Unordered List

புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 டிசம்பர் 2013

திருடுபோய்க் கொண்டிருப்பது

"டேய்ய்ய்....."

சென்னை சாந்தி தியேட்டர் வளாகத்தில் இருக்கும் சரவணபவனில் சாவகாசமாக ஒரு  மதிய உணவை முடித்துவிட்டு, நானுண்டு எனது செல்போனுண்டு என  நடந்து  வந்துகொண்டிருந்த நான் அந்தக் குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

அவருக்கு ஒரு நாற்பத்தைந்து வயது இருக்கலாம். கையிலிருந்த கருப்புப்பை அவர் ஒரு விற்பனைப்  பிரதிநிதியாக இருக்கலாமென  சொல்லியது, அவரது முகத்தில் கோபம் பரவியிருந்தது.

அவர் பார்த்த திசையில் நானும் பார்த்தேன். ஒரு பத்து பையன்கள் ஓடிக்கொண்டிருந்தனர். எதோ பள்ளி சீருடையில் இருந்தனர்.  அவர் மறுபடியும் கோபமாக குரல்கொடுக்க ஓடிக்கொண்டிருந்த இரு பையன்கள் நின்று நிதானமாகத் திரும்பினர், "என்ன" என்பது போல் தெனாவெட்டாக  அவரைப் பார்த்தனர்.

அதுவரை கோபமாக இருந்த அவர் முகம் கொஞ்சம் மாற்றமடைந்தது, அதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தோன்றியது. ஒரு அடி பின்னல் வைத்தார். அருகிலிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்து
"பட்டப்பகல்ல இப்படி எடுத்துட்டு ஓடுறாங்க.. எலோரும் பார்த்துகிட்டு இருக்கீங்களே.." என்று குமுறினார். இப்பொது குரல் மிகவும் மட்டுப்பட்டே இருந்தது, இருந்தாலும் இழப்பின் வலி அந்தக் குரலில் இருந்தது. எனக்கு நிலைமை கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.



இப்படி ஒரு அனுபவத்தைப் பற்றி எனது நண்பன் ஒருமுறை சொல்லியிருந்தான்.

பஸ்ஸில் சென்ற அவனது செல்போன் திருடப்பட்டு விட்டதை கவனித்து இருக்கிறான். உடனடியாக ஒரு கும்பல் இறங்குவதையும் கவனித்துவிட்டு, உடனடியாக அவனும் இறங்கியிருக்கிறான்.பேருந்து புறப்பட்டுவிட, ஐந்தாறுபேர் இருந்த அந்த கும்பலும் அவனும் மட்டும் அந்த பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறார்கள்.

இவன்  கவனித்ததைக் கவனித்த அவர்களில் வாட்டசாட்டமான   ஒருவன் "என்ன" என்று கேட்க. இவன் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு திரும்பியிருக்கிறான். வேறென்ன செய்ய?

அவர் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். இழப்பும் கையறு நிலையும் அவரது முகத்தில் தெரிந்தது.  இங்கே திருடு போயிருக்கிறது என்றும் அதற்குக் காரணம் யாரென்றும் தெரிந்தாலும் திருடுபோனது என்ன என்று எனக்கு தெரியவில்லை.



ஓடிக்கொண்டிருந்த அந்த பையன்கள் இப்போது மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். எங்களைப் திரும்பி பார்த்த அவர்களின் கண்களிலும் ஏளனம் கைகளில் கரும்பு.

ஆம், அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் கரும்பு இருந்தது. அப்போது தான் கவனித்தேன். அருகிலிருந்த அந்த கரும்பு ஜூஸ் எந்திரத்தின் அருகே சாக்கில் கட்டப்பட்ட ஓரிரு கரும்புகள் மட்டும் இவர்கள் எடுத்தது போக எஞ்சியிருந்தன. ஆளில்லாத கரும்பு ஜூஸ் வண்டியிலிருந்து எடுத்துகொண்டு அதாவது திருடிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். 
அந்த கரும்பு ஜூஸ் கடைக்காரர் அங்கே இல்லாததால், அங்கு நடந்தது யாருக்கும் ஒரு இழப்பாகத் தெரியவில்லை.

அவரை மீண்டும் கவனித்தேன். கண்டிப்பாக அவருக்கும் அந்த கரும்புகளுக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை, பிறகு ஏன் இவர் இவ்வளவு கோபமடைகிறார், இதனால் அவருக்கு என்ன இழப்பு  என்று யோசித்தேன்.

“விடுங்க சார்..கவனிக்காம அப்படியே விட்டுட்டு அப்புறம் போன பின்னாடி ஆத்திரப்பட்டு என்ன சார் பண்ண முடியும். கவனிச்சு வச்சிருந்துக்கணும்” என்று யாரொ அந்தக் கரும்புச்சாக்கை பார்த்தபடிகூற

"படிக்கிற பசங்க சார்"  என்று முனுமுனுத்தபடி அவர் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

26 ஆகஸ்ட் 2013

செத்தவன் சொன்னது


அவனை எனக்கு முன்பே தெரியாதென்பதில்லை, அவன் செத்துவிட்டான் என்பதில் யாருக்கும் சந்தேகமேதுமில்லை, ஆனால் அவன் மரணத்தில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே அவனே பேச ஆரம்பித்ததும் ஒரு வகையில் நல்லதே.

எல்லோரையும் போலவே சிறுவயதில் அவனுக்கும் அந்த பயம் இருந்திருக்கிறது, சிறுவயதில் தான் பயம் என்று சொன்னதும், விவரம் தெரிந்தபின் அந்த பயத்தைக்கடந்துவிட்டான் என்று பொருளல்ல. விவரம் தெரிவதென்பது பயங்களை சிறப்பாக ஒளித்துவைப்பது என்பது தானே. பயத்தை ஒழிப்பது கடினமே தவிர ஒளிப்பது இல்லையே.

