Unordered List

பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 செப்டம்பர் 2012

இரவு, மழை மற்றும் வனம் -ஜெயமோகனுடன் மழைப்பயணம்



சிலவருடங்களுக்கு முன் தேக்கடியில் ஒரு யானைச்சவாரி செல்ல வாய்ப்புக்கிடைத்தது. நாம் வழக்கமாக ஊருக்குள் பார்க்கும் நோஞ்சான் யானைகள் போலல்லாமல் கொஞ்சம் புஷ்டியான யானை. யானைமேல் ஒரு சிறிய கைப்பிடி கம்பியுடன் கூடிய துணி மட்டுமே போடப்பட்டு அதன்மேல் அமர்ந்து மரங்களடர்ந்த காட்டு வழியில் சவாரி. யானைப் பாகன் கூடவே நடந்துவந்தாலும்,  தவறேதும் நடந்துவிடாது என்ற நம்பிக்கை இருந்தாலும், உடலும் மனமும் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருத்ததை உணர முடிந்தது. அந்த யானை அந்த பாகன் சொல்வதைக் கேட்பது போல தோன்றினாலும் அது அவன் பேச்சைக் கேட்காதது போலவும் தோன்றியது. என்னைச் சுமந்துகொண்டு நடந்துகொண்டே யானை ஒவ்வொருமுறை பிளிறியபோதும் எனது உடலின் ஒவ்வொரு அணுவும் அதை உணர்ந்தது.

இரவு,மழை மற்றும் வனம் ஆகியவையும் அப்படித்தானோ என நினைக்கத் தோன்றுகிறது.  என்னதான் நமது பாதுகாப்புகளோடும் நம்பிக்கைகளோடும் நாம் நம்மை சௌகர்யமாக உணர்ந்தாலும் அவை எந்நேரமும் தளைமீறி நம்மை அடித்துச்செல்லும் சாத்தியங்களுடனேயே உள்ளன. இதுவே நம் மனம் மழையிலும் இரவிலும் வனத்திலும் எப்போதும் எதிர்பாரா எதையோ எதிர்பார்க்கும்  உச்சகட்ட விழிப்புநிலையிலோ அல்லது எதற்குமே கலங்காத கனவு நிலையிலோ இருக்கவும், அந்த எதிர்பாராத்தன்மைதரும் கவர்ச்சியே மனித மனம் இரவையும் மழையையும் அல்லது காட்டையும் தேடியோடவும் காரணம் என நினைக்கிறேன்.



கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பாகவே திட்டமிடப்பட்ட பயணம் அது. கோதாவரி நதியில் மூன்று நாட்கள் இலக்கிய கூடல் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அலுவலகத்திலும் நண்பர்களிடமும் போதுமானவரை கோதாவரிப்புராணம் பாடியாகிவிட்டது. வனவெளி நோக்கி

புறப்படும் அந்த நாளும் வந்தது, ஒரு அதிரடி செய்தியுடன். பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக கோதாவரிப் பயணம் சாத்தியமில்லை என்பதால்  பெங்களூரு பக்கத்தில் எதோ ஒரு ஊருக்கு செல்வதாகச் செய்தி. எதிர்பாராத திருப்பங்கள் தானே ஒரு நல்ல பயணத்துக்கு அறிகுறி, அதனால் அதிகம் கவலையில்லை. அதுவுமிலாமல் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் ஜெயமொகனுடன் பயணம் எங்கு சென்றாலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. பயணத்தின் எல்லா சாத்தியங்களையும் அறிந்தவர் அவர். அவருடன் இருக்கும் எந்த நேரத்திலும் கற்றுக்கொள்ள ஏதாவது இருந்துகொண்டேயிருக்கும்.


*****

சென்னையிலிருந்து ஜெயமோகன் உட்பட பத்து பேர் ரயிலில் பெங்களூரு சென்றோம். ஈரோட்டிலிருந்து வந்தவர்களோடு இணைந்து அங்கிருந்து சிமோகா நோக்கிப் பயணம்.  வழியில் துங்கா நதியின் ஒரு கால்வாயைப் பார்த்ததும் ஒரு திடீர்க் குளியல். அங்கே உருவானது பயணத்தின் மனநிலை. அங்கே ஆரம்பித்து பயணம் முழுவதும் கூடவே வந்தது தண்ணீர். கழுத்தளவு தண்ணீரில் மூழ்கியபடி சுற்றியிருந்த மரங்களூடே பறந்த விதவிதமானப் பறவைகளைப் பார்த்தது மனத்தையும் பறக்கவைத்தது.

