Unordered List

11 மார்ச் 2013

அழித்தலில் ஆரம்பம்

தன்னைப் பார்க்க பல தர்க்கக் கேள்விகளுடன் வந்திருந்த அந்த ஞான யோகிக்கு சிவன் ஒரு மந்திரத்தை உபதேசித்தார்  

அந்த மந்திரத்தை அங்கே சென்றுகொண்டிருந்த ஒரு புழுவை நோக்கி சொல்லச் சொன்னார். யோகியும் சிவன் சொல்லியபடி செய்ய அந்த புழு அங்கேயே செத்துவிழுந்தது. அதிர்ந்தார்  யோகி.   

கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிய சிவன், மீண்டும் அந்த மந்திரத்தை அங்கே பறந்துகொண்டிருந்த ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியைப் பார்த்து சொல்லச்சொன்னார். ஏற்க்கனவே புழுவுக்கு அந்த மந்திரத்தால் ஏற்பட்ட நிலையைப் பார்த்திருந்த யோகி கொஞ்சம் தயங்கினார் இருந்தாலும் சிவனின்  சொற்படி அந்த மந்திரத்தை  வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து சொல்ல அதுவும் உடனடியாக இறந்தது.  

யோகி கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.  

"சிவனே என்ன இது"  என கதறினார்.  

சிரித்த சிவன் அடுத்து பார்த்தது அங்கு வந்த ஒரு மான்குட்டியை.  

"யோகியே அந்த மான்குட்டியை நோக்கி மந்திரத்தை சொல்லுக" என்றார்.

பலமுறை மறுத்த யோகி கடைசியில் சிவனின் சொல்லை மீறமுடியாமல் அந்த மானைப் பார்த்தும் மந்திரத்தைச் சொல்ல அதுவும் இறந்தது. ஒன்றும் புரியாமல் யோகி தவித்துக்கொண்டிருக்க ஒரு பெரியவர் கைக்குழந்தையுடன் சிவனிடம் ஆசிவாங்க வந்தார்.  

இப்போது சிவன் மந்திரத்தை சொல்லச் சொன்னது அந்த குழந்தையை நோக்கி. யோகியால் அதற்குமேல் முடியவில்லை. இதை என்னால் செய்ய முடியாது. இன்னொரு அழிவை என்னால் பார்க்க முடியாது என்று மறுத்துவிட்டார்.  

அப்போது அந்த அதிசயம் நடந்தது. அந்த குழந்தை யோகியை நோக்கி பேச ஆரம்பித்தது.  

"தயவு செய்து அந்த மந்திரத்தை சொல்லுங்கள்" என்றது.  

"புழுவாக இருந்த நான், வண்ணத்துப்பூச்சியானேன், பின்னர் அதிலிருந்து மான்குட்டியானேன், அதிலிருந்து மனிதனாகிவிட்டேன். இன்னொரு முறை நீங்கள் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நான் மனிதனிலிருந்து புனிதனாகிவிடுவேன்" என்றது அந்தக் குழந்தை.

யோகிக்கு அப்போதுதான் தான் செய்தது புரிந்தது. அழிவு என்று நினைப்பதெல்லாம் அழிவல்ல, அது இன்னும் மேலான ஒன்று பிறப்பதற்கான வழியாகவும் இருக்கலாம் என்று.  

----  

நேற்றைய மகா சிவராத்திரி இரவில் ஜக்கி வாசுதேவ் சொன்ன இந்தக் கதை நாம் நவீன  மேலாண்மைத் துறையில் அன்றாடம் பேசும் பல "comfort zone" போன்ற பல   கருத்துகளை எளிதாகத் தொட்டுச் செல்கிறது. யோசிப்பவர்களுக்கு இன்னும் அதிக அர்த்தங்களைக் கொடுக்கிறது இந்தக் கதை.  

சிவன் அழிப்பவன் தான். தான் என்று நாம் நினைக்கும் அனைத்தையும் ஒவ்வொரு கணமும் அழித்துக்கொண்டேயிருப்பவன். அழிவை நினைத்து அஞ்சாதவனுக்கு, தன்னுள் சிவன் இருப்பதை உணர்ந்தவனுக்கு நேற்றைய சுமையை சுமந்துசெல்லும் கட்டாயம் இல்லை. அவன் நித்தமும் புது மனிதன்.