Unordered List

04 அக்டோபர் 2012

ஒரு தண்ணீர் உடன்பாடு


"மனிதன் என்பவன் தரையில் வாழவேண்டும், கிடைக்கும் நேரத்தில் சிந்திக்கவேண்டும். அது மனிதனின் வேலை. தவளை வேண்டுமானால் தரையில் இருக்கும் நேரம்போக மற்ற நேரத்தில் தண்ணீரில் குதித்து மிதக்கலாம், ஏனென்றால் அதற்கு வேறு வேலை இல்லை. ஆனால் மனிதனாகப் பிறந்தவர்கள்  முதலில் மனிதனுக்கு தேவையான வேலைகளையே செய்து முடிக்காமல், தவளைகளின் வேலைகளைச் செய்வது வீண் வேலை இல்லையா? முதலில் மனிதன் செய்யவேண்டிய  வேலைகளைச் செய்யனும் தம்பிகளா .. அப்புறம் தவளையின் வேலைகளைச் செய்யலாம்,"  ஒரு நண்பனின் தோட்டத்து கிணற்றில் நண்பர்கள்  எல்லோரும் மிதந்துகொண்டிருக்க, கிணற்றின் படிகளில் பத்திரமாக  உட்கார்ந்துகொண்டு நான் உதிர்த்த 'அறிவுரைகள்'  தான் அவை. ஆனாலும் நான் கொஞ்சம் தைரியசாலி, நான் உட்கார்ந்த்திருந்தது எனது கால் தண்ணீரில் படும்படி இருந்த, தண்ணீருக்குள் மேலிருந்த கடைசிப்  படிக்கட்டு. என்னைபோலவே நீச்சல் தெரியாத இன்னொரு நண்பன் இருந்தது இன்னும் உயரமான படிக்கட்டு. அவனுக்கு என் அளவுக்கு தைரியம் பத்தாது.

நீச்சல் தவளைகளின் வேலை என்று நான் ஐயம் திரிபர நிறுவிக்கொண்டிருந்தாலும், அருவிக்குளியல் மனிதர்களுக்கானது என்பதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை, அருவிக்குளியல் வாய்ப்பை எப்பொதும் தவறவிடுவதில்லை.


இப்படியாக இயற்கையுடனான ஒரு உடன்பாட்டை நான் கடைப்பிடித்து வந்தாலும், இயற்கை என் அளவுக்கு உடன்பாட்டை மதிப்பதில்லை என்று எனக்கு மெல்ல மெல்ல தெரியவந்தது. சில அருவிகளை, அதுவும் காட்டுக்குள் இருக்கும் அருவிகளை நீந்தித் தான் அடையவேண்டும் என்ற கட்டாயத்துடன் அமைத்திருந்தது இயற்கை. கொல்லி மலையில் பல கிலோமீட்டர்கள் கீழே இறங்கி அடைந்த ஆகாய கங்கையில் இந்த நிலை. பிறகு சென்ற பர்கூர் காட்டருவியிலும் அதே நிலை, இங்கே சென்னைக்கு அருகிலுல்ல தடாவிலும் கூட.இயற்கையின் சதியை மீண்டும் மீண்டும் சந்தித்தது எனக்கு எதையொ உணர்த்தியது. அந்தக் காலத்து படங்களில் மூன்றுமுறை அடிவாங்கி, வாயில் கசியும் ரத்தத்தை தொட்டுப் பார்த்தபின் வீரம் வரும் ஹீரோ போல உணர்ந்தேன். ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிலைமை. இயற்கையானது எப்போதும் இயங்கும் மகாதர்மத்துக்குக்  கட்டுப்பட்டது. என்னை நீச்சல் அடிக்கவைத்தே தீருவது என்று எங்கும் பரவியிருக்கும் அந்த மகாதர்மம் முடிவு செய்துவிட்டால் அதற்கு ஒரு நோக்கம் இருக்கத் தானே செய்யும். அந்த நோக்கத்தை யாரறிவார்? இயற்கையை அதன் வழியிலேயே எதிர்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

இயற்கையின் சதி


உடனடியாக செயலில் இறங்கினேன். நமக்கு எந்த விஷயம் தெரியவேண்டுமானாலும் முதலில் யாரைக் கேட்பது. ஆம் நான் முதல் செயல் நமது கூகிள் அண்ணாவிடம் கேட்டது தான். கூகிள் என்னை youtube-க்கு அனுப்பி வைத்தது. சிலமணிநேரங்கள் அதில் செலவழித்து கிட்டத்தட்ட ஒரே இரவில் நீச்சலைக் கற்றுக்கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும். இவ்வளவு எளிதான ஒரு விஷயத்தை ஏன் இவ்வளவு நாட்களாக செய்யவில்லை என்ற வியப்பும் உருவாகியது. இதிலும் அந்த மகா தர்மத்தின் விளையாட்டு இருக்கக்கூடுமென உணர்ந்தேன்.

அடுத்த கட்டமாக youtube மூலம் ’கற்றுக்கொண்ட’ வித்தையை ஒரு நீச்சல் குளத்தில் காட்டுவது என்று முடிவு செய்தேன். ஒரு விஷயம் தெரிந்தபின் அதை சந்தேகப்படுவது தவறு என்று தெரிந்திருந்தாலும், காலத்தின் கட்டாயத்தால் நீச்சல் குளத்துக்கு செல்லவேண்டிய சூழல் உருவானது. காலாண்டு விடுமுறை காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவனுடன் கூட்டணி அமைத்து நீச்சல்குளம் சென்றேன்.

பல வருடங்களாக நீச்சல் அடித்துவந்தாலும், நான் படித்தறிந்த பல நுணுக்கங்கள் அவனுக்குத் தெரியவில்லை எனபது மிக ஆச்சர்யம் தான். போகும் வழியில் அந்த நுணுக்கங்களை அவனுக்குக் சொல்லிக்கொடுத்தபடியே சென்றேன். அதில் அவ்வப்போது சில சந்தேகங்களையும் கேட்டு அவனது ஆர்வத்தைப் பறைசாற்றிக்கொண்டு வந்தான் அவன். அந்த ஆர்வத்துக்குக் காரணம் வீட்டில் என்ன செய்வதுஎன்று தெரியாமல் இருந்த அவனை நீச்சல் குளம்  கூட்டிச்சென்று வருகிறேன் என்று கொடுத்த வாக்குறுதியா அல்லது உண்மையான ஆர்வமா என்றறியேன். அனால் குளத்தில் இறங்கியவுடன் அவன் சொன்னது "அங்கிள், நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க ஆனால், ரெம்ப ஆழம் போயுடாம, இந்த சுவத்தைப் பிடித்தபடி பண்ணுங்க" என்றான். அவனும் கவனிக்கிறான் போல.

ஆனால் அந்தத் நீச்சல் குளம், youtube போல அந்த அளவுக்கு எளிதல்ல என்று தோன்றியது. நீச்சல் அவ்வளவு எளிதாக வரவில்லை அங்கு. காரில் வந்த  நேரம் முழுவதும் நான் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த அவன் இப்போது பேச ஆரம்பித்தான், நீச்சல் அடிப்பதைப் பற்றி. சிறிது நேரத்தில் அங்கு இருந்த பல சிறுவர்கள் மிக உற்சாகமாக எனக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தனர். நேரம் தான்.

அப்புறம் இரு நாட்கள் முயற்சிகளுக்குப் பின் நீச்சல் ஒருமாதிரியாக பிடிபட ஆரம்பித்தது வேறு கதை.ஆனால் நீச்சலை இதுமாதிரியாக ‘பார்த்துக்' கற்றுக்கொள்வதை பலரால் ஒப்புக்கொள்ள இயலவில்லை.தண்ணீரில் தள்ளிவிட்டால் தானாக வந்துவிடப்போகிறது என்பது தான் பலரது கருத்து. ஆனால் அது அப்படியில்லை.

நீச்சல் மனித உடலின் ஒரு இயற்கையான செயல்பாடுதான் என்றாலும், மனிதர்கள் எல்லோருமே ஒரே மாதிரி நீச்சல் அடிப்பதில்லை என்பதை நாம் உணர வேண்டும். அதற்குக் காரணம், பெரும்பாலானவர்கள் தாங்கள் முதலில் குத்துமதிப்பாக கற்றுக்கொண்ட முறையையே மீண்டும் மீண்டும் செய்துவருவது தான். எல்லா கற்றலும் போல இதிலும், உள்நோக்கிய அல்லது வெளிநோக்கிய கற்றல் சாத்தியம். தங்கள் உடலைக் கவனித்து, அதன் இயல்பை உணர்ந்த்து அதைச் செய்வது உள்நோக்கிய கற்றல், அல்லது மற்றவர்களையும் youtube வீடியோ போன்றவற்றை கவனித்து அதை முறையாக பயிற்சி செய்து, அவற்றை நமது உடலின் தசை நினைவிலேற்றும் வெளிநோக்கிய கற்றல். இந்த இரண்டு முறைக்கும் வராமல் தனக்குத் தெரிந்த ஒரே முறையில் நீந்துவது கற்றலில் வராது.

தெரியாது என்று என்று தெரிந்துகொள்வதுதான் அறிதலின் இரண்டாம் நிலை என்று சொல்வார்கள் , அதுதான் முக்கியமான நிலையும் கூட. இந்த இரண்டாம்  நிலைக்கு வந்துவிட்டால் சிலபல முயற்சிகள் மற்றும் பயிற்சிகள் மூலம் அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்று விற்பன்னராகிவிடலாம். ஆனால் நீச்சல் கற்றுக்கொள்வதில் ஒரு ஆச்சர்யம் இருக்கிறது. கற்றுக்கொண்ட பிறகுதான் தெரிகிறது, இது நமக்கு முன்னரே தெரியுமென்று. தெரிந்ததை தெரியும் என்று தெரிந்துகொள்ளத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும்.

13 செப்டம்பர் 2012

ஒரு வீட்டுப் பிரச்சனை


கதவைத் திறந்ததும் காருக்குக் கீழிருந்து எட்டிப்பார்த்தது அந்த நாய்க்குட்டி, கண்களில் ஒரு கேள்விக்குறியுடன். புதிதாக ஒரு வீட்டுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் நாய் பார்க்கும் விரோதப் பார்வையோ, அல்லது தனது சொந்தக்காரனைப் பார்த்தவுடன் பார்க்கும் அன்புப் அல்லது அடிமைப் பார்வையோ அல்ல அது. அந்தப் பார்வையில் இருந்தது அப்பழுக்கற்ற கேள்வி மட்டுமே.

அந்த அதிகாலையில்  அந்த நாய்க்குட்டியின் அமைதியைக் குலைத்துவிட்ட குற்றவுணர்வு கொஞ்சமிருந்தாலும், எனக்கு வேறு வழியில்லை. அங்கே தான் நான் சென்றாக வேண்டும். அது எனது வீடு, அதாவது நான் வாடகை தந்து குடியிருக்கும் வீடு. முடிந்தவரை நாயை தொந்தரவு செய்யாமல் வீட்டைத் திறந்து உள்ளே சென்றேன். காருக்குக் கீழிருந்து எட்டிப்பார்த்த நாய் தலையை உள்ளிழுத்துக்கொண்டது.


நான் வீட்டைவிட்டுக் கிளம்பி நான்கு நாட்களாகிவிட்டிருந்தது, நான்கு நாட்களாக நண்பர்களுடன் கர்னாடக காட்டுப்பகுதிகளுக்கு ஒரு பயணம். நான்குநாட்கள் பயணம் முடிந்து அந்த அதிகாலையில் தான் ஊர்திரும்பினேன். இதற்குமுன்பு இந்த நாயைப் பார்த்தமாதிரி ஞாபகமில்லை. இந்த நான்கு நாட்களுக்குள் தான் இந்த நாய் இங்கு வந்திருக்கவேண்டும். எனது வீடும் காரும்தான் நான்கு நாட்களாக அதன் இருப்பிடமாக இருந்ததா, அல்லது இன்று தான் அது அந்த இடத்தைக் கண்டடைந்து இருக்குமா. அந்த போர்டிகொவும் எனது சிவப்பு ஸ்விஃப்ட் காரும் நாய் வசிக்க வசதியான இடம் தான், அதுவும் இந்த மழைக்காலத்தில் மிகவும் கதகதப்பாகவே இருக்கக்கூடும்.

