Unordered List

14 ஜூன் 2013

குப்பைவண்டி காக்கை

ஒரு  நெரிசலான சாலையில் வாகனங்கள் பிதுங்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தன, கடுமையான போக்குவரத்து நெரிசல். அதில் நிரம்பிவழியும் குப்பைகளோடு ஊர்ந்துகொண்டிருந்தது ஒரு குப்பைலாரி. அந்த லாரியின் மீதுதான் அந்த காக்கை அமர்ந்திருந்தது.
தாளமுடியாத  சோகத்தில் இருந்தது  காக்கை. பக்கத்திலிருக்கும் காக்கை தனது சோகம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கிறதே என்ற கோபம் வேறு.
யாரும் கண்டுகொள்ளாததால், தனது சோகங்களைப் பற்றி தானே பேச ஆரம்பித்தது.
"இவ்ளோ பெரிய ஊருக்கு இந்த ரோடு எப்படி தாங்கும். இதைக்கூட ப்ளான் பண்ணாம இருக்காங்களே, சரி அப்படியே  ரோடு இருந்தாலும் எல்லோரும் இந்த நேரம் தான் வரணுமா.. சரி அப்படியே வந்தாலும் இப்படித் தான் ட்ராபிக் சென்ஸ் இல்லாம ஓட்றதா.. இதையெல்லாம் மாத்துறது இருக்கட்டும், கேக்கக் கூட யாருமே இல்லையே.. இந்த வேகத்துல இந்த வண்டி போனா இன்னும் எவ்ளோ நேரம் போகும்..."
பொறுமையாகக் கேட்டது பக்கத்திலிருந்த காக்கை. லாரியின் ஓட்டுனர் இருக்கையில் வியர்வை வெள்ளத்தில் அமர்ந்திருந்த மனிதனையும் பார்த்தது அது. பிறகு புலம்பிய காக்கையைப் பார்த்து,
"நீ சொல்லுறதெல்லாம் சரியான பிரச்சனையா இருக்கலாம், ஆனா இதுல உன்னோட பிரச்னை என்ன?" என்று சொல்லியபடி பறந்து சென்றது.
கதையின் நீதி:
சரியான பிரச்சனையெல்லாம் நம்முடைய பிரச்சனையாக இருக்கவேண்டியது இல்லை.