Unordered List

14 ஜனவரி 2013

புத்தகக் கண்காட்சி - ஓர் எச்சரிக்கை மற்றும் சில தகவல்கள்

புத்தகக்கண்காட்சிக்கு உடற்பயிற்சிக்கல்லூரி பொருத்தமான இடம்தான். புத்தகக் கண்காட்சிக்கு போவதற்க்கு முன்னால் கொஞ்சம் நாள் நடைப்பயிற்சி செய்துவிட்டு போவது உத்தமம். அவ்வளவு பெரிய அரங்கை சுற்றி வருவதற்கு உங்கள் கால்களில் கொஞ்சம் தெம்பு அவசியம். காலில் தெம்பு இல்லாமல் உட்கார இடம்தேடி பொறியில் சிக்கியவர்கள் பலர். அதில் ஒரு மிகப்பெரிய சதியும் இருக்கிறது. நான் சென்றது போன சனிக்கிழமை. இரண்டு மணிநேரம் சுற்றி, களைத்த கால்களுடனும், வாங்கிய புத்தக சுமையுடனும்(அப்படித்தான் சொல்லணும்) கொஞ்சம் இளைப்பார இடம் தேடினால் எங்கும் இடம் இல்லை. சில இடங்களில் ஸ்டாலில் உள்ளவர்களே இருக்கை இல்லாமல் நாள் முழுவதும் நிற்பதையும் கவனிக்க முடிந்தது.

இன்னிலையில் பாலைவனச் சோலை போல கிடைத்தன வசதியான இருக்கைகைகள். உட்கார்ந்த அப்புறம் தான் கவனித்தேன் அது ஒரு கவி அரங்கு என்று. பீதியுடன் கவனித்தால் அதில் நடுவர் ‘வாலிபக்கவிஞர்’ வாலி. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு எனது எச்சரிக்கை இதுதான். ஒன்று உட்காராமலே சுற்றும் அளவுக்கு காலில் தெம்புடன் செல்லுங்கள், அல்லது வாலிபக் கவிஞர் போன்றவர்களின் அரங்குகளை தாங்கும் அளவுக்கு மனத் தெம்புடன்.


  • புதிய இடம் வசதியாகத் தான் இருக்கிறது. வாகன நிறுத்ததிலிருந்து நடக்க வேண்டிய தூரம் தான் கொஞ்சம் அதிகம். இருந்தாலும் நடக்கும் தூரம் தெரியாமலிருக்க, போகும் வழிக்கு சுண்டல் வாங்கி சாப்பிட்டபடியே செல்லலாம். அப்படி ஒரு வசதி செய்யப்படிருக்கிறது. இந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.


  • ஜெயமோகன் வழிகாட்டுதலில், கடலூர் சீனுவை பதிப்பாளராகக் கொண்டு உதித்துள்ள சொல்புதிது பதிப்பகம் ஸ்டால் 504-இல் எழுத்துப் பதிப்பகத்தில் இயங்கி வருகிறது. தீவிர இலக்கிய வாசகரான சீனு, வாசகர்களுக்கு பொதுவாக புத்தகங்கள் பற்றி தகவல்கள் சொல்வதையும் கவனித்தேன். 


  • தமிழினி பதிப்பகத்தில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் இருந்தார். புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு எழுத்தாளர்களின் வருகை இன்னும் மகிழ்சி தரும் விஷயம். இந்த வருகைகள்தான் இந்த கண்காட்சியை ஒரு கொண்டாட்டமாக மாற்றுகின்றன.

  • மதி நிலையத்தில் இருந்த ‘நாலாயிர திவ்யப்ப்ரபந்தம்’ இருநூறு ரூபாய்தான். பதம் பிரித்து கொடுக்கப்படுள்ள பாடல்கள், விளக்கம் இல்லாமலே புரியும்படி உள்ளன. அப்படியே புரியாத சில வார்த்தைகள் இருந்தாலும் இருக்கவே இருக்கிறது கூகிள்.

  • காலச்சுவடு பதிப்பகத்தில் புதுமைப்பித்தன் கதைகளை வாங்கச் சென்றேன். அது நானூற்று ஐம்பது ரூபாய். அவர்கள் அவரது முழுத்தொகுப்பே தொள்ளாயிரம் ரூபாய் தான் என்று ஒரு டீல் தந்தார்கள். சிறப்பு தான்.