எனது கார் என்று சொல்லிக்கொண்டாலும் அந்தக் கார் ஒரு வங்கியின் கடன் பணத்தில் வாங்கியது. இந்த வருடம் முடிவில்தான் கடன் தவணை முடிகிறது. அத்ன்பின் தான் அது எனக்கு முழு சொந்தம் என்று சொல்ல முடியும். இந்த வீடும் வீடு என எனது நண்பர்களால் அறியப்பட்டு இருக்கிறது. அனால் இதை எனது வீடு என்று சொல்வதில் வீட்டின் சொந்தக்காரருக்கு ஆட்சேபனை  இருக்கக்கூடும். எனினும்  இந்த வீட்டுக்கு நான் வாடகை கொடுப்பதால் எனது வீடு தான் இது. வீட்டுக்காரக்கு சரியென்றால் இந்த வீட்டை வாங்கிவிடலாம் என்ற ஒரு யோசனையும் இருக்கிறது. ஆனால் அதைக் கேட்கபோய் என்னை காலி செய்ய சொல்லிவிட்டால் இது போல ஒரு வீடு அலுவலகம் பக்கத்திலேயே கிடைக்காது என்ற பயம் அந்த யோசனையைத் தடுத்தபடியே உள்ளது. அலுவகம் மாறும்போது கேட்கலாம், காலிசெய்ய சொல்லிவிடுவாரே என்ற பயம் இருக்காது. ஆனால் வேறு ஊருக்கு மாறும்போது இந்த வீட்டைக் கேட்டு என்ன பயன். நானும் வேறு யாருக்காவது வாடகைக்கு கொடுத்துவிட்டு வீட்டுக்காரனாக இருப்பதற்கு அவரே வீட்டுக்காராக இருப்பது அந்த வீட்டுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

கார் வாங்கிவிட்டேனே தவிர அதை இந்த ஊரில் ஓட்டுவது அவ்வளவு மகிழ்ச்சியான செயலில்லை. பைக் போதும் இந்த ஊருக்கு. பைக் தான் எனது உற்ற தோழன். இருந்தாலும் கார் ஒரு அவசியத் தேவையாகிவிட்டது. ஏனென்றால் தோழியுடன் பயணிக்க கார் தான் ஒரே வழி. தோழியுடன் பைக்கில் செல்வது இந்த சமுதாயத்துக்கும் அல்லது தோழிக்கும் கூட உவப்பான செயலில்லை. இந்த சமுதாயக் கட்டாயங்கள்தான் கார் விற்பனைக்கு காரணம் என நினைக்கத் தோன்றுகிறது. ஆட்டோவே உரசாமல் செல்ல முடியாத குறுகிய மற்றும் நெரிசல்மிக்க சாலைகள் உள்ள சென்னையில் விலையுயர்ந்த கார்கள் இவ்வளவு விற்பனையாவதன் மூலம் இதை புரிந்துகொள்ளமுடிகிறது.

இவ்வளவு இருந்தாலும், இந்த வீடு அல்லது கார் உன்னுடையதா என்று யாரும்  கேட்டால், சற்றும் யோசிக்காமல் அல்லது சற்றே யோசித்து நான் சொல்லும்  பதில்,ஆம் என்பது  தான். இந்த பின்னணிக் கதைகள் கேட்க அவர்களுக்கு பொறுமை இருக்குமா என்று தெரியாது, கேட்டால் கண்டிப்பாக புரியும். அனால் இதை தெரிந்து அவர்களுக்கு ஆகப் போவது ஏதுமில்லை என்பதால் அவர்களுக்குச் சொல்வதுமில்லை. ஆனால் இந்த  நாய்குட்டிக்கு? அதற்கு இந்த விஷயம் தெரிந்தே ஆகவேண்டுமல்லவா? நான் தான் இந்த வீட்டுக்காரன் என்று அந்த நாய் தெரிந்துகொள்வது மிக்க அவசியம் அல்லவா? அந்த நாய் அங்கு தங்க எனது அனுமதிதான் தேவை என்று அதற்க்குத் தெரியவேண்டுமல்லவா? அந்த நாய்க்குட்டியின் கண்களிலிருந்த கேள்வி அது தானேஅதற்கு எப்படி இதைச் சொல்லி புரியவைக்கப்போகிறேன் என்று யோசித்தபடி அந்த அதிகாலை நேரத்தில் ஒரு குட்டித் தூக்கத்துக்கு இருந்த சாத்தியத்தை பயன்படுத்திக்கொண்டேன்.

பத்துமணிக்கு அலுவலகம் செல்லும்போது காருக்குக்கீழ் மறக்காமல் எட்டிப்பார்க்க அந்த நாய்க்குட்டியைக் காணோம். என்னைப் பார்த்ததும் ஓடியிருக்கலாம். ஆனால் அந்த விஷயத்தை என்னால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, அந்த நாய் சென்றது கூட எனக்குப் பிரச்சனையில்லை. இந்த ஊரில் நம்மைவிட நாய்க்கு பல இடங்கள் எளிதாகக் கிடைக்கும். ஆனால் அந்த நாய் என்ன நினைத்துக்கொண்டு ஓடியிருக்கும் என்றகேள்விதான் என் மனத்தைக்குடைந்தபடியிருந்தது. அதை எப்போதும் அதற்கு புரியவைக்கமுடியாதபடியாகிவிட்டதே என்ற சோகமும்.

இரு நாட்கள் கழித்து ஒரு நடுஇரவில் மழை சத்தம் கேட்டு விழித்தேன். வெளியில் காயும் எனது ஜட்டிகள் ஞாபகம் வந்தது. என் வழக்கப்படி  எல்லா ஜட்டிகளயும் ஒரே நாளில் துவைத்து காயபோடிருந்தேன். நாளை கண்டிப்பாக தேவைப்படும். எனவே உடனடியாக  இறங்கி ஓடி அதை மழையில் நனையாமல் எடுத்தேன். எதேச்சையாக பார்வை கார் பக்கம் திரும்பியதில் நாய்க்குட்டி காருக்கு அடியிலிருந்து எட்டிப்பார்த்தது. அதே  நாய்க்குட்டி.

அந்த நாய்க்குட்டி உண்மையில் ஓடிப்போகவில்லை போல, நான் வழக்கமாக பார்க்கும் நேரத்தில் அது இல்லை என்பதால் அது அந்த வீட்டில் இல்லை என்று சொல்ல முடியாதில்லையா. நான் கூடத்தான் அது பார்க்கும் நேரத்தில் வழக்கமாக அந்த வீட்டில் இல்லை. எது எப்படியிருந்தாலும் ஜட்டியை மழையிலிருந்து பாதுகாத்துவிட்ட திருப்தியுடன் தூங்கச் சென்றேன்.

அப்படியானால் அந்த நாய் அதற்க்குத் தேவைப்படும் நேரத்தில் அங்கு வருகிறது, எனக்குத் தேவைப்படும் நேரத்தில் நான் வருவது போல, எனக்குத் தேவைப்படும் நேரத்தில் எனது காரை நான் எடுப்பது போல. எனவே அந்த வீடும் காரும் எனது என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அந்த நாயுடையதும் என்பது தானே?

இதில் எனக்குப் பிரச்சனை இல்லையென்றாலும் இருந்தாலும் ஒரு கேள்வி என் மனத்தை சுற்றியபடியேயிருந்தது. தனக்கு சொந்தமான வீட்டுக்கு வந்துசெல்லும், அந்தக் காரை அவ்வப்போது எடுக்கும் என்னைப்பற்றி அந்த நாய் என்ன நினைத்துக்கொண்டிருக்கும்?

08 செப்டம்பர் 2012

இரவு, மழை மற்றும் வனம் -ஜெயமோகனுடன் மழைப்பயணம்



சிலவருடங்களுக்கு முன் தேக்கடியில் ஒரு யானைச்சவாரி செல்ல வாய்ப்புக்கிடைத்தது. நாம் வழக்கமாக ஊருக்குள் பார்க்கும் நோஞ்சான் யானைகள் போலல்லாமல் கொஞ்சம் புஷ்டியான யானை. யானைமேல் ஒரு சிறிய கைப்பிடி கம்பியுடன் கூடிய துணி மட்டுமே போடப்பட்டு அதன்மேல் அமர்ந்து மரங்களடர்ந்த காட்டு வழியில் சவாரி. யானைப் பாகன் கூடவே நடந்துவந்தாலும்,  தவறேதும் நடந்துவிடாது என்ற நம்பிக்கை இருந்தாலும், உடலும் மனமும் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருத்ததை உணர முடிந்தது. அந்த யானை அந்த பாகன் சொல்வதைக் கேட்பது போல தோன்றினாலும் அது அவன் பேச்சைக் கேட்காதது போலவும் தோன்றியது. என்னைச் சுமந்துகொண்டு நடந்துகொண்டே யானை ஒவ்வொருமுறை பிளிறியபோதும் எனது உடலின் ஒவ்வொரு அணுவும் அதை உணர்ந்தது.

இரவு,மழை மற்றும் வனம் ஆகியவையும் அப்படித்தானோ என நினைக்கத் தோன்றுகிறது.  என்னதான் நமது பாதுகாப்புகளோடும் நம்பிக்கைகளோடும் நாம் நம்மை சௌகர்யமாக உணர்ந்தாலும் அவை எந்நேரமும் தளைமீறி நம்மை அடித்துச்செல்லும் சாத்தியங்களுடனேயே உள்ளன. இதுவே நம் மனம் மழையிலும் இரவிலும் வனத்திலும் எப்போதும் எதிர்பாரா எதையோ எதிர்பார்க்கும்  உச்சகட்ட விழிப்புநிலையிலோ அல்லது எதற்குமே கலங்காத கனவு நிலையிலோ இருக்கவும், அந்த எதிர்பாராத்தன்மைதரும் கவர்ச்சியே மனித மனம் இரவையும் மழையையும் அல்லது காட்டையும் தேடியோடவும் காரணம் என நினைக்கிறேன்.



கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பாகவே திட்டமிடப்பட்ட பயணம் அது. கோதாவரி நதியில் மூன்று நாட்கள் இலக்கிய கூடல் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அலுவலகத்திலும் நண்பர்களிடமும் போதுமானவரை கோதாவரிப்புராணம் பாடியாகிவிட்டது. வனவெளி நோக்கி

புறப்படும் அந்த நாளும் வந்தது, ஒரு அதிரடி செய்தியுடன். பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக கோதாவரிப் பயணம் சாத்தியமில்லை என்பதால்  பெங்களூரு பக்கத்தில் எதோ ஒரு ஊருக்கு செல்வதாகச் செய்தி. எதிர்பாராத திருப்பங்கள் தானே ஒரு நல்ல பயணத்துக்கு அறிகுறி, அதனால் அதிகம் கவலையில்லை. அதுவுமிலாமல் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் ஜெயமொகனுடன் பயணம் எங்கு சென்றாலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. பயணத்தின் எல்லா சாத்தியங்களையும் அறிந்தவர் அவர். அவருடன் இருக்கும் எந்த நேரத்திலும் கற்றுக்கொள்ள ஏதாவது இருந்துகொண்டேயிருக்கும்.


*****

சென்னையிலிருந்து ஜெயமோகன் உட்பட பத்து பேர் ரயிலில் பெங்களூரு சென்றோம். ஈரோட்டிலிருந்து வந்தவர்களோடு இணைந்து அங்கிருந்து சிமோகா நோக்கிப் பயணம்.  வழியில் துங்கா நதியின் ஒரு கால்வாயைப் பார்த்ததும் ஒரு திடீர்க் குளியல். அங்கே உருவானது பயணத்தின் மனநிலை. அங்கே ஆரம்பித்து பயணம் முழுவதும் கூடவே வந்தது தண்ணீர். கழுத்தளவு தண்ணீரில் மூழ்கியபடி சுற்றியிருந்த மரங்களூடே பறந்த விதவிதமானப் பறவைகளைப் பார்த்தது மனத்தையும் பறக்கவைத்தது.

