Unordered List

23 ஆகஸ்ட் 2012

வனவெளி நோக்கி

பயணத்துக்கு முன்னால் உள்ள சில நாட்கள் மிகமுக்கியமானவை, சிலசமயம் பயண நாட்களை விடவும். அதுவும் தெரியாத இடத்துக்குப்பயணம் என்றால் இன்னும் சிறப்பு. செல்லவிருக்கும் இடங்களைப்பற்றிய தகவல்கள் மூலம் ஒரு சித்திரம் மனதுக்குள் உருவாகும் நேரம் அது.

அனுபவம் என்பது  நம் மனதில் உள்ள கடந்தகாலத்தின் பிம்பம் என்றால், எதிர்பார்ப்பு என்பது வருங்காலத்தின் பிம்பம். முக்கிய வித்தியாசம் என்னவென்றால் அனுபவம் சிலநேரம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதாக இருக்கும், குரூப் போட்டொ போல. ஆனால் எதிர்பார்ப்பால் உருவாகும் சித்திரம் அப்படியல்ல அது தனியுடைமை.

பயணத்தின்போது  உண்மை அனுபவம் மனதில் உருவான அந்த சித்திரத்தை மாற்றி எழுதுகிறது, அது  ஆச்சர்யமாகவோ அல்லது ஏமாற்றமாகவோ. எப்படி இருந்தாலும் நம் நாமத்தில் உருவான அந்தச் சித்திரம் நமக்கே நமக்கானது. அது வேறு எங்கும் காணமுடியாதது வேறு யாரும் யோசிக்கக்கூட முடியாதது. அதுவே இந்த பயண எதிர்பார்ப்பை இன்னும் முக்கியமானதாக்குகிறது. அதுவே அதன் தனிச் சிறப்பு.



ஆனால் எல்லோரும் செய்வது அனுபவத்தை அல்லது கடந்த காலத்தை நினைவில் நிறுத்தும் முயற்சிதான்.பொதுவாக சுற்றுலாத் தளங்களில் மக்கள் அந்த இடத்தை அனுபவப்பதைவிட அந்த அனுபவத்தை ஆவணபடுத்துவதில் காட்டும் முனைப்பை கவனிக்கலாம். முக்கியமான எல்லா இடங்களிலும் புகைப்படம்  எடுத்தால்தான் அந்தப் பயணம் நிறைவு. நான் முதன்முறை இங்கிலாந்து சென்றிருந்தசமயம் ஒரு வாரயிறுதி நாட்களில் லண்டன் செல்ல வாய்ப்பு இருந்தும் அந்தப் பயணத்தை ரத்து செய்தேன், கையில் காமெராவும் புகைப்படம் எடுக்க நண்பர்களும் இல்லாததால். புகைப்படம் எடுக்காமல் சுற்றிப்பார்த்து என்ன பயன்? அடுத்தமுறை பயணத்தில் சரியான ஏற்பாடுகளுடன் லண்டன் சென்றதெல்லாம் வேறு கதை.

யாருடன் செல்கிறோம் என்பதும் பயணத்தின் அனுபவத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிக்கிறது. வழக்கமான மக்கள் கூடுமிடங்களை மட்டுமே பார்த்து, அதையே சுற்றுலா எனப் பழகியவர்களை இயற்கைப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களைடையும் ஏமாற்றம் மற்றவர்களையும் பாதிக்கக்கூடும். எனவே பொருட்காட்சிகளை மட்டுமே பார்த்துப் பழகியவர்களை உண்மையான பயணத்துக்கு தவிர்த்துவிடுவது எல்லோருக்கும் நலம்.



இயற்கைப் பகுதிகளில் நடக்கும் பயணத்தில் ஆக்கப்பூர்வமான உரையாடல்களும் சேர்ந்துகொண்டால் அது ஒரு வாழ்நாள் அனுபவமாகிறது. உரையாடிய விஷயங்களை யோசிக்கும்தோறும் இயற்கைப் பகுதிகளின் நினைவும், இயற்கையை நினைக்கும்போது உரையாடிய விஷயங்களின் நினைவுமாக கிடைக்கும் அனுபவம் விலைமதிக்க முடியாதது.

சரி ஒரு சிறப்பான பயணத்தில் என்ன எதிர்பார்க்கலாம்? சிறப்பான பயணத்தின் முக்கிய கூறு அதிலுள்ள unpredictableness. ஒரு மாதமாக திட்டமிட்டு, புறப்படும் தினமான  இன்று  எல்லாத் திட்டங்களையும் தகர்த்து எதிர்பாராத மாற்றங்களுடன் ஆரம்பிக்கிறது இந்த வனப் பயணம்.

வனவெளியில் பயணம் ஒரு வழிகாட்டியுடன் செல்லும்போது சிறப்படையும். ஆனால் இந்த வனப் பயணம் மனவெளியின் வழிகளைக் காட்டுபவருடன்.