பறவைகள் மற்றும் சில


அடுத்தது சென்றது துங்கா மற்றும் பத்ரா நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை. தண்ணீருக்குள் ஒரு தெய்வம், வேண்டுதலுடன் கொஞ்சம் மக்கள். சற்று அருகில் துணிதுவைக்கும் சிலர். அந்த பின்னணியில் படித்துறையில் ஜெயமோகனின் பேச்சு. கள்ளி யட்சி கதை மற்றும் சில.
குட்லி - கூடுதுறை

சிமோகாவை விட ஆகும்பே செல்வது சரியாக இருக்கும் என்று அங்கு முடிவெடுக்கப்பட்டு ஆகும்பே நோக்கி பயணம் தொடந்தது. ஆகும்பே செல்லும்வழி மிக அழகானது சாலையின் இருபுறமும் நிறைந்திருந்த நீர்நிலைகள், அடர்ந்த மரங்கள்  மற்றும் பறவைகள். வேனிலிருந்து பார்ப்பது போதவில்லை, இறங்கி நடக்க ஆரம்பித்தோம், இருட்டும்வரை நடந்தோம். பிறகு மீண்டும் வேன் பயணம். 

ராஜ நாகத்தின் தலைநகரம், தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று ஆகும்பே பற்றி எதிர்பார்ப்புகள் உருவாகிக்கொண்டிருந்தன. இரவில் வேனிலிருந்து இறங்கிய எங்களை மழை வரவேற்றது. எதிர்பார்ப்பில் ஒரு பகுதி உண்மையானது. ராஜநாகம் எதுவும் எங்களை வரவேற்றதா என்று அந்த இருட்டில் தெரிய நியாயமில்லை தான்.

வழியில்..

அந்த இரவு, நண்பர்களுடன் பேசலாமே என்று அந்த அறைக்குச் சென்றேன். வெளிச்சமில்லை. முழு இருட்டு. சில குரல்கள் கேட்டன, அமைதியாக வந்து அமரும்படி. அமானுஷ்ய அனுபவங்களின் கலந்துரையாடல் அது. சற்று நேரத்தில் ஜெயமோகனும் இணைந்துகொள்ள சபை இன்னும் தீவிரமடைந்தது. அமானுஷ்ய கனவுகளுக்கான உடல்நிலை மற்றும் சூழ்நிலைக் காரணங்கள் என சற்று அறிவியல்பூர்வமாக ஆரம்பித்த அந்த உரையாடல் இலக்கியத்தில் பேய்கள்,  குழந்தை ஆவிகள் பற்றிய கதைகள் அதன் பின்னுள்ள மனநிலை என பலபுறமும் சுற்றியடித்தது. வாழ்கையில் வைத்துப்பார்க்க முடியாத சில உணர்சிகளை வாழ்க்கைக்கு வெளியே வைத்துப் பாக்கும் பழங்குடிமனத்தின் தொடர்ச்சியாக பேய்க்கதைகளை பார்க்கலாம் என்ற அவரின் மேற்கோள் நினைவுக்கு வந்தது. அந்த இருளில் அவர் சொன்ன  அந்த மோதிரவிரல் கதை அனைவரின் இதயத்துடிப்பின் எல்லைகளை சோதித்துப்பார்த்தது.

அடுத்தநாள் அதிகாலை நடைக்கு ஜெயமோகன் உடன் செல்லும் குழுவை தவறவிட்டுவிட்டேன். எந்நேரமும் பெய்யும் மழையால் வீடுகளின் ஓடுகளில் கூட புல்செடிகள் வளர்ந்துள்ள அந்த ஊரில் தனியாக கொஞ்சம் நேரம் தெருக்களில் அலைவதும் நல்ல அனுபவம். பிறகு சிறிதுநேரம் நண்பர்களுடன் அரட்டை.
ஆகும்பே 