ஆனால் எலோருக்கும் இருக்கும் அந்த மரண பயத்தை அவன் எப்படிக்கடந்தான் எனக்கேட்டேன். மரண பயத்தை வெல்ல ஒரே வழி மரணம்தான் என்றான். நல்ல பதிலாகத்தான் தோன்றியது. அதை எப்படி நிகழ்த்திக்கொண்டான் எனக்கேட்டேன்.

சில திருமணங்கள் தானாக நடப்பது போலத் தோற்றமளித்தாலும், எல்லாமே நடத்தி வைக்கப்படுபடுபவைதான். சில வெளிப்படையாகத்தெரியும் சில தெரியாது, மற்றபடி வித்தியாசமேதுமில்லை. அதுபோலத்தான் மரணங்களும். மற்ற மரணங்களைப்பற்றி அவன் பேச அவனது தார்மீகம் இடம்கொடுக்கவில்லையென்றாலும், அவனது சொந்த மரணத்தைப் பற்றி பேச அவனை யார் தடுப்பது. தற்கொலைதான் இங்கே குற்றம், மரணமல்ல.

அவனது மரணத்துகாக தங்கள் உயிர், பொருள் ஆவியனைத்தும் கொண்டு உழைத்தவர்கள் பலர். அதனால் யாரால் வந்தது வந்தது அந்த மரணம் என்று யாருக்கும் தெளிவாகத்தெரியவில்லை. அதுவே அவனது மரணத்தின் மர்மம். மரணத்தை அவன் மிக விரும்பியேற்றுக்கொண்டான் என்றாலும், மரணத்தைவிட அந்த மர்மம் அவனுக்கு மிக விருப்பமாக ஆனதாகத்தெரிவித்தான். இதில் என்ன வேடிக்கையென்றால், இன்னும் பலர் அவனது மரணத்துக்காக முயற்ச்சிசெய்து கொண்டிருப்பதுதான். ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டவனை இன்னும் பலர் கொல்ல முயற்சிப்பதைப்பார்பதே அவனது வேடிக்கை. இதுவே அவன் பேச ஆரம்பித்ததின் நிமித்தமுமாகக்கூட இருக்கலாம்.

(இன்னும் சொல்வான்)

16 ஆகஸ்ட் 2013

அதிகாலை வெளிச்சம்

அறையில் இருள் பரவியிருந்தது, போர்வையினுளிருந்து அனிச்சையாக கையை நீட்டி இருளுக்குள் துழாவி, எனது செல்பேசியை எடுத்தேன். அறையில் பரவியிருந்த இருளின் ஒரு துளியே அதிலும் இருந்தது. சரிதான் அதில் சார்ஜ் இல்லை என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அதை இருளுக்குள் புதைத்துவிட்டு, நான் போர்வைக்குள் புதைந்தேன். அது நள்ளிரவாகயிருந்திருக்கவேண்டும்.

எனக்கு எப்போதுமே கடிகாரம் பயன்படுத்தும் பழக்கமில்லை. கைக்கடிகாரம் தான் மனித நாகரிகத்தின் கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய அபத்தம் என்பது எனது கருத்து. பள்ளி, அலுவலகம் செல்வதற்கு மணி பார்த்தால் கூட பரவாயில்லை. ஆனால் மனிதர்கள் சாப்பிடுவதையும் தூங்குவதையும் கூட அது தான் தீர்மானிக்கிறது எனபதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. மனிதர்கள் இயற்கையின் கடிகாரத்தை புறக்கணிப்பதே பல பிரச்சனைகளுக்குக் காரணம் எனபதும் எனது துணிபு. இதற்கான தார்மீக எதிர்ப்பாகவே நான் கைக்கடிகாரத்தை துறந்தது. இப்போதெல்லாம் செல்பேசி உடலின் பகுதியாகவே ஆகிவிட்டிருக்கிறபடியால் உண்மையில் தனியாக கைகடிகாரம் இல்லாதது ஒரு பிரச்சனையாகவும் இருப்பதில்லை.

முழு விழிப்படைந்து எழுந்தபோது காலைப்புத்துணர்ச்சியை உணர்ந்தேன். அந்த ஐந்துமணி வெளிச்சம் கண்களுக்கு இதமாக இருந்தது. ஒன்பது மணிக்குத்தான் அலுவலகத்துக்குச் செல்ல புறப்பட வேண்டுமென்றாலும், காலையில் ஓட்டப்பயிற்சிக்காக வழக்கப்படுத்திக்கொண்டது இந்த ஐந்து மணி பழக்கம். தாமதமாகத் தூங்கினால் காலையில் இருக்கும் கண்ணெரிச்சல் அறவே இல்லாதது கொஞ்சம் ஆச்சர்யமளித்தது. அந்த ஆச்சர்யத்துக்கு ஜன்னல் வழியாக வந்த மழைச் சத்தமும் மெல்லிய குளிரும் பதில்களாக அமைந்தன. குளிர்நேரங்களில் மக்கள் அதிக புத்துணர்ச்சியோடு இருப்பது இயல்பு தானே. இயற்கை எப்போதுமே சரியான பதில்களைத் தந்துகொண்டு தான் இருக்கிறது. நாம்தான் சரியாகக் கேட்பதில்லை என நினைத்துக்கொண்டேன்.

அணைந்திருந்த செல்பேசியை மின்னிணைத்துவிட்டு பல்துலக்க ஆரம்பித்தேன். காலைகடன்களை முடித்து குளியலறையிலிருந்து வந்து செல்பேசியை எடுத்து உயிர்ப்பிக்க உடனே அது கதறியது.

