Unordered List

24 நவம்பர் 2011

கரப்பான் பூச்சியின் உயிர்



கரப்பான் பூச்சியின் உயிர்
========================
கால்கள் துடித்துக்கொண்டிருந்த கரப்பான்பூச்சியை  
இழுத்துச் செல்லும் எறும்பைப் பார்த்துக் கேட்டேன்,
உயிரிருக்கும் உடலை உணவாக்கலாமா என்று.
எறும்பு சொன்னது,
அந்த உடலின் உயிர் தான்தானென்று.

20 நவம்பர் 2011

டின்டின் - சூப்பர் ஹீரோ

நடுக்கடலில் கவிழ்ந்த படகின்மேல் ஹீரோ எந்த உதவியுமின்றி இருக்கிறார். அப்போது விமானத்திலிருந்து எதிரிகள் மெசின் கன் மூலம் சரிமாரியாகச் அவரை நோக்கி சரமாரியாகச் சுடுகிறார்கள். தப்பிக்கிறார். அவருக்கு எதுவும் ஆகவில்லை. எதிரிவிமானம் மறுபடி சுட வருகிறது. அப்போதுதான் நமது ஹீரோ தன்னிடம் இருக்கும் ஒரு குட்டித் துப்பாக்கியை கவனிக்கிறார். அதில் இருப்பதும் ஒரே ஒரு குண்டு. ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறுகிறது. என்ன செய்யப்போகிறார் அவர். விமானம் மறுபடி அவரை நோக்கை சரமாரியாகச் சுட்டபடியே வருகிறது. எதிரி விமானத்தின் மெசின் கன் -லிருந்து தப்பிப்பதுடன் மட்டுமலாமல் அந்த ஒரே குண்டில் அந்த விமானத்தை வீழ்த்துகிறார் நம்ம ஹீரோ. அவர் தான் டின்டின்.

இப்போது புரிந்திருக்குமே. டின்டின் ஒரு சூப்பர் ஹீரோ!!

காமிக்ஸ் கதைகளில் இருந்த டின்டின், இயக்குனர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் மற்றும் 3D உபயத்தில் உயிர்பெறுகிறார்.




ஹீரோ டின்டின், புத்திசாலியான அவரது நாய் ஸ்னோயி, 'சரக்குப் பார்ட்டியான' கேப்டன் ஹாடாக், என எல்லாப் பாத்திரங்களும் நமக்கு வெகு எளிதாக நம்மக் கவர்கிறார்கள். புதையலை தேடும் வில்லன், இடையில் வரும் ஹீரோ என்ற கதை தான். ஆனால் சுவாரயமான திரைக்கதையாலும் பிரம்மாண்டமான காட்சிகளாலும் அருமையான 3D உத்தியாலும் மற்றும் சுவையான வசனங்களாலும் மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது இந்தப்படம்.

இது என்ன திரவம் வித்தியாசமான சுவையாக இருக்கிறதே என்று தண்ணீரைக் குடித்துவிட்டு கேட்கும்போது சிரிக்கவைக்கும் "சரக்கு பார்ட்டி" கேப்டன் ஹாடாக், கடைசிக் காட்சியில் தங்கக் காசுகளைக் கொட்டிவிட்டு, அது இருந்த தொப்பியை பெருமையுடன் அணியும்போது கலக்குகிறார்.

இதுபோன்ற ஒரு சுவாரஸ்யமான படத்தைத் தந்த ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் ஒரு ஆச்சர்யம் தான். அவரது முதல் படமான DUEL-இல் இருந்து எந்தவிதமாக களத்தை எடுத்தாலும் அதில் தன் முத்திரையைப் பாதிக்கும் அவர் நம்மை இந்தமுறையும் ஏமாற்றவில்லை.

சிரித்து ரசிக்க ஒரு படம் இது.

19 நவம்பர் 2011

ஒரு குட்டிக் கவிதை

சினிமாவைப் பற்றி எடுக்கப்படும் சினிமாக்களும்,
கதையைப் பற்றி எழுதப்படும் கதைகளும்,
பாட்டைப் பற்றி பாடப்படும் பாட்டுகளும்,
கடுப்படிக்கின்றன.