காலையில் அருவிப் பயணம். எங்களைத் தவிர வேறு யாரும் அப்போது அங்கு வந்ததாகத் தெரியவில்லை.  அடர்ந்த காட்டுவழியே சில கிலோமீட்டர்கள் நடை. தரையெங்கும் இலைகள் சருகுகள் அதில் ரத்தத்தை உறிஞ்சக்காத்திருக்கும் அட்டைகள். சற்றுநேரம் அட்டைகளை நினைத்துக்கொண்டே தரையை பார்த்தே நடந்தபின் நிமிர்ந்து பார்த்ததில் அந்தக் காட்டின் பிரமாண்டம் அதிரவைத்தது. கண்ணை மறைக்கும் பனிமூட்டத்தினூடே உருவாகிவந்த காட்டுப்பாதையில் அருவியை நோக்கி அந்த நடைப்பயணம்.

"சத்தமில்லாமல் நடங்க.. அதிர்வு உணர்ந்து ராஜநாகம் வரலாம் என நண்பர்கள் பீதியூட்டியபடியே வந்தனர். என்ன நடக்குமோ எனற அந்த பயம் தான் பயணத்தை இன்னும் சிறப்பாக்குகிறது. ஒரு முகட்டிலிருந்து வீழும் அருவியில் அது வீழ்வதற்கு சற்றுமுன் ஒரு குளியல். கூட்டம் ஏதுமில்லாமல் குளிக்க முடிந்ததற்காக எங்கள் நல்ல நேரத்துக்கும், தண்ணீருக்குள் அட்டைகளை அனுமதிக்காத இயற்கைக்கும் நன்றி சொல்லிக்கொண்டே ஒரு குளியலை அனுபவித்தோம். கைகெட்டும் தூரத்தில் அருவியாக வீழவிருக்கும் நீரில் குளிப்பது ஒரு அனுபவம்.
வனம்

அன்று இரவு நடையும் ஜெ. யின் பேச்சைக் கேட்டுக்கொண்டே நடக்கும் வழக்கமான நடைதான். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் அந்த இரவில் பெய்த நல்ல மழை. நான் உட்பட பலபேர் ரெயின்கோட் எல்லாம் ஏதும் அணியவில்லை. கடும் மழையில் சொட்ட சொட்ட நனைந்துகொண்டே நடை.

நடை சற்று நேரத்தில் ஒரு காட்டு வழிக்குள் திரும்பியது. எந்த வெளிச்சமும் அங்கில்லை, அங்கு அதிகம் இருந்தது ராஜநாகம் மற்றும் யானைகள் பற்றியும் இருந்த பயம். அந்த இரவில் முகத்திலிருக்கும் பயம் யாருக்கும் தெரியாதென்றாலும் இன்னும் தைரியமாக காட்டிக்கொள்ள நகைச்சுவை உரத்த சிரிப்பு என நடை அந்த காட்டுவழியில் தொடர்ந்தது. நேயர் விருப்பமாக யட்சிகதைகள் கேட்கப் பட்டது. ஜெயமோகனும் அந்த சூழ்நிலையின் தீவிரத்தை அதிகரிக்கும் விதமாக சில யட்சிக்கதைகளைத் தந்தார். எட்டாவது கை கதை கேட்டு எங்களை நாங்களே ஒரு முறை எண்ணிப்பார்த்துக்கொண்டோம்,  வந்த தலைகள் எல்லாம் இருக்கிறதா, எதாவது குறைகிறதா அல்லது எதாவது புதிய தலைகள் சேர்ந்துகொண்டதா என்று. இரவு, மழை மற்றும் காடு என எல்லாமுமே உச்சத்திலிருந்த உச்ச தருணம் அது.

ஞாயிறு காலை நடையிலும் மழை எங்களுடன் இணைந்துகொண்டது. மொழி, இலக்கியம், தத்துவம், கலை என பல தளங்களைத் தொட்ட உரையாடல் அது.