என் நண்பனின் அழைப்பு அது.

"ஏண்டா உனக்கு எவ்ளோ நேரம் ட்ரை பண்ணுறது. உன் வீட்டுக்கு வெளியேதான் நிக்கிறேன். சீக்கிரம் வா" என்றான்.

சில சமயங்களில் இவனது கடமை உணர்ச்சிக்கு இப்படிதான் வெளிப்படும். இந்த மழையிலும் வழக்கமாகச் செல்லும் ஜாக்கிங் செய்தே ஆகவேண்டும் என்று நினைக்கும் அவனது கடமை உணர்வு கண்டு நெஞ்குருக்கொண்டே காலை ஓட்டப்பயிற்சிக்குத் தயாரானேன். அவன் ஆர்வத்துக்கும் காரணம் இல்லாமலில்லை. மழையை எதிர்பார்த்து மழைக்கான ஜெர்க்கின்களை நேற்றுதான் நானும் அவனும் வாங்கியிருந்தோம், அது உடனே பயன்பாட்டுக்குவருவதில் ஒரு மகிழ்ச்சி. மழை நேரத்திலும் அதிகாலை ஓட்டப்பயிற்சிக்கு சென்றே ஆகவேண்டும் என்கிற அவனது ஆர்வத்துக்கும் இதுதான் காரணமாக இருக்கவேண்டும்.

நல்ல வேலையாக அப்போது  அதைச்  செய்தேன். வெளியே செல்ல கதவைத் திறக்கும் முன்பாக ஜன்னல் வழியாக அவனைப்பார்த்தேன், மழைக்கு அவன் எப்படி தயாரகியிருக்கிறான் என்று பார்க்க.

அவன் தயாராகத்தான் இருந்தான். குடையைப்பிடித்தபடி, என் வீட்டுக்கதவை பார்த்துக்கொண்டு.  அலுவலகம் செல்லும் உடைகளுடன். 

29 ஜூலை 2013

மனிதகுல மானமும் சில குருவிகளும்

அந்தக் குருவியை அதற்குமுன் அங்கே நான் கவனித்து இல்லை, அதுவும் என்னை அந்த அதிகாலை நேரத்தில் கவனித்திருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் அன்று காலை அந்த சந்திப்பு நடந்தது.

அந்தக் குருவி துயிலெழுந்த நேரமோ அல்லது அதன் நிமித்தமோ நானறியேன். ஆனால் நான் எழுந்தது காலை சுமார் நாலறை மணி. அதற்கான காரணம் சமீபத்தில் வெளிவந்துள்ள சிங்கம் 2 திரைப்படம், இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் அந்தத்திரைப்படத்தின் விளம்பரங்கள்.

தற்போதைய நிலைமையில் நகரில் பயணம் செய்யும் எவரும் கடுமையாக முறைக்கும் சூர்யாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது, எந்தப் பக்கம் திரும்பினாலும் சூர்யா நம்மைப் பார்த்து முறைத்தபடியிருக்கிறார், அவருக்குப் பின் அனுஷ்கா பட்டாசாக சிரித்தபடி இருப்பது கொஞ்சம் ஆறுதல்.

உண்மையில் அந்த விளம்பரம் என்னைக் கவர்ந்ததுக்குக் காரணம் சூர்யாவின் முறுக்கேறிய தோற்றமா அல்லது, அனுஷ்கா பற்றிய எண்ணமா என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் நாட்களாகவே உடற்பயிற்சியைத் தொடர்வதைப் பற்றி யோசித்துகொண்டிருந்த எனக்கு உடனடி காரணமாக இருந்தது அந்த விளம்பரம் தான் என்று  உறுதியாகவே சொல்ல முடியும்.

பக்கத்திலிருக்கும் பூங்காவில் அதிகாலையில் ஓட்டம், பின்னர் கொஞ்சம் உடற்பயிற்சிகள் என திட்டம் உருவானது.

அதிகாலையில் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்தவனை வரவேற்றது ஒரு குருவியின் குரல். நான் வருவேன் என்று எதிர்பார்த்து அது அங்கே இருக்கவில்லை என்பதும் என்னை வரவேற்பது அதன் உத்தேசமில்லை என்பதும் தெளிவு. இருந்தாலும், அதன் இனிமையான குரல் அந்த அதிகாலைவேளையில் எனக்கு மிகச் சிறப்பான வரவேற்பாக அமைந்தது என்பது உண்மை.


இது வேற குருவி


அந்த வரவேற்பை மனதுள் ரசித்துக்கொண்டே பூங்கா செல்ல எனது பைக்கை உயிர்ப்பிக்க முயற்சிசெய்தேன். பலநாட்கள் எடுக்கப்படாததாலும் கடந்த இரு நாட்களாக பெய்த மழையாலும் பைக்கின் ஸெல்ப் ஸ்டார்ட் வேலை செய்ய மறுத்தது. பிறகென்ன உதைத்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். மூன்றாவது உதையில் பைக் உயிர்பெற்று அந்த அதிகாலை அமைதியை கிழித்து உறுமியது. சொல்லிவிட்டுப்போகலாம் என குருவியைப் பார்க்க அங்கே அது இல்லை. இந்த பைக் களேபரத்தில் பயந்து பறந்துவிட்டது போல.

அட என்ன  செய்துவிட்டேன். அதிகாலை காலை வேளையில் ஒரு குருவியை மிரளச் செய்துவிட்டேனே, அதுவும் எனக்கு வரவேற்பாக அமைந்த குரலுக்கு சொந்தமான குருவியை. குருவியின் சத்தம் எனக்கு வரவேற்பாக அமைய, நான் உருவாக்கிய சத்தம் அதற்கு மிரட்டலாக அமைந்துவிட்டதே என்ற குற்ற உணர்வுடன் வண்டியைக் கிளப்பினேன்.