இந்தக் கவிதையைப் போல!


09 நவம்பர் 2011

சென்னையில் ஒரு மழை நாள் - படங்களுடன்

மழை பெய்கிறது. ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலே நிற்கிறார்கள். ஈரத்திலே உட்காருகிறார்கள்,
ஈரத்திலேயே நடக்கிறார்கள்.
ஈரத்திலேயே படுக்கிறார்கள்.
ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்.

மழையிலும் கடமையில் ஆட்டோக்காரர்கள்

சாலை முழுவதும் தண்ணீர்



இரவில் மழைநாள்

நொய்ந்த வீடு,
நொய்ந்த கதவு,
நொய்ந்த கூரை,
நொய்ந்த மரம்,
நொய்ந்த உடல்,
நொய்ந்த உயிர்,
நொய்ந்த உள்ளம்
-இவற்றைக் புடைத்து நொறுக்கிவிடுவான்.

வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்.
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.
உயிரை வலிமையுற நிறுத்துவோம்.
உள்ளத்தை உறுதி செய்வோம்.
நமக்குத் தோழனாகிவிடுவான்

மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான்.
அவன் தோழமை நன்று.



நான் கிளிக்கிய படங்கள். பாரதியின் வரிகளோடு

07 நவம்பர் 2011

குருவிக் கதை

சென்னை மெட்ரோ ரயில் வேலைக்காக மிச்சமிருந்த அந்த மரமும் வெட்டப் பட்டபோது தான் அந்தக் குருவி யோசிக்க ஆரம்பித்தது.

அந்தக் குருவி மட்டும் என்ன ஸ்பெஷல் என்று தானே யோசிக்கிறீங்க? அந்தக் குருவிக்கு மட்டும் மனிதர்கள் பேசுவதை புரிந்துகொள்ளும் சக்தி இருந்தது.

குருவி புது இடத்துக்கு குடிபோக முடிவு செய்து யோசித்துக் கொண்டிருந்தது. அப்போது தான் அவன் பேசுவதை கவனித்தது. அவனுக்கு குருவிஎன்றால் மிக இஷ்டமாம். அப்போது முடிவுசெய்தது போனால் அவன் வீட்டுக்குத் தான் குடிபோவது என்று. அடுத்தநாள் மாலை அவன்வீட்டு அடுப்பில் வெந்துகொண்டிருந்தது.

குருவிக்குத் தெரியவில்லை. அவன் குருவிஎன்றால் தனக்கு இஷ்டம் என்று சொன்னதின் உண்மையான அர்த்தம்.


கதையின் நீதி:

யாருக்கு எது எவ்வளவு தெரியணுமோ அவ்வளவு தெரிஞ்சாப் போதும். அதுக்கு மேல தெரிஞ்சா டண்டணக்கா தான்.



இன்னொரு கதை:
முயல் ஆமை போட்டி - நடந்தது என்ன?

03 நவம்பர் 2011

கடாபி மரணம் - பகீர் உண்மைகள்

லிபியாவில் நடந்துவரும் பரபரப்பான நிகழ்வுகள் உலகத்தின் அதாவது உலக ஊடகங்களின் பார்வையை அதன் பக்கம் திருப்பியுள்ளன. லிபியாவில் மனித உரிமைகளை மீட்கும்பொருட்டு உலகின் ஜனநாயக நாடுகளால் ஆதரிக்கப் படும் போராட்டம் வெற்றியடைந்து வருவதை உலகமக்கள் யாவரும் கவனித்து வருகின்றனர். சமகாலத்தில் இப்படியொரு ஜனநாயகப் புரட்சியை மேற்கு நாடுகள் நடாத்திக்காட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து நடுநிலையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துப்பாக்கி சண்டை, கட்டடிட்டங்கள் தகர்ப்பு மற்றும் குண்டு வெடிப்பு போன்ற லிபிய ஜனநாயக ஆதரவுப் படையின் ஜனநாயக செயல்பாடுகளைக் காட்டிவந்த ஊடகங்களுக்கு சென்ற வாரம் முத்தாய்ப்பு வைத்ததுபோல் ஒரு படக்காட்சி கிடைத்தது.