பறவைகள் மற்றும் சில


அடுத்தது சென்றது துங்கா மற்றும் பத்ரா நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை. தண்ணீருக்குள் ஒரு தெய்வம், வேண்டுதலுடன் கொஞ்சம் மக்கள். சற்று அருகில் துணிதுவைக்கும் சிலர். அந்த பின்னணியில் படித்துறையில் ஜெயமோகனின் பேச்சு. கள்ளி யட்சி கதை மற்றும் சில.
குட்லி - கூடுதுறை

சிமோகாவை விட ஆகும்பே செல்வது சரியாக இருக்கும் என்று அங்கு முடிவெடுக்கப்பட்டு ஆகும்பே நோக்கி பயணம் தொடந்தது. ஆகும்பே செல்லும்வழி மிக அழகானது சாலையின் இருபுறமும் நிறைந்திருந்த நீர்நிலைகள், அடர்ந்த மரங்கள்  மற்றும் பறவைகள். வேனிலிருந்து பார்ப்பது போதவில்லை, இறங்கி நடக்க ஆரம்பித்தோம், இருட்டும்வரை நடந்தோம். பிறகு மீண்டும் வேன் பயணம். 

ராஜ நாகத்தின் தலைநகரம், தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று ஆகும்பே பற்றி எதிர்பார்ப்புகள் உருவாகிக்கொண்டிருந்தன. இரவில் வேனிலிருந்து இறங்கிய எங்களை மழை வரவேற்றது. எதிர்பார்ப்பில் ஒரு பகுதி உண்மையானது. ராஜநாகம் எதுவும் எங்களை வரவேற்றதா என்று அந்த இருட்டில் தெரிய நியாயமில்லை தான்.

வழியில்..

அந்த இரவு, நண்பர்களுடன் பேசலாமே என்று அந்த அறைக்குச் சென்றேன். வெளிச்சமில்லை. முழு இருட்டு. சில குரல்கள் கேட்டன, அமைதியாக வந்து அமரும்படி. அமானுஷ்ய அனுபவங்களின் கலந்துரையாடல் அது. சற்று நேரத்தில் ஜெயமோகனும் இணைந்துகொள்ள சபை இன்னும் தீவிரமடைந்தது. அமானுஷ்ய கனவுகளுக்கான உடல்நிலை மற்றும் சூழ்நிலைக் காரணங்கள் என சற்று அறிவியல்பூர்வமாக ஆரம்பித்த அந்த உரையாடல் இலக்கியத்தில் பேய்கள்,  குழந்தை ஆவிகள் பற்றிய கதைகள் அதன் பின்னுள்ள மனநிலை என பலபுறமும் சுற்றியடித்தது. வாழ்கையில் வைத்துப்பார்க்க முடியாத சில உணர்சிகளை வாழ்க்கைக்கு வெளியே வைத்துப் பாக்கும் பழங்குடிமனத்தின் தொடர்ச்சியாக பேய்க்கதைகளை பார்க்கலாம் என்ற அவரின் மேற்கோள் நினைவுக்கு வந்தது. அந்த இருளில் அவர் சொன்ன  அந்த மோதிரவிரல் கதை அனைவரின் இதயத்துடிப்பின் எல்லைகளை சோதித்துப்பார்த்தது.

அடுத்தநாள் அதிகாலை நடைக்கு ஜெயமோகன் உடன் செல்லும் குழுவை தவறவிட்டுவிட்டேன். எந்நேரமும் பெய்யும் மழையால் வீடுகளின் ஓடுகளில் கூட புல்செடிகள் வளர்ந்துள்ள அந்த ஊரில் தனியாக கொஞ்சம் நேரம் தெருக்களில் அலைவதும் நல்ல அனுபவம். பிறகு சிறிதுநேரம் நண்பர்களுடன் அரட்டை.
ஆகும்பே 


காலையில் அருவிப் பயணம். எங்களைத் தவிர வேறு யாரும் அப்போது அங்கு வந்ததாகத் தெரியவில்லை.  அடர்ந்த காட்டுவழியே சில கிலோமீட்டர்கள் நடை. தரையெங்கும் இலைகள் சருகுகள் அதில் ரத்தத்தை உறிஞ்சக்காத்திருக்கும் அட்டைகள். சற்றுநேரம் அட்டைகளை நினைத்துக்கொண்டே தரையை பார்த்தே நடந்தபின் நிமிர்ந்து பார்த்ததில் அந்தக் காட்டின் பிரமாண்டம் அதிரவைத்தது. கண்ணை மறைக்கும் பனிமூட்டத்தினூடே உருவாகிவந்த காட்டுப்பாதையில் அருவியை நோக்கி அந்த நடைப்பயணம்.

"சத்தமில்லாமல் நடங்க.. அதிர்வு உணர்ந்து ராஜநாகம் வரலாம் என நண்பர்கள் பீதியூட்டியபடியே வந்தனர். என்ன நடக்குமோ எனற அந்த பயம் தான் பயணத்தை இன்னும் சிறப்பாக்குகிறது. ஒரு முகட்டிலிருந்து வீழும் அருவியில் அது வீழ்வதற்கு சற்றுமுன் ஒரு குளியல். கூட்டம் ஏதுமில்லாமல் குளிக்க முடிந்ததற்காக எங்கள் நல்ல நேரத்துக்கும், தண்ணீருக்குள் அட்டைகளை அனுமதிக்காத இயற்கைக்கும் நன்றி சொல்லிக்கொண்டே ஒரு குளியலை அனுபவித்தோம். கைகெட்டும் தூரத்தில் அருவியாக வீழவிருக்கும் நீரில் குளிப்பது ஒரு அனுபவம்.
வனம்

அன்று இரவு நடையும் ஜெ. யின் பேச்சைக் கேட்டுக்கொண்டே நடக்கும் வழக்கமான நடைதான். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் அந்த இரவில் பெய்த நல்ல மழை. நான் உட்பட பலபேர் ரெயின்கோட் எல்லாம் ஏதும் அணியவில்லை. கடும் மழையில் சொட்ட சொட்ட நனைந்துகொண்டே நடை.

நடை சற்று நேரத்தில் ஒரு காட்டு வழிக்குள் திரும்பியது. எந்த வெளிச்சமும் அங்கில்லை, அங்கு அதிகம் இருந்தது ராஜநாகம் மற்றும் யானைகள் பற்றியும் இருந்த பயம். அந்த இரவில் முகத்திலிருக்கும் பயம் யாருக்கும் தெரியாதென்றாலும் இன்னும் தைரியமாக காட்டிக்கொள்ள நகைச்சுவை உரத்த சிரிப்பு என நடை அந்த காட்டுவழியில் தொடர்ந்தது. நேயர் விருப்பமாக யட்சிகதைகள் கேட்கப் பட்டது. ஜெயமோகனும் அந்த சூழ்நிலையின் தீவிரத்தை அதிகரிக்கும் விதமாக சில யட்சிக்கதைகளைத் தந்தார். எட்டாவது கை கதை கேட்டு எங்களை நாங்களே ஒரு முறை எண்ணிப்பார்த்துக்கொண்டோம்,  வந்த தலைகள் எல்லாம் இருக்கிறதா, எதாவது குறைகிறதா அல்லது எதாவது புதிய தலைகள் சேர்ந்துகொண்டதா என்று. இரவு, மழை மற்றும் காடு என எல்லாமுமே உச்சத்திலிருந்த உச்ச தருணம் அது.

ஞாயிறு காலை நடையிலும் மழை எங்களுடன் இணைந்துகொண்டது. மொழி, இலக்கியம், தத்துவம், கலை என பல தளங்களைத் தொட்ட உரையாடல் அது.

பெங்களூரு திரும்பும் வழியில் பேலூர் கோட்டை. இதுபோன்ற ஒரு சிற்பக்கலையை முதன்முறையாகப் பார்க்கிறேன். அங்கிருந்த அவ்வளவு நேரமும் ஒரு கனவு போல்த்தான் இருந்தது. யாரோ எப்போதோ உருவாகிய அந்தக் கனவு இப்போது நமக்கேயான கனவாகத் தோன்றும் அதிசயத்தை உணர முடிந்தது. ஒவ்வொரு சிலைக்கும் ஜெயமோகன் தரும் விளக்கங்களுடன் அந்தக் கனவு இன்னும் விரிவடைந்தது.  இந்தப்பயணத்தின் முக்கிய பங்காளியான மழை அங்கும் கூடவே வந்து அந்த சூழ்நிலைக்கு இன்னொரு பரிணாமம் தந்தது.
பேலூர்


கிட்டத்தட்ட திட்டமிட்டபடி எதுவுமே நடக்காத பயணம் இது. மழையையும் இரவையும் துணையாகக்கொண்ட இந்த பயணம் அப்படித்தானே இருக்கமுடியும். மழையும் இரவும் காடும் யாருக்கு கட்டுப்படுகின்றன?

தொடர்புடையவை:
ஜெயமோகன் தளத்தில் - மழைக்கோதை
வனவெளி நோக்கி

23 ஆகஸ்ட் 2012

வனவெளி நோக்கி

பயணத்துக்கு முன்னால் உள்ள சில நாட்கள் மிகமுக்கியமானவை, சிலசமயம் பயண நாட்களை விடவும். அதுவும் தெரியாத இடத்துக்குப்பயணம் என்றால் இன்னும் சிறப்பு. செல்லவிருக்கும் இடங்களைப்பற்றிய தகவல்கள் மூலம் ஒரு சித்திரம் மனதுக்குள் உருவாகும் நேரம் அது.

அனுபவம் என்பது  நம் மனதில் உள்ள கடந்தகாலத்தின் பிம்பம் என்றால், எதிர்பார்ப்பு என்பது வருங்காலத்தின் பிம்பம். முக்கிய வித்தியாசம் என்னவென்றால் அனுபவம் சிலநேரம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதாக இருக்கும், குரூப் போட்டொ போல. ஆனால் எதிர்பார்ப்பால் உருவாகும் சித்திரம் அப்படியல்ல அது தனியுடைமை.

பயணத்தின்போது  உண்மை அனுபவம் மனதில் உருவான அந்த சித்திரத்தை மாற்றி எழுதுகிறது, அது  ஆச்சர்யமாகவோ அல்லது ஏமாற்றமாகவோ. எப்படி இருந்தாலும் நம் நாமத்தில் உருவான அந்தச் சித்திரம் நமக்கே நமக்கானது. அது வேறு எங்கும் காணமுடியாதது வேறு யாரும் யோசிக்கக்கூட முடியாதது. அதுவே இந்த பயண எதிர்பார்ப்பை இன்னும் முக்கியமானதாக்குகிறது. அதுவே அதன் தனிச் சிறப்பு.



ஆனால் எல்லோரும் செய்வது அனுபவத்தை அல்லது கடந்த காலத்தை நினைவில் நிறுத்தும் முயற்சிதான்.பொதுவாக சுற்றுலாத் தளங்களில் மக்கள் அந்த இடத்தை அனுபவப்பதைவிட அந்த அனுபவத்தை ஆவணபடுத்துவதில் காட்டும் முனைப்பை கவனிக்கலாம். முக்கியமான எல்லா இடங்களிலும் புகைப்படம்  எடுத்தால்தான் அந்தப் பயணம் நிறைவு. நான் முதன்முறை இங்கிலாந்து சென்றிருந்தசமயம் ஒரு வாரயிறுதி நாட்களில் லண்டன் செல்ல வாய்ப்பு இருந்தும் அந்தப் பயணத்தை ரத்து செய்தேன், கையில் காமெராவும் புகைப்படம் எடுக்க நண்பர்களும் இல்லாததால். புகைப்படம் எடுக்காமல் சுற்றிப்பார்த்து என்ன பயன்? அடுத்தமுறை பயணத்தில் சரியான ஏற்பாடுகளுடன் லண்டன் சென்றதெல்லாம் வேறு கதை.

யாருடன் செல்கிறோம் என்பதும் பயணத்தின் அனுபவத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிக்கிறது. வழக்கமான மக்கள் கூடுமிடங்களை மட்டுமே பார்த்து, அதையே சுற்றுலா எனப் பழகியவர்களை இயற்கைப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களைடையும் ஏமாற்றம் மற்றவர்களையும் பாதிக்கக்கூடும். எனவே பொருட்காட்சிகளை மட்டுமே பார்த்துப் பழகியவர்களை உண்மையான பயணத்துக்கு தவிர்த்துவிடுவது எல்லோருக்கும் நலம்.



இயற்கைப் பகுதிகளில் நடக்கும் பயணத்தில் ஆக்கப்பூர்வமான உரையாடல்களும் சேர்ந்துகொண்டால் அது ஒரு வாழ்நாள் அனுபவமாகிறது. உரையாடிய விஷயங்களை யோசிக்கும்தோறும் இயற்கைப் பகுதிகளின் நினைவும், இயற்கையை நினைக்கும்போது உரையாடிய விஷயங்களின் நினைவுமாக கிடைக்கும் அனுபவம் விலைமதிக்க முடியாதது.