இதே நினைப்புடன் பூங்காவை அடைந்து ஓட்டத்தை தொடங்கினேன். காலையின் மெல்லிய வெளிச்சமும், லேசானக் குளிரும், நேற்றைய மழையின் ஈரமும் அந்த இடத்தை ரம்யமாக ஆக்கிகொண்டிருந்தன. அதிகாலையில் எந்த ஒரு இடமும் நாம் பார்க்காத  இன்னொரு பரிணாமத்தில் இருக்கிறது. 

லேசான ஈரம் கொண்ட பாதையில் இருந்த சரளைக்கற்களில் ஷூ அணிந்து ஓடும்போது ஒரு சீரான ஓசையை உருவாக்கிக்கொண்டிருந்தது. தூரத்தில் தவளைகளின் ஒலிகளும் பின்னணி போல வந்து கொண்டிருந்தன.  ஆனால் இந்த எல்லா ஓசைகளுக்கும் சிகரம்போல இருந்தது அங்கிருந்த குருவிகளின் ஒலிகள்.

குருவிகளை கவனித்த தருணத்தில் மீண்டும் அந்தக் குருவியின் நினைவு. என்ன இருந்தாலும் காலையில் என்னை வரவேற்ற குருவியை மிரளச்செய்தவன் தானே நான். இன்னா செய்தவனுக்கும் இனிமையை அள்ளி வளங்கிகொண்டிருந்த  குருவியினத்தைப்பார்கையில் உண்மையில் சந்தோஷத்தை விட ஒரு மனிதனாக ஒரு குற்ற உணர்ச்சியே தோன்றியது.

பலவிதமான குருவிகளின் சப்தங்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு அற்புத இசைவெளி அங்கே உருவாகிக்கொண்டிருந்தது. அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில் மழையில் புத்துணர்ச்சியடைந்த பசேலென்ற மரங்கள் பார்க்கும்  கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. அந்த மரங்களுக்கு உயிர்கொடுப்பது போலிருந்ததும் அவற்றின் மீது பறந்து விளையாடிய குருவிகளின் நடனங்கள்தான். சப்தம் கேட்டு அருகே இருந்த நீர்த்தேக்கதைக் கவனித்தேன், கரையோர மரத்திலிருந்து  நீரை உரசியபடி சென்ற அந்தக் குருவி  அப்படியே  நீரில் மிதக்க அதைச் சுற்றி வட்ட வட்டமாக அலைகள் உருவானது,  அமைதியாக இருந்த தண்ணீரும் துயிலெலுந்ததுபோல சிலிர்த்துக்கொண்டது.

காலைவேளை குருவிகளின் வேளைபோலும், அனைத்தையும் உயர்ப்பிப்பது குருவிகளின் கடமை,  இவ்வேளையில் குருவிகளைத் தவிர்த்து ஒரு அனுபவம் இல்லை,  நாளின் எல்லா விஷங்களையும் குருவிகள் தான் ஆரம்பித்து வைக்கின்றன என்று தோன்றியது.   இந்தக் குருவியினத்துக்கு நான் மட்டுமல்ல மனிதர்கள் உட்பட ஒட்டுமொத்த சூழலும் கடன்பட்டிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்.

அப்போதுதான் அவர்களைக் கவனித்தேன், மூன்று இளைஞர்கள். ஜிம்மில் இருக்கும் திரட்மில்லில் ஓடும் பாவத்துடன் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தனர்.  மூவரின் காதுகளிலிருந்தும் வயர்கள் புறப்பட்டு அவர்களின் சட்டைகளுக்குள் மறைந்தன. இன்னும் கவனித்ததில்  பெண்கள் நடைப்பயிற்சிக்கு வந்தால் ஐபாட் உடன் தான் வரேவேண்டும் என்று தீர்மானம் இருப்பது தெரியவந்தது.

இசையைப் பற்றி அப்போது ஒரு ஆச்சரியம் தோன்றியது.  ஒரு மழைக்கால அதிகாலையில் உருவாகும் குருவிகளின் ஒலிகளைகூட துச்சமென மதித்து புறக்கணிக்கும் அவர்களிடம் அதைவிட அரிதான எதோ இசை இருக்கிறது என்பதே மிகவும் ஆச்சர்யமூட்டும் சிந்தனையாக இருந்தது. அந்த இசை என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் எழாமல் இல்லை.

வேறு சிலர், அவர்களுக்கு ரகசியத்தில் நம்பிக்கை இல்லை. தங்களிடம் இருந்த மொபைல் போன் மூலம், தங்களுக்கான இசையைத் தங்களைச் சுற்றி வளையம் போல அமைந்து நடந்து சென்றனர்.  ஐபாடு, மொபைல் போன் அல்லது ஒரு சைனா செட்டாவது இல்லாமல் இவர்கள் வெளியே வருவது இல்லை, பிறகெப்படி குருவி அவர்களிடம் நெருங்குவது.

இன்னொருவர், இவரிடம் ஹெட்போன் இல்லை. பொதுவாக நாம் அரசு அலுவலகங்களில் காணக் கிடைக்கும் இறுகிய  அதிகார முகத்துடன் நடந்துகொண்டிருந்தார், அங்கே அவர் எழுந்தளியிருப்பதே அவ்விடத்துக்குப் பெருமை என்ற தோரணையுடன். இவருடன் அவர் நடக்கும் வேகத்துக்கு ஈடுகொடுத்தபடி இருவர் கூடவே ந்டந்துகொண்டிருந்தனர். அந்த இருவரின் ”ஆமாம்” சத்தங்களைத்தாண்டி குருவியின் சத்தம் அவரை அடைவது சந்தேகம் தான்.