கடாபியை தெருவில் பலர் தாக்கி அடித்துக் கொல்லுவதுபோன்ற காட்சி உலகமெங்கும் உள்ள எல்லாத்தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து வெளியானது. பிறகு அவர் இறந்துவிட்டதாக செய்தியும் வந்தது. இணையம் மூலமும் அக்காட்சி தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தது.

இந்தக் காட்சி சர்வாதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை என ஒபாமா அறிவித்தார். இதன் மூலம் ஜனநாயகத்தை எப்படி நிலைநாட்டுவது என உலகெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அறிந்துகொண்டனர்.

இது இப்படி இருக்க, கடாபியின் மனதில் உள்ள மர்மங்கள் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. அவரின் கார் மீது பிரான்ஸ் விமானம் குண்டு வீசியிருந்தாலும் பலர் அவரை தாக்கியிருந்தாலும், அவரது மரணத்துக்கு காரணம் என்னவென்பது புதிராகவே இருந்துவந்தது.

கடாபி மரணத்துக்குக் காரணம் என்ன அல்லது யார் எனபதே உலகின்முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி. போர்க்குற்றங்கள் செய்தார் என அமெரிக்கா முதலான மேற்கு நாடுகளால் எதிர்க்கப்பட்ட கடாபி இதுபோல் நிராயுதபாணியாக இருக்கும்போது மேற்குநாடுகள் ஆதரவுபெற்ற புரட்சிப்படையால் கொல்லப்பட்டது சரியா என்ற கேள்வியும் எழுந்தது. இது ஒரு போர்க் குற்றம் இல்லையா என சிலர் கேள்விஎழுப்பினர்.




இதற்குப் பதிலளித்த ஒரு முக்கிய 'நடுநிலை' ஊடக ஆய்வாளர் சில உண்மைகளை விளக்கியுள்ளார்.

அந்தப் படத்தை உற்றுநோக்கினால் ஆரம்பத்திலிருந்தே அவர் முகத்திலிருந்து ரத்தம் வருவதைப் பார்க்கமுடியும். எனவே ரத்தம் புரட்சிப் படையினர் அடித்ததினால் வந்தது என சொல்ல முடியாது.

ஆனால் புரட்சி படையினர் அவரை அடிப்பது அந்த படக்காட்சியில் தெரிகிறதே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் அடி கூட ரத்தம் வருவதற்கு உண்மைக் காரணம் இல்லை. உடம்பில் ரத்தம் இருப்பதே அது வருவதற்குக்காரணம் என்று விளக்கியுள்ளார்.

ரத்தம் இல்லாத ஒரு உடம்பிலிருந்து யாராலும் ரத்தம் வரவைக்க முடியாது என்று தன்னால் நிருபிக்க முடியும் என்றும் அந்த ஆய்வாளர் கூறியுள்ளார்.

இதன் மூலம் பல இதுவரை வெளிவராத பல உண்மைகள் தெளிவடைகின்றன.

கடாபி உயிரிழந்ததுக்குக் காரணம் கூட அவரிடம் உயிர் இருந்தது தான் என இதன் மூலம் தெரிந்துள்ளது. புரட்சிப் படையினர்வசம் சிக்குவதற்கு முன்னரே அவர் இறந்திருந்தால் அவர் புரட்சிப் படையினரிடம் மாட்டிக்கொண்டபின் இறந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அதே ஆய்வாளர் கூறியுள்ளார்.

இதன் மூலம் கடாபியின் மரணத்துக்குக்காரணம் அவரிடம் உயிர் இருந்ததே, அதாவது அவரது மரணத்துக்கு பொறுப்பு அவரே என்று ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ளது.