Unordered List

24 டிசம்பர் 2021

தொடரும் தொன்மங்கள் - எழுத்தாளர் சுஷில்குமாரின் சிறுகதைகள் பற்றி சில எண்ணங்கள்

சமீபத்தில் வந்த ஸ்பைடர் மேன் படம் Spider-Man: No Way Home, இந்தப் படத்தின் முக்கிய ஆரம்பக்காட்சியைப் பார்க்கும்போது  சுஷில் குமாரின் ஒரு கதை நினைவுக்கு வந்தது.  சுஷில்குமாருக்கும் ஸ்பைடர்மேனுகும் என்ன சம்பந்தம் என பார்ப்பதற்குமுன், எழுத்தாளர் சுஷில்குமார் இந்த வருட விஷ்ணுபுரம் விழாவின் ஒரு விருந்தினராகவும் இருப்பதால் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான "மூங்கில்" மற்றும் சில கதைகள் வாசித்தவரை எனது தற்போதைய எண்ணங்களை தொகுத்துக்கொள்கிறேன்.

ஒரு கதையில் கல்யாண வீடுகளில் எச்சில் இலை எடுப்பது வரை பிழைப்புக்காக பல வேலைகள் செய்து பிழைக்கும் ஒருவன் அதில் ஒரு வேலையாக ஒருமுறை செண்டை மேளம் அடிக்கும்போது அவனைப்பார்த்து பார்த்து காதல்வயப்பட்டு திருமணமும் செய்துகொள்கிறாள் ஒருத்தி. அவன் பிழைப்புக்காக பல தொழில்கள் செய்தாலும், அவள் அவனை மிகவும் விரும்புவது என்றால் அவன் நேருக்கு நேர் நின்று பன்றி வேட்டையாடும்போது தான், அதைச் செய்யவே அவனை அவள் ஊக்குவிக்கிறாள். பன்றியென்றால் நாம் சாதாரணமாகப் பார்க்கும் பன்றியல்ல ஒரு காட்டெருமை அளவுக்கு பெரிய மற்றும் பன்றிக்கேயான கடும் மூர்க்கம் என ஆக்ரோஷமான மிருகம் அது என்று இந்தக் கதையில் காட்டப்படுகிறது. அந்த வேட்டையில் தான் அவன் முழுவதுமான வெளிப்படுகிறான், இதில் என்ன சோகம் என்றால் அவன் ஆளுமை வீழ்வதும், அவனை நினைத்து அவள் பயப்படவும் வெறுக்கவும் ஆரம்பிப்பதும் அதே பன்றி வேட்டையில் தான்.

வேட்டை என்பது ஒரு கொலைத்தொழிலாக இருந்தாலும் அங்கு வேட்டையாடுபனும் வேட்டையாடப்படுவதும் சமமாக இருந்து விளையாடும் வரை அது ஒரு விளையாட்டாக இருக்கிறது. மனிதன் மிருகங்களை கொல்லவே கூடாது என்பது மிக மேலோட்டமான பார்வை, மனிதனும் ஒரு உயிரிதான் என்ற முறையில் தன் உணவுக்காக பிழைப்புக்காக அந்த வேட்டையாடும் மிருகத்தின் சமநிலையும் குறையாத அளவுக்கு செய்யும் வரை அதுவும் இயற்கை தான். மீன்களை அவற்றின் இனப்பெருக்கக்காலத்தில் பிடிக்ககூடாது என்பது  போல குட்டிகளுடன் இருக்கும் தாய் மிருகங்களைக் கொல்வதும் சமநிலையைக் குலைத்து அந்த இன அழிவுக்கு வழிகோலும் என்பதால் தவிற்கப்படவேண்டும் என்பதெல்லாம் தர்க்கத்தின் வழியாக வரும் கருத்துக்கள்.