தனது இனிமையால் எல்லோரையும் வென்றுவிடலாம் என நினைக்கும் குருவியினத்தை, தங்கள் புறக்கணிப்பாலேயே  மனிதர்கள் வென்றுவிடுகிறார்கள் என்றறிந்த திகைப்புடன் திரும்பிய நான், என் பைக்கின் கண்ணாடியில் தன்முகம் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குருவியை பார்த்துக்கொண்டு நின்றேன்.

"அப்பா...இங்க சூப்பரா எவ்வளவு குருவி இருக்கு!!.."  எனக்குப் பின்னால் குருவியைக் கவனிக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன். அந்தச் சிறுவன் தன் அப்பாவிடம் கேட்டான்.

 "இதை நம்ம வீட்டுக்குப் பிடிச்சுக்கிட்டுப் போகலாமா?"

14 ஜூன் 2013

குப்பைவண்டி காக்கை

ஒரு  நெரிசலான சாலையில் வாகனங்கள் பிதுங்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தன, கடுமையான போக்குவரத்து நெரிசல். அதில் நிரம்பிவழியும் குப்பைகளோடு ஊர்ந்துகொண்டிருந்தது ஒரு குப்பைலாரி. அந்த லாரியின் மீதுதான் அந்த காக்கை அமர்ந்திருந்தது.
தாளமுடியாத  சோகத்தில் இருந்தது  காக்கை. பக்கத்திலிருக்கும் காக்கை தனது சோகம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கிறதே என்ற கோபம் வேறு.
யாரும் கண்டுகொள்ளாததால், தனது சோகங்களைப் பற்றி தானே பேச ஆரம்பித்தது.
"இவ்ளோ பெரிய ஊருக்கு இந்த ரோடு எப்படி தாங்கும். இதைக்கூட ப்ளான் பண்ணாம இருக்காங்களே, சரி அப்படியே  ரோடு இருந்தாலும் எல்லோரும் இந்த நேரம் தான் வரணுமா.. சரி அப்படியே வந்தாலும் இப்படித் தான் ட்ராபிக் சென்ஸ் இல்லாம ஓட்றதா.. இதையெல்லாம் மாத்துறது இருக்கட்டும், கேக்கக் கூட யாருமே இல்லையே.. இந்த வேகத்துல இந்த வண்டி போனா இன்னும் எவ்ளோ நேரம் போகும்..."
பொறுமையாகக் கேட்டது பக்கத்திலிருந்த காக்கை. லாரியின் ஓட்டுனர் இருக்கையில் வியர்வை வெள்ளத்தில் அமர்ந்திருந்த மனிதனையும் பார்த்தது அது. பிறகு புலம்பிய காக்கையைப் பார்த்து,
"நீ சொல்லுறதெல்லாம் சரியான பிரச்சனையா இருக்கலாம், ஆனா இதுல உன்னோட பிரச்னை என்ன?" என்று சொல்லியபடி பறந்து சென்றது.
கதையின் நீதி:
சரியான பிரச்சனையெல்லாம் நம்முடைய பிரச்சனையாக இருக்கவேண்டியது இல்லை.

04 பிப்ரவரி 2013

காலைச்சுற்றிய..பாம்பு இல்லை, இது வேற


எறும்பு கடிப்பதென்பது, அட்டை ’கடிப்பது’ போலன்று.

வனப்பயணங்களின் முக்கியமான பிரச்சனை அங்கு நம் ரத்தத்தை உறிஞ்சக்காத்திருக்கும் அட்டைகள். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரிரண்டு அட்டைகள் நம் உடலில் துழையிட்டு ரத்தம் உறிஞ்சுவதை தவிர்க்க முடியாது. அது உறிஞ்சும் இரத்தத்தை விட, அது கொடுக்கும் பதட்டமே வனச் சுற்றுலாவில் மிகப்பெரிய பிரச்சனை. புதிதாக பயணம் செல்பவர்கள் தங்கள் மொத்த அனுபவத்தையுமே இந்த பிரச்சனையில் இழந்துவிட வாய்ப்புண்டு.

மற்றவர்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என கவனித்தேன். அடிக்கடி பயணம் செய்யும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டேயல்ல என உணர்ந்தேன்

”அட்டை தானே அதனால் நமக்கு பாதிப்பேதும் வந்துவிடாது, மாறாக அது உறிஞ்சும் ரத்தத்தினால், அது சில காலம் உயிர் வாழும். நம்மால் சில உயிர்கள் வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே. இதற்காக பயந்து நம் உற்சாக மனநிலையை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்” என்பது அவர்கள் வாதம்.
காலில் அட்டை 

இதை என்னால் ஒரளவு ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், என்னை பொறுத்தவரை, இந்தப் பிரச்சனையில், பயம் என்பதைவிட அதைப்பார்க்கும் அருவறுப்பு என்றுதான் சொல்லவேண்டும்.  மூக்குப்பொடியெண்ணை, உப்பு மற்றும் காலுறை என்று எல்லா முன்னேற்பாடுகளுடன் தான்  செல்ல முடிந்தது . இதையும் தாண்டி வந்தால் வேண்டுமானால் அந்த பெருந்தண்மை வாதத்தை துணைக்கொள்ளலாம். அட்டை உறிஞ்சும் இரத்தத்துக்கும் சேர்த்து இன்னும் கொஞ்சம் சாப்பிடால் போகிறது.