சரி ஒரு சிறப்பான பயணத்தில் என்ன எதிர்பார்க்கலாம்? சிறப்பான பயணத்தின் முக்கிய கூறு அதிலுள்ள unpredictableness. ஒரு மாதமாக திட்டமிட்டு, புறப்படும் தினமான  இன்று  எல்லாத் திட்டங்களையும் தகர்த்து எதிர்பாராத மாற்றங்களுடன் ஆரம்பிக்கிறது இந்த வனப் பயணம்.

வனவெளியில் பயணம் ஒரு வழிகாட்டியுடன் செல்லும்போது சிறப்படையும். ஆனால் இந்த வனப் பயணம் மனவெளியின் வழிகளைக் காட்டுபவருடன்.

13 ஆகஸ்ட் 2012

ஒலிம்பிக் - விளையாட்டெனும் மனிதகுல அவலம்


இவ்வளவு பெரிய நாடு, ஆனால் இவ்வளவு தான் பதக்கங்கள், என்று ஆதங்கப்படும் சிலர், இவ்வளவு கிடைத்ததே நாட்டுக்குப் பெருமை என பெருமிதப்படும் சிலர். ஆனால் இவர்களிருவரும் கவனிக்க மறந்தது. இந்த விளையாட்டுப்போட்டிகளின் பின்னுள்ள மனிதகுல அவலத்தை.

சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்ததன் காரணமாக, இப்பொதெல்லாம் முகத்தைப் பார்த்தாலே அவர் என்ன விளையாட்டு விளையாடும் ‘வீரர்’ என்று கண்டுபிடிக்க முடிகிறது, அல்லது அவர்கள் உடலைப் பார்த்து.

ஏன் ஒரு குத்துச்சண்டை வீரரின் உடலமைப்பு அதே வயதுடைய ஒரு நீச்சல் வீரரின் உடலமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்று நாம் யோசித்ததுண்டா? காரணம் மிக எளிது. பல வருடங்களாக கடுமையான பயிற்சிகளில் மூலமாக இந்த உடலமைப்பை அடைகிறார்கள். ஆனால் இது இயல்பான ஒன்று அல்ல. இவர்களுக்கு ஏன் ஒரு இயல்பான மனித வாழ்க்கை வாழும் உரிமை மறுக்கப் படுகிறது? இயற்கைக்கு மாறான இந்தச் செயலை செய்யத் தூண்டுவதுதான் விளையாட்டின் நோக்கமா?




இந்த விளையாட்டுப்போட்டிகளின் வரலாறு என்ன? அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

காட்டில் திரிந்த ஆதி மனிதனுக்கு தேவையாயிருந்த ஒரு முக்கியமான குணம், வேட்டையாடும் கொலை குணம். மனிதன் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தபின், தனக்கு உயிர்பயம் வந்தபின்னர், தனக்காக சண்டையிட செய்ய படை வீரர்களை உருவாக்கினான், அவர்களின் சண்டையைப் பார்த்து வெற்றிக் களிப்படைந்தான். உயிருக்கும் ஆபத்தில்லை, கொலை செய்த திருப்தியும் கிடைக்கிறது.அந்தப் படை வீரர்களின் மரண பயத்தை குறைக்கவும், தனது குற்ற உனர்வைத் தவிர்க்கவும், நாட்டுப் பெருமை மற்றும் தலைவன் பெருமை போன்ற விழுமியங்கள் உருவாக்கப் பட்டன. அதாவது நாட்டுப் பெருமைக்காக சிலர் உயிர் இழந்தாலும் சரி, அதைப் பற்றி அனைவரும் பெருமைதான் படவேண்டும். இரு தரப்பிலும் மக்கள் ஆரவாரமிட்டு மகிழ்ந்தனர்.

கொஞ்சம் நாகரீக முன்னேற்றத்துக்குப் பிறகு, இதிலும் நடக்கும் உயிர் இழப்புகளை தவிர்க்க அடுத்தகட்டமாக ஒரு குறிப்பிட்ட விதிகளுடன் இவை விளையாடுப் போட்டிகளாகப்பட்டன. அதாவது எதிராளியைக் கொல்வதே வெற்றி என இருந்த நிலையில், ஒரு இலைக்கை அடைவதே வெற்றி என்னக்கொள்ளப்பட்டது. இதில் எதிராளியைக் கொல்வது என்னதான் தவிர்க்கப்பட்டாலும், வெற்றி அடைபவரின் வெற்றிக் களியாட்டமும்,தோற்றவரை மரணத்துக்கு இணையாக அவமானப் படுத்துவதும் தொடர்கிறது.





அப்படியென்றால் விளையாட்டு இயற்கையான ஒரு செயல்பாடு இல்லையா?

அப்படியும் சொல்ல முடியாது. குழந்தைகள் முதலில் ஆரம்பிப்பது விளையாட்டு தான்.விளையாடும் குழந்தைக்கு மட்டுமல்லாமல் வேடிக்கை பார்க்கும் நம் மனத்துக்கும்ஒருசேர மிக மகிழ்ச்சியை அளிப்பது அது. ஆனால் விளையட்டு எங்கே விபரீதமாகிறது?

குழந்தைகள் விளையாடில் விதிகள் கிடையாது. வெற்றி தோல்வி கிடையாது. முக்கியமாக தான் ஜெயிக்க இன்னொருவரை தோற்க்கடிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. தானாக விளையாடும் குழந்தைகளுக்கு பெரியவர்கள் விளையாட்டுப் போட்டிகளை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும்போது முதல் பாடமே இன்னொருவரை தோற்க்கடிப்பது தான். தனது மகிழ்ச்சி மற்றவரின் அவமானத்தில்தான் உள்ளது என உணர வைப்பதே இந்த விளையாட்டுப்போட்டிகள் தான்.

...


விளையாடின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? முக்கியமாக இந்த மூன்றை சொல்லலாமா?


  • உடல் ஆரோக்யம்
  • மனதுக்கு மகிழ்சி
  • ஒற்றுமை உணர்வு


ஒரு விளையாட்டுகாக தங்கள் உடலை அமைப்பையே பயிற்சிகளின் மூலம் மாற்றி, உடல் ஆரோக்யத்துக்காக விளையாட்டு என்ற நோக்கத்திலிருந்து மாறி, விளையாட்டுக்காக உடல் என்ற பரிதாப நிலையை அடைகிறார்கள்.

இந்த விளையாட்டுகள் மகிழ்சியை அளிக்கிறதா அல்லது வெறியை அளிக்கிறதா என்று தெரிந்துகொள்ள பெரிய ஆராய்சியெல்லாம் செய்யத்தேவையில்லை.

போட்டியும் பொறாமையும் வெறியும் இருக்கும் இவ்வித்தில் ஒற்றுமைக்கு இடம் ஏது? அப்படியெ ஒற்றுமை இருந்தாலும் அதுவும் ஒரு எதிரியை வீழ்த்துவதற்காகத் தான் இருக்கும்.

பிரமாண்டமான இந்தப் போட்டிகள், இவ்வளவு நாகரீக மாற்றங்களையும் மதிப்பீடுகளையும் தாண்டி, நம் மனதில் மிச்சமிருக்கும் சகமனிதனை வென்று களியாட்டமிடும் ஆதிமனிதனின் வெறிக்கான ஆதாரமாகவே உள்ளன. .....



உங்கள் நாட்டுப்பற்றை காட்ட வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அதற்காக சிலரை பலிகடாவாக்க வேண்டாமென்கிறேன். அரசனின் நல்வாழ்வுக்காக தன் தலையை வெட்டிக்கொண்டு நாட்டை பெருமைப்பட வைத்த ‘நடுகல்’ வீரர்களுக்கும்,  இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

12 ஜூலை 2012

நான் ஈ..நானும்!

துள்ளலாக போய்க்கொண்டிருக்கும் காதல் கதையில் படத்தின் முதல் அரை மணிநேரத்திலேயே   ஹீரோ கொல்லப்பட்டும்  ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சி இல்லை என்பதே ஒரு அதிர்ச்சி தான். ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஈ இனிமேல்தான் வரப்போகிறது என்பதால் சிலர் கை தட்டுவதைக் கூட கவனிக்க முடிந்தது.

பென்சிலை சீவும் பெண் சிலையாக வரும் சமந்தா சிறிய புன்னகைகளில் வசீகரிக்கிறார். சமந்தா போல ஒரு தேவதைக் கவர என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அனைத்தையும் அழகாகச் செய்கிறான் நம்ம ஹீரோ. குட்டி குட்டி குறும்புகளில் பட்டையைக் கிளப்புகிறார். அவனுக்கு வரும் முதல் பிளான்க் எஸ்.எம்.எஸ். அதற்கு அவனது ரீயாக்சன்.. இதுதாண்டா யதார்த்தப் படம் என சொல்ல வைக்கிறது. நமது மனம் பட்டாம்பூச்சியாகப் பறக்கிறது

சின்ன சின்ன வெற்றிகளை அடுத்து, நமது ஹீரோ அந்த தேவதையின் மனதை முழுவதும் வெல்லும் நேரம். சட்டென கொல்லப்படுகிறான். அங்கே முடிகிறது காதல் கதை.

அப்புறம் ஈ கதை.

...........
உண்மையில் எனக்கும் அந்த முதல் அரைமணிநேர கதையின் முடிவு திருப்தியே. ஆனால் அது அடுத்து வரும் ஈ-யை எதிர்பார்த்து இல்லை.

தேவதையின் மனத்தைக் கொள்ளைகொண்ட பிறகு அவன் செய்யக்கூடியது என்னவாக இருந்திருக்கும்? கடலை போடுவதும், ஏன் பேசவில்லை என்று தினமும் சண்டை போடுவதும் அல்லது  கல்யாணம் செய்து அவளை சமைக்க வைத்து சாம்பார்சாதம் சாப்பிடுவதும் தானா?
இதற்கு எதற்கு தேவதையும் ஹீரோவும். எல்லா சாமானியர்களும் செய்வது இதைத் தானே?

தேவதைகளை அறிந்தவர்களுக்கும், தேவதையாக இருந்தவர்களுக்குமே இது தெரியும், ஒரு தருணத்தில் தேவதையும் ஹீரோவும் சட்டென சாதாரண மனிதர்கள்ஆகிறார்கள். நினைத்தை அடைந்த மகிழ்ச்சியும், ஏதோவொன்றை இழக்கும் சோகமும் ஒன்றுசேரும் மாய கணம் அது.

இந்தப்படத்தில், அந்த இடத்தில் காதல் கதை சட்டென முடிகிறது, நிறைவாக.
.....

சினிமாவில் தான் எவ்வளவு வசதி நினைத்த நேரத்தில் முடித்துக்கொள்ள முடிகிறது. வாழ்க்கையை அப்படி எல்லோருக்கும் முடிவதில்லையே.

27 ஜூன் 2012

ஒவ்வொரு நொடியும் ஹீரோ..

எல்லா கண்களும் அவனைப் பார்க்கின்றன. அவனை விரும்புபவர் பலர், அவன் பலரால் விரும்பப்படுவதாலேயே அவனை வெறுப்பவர்கள் சிலர். அவன் செய்யும் சாதனைகள் வரலாகின்றன. செய்யத்தவறிய செயல்கள் வசையாகின்றன. சிறு தவறும் கடுமையான விளைவுகளை உருவாக்குகின்றன  எப்படியோ எல்லாருக்கும் அவனைப் பற்றி சொல்ல ஏதாவது இருக்கிறது. அவனே ஒரு ஹீரோ.
 
போர்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அப்படியான ஒரு ஹீரோ.
 
அரங்கில் விளையாடும் அத்தனை பேரில், தன்மீதுதான் அதிகமான கவனம் உள்ளது என்பது அவருக்கு எப்போதுமே தெரிந்திருக்கிறது. அந்தக் கவனத்தை எந்தவித போலி அடக்கமும் இன்றி  அவர் மிக விரும்பி ஏற்றுக்கொள்கிறார் என்று எனக்குத் தெரிகிறது, அதுவே அவர் மீது அதிகமான மரியாதையைத் தருகிறது.
 