ஆனால் அவன் பலநாட்களாக வேட்டை எதுவும் கிடைக்காத ஒரு விரக்தி நேரத்தில், குட்டிகளோடு இருக்கும் தாய்ப்பன்றியை கொன்றது மிகப்பெரிய தவறென அவள் உணர்வது எந்த தர்க்கத்துக்கும் கட்டுப்பட்டல்ல. அது அவள் வளர்ந்த நிலம் அவளுக்குக் அவளறிந்த தொன்மங்கள் வழியாகக் கையளித்திருக்கும் அறம் வழியாக. இந்தக் கதையின் முடிவில் அதுவே அவர்களது மகனை இந்த விஷச்சூழலில் இருந்து மீட்கிறது. அன்றாட பலன்கள் சுயநலம் தாண்டி அவளை இயக்குவது இவையே.

எழுத்தாளர் சுஷில் குமாரின் மூங்கில் தொகுப்பில் பல கதைகளின் மையச்சரடாக இந்தத் தொன்மங்கள் மனித மனத்தில் கொண்டுள்ள ஆளுகையின் விளைவான விளையாட்டுகளை நான் காண்கிறோம். பல கதைகள் இந்த விளையாட்டின் எல்லையைச் சோதிக்கின்றன.

பட்டுப்பாவாடை என்ற கதை கோரானா நேரத்தில் கிட்டத்தட்ட தங்கள் உணவுக்கே வழியில்லாத நிலையில் இருக்கும்போது, தான் அம்மனுக்கு செய்யவேண்டிய கடமையை தன் உயிருக்கும் மேலாகக் கருதும் அதற்காக கொள்ளையில் கூட இறங்கும் அதற்கும் மேலாக, தன் உயிரையே விடத் துணியும் மனநிலையைக் காட்டுகின்றது. இப்படி உயிரையே தியாகம் செய்து அவர்கள் கடத்துவது எதை என்ற கேள்வியை வாசகனுக்குக் கடத்துகின்றது.

பல கதைகளில் நாஞ்சில் நாட்டு தொன்மங்கள் இருக்கும்போது அதே நிலத்தில் நடக்கும் புத்துயுர்ப்பு கதையில் கிட்டத்தட்ட இதற்கு இணையாக பைபிள் சொல்லப்படுவதையும் கவனிக்கமுடிகிறது.


நாஞ்சில் நிலத்தைத் தவிர இந்தக் கதைகளில் ஆரல்வாய்மொழி ஒட்டிய வறண்ட நிலத்தின் கதைகள், வெளிநாட்டில் நடக்கும் கதைகள் ஆகிய்வையும் உள்ளன. இந்த நிலங்கள், அந்தச் சூழல் மற்றும் காலநிலைகூட மனிதர்களின் மனநிலைகளில் உருவாக்கும் மாற்றத்தையும் காட்டுகின்றன.

இன்னொரு பார்வையில் வறண்ட நிலத்தில் நடக்கும் "சுருக்குக்கம்பி", பாம்பே வாழ்கையைக் காட்டும் "இருகோடுகள்", நாஞ்சில் நிலத்தின் "விதை" ஆகிய கதைகளில் இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் என்ற நிலையில் இருந்து மரணத்தின் விளிம்பைத் தொட்டபின் மீழும் புது நம்பிக்கை எந்த நிலத்துக்கும் பொதுவாக இருக்கின்றது.



இந்தக் கதைகளைப் தொகுத்துப்பார்க்கும்போது  இவற்றுக்கு நேரடி சம்பந்தம் இல்லையென்றாலும் என் நினைவுக்கு வருவது டிஜிடல் சர்வைலன்ஸ் அல்லது இப்போதைய தொழில்நுட்ப கண்காணிப்பு.

டிஜிடல் சர்வைலன்ஸ்  என்பது இன்றைய உலகத்தின் மிக முக்கியப் பிரச்சனையாக இருக்கின்றது என்பதை முன்பே இங்கு விவாதித்திருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக, "ரகசியமாக" வளர்ந்துகொண்டிருந்த இந்தப் போக்கு, கோரோனா சமயத்தில் அதற்கான "தேவை" இருக்கிறது என்ற காரணத்தை முன்வைத்து மிக வேகமாகவும் வெளிப்படையாகவும் அரசுகளாலும், பெருநிறுவனங்களாலும் செயல்படுத்தப்படுவதை கவனிக்கிறோம். இனிமேல் பின்னால் செல்லவே முடியாத அளவுக்கு நம்மைச் சுற்றி இவை இருக்கின்றன.