ஆனால் இந்த வாதங்கள் எறும்பு விஷயத்தில் பயன்படாது. உண்மையில் எறும்பு நம்மிடம் எதிர்பார்ப்பது பெருந்தன்மையையும் அல்ல. அந்த எறும்பு நம்மிடம் காட்டுவது அப்பட்டமான எதிர்ப்பு. பொதுவாக கடிக்கும் எறும்பு அதன் உயிரை பணயம் வைத்துதான் அதைச் செய்கிறது. தனது கூட்டத்துக்கு தேவை என்று நினைத்தால் தனது உயிரை பணயம் வைத்து எதிர்ப்பைக் காட்டும் எறும்பிடம் எந்த பெருந்தன்மையும் எடுபடுவதில்லை.

--

மென்மையான இளையராஜா பாடல்கள் போகும் வேகத்தை இனிமையாக்க, உள்ளே மெல்லிய குளிர்பரவ நெடுஞ்சாலையில் காரோட்டிக்கொண்டிருக்கும் எனது கால்களில் சுர்ரென ஒரு உணர்ச்சி.

எப்போது காலில் ஏறியிருக்கும் இந்த எறும்பு. என்ன செய்வது இப்போது? காரை நிறுத்திதான் இந்த எறும்பைப்பார்க்கவேண்டும். காரின் குளிச்சியையோ இளையராஜாவின் இனிமையோ வேகத்தின் துடிப்பையோ அந்த எறும்பு அறிந்த்திருக்க நியாயமில்லை. ஆனால் நான் அறிந்திருக்கிறேனே. இந்த எறும்புகாக பயணத்தின் வேகத்தை குறைப்பதா.

சரி, எப்படியோ ஏறிவிட்டது. காரை நிறுத்தி இறக்கிவிடலாம். ஆனால் அது காலுறைக்குள் இருக்கும் அது அவ்வளவு எளிதாக இறங்காது. அது எதிரியைத் தாக்கும் வேகத்துடன் தன் முழு பலத்துடன் கடித்துக்கொண்டிருக்கிறது. இந்த எறும்புக்கு அதன் எதிரி நானல்ல, எனது உத்தேசம் வேறு  என்பதை எப்படிப்புரியவைப்பது.

என்னைத்தாக்க இவ்வளவு தூரம் பயணம் செய்து வரும் அதை நினைக்க வலியைவிட ஆச்சர்யம் அதிகரிக்கிறது.

அட்டையாக இருந்தால் பெருந்தமைவாதத்துடன் கையாளலாம். எறும்பை இப்போது என்ன செய்வது.

சரி, அது எறும்புதானா? வனப்பயணங்களில் இன்னொன்றும் நடப்பதுண்டு. அது காலில் ஏறும் எறும்பை அட்டையாக நினைத்து பதறுவது.

13 செப்டம்பர் 2012

ஒரு வீட்டுப் பிரச்சனை


கதவைத் திறந்ததும் காருக்குக் கீழிருந்து எட்டிப்பார்த்தது அந்த நாய்க்குட்டி, கண்களில் ஒரு கேள்விக்குறியுடன். புதிதாக ஒரு வீட்டுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் நாய் பார்க்கும் விரோதப் பார்வையோ, அல்லது தனது சொந்தக்காரனைப் பார்த்தவுடன் பார்க்கும் அன்புப் அல்லது அடிமைப் பார்வையோ அல்ல அது. அந்தப் பார்வையில் இருந்தது அப்பழுக்கற்ற கேள்வி மட்டுமே.

அந்த அதிகாலையில்  அந்த நாய்க்குட்டியின் அமைதியைக் குலைத்துவிட்ட குற்றவுணர்வு கொஞ்சமிருந்தாலும், எனக்கு வேறு வழியில்லை. அங்கே தான் நான் சென்றாக வேண்டும். அது எனது வீடு, அதாவது நான் வாடகை தந்து குடியிருக்கும் வீடு. முடிந்தவரை நாயை தொந்தரவு செய்யாமல் வீட்டைத் திறந்து உள்ளே சென்றேன். காருக்குக் கீழிருந்து எட்டிப்பார்த்த நாய் தலையை உள்ளிழுத்துக்கொண்டது.


நான் வீட்டைவிட்டுக் கிளம்பி நான்கு நாட்களாகிவிட்டிருந்தது, நான்கு நாட்களாக நண்பர்களுடன் கர்னாடக காட்டுப்பகுதிகளுக்கு ஒரு பயணம். நான்குநாட்கள் பயணம் முடிந்து அந்த அதிகாலையில் தான் ஊர்திரும்பினேன். இதற்குமுன்பு இந்த நாயைப் பார்த்தமாதிரி ஞாபகமில்லை. இந்த நான்கு நாட்களுக்குள் தான் இந்த நாய் இங்கு வந்திருக்கவேண்டும். எனது வீடும் காரும்தான் நான்கு நாட்களாக அதன் இருப்பிடமாக இருந்ததா, அல்லது இன்று தான் அது அந்த இடத்தைக் கண்டடைந்து இருக்குமா. அந்த போர்டிகொவும் எனது சிவப்பு ஸ்விஃப்ட் காரும் நாய் வசிக்க வசதியான இடம் தான், அதுவும் இந்த மழைக்காலத்தில் மிகவும் கதகதப்பாகவே இருக்கக்கூடும்.

