக எஞ்சியிருந்தன. ஆளில்லாத கரும்பு ஜூஸ் வண்டியிலிருந்து எடுத்துகொண்டு அதாவது திருடிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். 
அந்த கரும்பு ஜூஸ் கடைக்காரர் அங்கே இல்லாததால், அங்கு நடந்தது யாருக்கும் ஒரு இழப்பாகத் தெரியவில்லை.

அவரை மீண்டும் கவனித்தேன். கண்டிப்பாக அவருக்கும் அந்த கரும்புகளுக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை, பிறகு ஏன் இவர் இவ்வளவு கோபமடைகிறார், இதனால் அவருக்கு என்ன இழப்பு  என்று யோசித்தேன்.

“விடுங்க சார்..கவனிக்காம அப்படியே விட்டுட்டு அப்புறம் போன பின்னாடி ஆத்திரப்பட்டு என்ன சார் பண்ண முடியும். கவனிச்சு வச்சிருந்துக்கணும்” என்று யாரொ அந்தக் கரும்புச்சாக்கை பார்த்தபடிகூற

"படிக்கிற பசங்க சார்"  என்று முனுமுனுத்தபடி அவர் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

07 டிசம்பர் 2013

ரயிலிரவு

மதியம் எக்ஸ்பிரஸ் அவென்யுவில் பாதுகாப்பு சோதனைகள் பலமாக இருந்தது. உள்ளே வரும் கார் டிக்கியை எல்லாம் திறந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சோதனை செய்வதிலும் ஏதோ ஒரு லாஜிக் இருக்கிறது போல. எனக்கு  முன்னால் இருந்த ஹோண்டா காரை சோதித்த அளவுக்கு எனது காரை சோதிக்கவில்லை என்பது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். இந்தக் காருக்கெல்லாம் இவ்வளவுதான்  வொர்த்  நினைத்து விட்டார்களா என்று யோசித்தேன். அடுத்த வருடத்துக்குள் இதற்காகவாவது ஒரு ஹோண்டா கார் வாங்க முடியுமா  என்று பார்க்கவேண்டும்.

இரவு எக்மோர் ரயில்  நிலையத்திலும் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன. அப்போது தான் ஞாபகம் வந்தது, அது டிசம்பர் 6 அல்லவா, இவ்வளவு சோதனைகள் கூட இல்லாவிட்டால் எப்படி. ஆனால் ரயில் நிலையத்தில் ஒரு கூடுதல் வசதி இருப்பதை அப்புறம் தான் கவனித்தேன்.  நீங்கள் விருப்பப்பட்டால் சோதனைக்கு உள்ளாகலாம். அல்லது சோதனை இல்லாமலே உள்ளே பிரவேசிக்கலாம். இப்படி இரு ஏற்பாடுகள்  இருந்தன அங்கு.

வழக்கமான வழியில் சென்றபோது மெட்டல் டிடெக்டர் உட்பட சோதனைகள் எல்லாம் பலமாக இருந்தது நடந்தது. சரி, ரயிலுக்கு கொஞ்சம் இருக்கிறதே என்று வெளியே வெளியேவந்து சாப்பிட்டேன்.  ரயில் நிலையம் ஓரமாக இருக்கும் ஆனந்தபவனில் இனிப்புகள் வாங்கிக்கொண்டு அந்த வழியாக உள்ளே சென்றால், அங்கே எந்த ஒரு சோதனையும் இல்லை. மிக நல்ல ஏற்பாடுதான்.


இன்னும் நேரம் இருந்ததால் நிலையத்தினுள் இருக்கும்  ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடையில் நின்று புத்தகங்களை மேய்ந்தேன். கையோடு ஒரு புத்தகம் படிக்க கொண்டுபோயிருந்தாலும் சிலசமயம் சில நல்ல  இப்படி சும்மா பார்க்கும்போது கிடைப்பதுண்டு. அதுமட்டுமில்லாமல்  பொதுவாக கூட்டத்திலிருந்து தப்பிக்கும் வழியாக நான் நினைப்பது புத்தகக் கடைகள் தாம்.  நெரிசலான அந்த ரயில் நிலையத்தில் அதிக கூட்டமில்லாத இடம்  அது தான்.

அப்போது  ஒரு பெண்   அவசரமாக அங்கு வந்தாள். நான் அவளைக் கவனித்ததேன் என்று சொல்லிவிட்டபிறகு அவள் ஒரு அழகானப் பெண் என்று வேறு தனியாகக சொல்லத் தேவையில்லை. ஜீன்ஸ் போட்ட மாடர்ன் அழகி அவள். என்ன புத்தகம் வாங்குகிறாள்  என்று லேசாக  கவனித்தேன். அவள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை, சட்டென இரு புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரும்பினாள், பார்த்து கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். அவை  குமுதமும் நக்கீரனும். அடப்  பாவமே!  இவள் திருமணமான பெண்ணாக இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.


எனது வழக்கப்படி ரயில் நகர ஆரம்பித்ததும் கடைசி நிமிடத்தில்  ஏறினேன். எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இன்னொருவர்  இருந்தார், அது எதிர்பார்த்தது தான். குளிர்சாதன பெட்டி முன்பதிவு  செய்திருந்ததில், அப்பொது  ஆர்.ஏ.சி. யில் இருந்தது.  எனவே  வேறு இருக்கை  கிடைக்கும்வரை நாங்களிருவரும் அந்த இருக்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

செங்கல்பட்டு தாண்டியவுடன் ஆள் வராத காலியிருக்கை இருந்தால் கொடுப்பதாக டீ.டீ .ஆர் வாக்களித்துச் சென்றார். 
நல்ல சிஸ்டம் தான். நாங்களிருவரும் ஆள் வராமல் காலியிருக்கை ஏற்படவேண்டுமென விரும்பிக்கொண்டு அமர்ந்திருந்தோம். இன்னொருவர் ரயில்லைத் தவறவிட்டு அப்படி இருக்கைக் வேண்டும் என விரும்ப ஆரம்பித்ததை கவனிக்க ஆச்சர்யமாக இருந்தது. அமர்ந்தபடியே கையிலிருந்த வெள்ளையானை புத்தகத்தைப் படிக்க ஆரம்பிதேன்.

"ஆச்சர்யமே இல்லை" என்றான் ஏய்டன்.     "உலகம் முழுக்க நான் பஞ்சங்களைப் பார்த்துவிட்டேன். எந்தப் பஞ்சத்திலும் சாகும் மனிதனுக்கு வாழும் மனிதன்  உதவிசெய்ததில்லை.பஞ்சத்தில் ஒருவன் சாவதக் கண்டதும் மற்ற அத்தனைபேரும் பதற்றமாகிவிடுகிரார்கள். அந்த நிலை தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.... மனிதர்களின் இயல்பான சுயநலம் கிளம்பிவரும். - வெள்ளை யானை நாவலிலிருந்து