இந்த டிஜிடல் சர்வைலன்ஸ் உலகில் தனிமனித சுதந்திரத்தை மதிக்கும் சிலரின் உரிமைக்குரலாக The right to be forgotten (RTBF) அதாவது மறக்கப்படுவற்கான உரிமை எழுப்பப்பட்டது. ஒருவர் இணையத்தில் சில விஷயங்கள் செய்திருக்கலாம், பின்னர் அவர் நினைத்தால் அதை நீக்கும் உரிமை அவருக்கு இருக்கவேண்டும் என்பது ஒரு அடிப்படை உரிமையாகப் கோரப்படுகிறது. ஏனென்றால் கடந்தகாலத்தின் சுமைகளில் இருந்து விடுபட்டு மனிதர்களுக்கு தங்களை மாற்றிக்கொள்வதற்கான உரிமை தேவை. இது டிஜிடல் உலகில் மிக நியாயமான கோரிக்கை தான்.


ஆனால் மனிதமனம் அவ்வளவு எளிதான கருப்புவெள்ளையானது அல்ல, அது குற்றத்தைப் பதிவு செய்யும், தண்டனையளிக்கும் முறை வேறானது. இங்கு The right to be forgotten (RTBF) அதாவது மறக்கப்படுவற்கான உரிமை மிக எளிதல்ல.  பல கதைகளின் மையச்சரடாக இருக்கும் குற்றவுணர்வு,  சாபம் அல்லது கடந்தகாலத்தின் தண்டனையில் இருந்து மீள்தல் என்பதாக இருக்கின்றது. உண்மையில் நாம் நம் செயல்களுக்கு மட்டுமே பொறுப்பானவர்களா அல்லது இந்தச் சுமை நாம் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறதா என்ற கேள்வியை பச்சைப்பட்டு என்ற கதை எழுப்புக்கிறது.  இதன் பல பரிணாமங்களை பல கதைகளில் காணமுடிகிறது. இதில் சாபம் கதை மட்டும் இதன் எதிர் எல்லையை கொஞ்சம் நகைச்சுவையுடன் கையாள்கிறது.


திறமையான, பிறருக்கு உதவி செய்யும், ஆனால் தன் மேட்டிமைத்தனத்தை சுமக்கும் கௌரவம்,  அக்னி போன்ற கதைகள் மனித உணர்வுகளின் நுட்பங்களைக் காட்டுகின்றன.


பெரும்பாலும் நாஞ்சில் நாட்டு பண்பாடும் மாயங்களும் பல கதைகள் இருந்தாலும் அதிலேயே சமூகத்தின் பலநிலைகளில் இருக்கும் மனிதர்களை துல்லியமாக சித்தரிப்பது எழுத்தாளர் சுஷில் குமாரின் தனித்தன்மையாக சொல்லலாம். நாஞ்சில் பகுதிக்கு வெளியில் ஐடி, கல்வித்துறை, வெளிநாடுகள் என பல களங்களில் இருக்கும் கதைகளும் எழுத்தாளரின் பன்முக கலாச்சர அறிமுகத்தைக் காட்டுகின்றன.


ஸைபைடர்மேன் படத்தில் தன்னைச் சார்ந்தவர்கள் படும் துயரத்தை தாங்கமுடியாமல் காலத்தையே மாற்றியெழுதும் காட்சியை எழுத்தாளர் சுஷில் மூரையும் பொன்னும் கதையில் நாஞ்சில் தொன்மங்கள் வழியாகத் தொட்டிருக்கிறார். அவர் கையில் இருக்கும் இந்த வளமான தொன்மங்களும், அவரது கதைசொல்லல் பாணியும், பன்முக காலாச்சார அறிமுகமும் அவர் வரும்காலத்தின் முக்கிய படைப்பாளியாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.

