Unordered List

04 பிப்ரவரி 2013

காலைச்சுற்றிய..பாம்பு இல்லை, இது வேற


எறும்பு கடிப்பதென்பது, அட்டை ’கடிப்பது’ போலன்று.

வனப்பயணங்களின் முக்கியமான பிரச்சனை அங்கு நம் ரத்தத்தை உறிஞ்சக்காத்திருக்கும் அட்டைகள். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரிரண்டு அட்டைகள் நம் உடலில் துழையிட்டு ரத்தம் உறிஞ்சுவதை தவிர்க்க முடியாது. அது உறிஞ்சும் இரத்தத்தை விட, அது கொடுக்கும் பதட்டமே வனச் சுற்றுலாவில் மிகப்பெரிய பிரச்சனை. புதிதாக பயணம் செல்பவர்கள் தங்கள் மொத்த அனுபவத்தையுமே இந்த பிரச்சனையில் இழந்துவிட வாய்ப்புண்டு.

மற்றவர்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என கவனித்தேன். அடிக்கடி பயணம் செய்யும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டேயல்ல என உணர்ந்தேன்

”அட்டை தானே அதனால் நமக்கு பாதிப்பேதும் வந்துவிடாது, மாறாக அது உறிஞ்சும் ரத்தத்தினால், அது சில காலம் உயிர் வாழும். நம்மால் சில உயிர்கள் வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே. இதற்காக பயந்து நம் உற்சாக மனநிலையை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்” என்பது அவர்கள் வாதம்.
காலில் அட்டை 

இதை என்னால் ஒரளவு ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், என்னை பொறுத்தவரை, இந்தப் பிரச்சனையில், பயம் என்பதைவிட அதைப்பார்க்கும் அருவறுப்பு என்றுதான் சொல்லவேண்டும்.  மூக்குப்பொடியெண்ணை, உப்பு மற்றும் காலுறை என்று எல்லா முன்னேற்பாடுகளுடன் தான்  செல்ல முடிந்தது . இதையும் தாண்டி வந்தால் வேண்டுமானால் அந்த பெருந்தண்மை வாதத்தை துணைக்கொள்ளலாம். அட்டை உறிஞ்சும் இரத்தத்துக்கும் சேர்த்து இன்னும் கொஞ்சம் சாப்பிடால் போகிறது.

ஆனால் இந்த வாதங்கள் எறும்பு விஷயத்தில் பயன்படாது. உண்மையில் எறும்பு நம்மிடம் எதிர்பார்ப்பது பெருந்தன்மையையும் அல்ல. அந்த எறும்பு நம்மிடம் காட்டுவது அப்பட்டமான எதிர்ப்பு. பொதுவாக கடிக்கும் எறும்பு அதன் உயிரை பணயம் வைத்துதான் அதைச் செய்கிறது. தனது கூட்டத்துக்கு தேவை என்று நினைத்தால் தனது உயிரை பணயம் வைத்து எதிர்ப்பைக் காட்டும் எறும்பிடம் எந்த பெருந்தன்மையும் எடுபடுவதில்லை.

--

மென்மையான இளையராஜா பாடல்கள் போகும் வேகத்தை இனிமையாக்க, உள்ளே மெல்லிய குளிர்பரவ நெடுஞ்சாலையில் காரோட்டிக்கொண்டிருக்கும் எனது கால்களில் சுர்ரென ஒரு உணர்ச்சி.

எப்போது காலில் ஏறியிருக்கும் இந்த எறும்பு. என்ன செய்வது இப்போது? காரை நிறுத்திதான் இந்த எறும்பைப்பார்க்கவேண்டும். காரின் குளிச்சியையோ இளையராஜாவின் இனிமையோ வேகத்தின் துடிப்பையோ அந்த எறும்பு அறிந்த்திருக்க நியாயமில்லை. ஆனால் நான் அறிந்திருக்கிறேனே. இந்த எறும்புகாக பயணத்தின் வேகத்தை குறைப்பதா.