பெங்களூரு திரும்பும் வழியில் பேலூர் கோட்டை. இதுபோன்ற ஒரு சிற்பக்கலையை முதன்முறையாகப் பார்க்கிறேன். அங்கிருந்த அவ்வளவு நேரமும் ஒரு கனவு போல்த்தான் இருந்தது. யாரோ எப்போதோ உருவாகிய அந்தக் கனவு இப்போது நமக்கேயான கனவாகத் தோன்றும் அதிசயத்தை உணர முடிந்தது. ஒவ்வொரு சிலைக்கும் ஜெயமோகன் தரும் விளக்கங்களுடன் அந்தக் கனவு இன்னும் விரிவடைந்தது.  இந்தப்பயணத்தின் முக்கிய பங்காளியான மழை அங்கும் கூடவே வந்து அந்த சூழ்நிலைக்கு இன்னொரு பரிணாமம் தந்தது.
பேலூர்


கிட்டத்தட்ட திட்டமிட்டபடி எதுவுமே நடக்காத பயணம் இது. மழையையும் இரவையும் துணையாகக்கொண்ட இந்த பயணம் அப்படித்தானே இருக்கமுடியும். மழையும் இரவும் காடும் யாருக்கு கட்டுப்படுகின்றன?

தொடர்புடையவை:
ஜெயமோகன் தளத்தில் - மழைக்கோதை
வனவெளி நோக்கி

23 ஆகஸ்ட் 2012

வனவெளி நோக்கி

பயணத்துக்கு முன்னால் உள்ள சில நாட்கள் மிகமுக்கியமானவை, சிலசமயம் பயண நாட்களை விடவும். அதுவும் தெரியாத இடத்துக்குப்பயணம் என்றால் இன்னும் சிறப்பு. செல்லவிருக்கும் இடங்களைப்பற்றிய தகவல்கள் மூலம் ஒரு சித்திரம் மனதுக்குள் உருவாகும் நேரம் அது.

அனுபவம் என்பது  நம் மனதில் உள்ள கடந்தகாலத்தின் பிம்பம் என்றால், எதிர்பார்ப்பு என்பது வருங்காலத்தின் பிம்பம். முக்கிய வித்தியாசம் என்னவென்றால் அனுபவம் சிலநேரம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதாக இருக்கும், குரூப் போட்டொ போல. ஆனால் எதிர்பார்ப்பால் உருவாகும் சித்திரம் அப்படியல்ல அது தனியுடைமை.

பயணத்தின்போது  உண்மை அனுபவம் மனதில் உருவான அந்த சித்திரத்தை மாற்றி எழுதுகிறது, அது  ஆச்சர்யமாகவோ அல்லது ஏமாற்றமாகவோ. எப்படி இருந்தாலும் நம் நாமத்தில் உருவான அந்தச் சித்திரம் நமக்கே நமக்கானது. அது வேறு எங்கும் காணமுடியாதது வேறு யாரும் யோசிக்கக்கூட முடியாதது. அதுவே இந்த பயண எதிர்பார்ப்பை இன்னும் முக்கியமானதாக்குகிறது. அதுவே அதன் தனிச் சிறப்பு.



ஆனால் எல்லோரும் செய்வது அனுபவத்தை அல்லது கடந்த காலத்தை நினைவில் நிறுத்தும் முயற்சிதான்.பொதுவாக சுற்றுலாத் தளங்களில் மக்கள் அந்த இடத்தை அனுபவப்பதைவிட அந்த அனுபவத்தை ஆவணபடுத்துவதில் காட்டும் முனைப்பை கவனிக்கலாம். முக்கியமான எல்லா இடங்களிலும் புகைப்படம்  எடுத்தால்தான் அந்தப் பயணம் நிறைவு. நான் முதன்முறை இங்கிலாந்து சென்றிருந்தசமயம் ஒரு வாரயிறுதி நாட்களில் லண்டன் செல்ல வாய்ப்பு இருந்தும் அந்தப் பயணத்தை ரத்து செய்தேன், கையில் காமெராவும் புகைப்படம் எடுக்க நண்பர்களும் இல்லாததால். புகைப்படம் எடுக்காமல் சுற்றிப்பார்த்து என்ன பயன்? அடுத்தமுறை பயணத்தில் சரியான ஏற்பாடுகளுடன் லண்டன் சென்றதெல்லாம் வேறு கதை.

யாருடன் செல்கிறோம் என்பதும் பயணத்தின் அனுபவத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிக்கிறது. வழக்கமான மக்கள் கூடுமிடங்களை மட்டுமே பார்த்து, அதையே சுற்றுலா எனப் பழகியவர்களை இயற்கைப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களைடையும் ஏமாற்றம் மற்றவர்களையும் பாதிக்கக்கூடும். எனவே பொருட்காட்சிகளை மட்டுமே பார்த்துப் பழகியவர்களை உண்மையான பயணத்துக்கு தவிர்த்துவிடுவது எல்லோருக்கும் நலம்.