டிவியில் அவரைப் பார்ப்பது நல்ல பொழுதுபோக்கு.தலையலங்காரம் உட்பட தன் தோற்றத்துக்குத் தரும் கவனம், தான் சம்பத்தப் பட்ட முக்கிய தருணங்களில் அவர் முகத்தில் வரும் அபாரமான உணர்சிகளும் அதை அதிகப் படுத்தும்.  கோல் வாய்ப்பை தவறவிடும் சமயங்களில் ரொனால்டோவின் முகபாவம் ஒரு மூன்று மணிநேர சோக சினிமா கொடுக்கும் சோகத்தை நமக்குக் கொடுத்துவிடும்.
 
டிவி கேமராக்கள் எப்போதும் அவரை விட்டு விலகுவதில்லை. அவரும் தான் கோல் போட்டபின் கேமரா எங்கிருந்தாலும் தேடி அதன் முன் ஏதாவது சொல்லத் தவறுவதில்லை.
 
வெற்றியோ தோல்வியோ, ஒவ்வொரு நொடியும் கவனத்தைத் தன்னிடம் வைத்திருக்கும் ஹீரோ நம்ம ரொனால்டோ.
 
இன்று மிக நேர்த்தியான அணியான ஸ்பெயின் அணியை எதிர்த்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றிபெற எனது வாழ்த்துக்களும், எதிர்பார்ப்பும்.
 
Euro Cup 2012: Portugal vs Spain- Semi-final
27-Jul-2012

19 ஜூன் 2012

அழகு அறிவு மூடநம்பிக்கை

உங்களுக்கு புத்தகங்களின்மீது ஆர்வமிருந்தால்,இது உங்களுக்கான நிகழ்ச்சி என்ற அறிவிப்புடன் தொடங்கியது அந்த வானொலி நிகழ்ச்சி. புத்தகம் படிப்பதே அருகிவரும் நிலைமையில் இப்படி ஒரு நிகழ்ச்சியா என்று சற்று ஆர்வமடைந்தேன்.Hello FM என்று நினைக்கிறேன். நடத்தியவர் தீபா வெங்கட். அருமையான குரலுடன் கூடிய அழகான பெண். ஒரு பெண் நடத்தும் அறிவார்ந்த நிகழ்ச்சி என்பதே ஒரு ஆச்சர்யம்  தானே.
 
இருந்தாலும் இவர்கள் புத்தகம் புத்தகம் என்று சொல்வது ஆனந்தவிகடனைத் தானா என்ற பீதி லேசாகத் தலைதூக்கியது. "யாராவது பரிந்துரைத்து நீங்கள் ஏதாவது புத்தம் படித்தீர்களா?  அந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்று கேள்வியைத் தொடங்கினார். சுவாரஸ்யமான கேள்விதான்.
 
இது நேயர்கள் தொலைபேசி உரையாடும் நிகழ்ச்சி. முதலில் ஒரு பெண் அழைத்தார்.
 
"நானெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் படித்து விடுவேன்" என்று அதிரடியாக ஆரம்பித்தார்.
 
"தினமும்  ஒரு புத்தகமா?அப்படின்னா வீட்லயே ஒரு சின்ன லைப்ரரி இருக்கணுமே" என்றார் தீபா
 
"லைப்ரேரி வீட்ல இல்லை. வீட்டு பக்கத்துல இருக்கு!!"
 
இதை கேட்டதும் எனக்கே மிக ஆச்சர்யமாக இருந்தது, புத்தகங்களைப் பற்றி உரையாடும் 'அறிவார்ந்த' ஒரு வானொலி நிகழ்ச்சி. அதை நடத்தும் ஒரு பெண். அதில் பங்குகொள்ளும் தினமும் படிக்கும் ஒரு பெண். இது உண்மை தானா என்று.
 
பெண்கள் எல்லாம் தொலைகாட்சியின் ஆபாசமான மெகா தொடர்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே நடப்பது என்ன?
 
"சரி உங்களுக்கு புத்தகங்கள் பரிந்துரை செய்தது யாருங்க.."
 
"அதாவது நான் எப்போதுமே டீவீல பட்டி மன்றம் தவறாமல் பார்ப்பேன். அதுல சொல்ற புக்கெல்லாம் தவறாம படிப்பேங்க என்றார்.."
 
டிவியில் வரும் பட்டிமன்றங்கள் மூலம் அறிவு வளர்கிறதா. இது இவ்வளவு நாள் நமக்குத் தெரியாமல் போச்சே.  அட ஆண்டவா..
 
இதற்க்கு தீபா வெங்கட்டின் பதில்.. "ரெம்ப நல்ல சொன்னீங்க..ரெம்ப நல்ல பழக்கம். இதை இப்படியே தொடருங்கள்.  இப்போ இந்த பாட்டைக் கேளுங்க.."
 
அடுத்து அவர் ஒலிபரப்பிய பாடல்.. எவண்டி உன்னைப் பெத்தான்... பெத்தான்..
 
--
 
புத்தகம் படிப்பதே ஒரு அறிவார்ந்த விஷயம் என்று பரவிவரும் மூடநம்பிக்கையை தகர்க்க சேவைசெய்யும் முறையில், இதுபோன்ற நிகழ்சிகளின் சேவை நாட்டுக்குத் தேவைதான்.

04 ஜூன் 2012

ரேடியோவில் கேட்ட ஒரு வாழ்த்துச் செய்தி!

ரேடியோவில் கேட்ட ஒரு வாழ்த்துச்  செய்தி..
 
".... இந்த நாள். இன்று அவர் பிறந்தநாள் என்பது நாம் அனைவரும் மகிழ்ச்சியடையவேண்டிய திருநாளாகும். இந்த வானொலி மூலம்  அவருக்குப்  பிறந்தநாள் வாழ்த்துக்கூற விரும்புகிறேன். தமிழ் சினிமாவுக்கும், தமிழக மக்களுக்கும் அளப்பரும் பங்களிப்பற்றிய அவருடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நாமெல்லாம் கடமைப்பட்டுளோம். அவர் வாழும் இந்த .........."
 
இப்படி போகிறது அந்த வாழ்த்து செய்தி நானும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டே இருந்தேன். இவர் அவரை ஒரு தடவையாவது வாழ்த்துவாரா என்று. இல்லையே.. ஒரு தடவை கூட இல்லையே.. வாழ்த்த விரும்புகிறேன், ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறாரே தவிர கடைசி வரை வாழ்த்து மட்டும் சொல்லவில்லை,
 
இது வாழ்த்து அல்ல, வாழ்த்துக்கான திட்டமிடலோ?  இதெல்லாம் முடிந்தபின் தனியாக வாழ்த்துவாரோ தெரியவில்லை. இருந்தாலும் இது இது என்ன டைப் வாழ்த்து என்று  யோசிக்க நாமெல்லாம் கடமைப்பட்டுள்ளோம்..இல்லையா?

11 மே 2012

IPL அதிரடி : அடித்தவனும் பிடித்தவனும்



 நமக்குப் பிடித்த ஆட்டக்காரன் கேட்ச் கொடுத்து அவுட் ஆகும்போது நாம் வருத்தப் படுவது இயல்பானது மற்றும் புரிந்துகொள்ளக்கூடியது தான். ஆனால் அவர் பந்தை அடிப்பதற்கும், எதிராளி பிடிப்பதற்கும் இடையே உள்ளது ஒரு கால இடைவெளி, அதை அவதானிப்பவர்களுக்கு சில புரிதல்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. கேட்சுக்கு அடிக்கும்பொழுது வருத்தப்படும் ரசிகன், எதிராளி பிடிக்கும்பொழுது வருத்தப்படும் ரசிகனிடமிருந்து வித்தியாசமானவன்.

அடிக்கும்பொழுதே வருத்தப்பட்டுவிட்டவன் பிடிக்கப்படும்பொழுது வருத்தப்படத் தேவையில்லை.  பிடிப்பவன்மீது வருத்தப்படுபவன், தனது பிரச்சனைக்கு மற்றவரைக் காரணம்கூறி, உண்மையான பிரச்சனையைச் சந்திக்கப் பயப்படுபவனாக இருக்கலாம்.



------------


கம்பீர் ஜெயிப்பது மகிழ்ச்சிதான், ஆனால் அதற்காக சேவாக் தோற்கவேண்டியிருக்கிறது என்பதிலிருக்கிறது இந்த விளையாட்டின் அவலம். நல்ல வேளையாக நிஜ வாழ்க்கையானது இந்த விளையாட்டு அளவுக்கு சிக்கலானதாக இல்லை.

எந்த இரு மனிதருக்கும் உண்மையில் ஒரே தேவை இருக்கவே முடியாது. எனவே இன்னொருவரை தோற்கடிக்காமலெயே இயல்பான வெற்றிகளை அடையமுடிகிறது.

விளையாட்டு களத்தில் வெற்றியை மற்றோருவரிடமிருந்து மோதி பறிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் வாழ்கையில் வெற்றி எதிராளி இல்லாத வழியை கண்டடைவதில்  இருக்கிறது. எதிராளியோடு மோதுவதில் நேரத்தை இழப்பவன், தனது வாழ்கையை இழக்கிறான்.




04 மே 2012

மூன்று இட்டலிக்கு எவ்வளவு தண்ணீர்?

காரைக்குடி பேருந்து நிலையத்தில் இரவு உணவுக்காக பேருந்து  நின்றது. காரைக்குடியில் எப்போதுமே தரமான உணவுக்கு பிரச்சனையில்லை, அது பேருந்து நிலையமானாலும். உணவு முடித்தேன். மூன்று இட்டலி, சுவைக்குக் குறைவில்லை. பதினெட்டு ரூபாய். பேருந்தில் செல்லவேண்டுமே என பக்கத்துக் கடையில் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கினேன். அதுவும் பதினெட்டு ரூபாய்.

எனக்கு என்னவோ இது மிகவும் யோசிக்கவேண்டிய விஷயமாகத் தெரிந்தது. இலைபோட்டு சட்னி சாம்பாருடன் பரிமாறப்படும் இட்டலிக்குத் தரும் அதே பணத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்குத் தருகிறோமா?

மூன்று இட்டலிகள், சாம்பார் மற்றும் சட்னிக்கு கண்டிப்பாக ஒரு லிட்டரை விட அதிகமாக தண்ணீர் செலவாகியிருக்கும். அதை நம்மால் சாப்பிட முடிகிறது. ஆனால் தனியாக தண்ணீருக்கு பெப்சி நிறுவனத்துக்கு பணம் தருகிறோம் என்பதே ஒரு சிந்திக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. இதன் மூலம் அந்த இட்டலி வியாபாரியை, அவரது உழைப்பை அவமதிக்கிறோமா?

இதை அந்த இட்டலி வியாபாரி யோசிக்க ஆரம்பித்தால் நமக்கு அடுத்த தடவை இப்படி ஒரு விலையில் உணவு கிடைக்குமா எனத் தெரியவில்லை.

பேருந்தில் ஏறியபின் மற்ற பயணிகளையும் கவனித்தேன்.  பேருந்தில்  எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அந்தக் கடையில் தான் இட்டலி சாப்பிட்டாரா எனத் தெரியாது. ஆனால் நான் வாங்கிய  அதே தண்ணீர் பாட்டிலைத் தான் வாங்கியிருந்தார்.

பொதுவாக இதுபோன்று பயணங்களில் தண்ணீர் பாட்டில் வாங்குபவர்கள் வீட்டில் சாதாரண தண்ணீரைத் தான் குடிக்கிறார்கள். வீட்டில் Aquafina தண்ணீர் குடிப்பவர்கள் அரிது. பயணத்தில் மட்டும் மிக மிகச் சுத்தகரிக்கப் பட்டநீரைத் தான் குடிக்கவேண்டும் என்பது எழுத்தப்படாத சட்டமா அல்லது பதினெட்டு இருபது எனபது மிக சாதரணமாக நினைக்கும் அளவுக்கு இதியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதா என்பது ஒரு ஆய்வுக்குரிய விஷயம்.

பேருந்து நிற்குமிடத்தில் எங்கும் சிதறிக்கிடக்கும் காலி தண்ணீர் பாட்டில்களைப் பார்க்கும்போது இதில் உள்ள பிரச்சனை பணம் மட்டுமல்ல இந்தக் கலாச்சாரம் உருவாக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடும் தான் எனத் தோன்றுகிறது.