  • புத்தகக் கண்காட்சியின் இன்னொரு அம்சம் அங்கே எதிர்பாரமல் சந்திக்கும் நண்பர்கள். அப்படி சிலரை சந்திக்க முடிந்த்தது.

  • அதெல்லாம் சரி, புத்தகக் கண்காட்சிக்கு உள்ளே எதற்கு அந்த அப்பளக் கடை என்று தெரியவில்லை. அப்பளமும், வத்தல்களும் பரபரப்பாக விற்பனை ஆகிறது. இது எதாவது இலக்கிய குறியீடொ என்னவோ தெரியவில்லை. 

இன்னொரு முறையாவது செல்லவேண்டும். இந்த இருநாட்களாக காலையில் ஜாக்கிங் செய்ய ஆரம்பித்துவிட்டேன். இன்னொரு கவியரங்கத்தை தாங்க முடியாது என்பதால். புத்தகங்களால் ‘உடனடி’ நல்ல பழக்கம் வாரது என்று யார் சொன்னது.

11 ஜனவரி 2013

சென்னையில் ஜெயமோகன் உரை - விழா படங்கள்


ஒரு ஞாயிறு மாலை. சென்னையில் ஜெயமோகன் உரை என்று அந்த விழாவுக்கு ஆஜரானேன். அது உயிர்மை பதிப்பகம் நடத்திய ஒன்பது புத்தகங்களுக்கான வெளியீட்டு விழா.

இலக்கியம் மற்றும் பதிப்பகத் துறைக்கு போதுமான ஆதரவு இல்லாத நிலையிலும் உயிர்மை தனது அக்கறையினால் புத்தக வெளியீடு மற்றும் விழாக்கள் என நடத்தி வருவதாக தனது வரவேற்பு உரையில் மனுஷ்யபுத்திரன் கூறினார்.  புத்தகத்தை வெளியிடுவதோடு மட்டும் நின்றுவிடாமல் அதை அறிமுகப்படுத்த விழா எடுத்து, வாசகர்கள் முக்கிய ஆளுமைகளின் பேச்சைக் கேட்க தளம் அமைத்து தரும் அவரின் சேவை பாராட்டத்தக்கது.

மூன்று அமர்வுகளாக நடந்தது அந்த விழா. ஒரு அமர்வுக்கு மூன்று புத்தகங்களாக ஒன்பது புத்தகங்கள் வெளியீடு. முதலில் நடந்த கவிதை புத்தகங்கள் வெளியீட்டுக்குப் பின்னர் நாவல்கள் வெளியீடு நடந்தது. சிவகாமி எழுதிய 'உண்மைக்கு முன்னும் பின்னும்" என்ற நாவல் பற்றி  ஜெயமோகன் அறிமுக உரை வழங்கினார்

புத்தகம் வெளியீடு

ஜெயமோகன் பேச எழுந்ததும் அரங்கில் கொஞ்சம் சலசலப்பு. சட்டென கூட்டம் அதிகரிப்பதை கவனிக்க முடிந்தது. பலர் வெளியே நின்றிருந்தனர் போல.  பலத்த எதிர்பார்ப்பு இடையில் அவரது பேச்சு ஆரம்பித்தது.

அரசு, அது செயல்படும் முறை, அந்த அரசை இயக்கும் உண்மையான விசை, அந்த விசையின் இயல்பு என்று அறிமுகப்படுத்தியவர், இதைப்பற்றி இதுவரை வந்துள்ள முக்கிய படைப்புகளையும் தொட்டுக்காட்டி பேசியபோது, இந்த நாவலின் தளம், இலக்கிய வரிசையில் இதன் இடம் எனத் தெளிவாகத் தெரிந்தது.

பின்னர் இந்த நாவல் எந்த வகையில் கவனிக்கத்தக்கது என்று சுட்டிக்காட்டிய அவர் நாவலின் சில உச்சங்களையும் தொட்டுக்காட்டினார்.  அது பார்வையாளர்களுக்கு நாவலைப்பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை அளித்ததுடன், இந்த துறையில் இருக்கும் பல படைப்புகளைப் பற்றிய ஒரு திறப்பாகவும் அமைந்தது.