16 டிசம்பர் 2021

கோலி எனும் இலக்கில்லாத துப்பாக்கி

2015 வருடம் அப்போது இந்திய க்ரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனிக்கு சின்ன சோதனைக் காலம், அதைப்பற்றி அப்போது பவுலராக இருந்த் அஸ்வினிடம் கேள்வி கேட்கப்பட்டது. "ஒரு போரில் தலைவன் பின் தான் வீரர்கள் நிற்கவேண்டும், என் தலைவர் சொன்னால், நான் களத்தில் உயிரைக்கொடுக்கத்தயார் என்றார்"

அப்போது சில அதிர்வலைகளை உருவாக்கிய பேட்டி அது. நன்றாக கவனித்தால் தோனி எந்த அளவு ஜூனியர் வீரர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார் என்பதை இது காட்டுகிறது. 

இது இப்படியென்றால சிஎஸ்கே அணி அமைக்கப்பட்டபோது அப்போது ஜூனியராக இருந்த ரவீந்திர ஜடேஜா  பெரும் விலைக்கு வாங்க்கப்பட்டது பல புருவங்களை உயர்த்தச் செய்தது. அப்போது அவர் "சர் ஜடேஜா" என அன்பு கடந்த கிண்டலுடன் அழைப்பட்ட காலம். ஒரு கிசுகிசுவாக இருந்த அந்தப் பட்டப் பெயரை அப்போது கேப்டனாக இருந்த தோனி பேட்டிகளிலும் டிவிட்டரிலும் பேசி ஜடேஜாவை நம்ம வீட்டுப்பையன் என்று நினைக்க வைத்தார்.

இதை விட முத்தாய்ப்பாக தனக்கு அடுத்த கேப்டனையும் உருவாக்கினார் தோனி, ஒரு மேட்சில் விராத் கோலி சிறப்பான ஆட்டத்தால் ஜெயிக்கும் நிலைக்கு வர, அந்த ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்த தோனி நினைத்திருந்தால் வின்னிங் ஷாட் அடித்திருக்கலாம். ஆனால் அதை தக்கவைத்து கோலிக்கு வின்னிங் ஷாட் அடிக்க வாய்ப்பு கொடுத்தார். அது சும்மா இல்லை, கோலிக்கு அந்த தகுதி இருக்கிறது என்று நினைத்துதான் கொடுத்தார். 



அப்படி தோனியால் கைகாட்டப்பட்ட கோலி எங்கே ஒரு கேப்டனாக வெற்றி பெறமுடியவில்லை? முன் சொன்ன சம்பவங்களை மறுபடி யோசியுங்கள் கோலி கேப்டனான பின் எத்தனை ஜூனியர் வீரர்கள் கோலிக்காக "உயிரைக்கொடுக்க" தயாராக இருக்கிறார்கள்.

அப்படியென்றால் தோனியால் கைகாட்டப்பட்ட கோலி தகுதி இல்லாதவரா? இந்தக் கேள்விக்கு பதில் தேடும்முன் இந்திய க்ரிக்கெட் போர்டில் மாநிலங்களின் ஆதிக்கத்தை மனதில் வைக்கவேண்டும். இந்திய க்ரிக்கெட் போர்டில் மூன்று மாநிலங்கள் தான் பெரிய அளவில் சக்தியானவை மும்பை, கர்நாடகா அடுத்து சென்னை. விளையாடும் 11 பேரில் சில காலகட்டங்களில் இந்த மாநில வீரர்கள் நான்கு,ஐந்துபேர் என இடம் பிடித்து தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய காலங்கள் உண்டு. 

இந்த மாநிலங்களைத்தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வந்து கேப்டனாக ஜெயிக்க பெரும் வல்லமையும் கரிஷ்மாவும் வேண்டும். கபில்தேவ்,கங்குலியில் இருந்து தோனி வரை அப்படிப்பட்ட போர் வீரர்கள் தான். அந்த வழியில் கோலி கேப்டனானதும் தனது அந்த அசாத்திய திறமை மற்றும் போர்குணத்தால் தான். தோனி தனது தொடர்ச்சியாக கோலியை நினைத்ததும் இந்தக் காரணத்தால் தான்.