02 மே 2012

அவனும் இவனும் மற்றுமொரு ஆட்டுத்தொடையும்

அவனைச் சொல்ல ஏதுமில்லை, நான் தான் நேரம்கெட்ட நேரத்தில் போய் நின்றேன். சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். நானும் பார்த்தேன். எந்தக் கடைக்குச் சென்றாலும் கடைக்காரர் கேட்கும் முன் நாமாகக் கேட்கக்கூடாது என்பது நமது கொள்கை.

"என்ன சார்.. "

"ஒரு அரைக் கிலோ.." தொங்கிக் கொண்டிருந்த ஆட்டுத் தொடையைப் பார்த்தபடியே சொன்னேன். மதியம் மூன்றுமணிக்கு சாப்பிட்டுக் கொண்டிருப்பவனை தொந்தரவு செய்கிறோமே என்று கொஞ்சம் குற்றஉணர்வு. அவனும் நிமிர்ந்து நான் பார்த்துக்கொண்டிருந்த ஆட்டுக்காலைப் பார்த்தான். என்னை பார்த்தவன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.

தொங்கிக்கொண்டிருந்த ஆட்டுத் தொடையின் ஒரு பாகத்தைத் தான் அவன் காலையில் சமைத்து சாப்பிட்டுகொண்டிருக்கிறானோ என நினைத்தேன். ஒரே ஆட்டின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு வீடுகளில் உணவாக, ஒரு பகுதி மட்டும் அதே இடத்திலேயே உணவாகிறது. இதுதான் பகிர்ந்துண்டு வாழ்வது இல்லையா.

ஆனால் அவன் அமர்ந்திருந்த நிலையில், அவனது முகத்தைத்தான் பார்க்கமுடிந்ததே தவிர அவன் என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்பதை  என்னால் பார்க்கமுடியவில்லை என்பதால் எனது ஊகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதையும் இந்த இடத்தில குறிப்பிடவேண்டியிருக்கிறது.

எனக்கும் எந்த அவசரமும் இருக்கவில்லை. சாப்பிட்டுவிட்டே வரட்டும். அவன் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தால், இந்த மட்டன் சுவையாக இருக்கிறது என்று தானே அர்த்தம். எனவே நல்லது தான். உண்மையில் அவன் என்னைப் பார்த்தவுடனேயே தன் உணவை நிறுத்தியிருந்தால் தான் நான் யோசிக்கவேண்டியதாக இருந்திருக்கும். அவனே சாப்பிடமுடியாத அந்த ஆட்டுத் தொடையை நான் வாங்கிபோய் என்ன செய்வது?

ஆனால் தான் சாப்பிடும்பொழுது வரும் வாடிக்கையாளர்களை கவனிக்கவாவது ஒரு அப்ரசண்டீசை அவன் நியமிக்கவேண்டும் என அறிவுறுத்தலாம் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே,

"டேய்.." என ஒரு பலமான குரல் கொடுத்தான்.

உள்ளிருந்து இவனைவிட சற்று இளையவனாக இன்னொருவன் வந்து நின்றான்.

ஓகோ உள்ளே ஆளை வைத்துக்கொண்டுதான் இவ்வளவு நேரம் இருந்தானா? இவன் சாப்பாட்டைத் தொடரப் போகிறான், வந்தவன் எனக்கு வெட்டித் தரப்போகிறான் என்று நினைத்தேன். அப்படியே நடந்திருந்தால் எனக்கு எந்தக் குழப்பமுமில்லாமலிருந்திருக்கும். ஆனால் அப்படி நடப்பதில்லையே..

ஆமாம் அங்கு நடந்ததோ வேறு..

அவன் வந்ததும் இவன் சட்டென எழுந்து கையைக் கழுவிவிட்டு, ஆட்டுத் தொடையை வெட்ட ஆரம்பித்தான். அவன்..

27 ஏப்ரல் 2012

நானா?

யாவர்க்கும் இனியன் நீ
யாவர்க்கும் எளியன் நீ
யாவர்க்கும் வலியன் நீ

16 மார்ச் 2012

சாதனை நாயகன் சச்சின்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றொரு முக்கிய தினம். உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரரான  சச்சின் அடித்துள்ள நூறாவது சதம் இன்று. சச்சின் விளையாடும் எந்தொரு நாளுமே கொண்டாட்டம் தான் என்றாலும், இந்த நூறு இந்தக் கொண்டாட்டத்தை அதிகப் படுத்தும் ஒரு தருணம்.
 
சாதகமான காலம் மற்றும் சோதனையான காலம், இரண்டிலுமே அவர் காட்டிய சமநிலை எல்லாத் துறையினரும் கற்றுக்கொள்ளவேண்டிய பண்பாகும். விளையாட்டுத் திறமை மட்டுமலாமல், தனது குணநலன்கள் மூலம் சமகாலதின் மிகச் சிறந்த ஆளுமையாக சச்சின் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
 
வாழ்த்துகள் சச்சின்..
 
சாதனைகளால் மகிழ்ச்சி பரவட்டும். பரவும் மகிழ்ச்சியால் சாதனைகள்  பெருகட்டும்..

15 மார்ச் 2012

உயர் கவித்துவமும் அங்கதமும்

மொழிபெயர்ப்பு புத்தகங்கள் என்றால் எனக்கு உடனே நினைவுக்கு வருவது, நான் படிக்க ஆரம்பித்த காலத்தில் படித்த,  ரஷ்யாவின் முன்னேற்றப் பதிப்பத்தின் புத்தகங்கள் தான். சைபீரியக் காடுகளையும், பனிக்கரடிகளையும், பனிபடர்ந்த நகரங்களையும் மற்றும் ஜெர்மானியருக்கு எதிரான வீரதீர சாகசங்களையும் மிகப் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்திய புத்தகங்கள் அவை.

பெரல்மானின் "பொழுதுபோக்கு பௌதிகம்" இன்னொமொரு மறக்க முடியாத புத்தகம். பள்ளிநாட்களில் அறிவியல் ஆர்வத்தை ஊட்டிய அந்தப் புத்தகம், இன்றளவும் அந்தத்தளத்தில் மிகச் சிறந்தது என சொல்வேன். அறிவியலை மிக எளிதாக நம் சிந்தனைக்குள்ளும் விதைத்து, நமது ஆர்வத்தை தூண்டும் புத்தகம் அது.  எங்களூர் கிளை நூலகம் மூலம் வங்காளம் உள்ளிட்ட பல இந்திய மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் படித்ததுண்டு.

-----

திடீரென  திருவண்ணாமலைக்குப் போக அழைப்பு வந்துபோது, நான் உடனே சரி என்று சொல்ல ஒரே காரணம் ஜெயமோகன் வருகிறார் என்பது தான். அது என்ன விழா என்று கூட அதிகம் யோசிக்கவில்லை.

செந்தில் மற்றும் ராஜகோபாலனுடன்  சென்னையிலிருந்து காரில் பயணம் ஆரம்பித்தோம். பொதுவான அரட்டைகளுடன், கொஞ்சம் இலக்கியமும் வழியில் அருந்திய டிகிரி காபியுமாக சரியாக விழா தொடங்கும் நேரத்தில் திருவண்ணாமலை அடைந்தோம்.
விழா அறிவிப்பு

எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் விழா. மிக துடிப்பான இளைஞரான  கருணாவின் கல்லூரி அது. சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய மேடை. பார்வையாளர்கள் அமர அருமையான ஏற்பாடுகள்.
விழா மேடை 

இந்திய இலக்கிய உலகின் பல நட்சத்திரங்கள் அலங்கரித்த மேடை அது. புத்தகங்களை சிறப்பாக வெளிக்கொண்டு வந்ததுடன் இவ்வளவு ஆளுமைகளை ஒரே மேடையில் அமரச் செய்த எழுத்தாளர் பவா செல்லத்துரை மிகவும் பாராட்டுக்குரியவர்.
பார்வையாளர்களில் ஒரு பகுதி 
மூன்று மொழிபெயர்ப்பு நூல்களின் அறிமுக மற்றும் வெளியீட்டுவிழா. கன்னட, மலையாள மற்றும் சர்வதேச இலக்கியங்கள். இந்த விழா உண்மையிலேயே பலருக்கு இலக்கிய உலகின் புதிய இடங்களை அறிமுகப் படுத்தியிருக்கும் என நம்பலாம்.

மேடையில் நிறைய பேர் இருந்தாலும், நேரம் அளவாக இருந்தாலும், புத்தகத்தை பற்றிய அறிமுக உரை. பின்பு மொழிபெயர்ப்பாளரின் ஏற்புரை என சுவையாகச் சென்றது விழா.

-- 
பால் சர்க்காரியாவின் நூலை அறிமுகப் படுத்தி பேசிய ஜெயமோகன், மொத்த கேரளா இலக்கிய சூழல் பற்றியே ஒரு அறிமுகம் தந்து, அதில் பால் சர்காரியாவின் இடம் எங்கே வருகிறது என தொட்டுக் காட்டினார்.
ஜெயமோகன்
புத்தக வெளியீடு 
 

அவரது பேச்சு, என் நினைவிலிருந்து..
  • கேரளாவின் சாக்கியார் கூத்து எனப்படும் அங்கத விமர்சனக் கலை மரபின் பண்பாட்டுத்  தொடர்ச்சியாக பஷீர் மற்றும் வி.கே.என் படைப்புகளை பார்க்கலாம்.
  •  இந்தக் கதைகளைப் புரிந்துகொள்ளவே ஒரு மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது. மிக நுட்பபான இருண்ட வாழ்க்கைத் தரிசனம் கொண்ட கதைகளைக் கூட நகைச்சுவையுடனே சொல்லும் திறனுள்ள படைப்பாளிகள்.  நகைச்சுவையாகவேத் தோன்றும் இக்கதைகள் எங்கே உருமாறுகிறது என்பதை அறிவதே ஒரு அறிவார்ந்த வாசக அனுபவம் தான். 
  • வாழ்க்கையை ஒரு விளையாட்டுத்தனத்துடன் அணுகும் பஷிரின் அணுகுமுறையும், புத்திசாலித்தனமான மொழி விளையாட்டுக்களைக் கையாளும்  வி.கே.என்-இன் அணுகுமுறையும் இயைந்துள்ள வெற்றிகரமான கலவையாக பால் சர்க்காரியாவின் படைப்புகள் உள்ளன. 
  • பஷீர் மற்றும் வி.கே.என்-இன் தொடர்ச்சியாக வரும் பால் சர்காரியாவின் சிறப்பு அவர் படைப்புகளில் உள்ள உயர் கவித்துவமும், மிக நுட்பமான அங்கதமும்.  
  • ஆன்மீக விவாதத்துக்கு  மிக முக்கியமானது நகைச்சுவை உணர்ச்சி. இது பால் சர்காரியாவிடம் உள்ளது. எனவே அவரின் படைப்புகள் பல இயல்பாகவே அந்த ஆன்மீக  உச்சத்தை அடைகின்றன. 
-----
வேங்கைச் சவாரி கதைகளை அவை ஜெயமோகனின் வலைத்தளத்தில் வந்த போதே படித்திருந்தாலும், மற்ற இரு புத்தகங்களும் எனக்கு மிகவும் புதியவை.  இந்த விழா தந்த உற்சாகத்தில் எல்லாப் புத்தகங்களையும் வாங்கிக்கொண்டேன்.

---

விழா முடிந்ததுமே அவசர வேலையாக ஜெயமோகன் கிளம்பிச்   சென்றுவிட்டதால், ஒரு இலக்கிய அரட்டை இரவை எதிர்பார்த்துவந்த எங்களுக்கு ஏமாற்றமே. ஆனால் எழுத்தாளர்  யுவன் சந்திரசேகர் அறையில் அரட்டை ஆரம்பித்தது. ஜடாயு, சிறில், கோபி, ராஜகோபாலன் மற்றும் செந்திலுடன் மொழிபெயர்ப்பு பற்றிய பல கருத்துக்களும் கேள்விகளுமாக இரவு கழிந்தது.

நண்பர்களுடன் 

மயிலு 
அடுத்தநாள் ஊர் சுற்றலில் சபர்மதி வலைத்தளம் நடத்துபவரும், ஜெயமோகனின் "அண்ணா ஹஜாரே" உள்ளிட்ட பல முக்கிய கட்டுரைகளை ஆங்கில மொழியாக்கம் செய்தவருமான நண்பர் கோகுலும் இணைந்துகொண்டார்.