இயற்கைப் பகுதிகளில் நடக்கும் பயணத்தில் ஆக்கப்பூர்வமான உரையாடல்களும் சேர்ந்துகொண்டால் அது ஒரு வாழ்நாள் அனுபவமாகிறது. உரையாடிய விஷயங்களை யோசிக்கும்தோறும் இயற்கைப் பகுதிகளின் நினைவும், இயற்கையை நினைக்கும்போது உரையாடிய விஷயங்களின் நினைவுமாக கிடைக்கும் அனுபவம் விலைமதிக்க முடியாதது.

சரி ஒரு சிறப்பான பயணத்தில் என்ன எதிர்பார்க்கலாம்? சிறப்பான பயணத்தின் முக்கிய கூறு அதிலுள்ள unpredictableness. ஒரு மாதமாக திட்டமிட்டு, புறப்படும் தினமான  இன்று  எல்லாத் திட்டங்களையும் தகர்த்து எதிர்பாராத மாற்றங்களுடன் ஆரம்பிக்கிறது இந்த வனப் பயணம்.

வனவெளியில் பயணம் ஒரு வழிகாட்டியுடன் செல்லும்போது சிறப்படையும். ஆனால் இந்த வனப் பயணம் மனவெளியின் வழிகளைக் காட்டுபவருடன்.

05 டிசம்பர் 2011

ஜெயமோகனின் அறம் வெளியீடு - ஈரோடு -பயண அனுபவம்

"திருக்குறள் ஒரு நீதிநூல் அல்ல. அதிலிருப்பது அறிவுரைகள் மட்டும் அல்ல, கவிதை" என்றார் ஜெயமோகன். நேரடியாகச் சொல்லப்படும் அறிவுரைகள் ஒரு பரிமாணமுடையது என்றால், கவிவழியாக உணர்த்தப்படும் நீதி பல பரிமாணமுடையது. வாசகன் எண்ணுத்தோறும் அவன்மனத்தில் விரியக்கூடியது.

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு"

"இதிலுள்ள ஒரு கவித்துவம் மணற்கேணி. மணற்கேணி என்பதன் முக்கியத்துவம் அறிந்ததுமே வாசகன் மனதில் பல பரிணாமங்கள் விரிவதை உணரலாம்." மெல்லிய தூறலுடன் சென்ற காலை நடையில் இப்படி தொட்டுக் காட்டினார். இப்போது இந்தக் குறள் யோசிக்க யோசிக்க விரிவடையக்கூடியது.

எழுத்தாளர் ஜெயமோகன் பேசுவதைக் கேட்பது எப்போதுமே ஒரு உற்சாகமான விஷயம். வாய்ப்பு கிடைக்கும்பொழுது தவறவிடுவதில்லை. ஆனால் இந்த "அறம்" வெளியீட்டு விழாவுக்குச் செல்ல அழைப்பு கிடைத்தபொழுது, அதிக ஆர்வம் கொண்டேன். காரணம் இந்தக் கதைகள் முதலில் அவரது தளத்தில் வெளிவந்தபோழுதே படித்த கதைகள், சட்டென மனதுக்கு மிக நெருக்கமாக வந்த கதைகள்.


ஆனால் இந்தக் கதைகள் கிட்டத்தட்ட எல்லோருக்குமே பிடிக்கிறது என்பதைக் கேள்விப்படும்போது, மகிழ்ச்சியாக இருந்தபோதும் சின்னக் கேள்விகளும் வராமலில்லை. எல்லோருக்கும் பிடிப்பதால் தான் இது எனக்கும் பிடிகிறதா? எல்லோருக்கும் கிடைத்த அனுபவம் தான் எனக்கும் கிடைத்ததா? அல்லது எனக்குக் கிடைத்த அதே அனுபவம் எல்லோருக்கும் கிடைத்ததா? அல்லது இவை எல்லோருக்கும் ஒரே eமாதிரியிருக்கும் எளிய கதைகளா?