முழு உரை இங்கே.. மாபெரும் இயந்திரம்

----

ஆறு மணிக்கு விழா என நினைத்து ஐந்தரை மணிக்கெல்லாம் நான் அரங்குக்கு சென்றுவிட்டேன், ஆனால் அங்கு இருந்தது ஓரிருவர் மட்டுமே. ஞாயிறு மாலை சென்னையில் இலக்கியத்துக்கு அவ்வளவுதான் கூட்டம் வரும் போல என எண்ணினேன். ஆனால்.  ஆனால் கூட்டம் தொடங்கியபோது நிறைந்த அரங்கு, ஜெயமோகன் பேச்சின்போது உச்சகட்ட எண்ணிகையை அடைந்தது. அவர் பேசிய அரைமணிநேரமும் அந்த அரங்கின் கவனம் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருந்தது.

பழ.நெடுமாறன், இயக்குனர்கள்   ஞானராஜசேகரன், லிங்குசாமி, தங்கர் பச்சான் என பல ஆளுமைகள் கலந்து கொண்டனர்.

இயக்குனர் லிங்குசாமி, இப்போதுள்ள வேளைகளின் நெருக்கடியினால் தான் படிக்கும் நேரம் குறைந்து வருவதாக வருத்தப்பட்டார், எனினும் சமீபத்தில் தான் படித்த ஜெயமோகனின் "அறம்"  சிறுகதைத் தொகுப்பின் சில கதைகளை சொல்லி அது தனக்குத் தந்த  அனுபவத்தை பரவசத்துடன் பகிந்துகொண்டார்.



இந்தக்கூட்டமும், கவனிப்பும் புத்தக கண்காட்சி தொடங்கும் நேரத்தில் ஒரு முக்கியமான தொடக்கமாக அமைந்தது, அரசு மற்றும் வேறு ஆதரவுகள் இல்லாவிட்டாலும், தரமான வாசகர்கள் ஆதரவு இருந்தால் இலக்கியம் தானாக வளரும் என்ற நம்பிக்கையுடன்.

சென்னை - 6-1-2013

03 ஜனவரி 2013

நடுவுல கொஞ்சம் நண்பர்களைக் காணோம்

ஒவ்வொரு வகையான நண்பர்களுக்கும் ஒவ்வொரு பாடி லாங்குவேஜ் உண்டு. தெரு நண்பர்கள், பள்ளி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், நண்பர்களில் அலுவலக நண்பர்கள் என. இவற்றை அப்படியே திரையில் பார்க்கும்போது பரவசமாகத் தான் இருக்கிறது.  இதில் எல்லா வகையிலுமே நெருக்கமான நெருக்கடியில் தோள்கொடுக்கும் நண்பர்கள் அமைவதுண்டு.

நண்பனின், அல்லது ஒரு நண்பனின் அலுவக நண்பனின் வீட்டில் படுத்துக்கொண்டு வெட்டிபேச்சு  பேசுவது, 2 வீலரில் சுற்றுவது, விளையாடுவது, சட்டென வரும் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளவது என இந்தப் படத்தில் பார்த்தது என்னையும் எனது சில நண்பர்களையும். யப்பா.. பேய் மாதிரி எடுத்திருக்காங்க இந்தப்படம்

இன்று இரவு தூங்கமுடியாது என நினைக்கிறேன். வீட்டிலிருந்து படித்த காலத்தில் கிடைத்த  பள்ளிக்கூட நண்பர்கள் ஒருவகை என்றால், கல்லூரி காலத்தில் கூட தங்கிப்  படித்த நண்பர்கள் இன்னொருவகை. எனது வாழ்க்கையில் நடந்த எல்லா முக்கிய நல்ல விஷயங்களின் பின்னாலும் நல்ல நண்பர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு நினைவுகளையும் இனிமையாக கிளறுகிறது இந்தப்படம்.

நண்பர்களின் உண்மையான மதிப்பு, அவர்கள் செய்திருக்கக்கூடிய ஒரு செயலை மற்றவர்கள் செய்யும்போது தெரிந்துவிடுகிறது.

" நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். எனது முக்கியமான, இப்போது காணாமல் போந  பல நண்பர்களை மீண்டும் தொடர்புகொள்ள வைத்ததற்கு.