காரில் கிரிவலம், ரமணாஸ்ரமம், கோவில் என சென்றது அன்றைய ஆன்மீகப் பயணம். ஆன்மிகம், கோவில் மற்றும் சிற்பக்கலை பற்றி பெரிதும் அறிந்த ஜடாயு தன் தகவல்களால்  இந்தப் பயணத்தை மிக சுவையாக ஆக்கினார்.

காலையில் ஆரம்பித்த எங்கள் பயணம் எழுத்தாளர் பவா செல்லத்துரை வீட்டில் நடந்த அவரது குழந்தையின் பிறந்தநாள் விருந்துடன் இனிதே நிறைவு பெற்றது.

--

கொஞ்சம் கொஞ்சம் தொட்டுப் பார்த்தவரையில் இந்த மூன்று புத்தகங்கள்..  

அயல் மகரந்தச் சேர்க்கை - (சர்வதேசப் படைப்பாளிகளின் பேட்டிகளும் படைப்புகளும்.) - சர்வதேச இலக்கியம் பற்றி அறிமுகம் கொள்ள. குறைந்த பட்சம் ஜல்லியடிக்க மிக முக்கியமான புத்தகம். 

வேங்கைச் சவாரி - (விவேக் ஷேன் பேக் -கன்னட கதைகள் ) - யுவன் சந்திரசேகர் தனது உரையில் சொல்லியதுபோல், சில மர்மங்களை சொல்லாமல் சொல்லும் கதைகள்.

அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும் - (பால் சர்காரியா - மலையாளக் கதைகள்) - எளிய நடையில் சொல்லப்பட்ட ஆன்மீக தரிசனத்துடன் கூடிய கதைகள் 

---

புத்தகங்கள் கிடைக்குமிடம்:  http://www.vamsibooks.com/

10 மார்ச் 2012

தகுதியானவர் தானா இந்த டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சாப்பெல் சமீபத்தில் ஒரு தத்துவ முத்தை உதிர்த்தார். அதாவது "இந்தியர்களுக்கு தலைமைப் பண்பு என்பதே இல்லை. யார் என்ன சொன்னாலும் தலையாட்டும்படி அவர்களை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதுவே அவர்களின் தோல்விகளுக்குக் காரணம்." என்பதே அது.

அவருக்கு எப்படி இந்த மனப்பதிவு உருவானது என்று யோசித்தபொழுது, தான் பார்த்த டிராவிட் ஒருவரை வைத்து மொத்த இந்தியாவையும் மதிப்பிட்டு விட்டாரோ என்று நினைக்கத் தான் தோன்றுகிறது.


டிராவிட்டின் திறமை பற்றியோ, பல முக்கிய விளையாட்டுகளில் அவரது பங்களிப்பு பற்றியோ நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாகப் பெருமைப்படக்கூடிய ஒரு பங்களிப்புதான் அது. ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவரது இடம் என்ன?

கிரிக்கெட் விளையாட்டில் அவரது முழுப் பங்களிப்பை ஆராயும்பொழுது, அவரிடம் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தபொழுது என்ன செய்தார் என்பதையும், அது இந்திய அணிக்கு நன்மை பயத்ததா எனபதையும் ஆராயாமல் இருக்க முடியாது.

பிக் த்ரீ சொல்லப்படும் சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் மூவருமே இந்திய அணி வரலாற்றில் முக்கியமானவர்கள். இம்மூவரிடமுமே அணித் தலைமை மாறி மாறி வந்ததுண்டு. அணித் தலைவராக இல்லாத காலத்தில் கூட சச்சினின் கருத்து முக்கிய முடிவுகளில் கேட்கப்படுவதுண்டு என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

சச்சின் தலைவராக இருந்தபொழுது கங்குலி மற்றும் டிராவிட்டின் வளர்ச்சிக்கு அவரது ஆதரவு இருந்தது. உண்மையில் டோனி அணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்டக் கூட சச்சினின் பங்களிப்பு இருந்தது.

கங்குலி தலைவராக இருந்தபொழுதும் அவர் அணிக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தார். சின்னச் சின்ன சச்சரவவுகள் இருந்தபோதிலும். இந்திய அணியின் நலன்களுக்காக பல சர்ச்சைகளில் கங்குலி சிக்கினாலும், அவையெல்லாம் இந்திய அணிக்ககாகத் தான் என்பதால் ரசிகர்களுக்கு அவரது அந்தச் செயல்பாடுகள் மகிழ்ச்சியே அளித்தன.

ஆனால் டிராவிட் வசம் அதிகாரம் வந்துடனேயே, சச்சின் மற்றும் கங்குலிக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவாக்கப் பட்டது. சச்சின் இருநூறு அடிக்கக் கூடாது என்பதற்காகவே டிக்ளேர் செய்த காமெடி எல்லாம் நடந்தது.

இவர்கள் ஒருவர் மட்டுமேல்லாமல் மொத்தமாக இந்திய அணியே மிக நம்பிக்கையற்ற நிலையை அடைந்தது. இந்திய அணியை ஒழிக்கும் நோக்கத்துடன் வந்தோரோ என நாம் நினைக்கும் சாப்பெல் செய்த அனைத்து செயல்களுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவியவர் டிராவிட். சச்சின் மற்றும் கங்குலியை ஓரம்கட்டும் தன் தனிப்பட்ட நோக்க்கதுக்காக அணியின் நலன்களைக் கூட பலியிட்டவர் என்ற குற்றச்சாட்டும் அவர்மீது உண்டு.


திறமை மற்றும் அர்ப்பணிப்பு மட்டுமே அளவுகோல்கள் என்றால் டிராவிட் ஒரு திறமையாக வீரர் தான். ஆனால் ஒரு மூத்த வீரர் என்றமுறையில் தன் தனிப்பட்ட விளையாட்டு மட்டுமல்லாமல் அணியின் வளர்ச்சிக்கும் உதவவேண்டும் என்பது எதிர்பார்ப்பு என்றால், டிராவிட்டின் பங்கு நிச்சயம் கேள்விக்குரியதே.



08 மார்ச் 2012

தடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி

மெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம்.

மெட்ரோ ரயில் திட்டத்தால் என்னென்ன பலன்கள் வரப்போகிறதோ அது வந்தபின்தான் தெரியும். ஆனால் இந்தத் திட்டம் இதுவரை பல முக்கிய சாலைகளில் வெற்றிகரமாக கடும் போக்குவரத்து நெரிசலை உருவாக்கியுள்ளது. இந்தநிலையில் அண்ணாசாலை ஒருவழிச் சாலையாக மாறப்போகிறது என்ற அறிவிப்பு வந்தது. இதுவும் இன்னொரு கடுமையான நெரிசலை உருவாக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை பார்ப்பதில் கொஞ்சம் ஆர்வமும் நமக்கு இருந்தது.






மாற்றத்துக்கு முன் GB Road சந்திப்பு

ஆனால் உண்மையில் இந்த மாற்றத்தால் இந்தப்பகுதிகளில் வாகன நெருக்கடி பெருமளவு குறைந்துள்ளது என்பதே மக்கள் கருத்து . புதிய முறைப்படி பல சிக்னல்கள் எடுக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட சிக்னல் நிறுத்தங்களே இல்லாமல் பயணம் செய்வது உணர்வே கிடைக்கிறது. ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சிறப்பாக செய்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஆனால் இந்த மாற்றங்களால் பாதிக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிறிய தூரத்தைக் கடப்பதற்குக்கூட பெரிய சாலைகளைச் சுற்றிவரவேண்டிய கட்டாயத்துக்கு பலர் ஆளாயிருக்கக் கூடும். ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக நாம் நினைப்பது சில கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தான்.





மாற்றத்துக்குப் பின் GB Road சந்திப்பு

பல கடைகள் தங்கள் வியாபாரத்தை இழந்துள்ளன. பல கடைகள் மொத்தமாகவே மூடப்பட்டும் உள்ளன. உதாரணமாக ஜி.பி ரோடு. வாகன அலங்காரப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் நிரம்பியுள்ள இந்தத் தெரு எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும், ஆனால் இந்த போக்குவரத்து மாற்றங்களால் கார்களை கடைமுன் நிறுத்தி வேலைசெய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய வியாபரத் தளமான இந்தத் தெரு களையிழந்து தான் இருக்கிறது.

சென்னையில் சமகாலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய பணி இந்த மெட்ரோ ரயில். சென்னைவாசிகளான நமக்கு இது தற்காலிகமாக பல வசதிக்குறைவுகளைத் தந்தாலும் ஒரு மிகப்பெரிய பணி நம் கண்முன்னால் நடப்பது நிறைவளிப்பதாகவே இருக்கிறது.

24 பிப்ரவரி 2012

கொலைக் குற்றமும், குற்றமும் கொலையும்

சென்னையில் ஒரு பெண் ஒரு டீன் ஏஜ் பையனால் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால் இது ஒரு கொலையாகக் கருதப்படப் போவதில்லை என்பது செய்திகளையும், அறிவுஜீவிகளின் கருத்துக்களையும் படிக்கும்போது உணரமுடிகிறது. காரணம், அந்தக் கொலையாளி பள்ளியில் மாணவனாகவும் இருந்தது தான்.
ஒரு மாணவன் செய்த கொலையை, வழக்கமான கொலையாகப் பார்க்கக்கூடாது. (கொலையில் என்ன வழக்கமான?) அதை காரண காரியங்களையும், கல்விமுறையின் எல்லா பிரச்சனைகளையும் பேசி முடித்தபின்னே தான் இதை கொலையா அல்லது தேச சேவையா என்று முடிவுசெய்யவேண்டும் என அறிவிஜீவிகள் எண்ணுவதாகத் தெரிகிறது.
மாணவர்களாக இருக்கும் சிலர் பேருந்துகளில் தினமும் செய்யும் தொந்தரவுகளையும், பொது இடங்களில் செய்யும் பிரச்சனைகளையும் காவல்துறை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, இப்போது கொலையைக்கூட அப்படி பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும்போல இருக்கிறது. அறிவுஜீவிகள் இப்போதே அந்த மனநிலைக்கு நம்மை தயார்ப்படுத்தி வருகிறார்கள் எனத் தெரிகிறது.
மாணவர்கள்  மீதுமட்டும் ஏன் அந்த ஒளிவட்டம், அவர்கள் மட்டும் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாமா எனக் கேட்டீர்களென்றால் அப்படியல்ல,   ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கூட்டத்துக்கும் இந்த சலுகை உண்டு. ஒரு தனிமனிதன் தவறு செய்யதால் மாபெரும் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால் அவனே ஏதாவது ஒரு கூட்டத்தோடு அவனை சம்பந்தப் படுத்திக் கொண்டால் போதும். கொலையே செய்தாலும் அதற்கு விளக்கம் கூற, நியாயப்படுத்த ஒரு கூட்டமே வந்துவிடும். அப்புறம் எது தண்டனை. சிறிதுநாள் கழித்து பாராட்டுவிழா வேண்டுமானால் நடக்கலாம். 
---
இதை எழுதினாலும் பதிவேற்றாமல் இருந்தேன். ஆனால் இப்போது நடந்துள்ள என்கவுன்ட்டர் கொலைகளையும் அதற்கான அதிரடியாய எதிர்ப்புகளையும் பார்க்கும்பொழுது இதை சொல்லவேண்டும் எனத்தோன்றியது.
சட்டத்தை மீறி நடக்கும் எந்தக் கொலைகளுமே நமக்கு உடன்பாடு இல்லை.
இருந்தாலும் ஒரு ஆசிரியை கொல்லப்பட்ட செய்தியை சாதாரணமாக எடுத்துக்கொண்டு மாணவர் தரப்பு  நியாயம் பேசிய நமது அறிவுஜீவிகள்  இந்த என்கவுன்ட்டர் விஷயத்தில் காட்டும் எதிர்ப்பு நமக்கு வியப்பாக இருக்கிறது.
ஆசிரியர் கொல்லப்பட்டதை விட கொள்ளைக்காரர்கள் என சந்தேகிகப் படுபவர்கள் கொல்லப்படுவது நமது சமுதாயத்தில் அதிக அதிர்ச்சியை விளைவிக்கிறது என்பதே ஒரு அதிர்ச்சிதான்.