ஆனால் கோலியின் போர்க்குணம் எங்கே குறி தவறியது என்பது தான் பிரச்சனையாக ஆகிறது. கபில்தேவ் சச்சின் போன்றவர்கள் சின்ன டீம்களுடம் விளையாடும் போது மிக நட்பாக இருப்பதை கவனிக்கமுடியும். ஆனால் பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா, இங்கிலாந்துபோன்ற சவால்களின்போது மிக கடுமையாக போராடுவதை கவனிக்கமுடியும். கேப்டன் கூல் எனப்படும் தோனி கூட பாகிஸ்தான்/ஆஸ்திரேலியா போட்டிகளில் அதிக ஆக்ரோஷம் காட்டுவதை கவனிக்கமுடியும். 

ஆனால் ஐபில் போன்ற போட்டிகளில் கூட பொங்கும் கோலி சமீப பாகிஸ்தான் போட்டியின் தோற்றதையும் அதை மிக ஜாலியாக எடுத்துக்கொண்டதும் மக்களால் ரசிக்கப்படாது என்பதை அவர் உணரவில்லை என்று படுகிறது. நீ அவ்வளவு நல்லவன்(கூல்) இல்லையே என கிண்டலடிக்கப்ப்ட்டது. தற்போது மீடியாவில் இருக்கும் அரசியல் சரிநிலைக்காக தன் க்ரிக்கெட் பாரம்பர்யத்தை விட்டுக்கொடுத்துவிட்டார் என விமர்சிக்கப்பட்டார். முக்கிய போட்டிகளில் சச்சின் கபில் போன்றவர்கள் தோற்றால் அவர்கள் சோக முகமே நமக்கு ஆறுதலாக அமையும் என்பதையும் கவனிக்கமுடியும்

தன் எதிரிகளை கையாள்வதிலும் இதே குறி தவறிய நிலை தான் கோலி எடுத்துக்கொண்டிருந்தார். சமீபத்தில் சரியாக விளையாடாத ரோஹித்துக்குப் பதில் ஏன் பார்மில் இருக்கும் இஷாத் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்ககூடாது என கேள்வி கேட்கப்ப்பட்டபோது "அய்யோ ரோஹித்தை தொடுவதா என பதறினார்". சரியாக விளையாடாத ரஹானே, புஜாரா ஆகியோரை தொட பயப்படும் அவர், ஜூனியர் வீரர்களுக்கு தோனி செய்ததுபோன்ற அந்த நம்பிக்கையை அளிக்கவில்லை. அதுவே அவருக்கு பிரச்சனையானது.

கோலியின் வெற்றி சதவீதம் பழைய கேப்டன்களை விட நன்றாக இருக்கிறதே என்று சொல்பவர்கள் கடந்த பத்து வருடமாக இந்திய க்ரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர்கள் என்று சொல்லலாம். 2007 உலகக் கோப்பையில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி மிக பரிதாபமான தோல்வியைடந்தது. கிட்டத்தட்ட க்ரிக்கெட் மீதே இந்தியா நம்பிக்கை இழந்த நிலையில் தான்  கபில் ஆரம்பித்த ஐ,சி,ல் தொடர்ச்சியாக வந்த் ஐ,பி.ல் அந்த நிலையை மாற்றியது, இப்போது இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. அந்த நிலையில் கேப்டனாக தோனியும் அப்போது வீழ்ந்திருந்த கேப்டன் என்பதன் பெருமையை மீட்டெடுக்க உதவினார்.

இப்போது இந்தியாவில் இருக்கும் திறமையான வீர்களைன் காரணமாக, சரியான அணி தேர்வு செய்தாலே இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்ற நிலைமை தான் இருக்கின்றது. எனவே இயல்பாக வெற்றி சதவீதம் அதிகம் இருக்கும். ஆனால் அதிக கேப்டன்ஸி தேவைப்படும் ஐ.சி.சி தொடர்க்களை ஜெயிப்பதே இப்போது சவால். அதில் கோலி தொடர்து தோற்க முன்சொன்ன இரணடு காரணங்கள் தான் காரணமாக அமைகின்றன.

எனவே கோலி சாதாரண ஆள் இல்லை, தோனி கைகாட்டிய பவர்புல் துப்பாக்கி, ஆனால் ஒரு கேப்டனாக அது இலக்கின்றி எதிராளிகளை விட்டுவிட்டு எளியவர்களையும் தன்னை நம்பியிருப்போரையும் சுட்டு இலக்கில்லாத துப்பாக்கியானது தான் சோகம்.