சரி, எப்படியோ ஏறிவிட்டது. காரை நிறுத்தி இறக்கிவிடலாம். ஆனால் அது காலுறைக்குள் இருக்கும் அது அவ்வளவு எளிதாக இறங்காது. அது எதிரியைத் தாக்கும் வேகத்துடன் தன் முழு பலத்துடன் கடித்துக்கொண்டிருக்கிறது. இந்த எறும்புக்கு அதன் எதிரி நானல்ல, எனது உத்தேசம் வேறு  என்பதை எப்படிப்புரியவைப்பது.

என்னைத்தாக்க இவ்வளவு தூரம் பயணம் செய்து வரும் அதை நினைக்க வலியைவிட ஆச்சர்யம் அதிகரிக்கிறது.

அட்டையாக இருந்தால் பெருந்தமைவாதத்துடன் கையாளலாம். எறும்பை இப்போது என்ன செய்வது.

சரி, அது எறும்புதானா? வனப்பயணங்களில் இன்னொன்றும் நடப்பதுண்டு. அது காலில் ஏறும் எறும்பை அட்டையாக நினைத்து பதறுவது.

02 பிப்ரவரி 2013

கடல் - அலைகளைக்கடந்து ஆழம்


”எனக்கு நிம்மதியா இருக்குறதை விட உஷாரா இருக்குறதுதான் பிடிக்கும்” 


”சாத்தான் யேசுவோட அண்ணன். அப்படின்னா அவனுக்கு யேசுவோட நிறைய தெரியும். என்னோட சேத்து இங்க இருக்குற 12 பேரு சைத்தானுக்க ஆளுங்க”

என்று பேசும் பெர்க்மான்ஸ்(அர்ஜுன்) தான் இந்த படத்தின் அச்சு. தான் தான் மிகுந்த அறிவாளி, சைத்தானின் பிரதி என நினைக்கும் அவரை, தான் எதிரியாக நினைக்கும் அனைவரையும் அவர்கள் யோசிக்க இடம் கொடுக்காமல் தனது திறமையால் தோற்கடித்துக்கொண்டே வரும் அவரை, தன் அறிவால் யோசிக்க கூட முடியாத ஒரு சிறு பெண், எளிய அன்பினால் வெற்றி கொள்வதே இந்தக் கடல்.

--


அர்ஜுனின் பாத்திரம் எந்த ஒரு ஹீரோவும் விரும்பும் ஒரு வில்லன் பாத்திரம், பெர்க்மான்ஸ். ஃபாதரான அரவிந்த் சாமியுடனான ஆரம்ப வார்த்தைப் போர்கள் மிகக் கூர்மையானவை. மிகத் திறமையான அவர் ஒரே  சறுக்கலினால்  புகழிலிருந்து வீழும் ஒரு Fallen Angel.  ஒரு முறை தோற்கும் பெர்க்மான்ஸ், அதன்பின் ஒரு முழு வில்லனாக மாறுவது அதிரடி.

அர்ஜுனைப் (பெர்க்மான்ஸ்) பற்றி தெரிந்திருந்தாலும், தனது நல்லியல்பால் மீண்டும் மீண்டும் ஏமாறும் ஃபாதர் அரவிந்த்சாமியும் சரியான எதிர் பாத்திரம்.

ஃபாதர் வளர்க்கும் கைவிடப்பட்ட பையனாக ஹீரோ தாமஸ், கெளதம்

ஃபாதரால் பெர்க்மான்ஸ் திருந்த ஒரு வாய்ப்பு வருகிறது. ஆனால் அது நடக்கவில்லை. ஃபாதர் ஜெயிலுக்குப்போனபின், அதற்குக்காரணமான அனைவரையும் அடித்து நொறுக்கும் தாமசால் பெர்க்மான்ஸ்க்கு ஒரு பிரச்சனை வர வாய்ப்பு வருகிறது, ஆனால் அதுவும் நடக்கவில்லை.  ஹீரோ வில்லனை பழிவாங்குவான் என்ற எதிர்பார்ப்பைத் தகர்த்து, அவனும் விரும்பி பெர்க்மான்ஸ் உடன் சேரும்போது, சாத்தானின் முழு வெற்றி. அடுத்தது என்ன என்ற ஒரு திகைப்பு உருவாகிறது.