09 பிப்ரவரி 2012

நண்பன் -போலிகளின் பாசாங்கு

அவன் எழுதியதைத் தான் நானும் எழுதினேன். ஆனால் அவன் சூப்பர் மார்க், எல்லோரும் பாராட்டுறாங்க. ஆனால்  நான் பெயில், எல்லோரும் சிரிக்கிறாங்க,  என்ன உலகமடா இது என்று வருத்தப்பட்டான் 'நண்பன்' ஒருவன். அவனுக்கு தெரியாதது என்னவென்றால் இரண்டு பேரும் எழுதியது வேறு தேர்வுகள். வெவ்வேறு கேள்வித்தாள்கள்.
பிரதியெடுங்க, ஆனால் கொஞ்சம் புரிந்துகொண்டு பிரதியெடுங்க மக்களே..

 .......

கொஞ்சம் நாள் முன்பு த்ரீ இடியட்ஸ் என்று ஒரு அருமையான படம் வந்தது. அது நமது கல்வித்துறையில் இருக்கும் பல அபத்தங்களை கேள்விக்குள்ளாக்கியது. முக்கியமாக புத்தகதிலிருப்பதை அப்படியே வாந்திஎடுப்பதை சாதனையாகக் கருதும் கல்விமுறையையும் அப்படி வாந்திஎடுப்பவர்களை சாதனையாளர்கள் என கொண்டாடும் அபத்தத்தையும்.

இப்போது நடப்பது என்ன? அதை அப்படியே வாந்தியெடுத்து(உரிமம் வாங்கித்தான்) இங்கே ஒரு படம். இவர்களை சாதனையாளர்கள் என பாராட்ட ஒரு பாமரக் கூட்டம். அட ஆண்டவா..

....

த்ரீ இடியட்ஸ் என்ற படமே "Five Point Someone" என்ற நாவலின் தாக்கத்தில் உருவானது தான். ஆனால் அதில் திரைக்கதைக்குத் தேவையான  பல புதுமைகளை இயக்குனர் புகுத்தி ஒரு அருமையான வெற்றிப் படத்தைத் தந்தார்.

ஆனால் நமது 'பிரமாண்ட இயக்குனர்" தந்துள்ளது ஒரு காப்பி. அதற்குமேல் எதுவும் இல்லை. அந்தப் படம் சொல்லும் கருத்துக்கு நேர்மாறான ஒரு செயல்பாடு. இந்தப் படத்தில் இலியானாவைத் தவிர வேறேதும் புதுமையைக் காணமுடியவில்லை.

எல்லாப் படத்தையும் பிரதி எடுத்தீங்க சரி.. ஆனால் இப்படி பிரதிஎடுப்பதை விமர்சனம் செய்துவந்த படத்தையுமா பிரதிஎடுப்பீங்க?


சரி. விஜய் படத்துக்கெல்லாம் எதற்கு யோசனை. வழக்கம்போல கண்டும் காணாமல் விட்டு விடவேண்டியது தானே?  சொந்தமாக யோசிக்கமுடியாவிட்டாலும் நல்லவிஷயத்தை தானே இவர்கள் கொண்டு சேர்க்கிறார்கள் என கேள்வி எழலாம்.
இதுபோன்ற போலிகளைக்கொண்டாடுவதின்மூலம் நாம் சில உண்மையான திறமைகளுக்கு அநீதி செய்கிறோம்  என்பதை நினைவில் நிறுத்துவது நல்லது.

அறிவு குறைவானவர்கள் அப்படியே இருப்பதில் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர்களின் அறிவாளிபோன்ற  பாசாங்குகளும்,  அவர்களெல்லாம்  அறிவுரை சொல்ல  விழைவதும்தான் நமது பிரச்சனை.

08 பிப்ரவரி 2012

பச்சை

எவ்வளவுநேரம் காத்திருந்தாலும்
சிவப்பு, பச்சையாக மாறுவதில்லை.
 
சிவப்பு மறையும்நேரம், பச்சை ஒளிர்கிறது.

07 பிப்ரவரி 2012

ரஜினி எனும் படைப்பாளி



அன்று...



"நான் வெறும் நடிகன் மட்டுமல்ல. வேற ஏதாவது செய்வேன்.. அது என்னவா வேணும்னாலும் இருக்கலாம்" என்றார் ரஜினி. பல ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் நடந்த ஒரு கலைவிழாவில்.


"அது என்னவா வேணும்னாலும் இருக்கலாம். அரசியலை நினைக்காதீங்க... அரசியலை நினைக்காதீங்க..." என்று நிறுத்தியவர் "இருக்கலாம்!" என்று முடித்தபோது கரகோஷம் களைகட்டியது. (நினைவில் இருந்து எழுதுகிறேன். யாரிடமாவது லிங்க் இருந்தால் உதவவும்.)



இன்று..


கர்ணன் பரசுராமனிடம் பெற்ற சாபம் போல, தனக்கு முக்கியமான தருணங்களில் சரியாகப் பேசவருவதில்லை என்று தன்னைப் பற்றி தன்னடக்கமாகச் சொல்லிக்கொண்டு தனது பேச்சை அவர் ஆரம்பிதபொழுதே நமக்குத் தெரிந்துவிட்டது, இன்றும் ரஜினி ஒரு அட்டகாசமான உரையை நிகழ்த்தக் போகிறார் என்று.


ரஜினியை வெறும் மசாலாப் பட நாயகன் என நிறுவ பலர் எப்போதும் பதடத்துடன் முயற்சிசெய்து பார்த்தாலும் அவர் தனது ஆளுமையை தான் செய்யும் எதிலும் இயல்பாக வெளிப்படுத்தி வருபவர். அது மேடைப்பேச்சிலும் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.


ரஜினி இயல்பிலேயே மக்களைக் கவரக்கூடியவர். எனவே அவர் திட்டமிட்டு செய்யும் செயல்களைவிட இயல்பாக செய்யும் செயல்கள் மிகச் சிறப்பாக இருக்கும். (சச்சின் பற்றிகூட எனக்கு இப்படி ஒரு கருத்து உண்டு.)



எஸ்ராவைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் எனக்கு ஒரு கல்லூரிப் பேராசிரியர் பிம்பம் தான் மனதுக்குள் வரும். அவர் ஒரு தகவல் சுரங்கம் என்றே சொல்லலாம். திட்டமிட்டு, தகவல்களை அடுக்கித் தரும் படைப்புகள் அவருடையது. என்றாலும் விக்கிபீடியா எல்லாம் எளிதாக கிடைக்கும் இந்தக் காலத்தில் என்னை அவரின் எழுத்துக்கள் அதிகம் கவர்வதில்லை.



எஸ்ராவின் பேச்சுக்களும் எழுத்துகளும், சினிமா விமர்சனங்களும் தகவல்களை அள்ளித்தந்தாலும், அந்தப் படைப்புகளினுள் அவரின் குரலைக் கேட்கமுடிவதில்லை என்பதுதான் எஸ்ராவைப் பற்றிய எனது மனபிம்பம்.



இப்படிப்பட்ட நிலையில் எஸ்ராவைப் பற்றி ரஜினி பேசுகிறார் என்றதும் பலரைப்போல் என்னாலும் நம்பமுடியவில்லை. பாட்சா படத்தைப் பார்க்கும்பொழுது ரஜினி மற்றும் பாலகுமாரனின் இயல்பான கூட்டணியின் வெற்றி நமக்குத் தெரிந்தது. பாலகுமாரன் ரஜினியின் இயல்பறிந்து அந்த காலகட்டத்தின் சூழ்நிலையறிந்து எழுதியவசனங்கள் ரஜினியின் இயல்போடு அப்படி பொருந்தி போனது. படமும் சூப் ஹிட். ஆனால் எஸ்ராவுக்கும் ரஜினிக்கும் எப்படி?

அதையும் ரஜினியே தன் பேச்சில் குறிப்பிட்டார். எஸ்ராபெற்ற விருதைப் பற்றிக் கேள்விப்பட்ட ரஜினி அதற்கான விழாபற்றி கேட்க, ரஜினி வந்தால் நடத்தலாம் என்ற எஸ்ராவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விழா.




தான் நடிகன் மட்டும் இல்லை என்று உணர்ந்துள்ள ரஜினி மற்ற விஷயங்களிலும் தன் ஈடுபாட்டைக் காட்டிவருவது தமிழ் நாட்டுக்கு புதிது. அதிலும் ரஜினி ஒரு மிகச் சிறந்த மேடைப்பேச்சாளர் என்பதும் அவரால் சபையறிந்து மக்களைக் கட்டிப்போட முடியும் என்பதும் உண்மை. தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களடங்கிய பல சபைகளில் தன் முத்திரையைப் பதித்தவர் ரஜினி.




இருந்தாலும் இந்த இலக்கிய மேடையில் ரஜினி என்ன பேசப்போகிறார் என்பது பற்றி ஆவலாகவே இருந்தது. எதைச் சொன்னாலும் அக்கப்போருக்கு காத்திருக்கும் பலர் உள்ள இலக்கிய உலகில் ரஜினியின் பேச்சு எப்படி?




உண்மையில் அக்கப்போர் பிரியர்களுக்கு இது ஒரு ஏமாற்றம் என்றே சொல்ல வேண்டும். எடிசன் கதையை ரஜினி சொல்லும்போதே இதற்கு ஆதாரம் கேட்டு அக்கப்போர் கிளப்புவார்களே என்று கொஞ்சம் பயந்தேன். ஆனால் அதை ரஜினி முடித்த விதம் அருமை. ஒரு புனைவில் ஒரு ஆளுமையின் பெயர் பயன்படுத்தப் படும்போது அந்த புனைவு மற்றொரு பரிணாமம் அடைவதை சொல்லிச் சென்றார்.




ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான பேச்சு இது. தனது வழக்கமான பன்ச் வசனங்கள், கதைகள், சமஸ்க்ரிதம், ஆன்மிகம் என்று இது ஒரு ரஜினி கொண்டாட்டம்.




"மனிதனுக்கு கஷ்டம் வரும்போதுதான் அவனது மூளை சிறப்பாக வேலை செய்யும்" என்று அவரது தொனியில் சொன்னபோது அரங்கு ஆரவாரித்தது. உண்மை. "முதலில் கொஞ்சம் வருத்தப்பட்டேன். Then I started to enjoy it." என்று தனது சோதனையான காலகட்டம் பற்றி சொன்னபோது உண்மையில் அதுதான் படைப்பாளிக்கான மனநிலை என்று தோன்றியது.




வெற்றுப்புகழ்ச்சிகள் இல்லை. சரளமான பேச்சு மட்டுமே அங்கு இருந்தது. ரஜினி அவரது நிலையில் நின்று, சபையறிந்து ஒரு சிறப்பான உரையை அளித்தார் என்றே சொல்லவேண்டும்.




வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி ரஜினி சொன்ன வார்த்தைகள் அருமை. வெறும் தொலைகாட்சியில் தங்கள் அறிவை மழுங்கடித்துக் கொள்வதோடு வரும் தலைமுறைகளின் அறிவையும் மழுங்கடிக்கும் மக்களுக்கு இதுபோன்ற பேச்சுக்கள் கொஞ்சமாவது உதவக்கூடும்.




நல்ல எழுத்தாளர்களின் நல்ல புத்தகங்கள் அவர் வசம் கொண்டுசேர்ப்பது இலக்கியத்துக்கும் நல்லது. விஷ்ணுபுரம் போன்ற ஒரு நாவலை ரஜினி படித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.




தனக்குக் கிடைத்த ஓய்வை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ரஜினியின் செயலை பத்திரிகைகளும் மற்ற ஊடகங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அவரது பெயரை விளம்பரத்துக்கு மட்டும் பயன்படுத்தும் மட்டமான செயலைத்தான் இதுவரை பத்திரிக்கைகள் செய்து வந்துள்ளன. மட்டமான விளம்பரம் என்றால் என்னவென்று தெரியவேண்டுமானால் ஒரு சாம்பிள் சாரு தளத்தில் காணக் கிடைக்கிறது. மாமல்லன் தளத்தில் அவரது பதட்டம் தெரிகிறது.





ரஜினி ஒரு சரளமான உற்சாகமான ஆளுமை. அதன் வெற்றிகளை சினிமாவில் இதுவரைப் பார்த்துள்ளோம். சினிமா மற்றும் சில அரசியல் மேடைகளில் பார்த்துள்ளோம். இனி எழுத்துத் துறையிலும்..