எனது கார் என்று சொல்லிக்கொண்டாலும் அந்தக் கார் ஒரு வங்கியின் கடன் பணத்தில் வாங்கியது. இந்த வருடம் முடிவில்தான் கடன் தவணை முடிகிறது. அத்ன்பின் தான் அது எனக்கு முழு சொந்தம் என்று சொல்ல முடியும். இந்த வீடும் வீடு என எனது நண்பர்களால் அறியப்பட்டு இருக்கிறது. அனால் இதை எனது வீடு என்று சொல்வதில் வீட்டின் சொந்தக்காரருக்கு ஆட்சேபனை  இருக்கக்கூடும். எனினும்  இந்த வீட்டுக்கு நான் வாடகை கொடுப்பதால் எனது வீடு தான் இது. வீட்டுக்காரக்கு சரியென்றால் இந்த வீட்டை வாங்கிவிடலாம் என்ற ஒரு யோசனையும் இருக்கிறது. ஆனால் அதைக் கேட்கபோய் என்னை காலி செய்ய சொல்லிவிட்டால் இது போல ஒரு வீடு அலுவலகம் பக்கத்திலேயே கிடைக்காது என்ற பயம் அந்த யோசனையைத் தடுத்தபடியே உள்ளது. அலுவகம் மாறும்போது கேட்கலாம், காலிசெய்ய சொல்லிவிடுவாரே என்ற பயம் இருக்காது. ஆனால் வேறு ஊருக்கு மாறும்போது இந்த வீட்டைக் கேட்டு என்ன பயன். நானும் வேறு யாருக்காவது வாடகைக்கு கொடுத்துவிட்டு வீட்டுக்காரனாக இருப்பதற்கு அவரே வீட்டுக்காராக இருப்பது அந்த வீட்டுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

கார் வாங்கிவிட்டேனே தவிர அதை இந்த ஊரில் ஓட்டுவது அவ்வளவு மகிழ்ச்சியான செயலில்லை. பைக் போதும் இந்த ஊருக்கு. பைக் தான் எனது உற்ற தோழன். இருந்தாலும் கார் ஒரு அவசியத் தேவையாகிவிட்டது. ஏனென்றால் தோழியுடன் பயணிக்க கார் தான் ஒரே வழி. தோழியுடன் பைக்கில் செல்வது இந்த சமுதாயத்துக்கும் அல்லது தோழிக்கும் கூட உவப்பான செயலில்லை. இந்த சமுதாயக் கட்டாயங்கள்தான் கார் விற்பனைக்கு காரணம் என நினைக்கத் தோன்றுகிறது. ஆட்டோவே உரசாமல் செல்ல முடியாத குறுகிய மற்றும் நெரிசல்மிக்க சாலைகள் உள்ள சென்னையில் விலையுயர்ந்த கார்கள் இவ்வளவு விற்பனையாவதன் மூலம் இதை புரிந்துகொள்ளமுடிகிறது.

இவ்வளவு இருந்தாலும், இந்த வீடு அல்லது கார் உன்னுடையதா என்று யாரும்  கேட்டால், சற்றும் யோசிக்காமல் அல்லது சற்றே யோசித்து நான் சொல்லும்  பதில்,ஆம் என்பது  தான். இந்த பின்னணிக் கதைகள் கேட்க அவர்களுக்கு பொறுமை இருக்குமா என்று தெரியாது, கேட்டால் கண்டிப்பாக புரியும். அனால் இதை தெரிந்து அவர்களுக்கு ஆகப் போவது ஏதுமில்லை என்பதால் அவர்களுக்குச் சொல்வதுமில்லை. ஆனால் இந்த  நாய்குட்டிக்கு? அதற்கு இந்த விஷயம் தெரிந்தே ஆகவேண்டுமல்லவா? நான் தான் இந்த வீட்டுக்காரன் என்று அந்த நாய் தெரிந்துகொள்வது மிக்க அவசியம் அல்லவா? அந்த நாய் அங்கு தங்க எனது அனுமதிதான் தேவை என்று அதற்க்குத் தெரியவேண்டுமல்லவா? அந்த நாய்க்குட்டியின் கண்களிலிருந்த கேள்வி அது தானேஅதற்கு எப்படி இதைச் சொல்லி புரியவைக்கப்போகிறேன் என்று யோசித்தபடி அந்த அதிகாலை நேரத்தில் ஒரு குட்டித் தூக்கத்துக்கு இருந்த சாத்தியத்தை பயன்படுத்திக்கொண்டேன்.

பத்துமணிக்கு அலுவலகம் செல்லும்போது காருக்குக்கீழ் மறக்காமல் எட்டிப்பார்க்க அந்த நாய்க்குட்டியைக் காணோம். என்னைப் பார்த்ததும் ஓடியிருக்கலாம். ஆனால் அந்த விஷயத்தை என்னால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, அந்த நாய் சென்றது கூட எனக்குப் பிரச்சனையில்லை. இந்த ஊரில் நம்மைவிட நாய்க்கு பல இடங்கள் எளிதாகக் கிடைக்கும். ஆனால் அந்த நாய் என்ன நினைத்துக்கொண்டு ஓடியிருக்கும் என்றகேள்விதான் என் மனத்தைக்குடைந்தபடியிருந்தது. அதை எப்போதும் அதற்கு புரியவைக்கமுடியாதபடியாகிவிட்டதே என்ற சோகமும்.

இரு நாட்கள் கழித்து ஒரு நடுஇரவில் மழை சத்தம் கேட்டு விழித்தேன். வெளியில் காயும் எனது ஜட்டிகள் ஞாபகம் வந்தது. என் வழக்கப்படி  எல்லா ஜட்டிகளயும் ஒரே நாளில் துவைத்து காயபோடிருந்தேன். நாளை கண்டிப்பாக தேவைப்படும். எனவே உடனடியாக  இறங்கி ஓடி அதை மழையில் நனையாமல் எடுத்தேன். எதேச்சையாக பார்வை கார் பக்கம் திரும்பியதில் நாய்க்குட்டி காருக்கு அடியிலிருந்து எட்டிப்பார்த்தது. அதே  நாய்க்குட்டி.