இந்தக் கதைகளை வாசித்த நண்பர்களுடன் இதை விவாதிக்கத் தவறியதில்லை. ஈரோடு வாசிப்பு இயக்கம் நடத்தியஇந்த வெளியீட்டு நிகழ்ச்சி இதற்கு ஒரு நல்ல வாய்ப்பு.


....................................................................................................................................................................

விழாக் காட்சிகள் (Click on picture for bigger image)



சனிக்கிழமைக் காலை ஈரோடு வந்துசேர்ந்தோம். நண்பர் விஜயராகவன் இல்லத்தை 7 மணிக்கு அடைந்தபோது நாங்கள் வந்தது தாமதமோ என்று உணர்ந்தோம். ஏனென்றால் ஜெயமோகனின் குரல் அப்போதே கேட்டுக்கொண்டிருந்தது. இலக்கிய அரட்டை ஆரம்பமாகிவிட்டிருந்தது. உடனடியாக ஜோதியில் ஐக்கியமானோம்.

தமிழ், தத்துவம், இலக்கியம், விஞ்ஞானம், சுற்றுச்சூழல் என்று பல கேள்விகள். அதற்கு அருமையான ஆழமான பதில்கள். தேர்ந்த வாசகர்களின் கருத்துப் பரிமாற்றங்கள்.

வாசகர்கள் வந்தபடியே இருந்தனர். அந்தக் கூட்டம் இயல்பாக, உற்சாகமாக இருந்தது. பலதரப்பட்ட கேள்விகள் வந்தபடியே இருந்தன. கிருஷ்ணன், சீனு போன்ற தேர்ந்த வாசகர்கள், இப்போதுதான் அவரை முதல் முறையாகச் சந்திக்கும் பல புதிய வாசகர்கள். எல்லோருக்கும் சமமாகத் தன் கவனத்தை அளித்தபடி உரையாடினார் எழுத்தாளர். மிக உற்சாகமான பேச்சு அது.

ஈரோட்டில் இதனை இலக்கிய வாசகர்களா என ஆச்சர்மளித்தனர். ஆழமான இலக்கியக் உரையாடல், விருந்தோம்பல், விழா அமைப்பு என ஒவ்வொன்றிலும் அவர்களின் நேர்த்தி வெளிப்பட்டது.

மாலையில் விழா. சொன்ன நேரத்தில் ஆரம்பமானது. வெளியிடப் படும் புத்தகத்தில் இருக்கும் கதைகளை நான் ஏற்கனவே படித்திருந்ததால், விழா பேச்சாளர்கள் இந்தக் கதைகளை எப்படி அணுகிறார்கள் என்று கவனிப்பதிலேயே அதிக ஆர்வம் இருந்தது.விழாவை ஏற்பாடு செய்திருந்த நண்பர்களுக்கும் இதே ஆர்வம் இருந்திருக்கும் போல, அது அவர்களால் பேச அழைக்கப் பட்டவர்களைப் பார்க்கும்பொழுது தெரிந்தது, ஒவ்வொருவரும் வெவ்வேறு தளத்தில் இயங்கி வருபவர்கள்.


இந்த விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்களில் பெரும்பாலோர் இந்தக் கதைகளை ஏற்கனவே படித்தவர்கள். எனவே பேச்சாளர்களுக்கு நூலை உண்மையில் அறிமுகப் படுத்தவேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. அனைவரும் கதைகளைப் பற்றிய தங்கள் அனுபவத்தை அழகாகப் பேசினர்.

விழாவில் பேசியவர்கள் (Click on picture for bigger image)



எளிமையாகப் பேசிய இடதுசாரியான தலைமை வகித்த தோழர்.வி.பி. குணசேகரன் ,கதையின் உச்சத்தை ஒரு சினிமா போல விவரித்த கல்லூரி தாளரான வாசகர் எஸ்.கெ.பி. கருணா, யானை டாக்டர் கதையின் நாயகரை நேரில் அறிந்த டாக்டர் ஜீவா, அறம் கதை தன்னை ஆட்கொண்டதை உணர்சிகரமாகப் பேசிய திரைப்பட இயக்குனர் மிஷ்கின், இன்னும் பல கதைகளோடு ஒப்பிட்டு, இந்தக் கதைகள் தனக்கு அளித்த அனுபவத்தை கதையாகச் சொன்ன எழுத்தாளர் பவாசெல்லத்துரை, கதைகளின் பல நுட்பங்களை தொட்டுக் காட்டிய எழுத்தாளர் நாஞ்சில்நாடன், ஒரு புன்சிரிப்புடன் கவிதையாகப் பேசிய மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன என ஒவ்வொருவரும் தனித் தனி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.