ஃபாதரின் திறமையாலும் வெல்ல முடியாத, தாமசின் சக்தியாலும் வெல்ல முடியாத பெர்க்மான்ஸ் யாரால் தான் வெல்லப் பட முடியும் என்ற கேள்விதான் இந்தப் படத்தின் முடிச்சு.


அறிவு வளர்ச்சி சிறு வயதிலேயே நிற்க, அந்தக் குறையை, தனது அன்பாலும், மருத்துவ சேவையாலும் இட்டு நிரப்பும் பெண்ணாக பியா என்ற பீட்ரைஸ்(துளசி).

நான் ஒரு பாவி என்று கதறும் தாமசிடம், பியா கொஞ்சமும் புன்னகை குறையாமல், “நான் யார்கிட்டையும் சொல்ல மாட்டேன், நீ இனிமே அப்படி பண்ணாத சரியா” என்று கூறுவதும், அந்த பரிபூரண மன்னிப்பை தாங்க முடியாமல் தாமஸ் கதறுவதும் கவிதை.

பயத்தைக் காட்டியும், அதிகாரத்தின் மீது ஆசையைக் காட்டியும், தனது அப்பாவைக் கொல்லும்போது கூட தாமசை எதிர்த்துப்பேச முடியாமல் தாமசைக் கட்டிப்போட்டிருக்கும் பெர்க்மான்ஸ், பியாவின் எளிய அன்புக்கு முன்னால் பதறுவது, அவள் தாமசை மீட்டுச் செல்வதைப் பார்த்து கையறு நிலையடைவது பின்னர் படு தோல்வியடைவது படத்தின் உச்சம்.

---

கடலோர மக்களின் மொழியை மிக இயல்பாக கேட்க முடிகிறது. சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும், அந்த சூழ்நிலை மூலம் அர்த்தம் புரிந்துகொள்ள முடிகிறது. இது படத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது.

துணை நடிகர்களின் பங்களிப்பு அபாரம். ஃபாதருக்கு உதவியாக வருபவர்(யேசுவையே நேருல பார்த்தவரு), மீன் விற்கும் பெண் என பலர்.

பல பாத்திரங்கள் சில நிமிடங்களே வந்தாலும், அவர்களுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கும் சாத்தியங்களை தொட்டுக் காட்டிச் செல்கின்றன.  அர்ஜுனின் காதலியாக வருபவர் போல. பார்வையாளர்கள் தங்கள் கற்பனையால் இட்டு நிரப்பிக்கொள்ள.

முக்கிய நடிகர்களின் தேர்வு இந்தப்படத்தின் மிகப்பெரிய ஏமாற்றம். துளசி, கெளதம் இருவருமே இந்தப் படத்தின் பிரச்சனைகள். இவர்களிருவரும் வரும் காட்சிகள் பல ஸ்கூல் டிராமா மாதிரி இருக்கிறது. அதனாலேயெ பல முக்கிய காட்சிகள்  போதுமான இம்பாக்ட் கொடுக்க முடியவில்லை. அரவிந்த் சாமியும் பரவாயில்லை ரகம் தான். மணிரத்னத்துக்கா நடிகர்கள் பஞ்சம். அந்தக்கால ரஜினி-கமல் நடிக்க வேண்டிய கதை இது.

எப்படியும் இன்னும் ஒரு அரைமணிநேர கதை கத்தரிக்கு பலியாகிவிட்டது என எண்ணத் தொன்றுகிறது. பின்பாதி, தவ்வி தவ்விச் செல்கிறது. பல இடங்களில் தொடர்ச்சி இல்லை. இந்தக் கத்திரிரிக்குக் காரணம், நாயகியின் ‘திறமையான’ நடிப்பாகத் தான் இருக்கும் என்பது எனது எண்ணம்.

---

சில குறைகளை மீறியும் படத்தின் பேசுதளத்தாலும், ஆழமான கதையாலும் இது ஒரு முக்கியமான படம்.

அலைகளைக்கடந்து ஆழம் அறிபவர்களுக்கானது இந்தக் கடல்.