அந்த நாய்க்குட்டி உண்மையில் ஓடிப்போகவில்லை போல, நான் வழக்கமாக பார்க்கும் நேரத்தில் அது இல்லை என்பதால் அது அந்த வீட்டில் இல்லை என்று சொல்ல முடியாதில்லையா. நான் கூடத்தான் அது பார்க்கும் நேரத்தில் வழக்கமாக அந்த வீட்டில் இல்லை. எது எப்படியிருந்தாலும் ஜட்டியை மழையிலிருந்து பாதுகாத்துவிட்ட திருப்தியுடன் தூங்கச் சென்றேன்.

அப்படியானால் அந்த நாய் அதற்க்குத் தேவைப்படும் நேரத்தில் அங்கு வருகிறது, எனக்குத் தேவைப்படும் நேரத்தில் நான் வருவது போல, எனக்குத் தேவைப்படும் நேரத்தில் எனது காரை நான் எடுப்பது போல. எனவே அந்த வீடும் காரும் எனது என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அந்த நாயுடையதும் என்பது தானே?

இதில் எனக்குப் பிரச்சனை இல்லையென்றாலும் இருந்தாலும் ஒரு கேள்வி என் மனத்தை சுற்றியபடியேயிருந்தது. தனக்கு சொந்தமான வீட்டுக்கு வந்துசெல்லும், அந்தக் காரை அவ்வப்போது எடுக்கும் என்னைப்பற்றி அந்த நாய் என்ன நினைத்துக்கொண்டிருக்கும்?

02 மே 2012

அவனும் இவனும் மற்றுமொரு ஆட்டுத்தொடையும்

அவனைச் சொல்ல ஏதுமில்லை, நான் தான் நேரம்கெட்ட நேரத்தில் போய் நின்றேன். சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். நானும் பார்த்தேன். எந்தக் கடைக்குச் சென்றாலும் கடைக்காரர் கேட்கும் முன் நாமாகக் கேட்கக்கூடாது என்பது நமது கொள்கை.

"என்ன சார்.. "

"ஒரு அரைக் கிலோ.." தொங்கிக் கொண்டிருந்த ஆட்டுத் தொடையைப் பார்த்தபடியே சொன்னேன். மதியம் மூன்றுமணிக்கு சாப்பிட்டுக் கொண்டிருப்பவனை தொந்தரவு செய்கிறோமே என்று கொஞ்சம் குற்றஉணர்வு. அவனும் நிமிர்ந்து நான் பார்த்துக்கொண்டிருந்த ஆட்டுக்காலைப் பார்த்தான். என்னை பார்த்தவன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.

தொங்கிக்கொண்டிருந்த ஆட்டுத் தொடையின் ஒரு பாகத்தைத் தான் அவன் காலையில் சமைத்து சாப்பிட்டுகொண்டிருக்கிறானோ என நினைத்தேன். ஒரே ஆட்டின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு வீடுகளில் உணவாக, ஒரு பகுதி மட்டும் அதே இடத்திலேயே உணவாகிறது. இதுதான் பகிர்ந்துண்டு வாழ்வது இல்லையா.

ஆனால் அவன் அமர்ந்திருந்த நிலையில், அவனது முகத்தைத்தான் பார்க்கமுடிந்ததே தவிர அவன் என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்பதை  என்னால் பார்க்கமுடியவில்லை என்பதால் எனது ஊகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதையும் இந்த இடத்தில குறிப்பிடவேண்டியிருக்கிறது.

எனக்கும் எந்த அவசரமும் இருக்கவில்லை. சாப்பிட்டுவிட்டே வரட்டும். அவன் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தால், இந்த மட்டன் சுவையாக இருக்கிறது என்று தானே அர்த்தம். எனவே நல்லது தான். உண்மையில் அவன் என்னைப் பார்த்தவுடனேயே தன் உணவை நிறுத்தியிருந்தால் தான் நான் யோசிக்கவேண்டியதாக இருந்திருக்கும். அவனே சாப்பிடமுடியாத அந்த ஆட்டுத் தொடையை நான் வாங்கிபோய் என்ன செய்வது?

ஆனால் தான் சாப்பிடும்பொழுது வரும் வாடிக்கையாளர்களை கவனிக்கவாவது ஒரு அப்ரசண்டீசை அவன் நியமிக்கவேண்டும் என அறிவுறுத்தலாம் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே,

"டேய்.." என ஒரு பலமான குரல் கொடுத்தான்.

உள்ளிருந்து இவனைவிட சற்று இளையவனாக இன்னொருவன் வந்து நின்றான்.

ஓகோ உள்ளே ஆளை வைத்துக்கொண்டுதான் இவ்வளவு நேரம் இருந்தானா? இவன் சாப்பாட்டைத் தொடரப் போகிறான், வந்தவன் எனக்கு வெட்டித் தரப்போகிறான் என்று நினைத்தேன். அப்படியே நடந்திருந்தால் எனக்கு எந்தக் குழப்பமுமில்லாமலிருந்திருக்கும். ஆனால் அப்படி நடப்பதில்லையே..

ஆமாம் அங்கு நடந்ததோ வேறு..

அவன் வந்ததும் இவன் சட்டென எழுந்து கையைக் கழுவிவிட்டு, ஆட்டுத் தொடையை வெட்ட ஆரம்பித்தான். அவன்..

24 நவம்பர் 2011

கரப்பான் பூச்சியின் உயிர்



கரப்பான் பூச்சியின் உயிர்
========================
கால்கள் துடித்துக்கொண்டிருந்த கரப்பான்பூச்சியை  
இழுத்துச் செல்லும் எறும்பைப் பார்த்துக் கேட்டேன்,
உயிரிருக்கும் உடலை உணவாக்கலாமா என்று.
எறும்பு சொன்னது,
அந்த உடலின் உயிர் தான்தானென்று.