தேர்ந்த வாசகர்கள் தங்களுக்குள் வாசக அனுபவத்தை பரிமாறிக்கொள்வது போலிருந்தது அந்த விழா.

ஜெயமோகன் பேச்சு மிக உணர்சிகரமானது. இலட்சிய வாழ்கையை விரும்புமொருவனின் மனப் போராட்டத்தை, இந்தக் கதைகள் உருவாக சூழலை, விளக்கினார்.

மனதிலிருக்கும் லட்சியவாததுக்கும், நாமைச் சுற்றி எங்குமிருக்கும் யதார்த்தவாதத்துக்கும் நடக்கும் ஓயாத போராட்டத்தில், அறம் மேலெழும் தருணங்கள் இந்தக் கதைகள். இந்தக் கதைகளின் வெற்றி லட்சியவாததுக்கு இன்னும் வரவேற்ப்பு இருப்பதை உணர்த்தும் விஷயமாக இருக்கிறது.

விழாவில் பேசியவர்கள் மற்றும் வாசர்களின் அனுபவங்களைக் கேட்கும்போது ஒன்று புரிந்தது. ஒவ்வொருவருக்கும் இந்தக் கதைகள் ஒரு தனிப்பட்ட அனுபவத்தை அளித்துள்ளன.


டாக்டர் ஜீவா பேசியபொழுது சொன்ன ஒரு கருத்து நினைவுகூரத்தக்கது. யானை டாக்டரான கிருஷ்ணமூர்த்தியை தனக்கு நன்றாகத் தனிப்பட்ட முறையில் தெரியுமெனக் குறிப்பிட்ட ஜீவா, அதை கதையாக எழுதியதின் மூலம், அவரது பெருமை பலபேரை சென்றடையச்செய்ததற்காக ஜெயமொனைப் பாராட்டினார்.

ஆம் அது தகவலாக இருந்திருந்தால் ஒரு அது ஒரு பரிணாமத்துடன் இருந்திருக்கும். ஆனால் ஜெயமோகன் அளித்திருப்பது உண்மைத் தகவல்கள் கலந்த ஒரு புனைவு உலகம். அது வாசக மனத்துக்கு எல்லையில்லா பரிணாமங்களை தந்துகொண்டேயிருக்கிறது.



---------------------------------------------------------------------------------------------

ஜெயமோகனுடன் நண்பர்கள் (Click on picture for bigger image)



விழா சிறப்பாக நிறைவு பெற்றாலும் ஜெயமோகனை அவ்வளவு எளிதாக விடவில்லை வாசகர்கள். தொடர்ந்தன கருத்துரையாடல்கள்.


அடுத்தநாள் நடந்த வன சுற்றலா ஒரு மறக்க முடியாத அனுபவம். இலக்கியத்தில் நனைந்துகொண்டே சென்ற அறுபுதமான பயணம் அது. கூடுதலாக மழையும் கொஞ்சம் நனைத்தது.


இயற்கை காட்சிகள் (Click on picture for bigger image)


ஈரோடு - 26 நவம்பர் 2011


அறம்சிறுகதைத் தொகுப்பு



20 ஜூன் 2011

பயணம் - ஏலகிரி

திடீரென முடிவெடுத்து செய்த பயணம் அது. சென்னையிலிருந்து ஏலகிரிமலைக்கு, ஒரு வாரயிறுதி நாளில்.

சென்னை வெயில், வழக்கமான இடங்கள் இவற்றிலிருந்து ஒருநாளாவதுதப்பிக்கலாமே என்ற திட்டம்.


சென்னையிலிருந்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், வேலூர் ஒரு இருநூற்றைம்பதுகிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தமலை. சாலைகள் மிகவும் நன்றாகவேஉள்ளன. சாலையில் தெளிவான வழிகாட்டி பலககைகள் உள்ளதால் வழிகண்டுபிடிப்பது மிக எளிது. அதிகாலையில் கிளம்பினால் பகல் உணவுக்குசென்றுவிடலாம்.

வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் பயணித்தால்சற்றுநேரத்தில் இடதுபுறத்தில் ஏலகிரி பலகையைக் காணலாம். முதல்முறையாக மலைச் சாலையில் ஒட்டுவதால் எனக்கு சின்ன பதட்டம்இருந்தது . ஆனால் ஏற ஆரம்பித்ததுமே அது எளிதாகவே தோன்ற ஆரம்பித்தது. மலைச் சாலை மிகவும் நன்றாகவே பராமரிக்கப்படுகின்றன. நல்ல அகலமானசாலைகள் மற்றும் தேவையான அறிவுப்புப் பலகைகள். கொண்டைஊசிவளைவுகள் கார் ஓட்டுவதில் ஒரு நல்ல அனுபவம் தான்.


நல்ல இயற்கைக் காட்சிகள், தமிழ் புலவர்கள் பெயர்களில் இருக்கும் வளைவுகள்மற்றும் காட்சி முனைகள் அப்புறம் முக்கியமாக ஏராளமான குரங்குகள்வழியெங்கும் உள்ளன.

எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கங்கு நின்று ரசித்து படம் எடுத்துக்கொண்டே சென்றேன். இரண்டு இடங்கள் கடந்து, தொலைநோக்கு மையம்வந்தது. சரி..போகும்போதே நேரம் செலவழிக்க வேண்டாம், அதை திரும்பவரும்வழியில் பார்த்துக்கொள்ளலாம் என மேலே சென்றேன். அது ஒரு நல்ல முடிவுதான் அது.

உண்மையில் ஏலகிரி பயணத்தில் மலைப்பாதையில் போதுமான நேரம்செலவிடவேண்டும் என்று ஏலகிரியை அடைந்ததுமே நினைத்தேன். இல்லையெனில் நாம் அங்கு சட்டென வந்துவிடுகிறோம்.

ஏலகிரியை அடைந்ததுமே ஒரு ஏமாற்றம். அவ்வளவுதானா என்று. ஊர்வந்ததுமே, இருமருங்கிலும் நாம் பார்ப்பது தங்குமிடங்கள் மற்றும்தங்குமிடங்கள் மட்டுமே. இது பெங்களூரிலிருந்து பக்கம் என்பதால் இந்ததங்குமிடங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்குகின்றன.

நல்ல வெயில் காலத்திலும் இங்கு ஒரு நல்ல வானிலை உள்ளது. மற்றபடி படகுசவாரியைத் தவிர சுற்றிப் பார்ப்பதற்கு என்று இடங்கள் எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. நிறைய பலாப் பழங்கள் கிடைக்கின்றன.

உண்மையில் இதை ஒரு சுற்றுலாத் தளமாக நினைக்க முடியவில்லை. ஒருநல்ல தங்கும் விடுதியில் தங்கி ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற இடம். ஆனால் இங்குநல்ல விடுதிகளில் கட்டணம் கொஞ்சம் அதிகம் தான்.

திரும்பிவரும்போது மறக்காமல் தொலைநோக்கியைப் பார்க்க காரைநிறுத்தினேன். அடுத்த ஆச்சர்யம்.

அங்கு தொலைநோக்கிஎல்லாம் ஒன்றும் இல்லை. உண்மையில் அங்கு இருப்பதுதொலைநோக்கிக்கான இடம். நாம் நாமே தொலைநோக்கி கொண்டு சென்றால்அங்கு நின்று பார்த்துக் கொள்ளலாம் போல. ஆனால் இந்த காலி கட்டிடத்திற்குவேலை நேரம் எல்லாம் போட்டு ஒரு அறிவுப்பு வைத்திருப்பது கொஞ்சம் ஓவர்தான்.

மலை என்ற எதிர்பார்ப்பெல்லாம் இல்லாமல் ஒரு பயணம் சென்று வர, ஓய்வெடுக்க அல்லது முதன்முதலில் பிரச்சனை இல்லாத ஒரு மலைப்பாதையில் கார் ஓட்டிப் பார்க்க ஒரு நல்ல இடம்தான் ஏலகிரி.

ஏலகிரி.. "சும்மா" ஒரு பயணத்திற்கு ஏற்ற இடம்.