Unordered List

16 டிசம்பர் 2013

இவன் வேற மாதிரி - இவன் வேற மாதிரி அரசியல்வாதி

ஒரு அமைச்சர் இருக்கிறார், அதுவும் அவர் சட்ட அமைச்சர். அவருக்கு சட்ட கல்லூரியில் சில மாணவர்களைச் சேர்க்கவேண்டியிருக்கிறது. நீங்கள் என்ன நினைப்பீர்கள், அவர் தனது பதவியை பயன்படுத்தி ஏதாவது செய்வார் என்றுதானே. ஆனால் அவர் அப்படியல்ல, மாறாக அவர் அந்த கல்லூரி முதல்வரை கல்லூரியிலேயே சந்தித்து வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் அந்த கல்லூரி முதல்வர், அமைச்சரை உதாசீனமாகப் பேசி மறுத்து அனுப்பி விடுகிறார்.

இப்போதே தெரிந்துவிடுகிறது, இதுஒரு வித்தியாசமான படம் என்று.

சரி.. இப்போது அந்த அமைச்சர் என்ன செய்வார் என்று எதிர்பார்க்கிறீர்கள், தனது அதிகாரத்தை பயன்படுத்துவார் என்று தானே, அதுதான் இல்லை,  தனக்குத் தெரிந்த சில மாணவர்களிடம் சொல்கிறார். அவர்கள் மற்ற சில மாணவர்களை  தாக்குகிறார்கள். அது எதற்க்கென்று தெரியவில்லை. எந்த அடிப்படையில் தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் அந்த அமைச்சருக்கு எந்த பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. (செய்தியில் பார்த்த சட்ட கல்லூரிப் பிரச்சனையை படத்தில் வைக்க விரும்பியது நல்லது தான். ஆனால் அதன் பிண்ணனியை கொஞ்சமாவது இயக்குனர் ஆராய்ச்சி செய்திருக்கலாம்.)

இது இப்படி இருக்க அந்த அமைச்சருக்கு இன்னொரு பிரச்சனை. அவரது தம்பி சிலரைக் கொலை செய்து  விடுகிறார்.இப்போது என்ன நினைப்பீர்கள், அமைச்சர் தனது பதவியை பயன்படுத்தி தம்பியை கைது செய்யவிடாமல் செய்துவிடுவார் என்று தானே, அப்படியே கைதானாலும் சாட்சிகளைக் கலைத்து விடுதலை ஆக்கிவிடுவார் என்று தானே. அதுவும் இல்லை, அந்தத் தம்பி கைதும் ஆகி, தண்டனையும்  பெற்றுவிடுகிறார்.என்ன அதிசயம், தமிழ் நாட்டில் இப்படி நடக்குமா என்று ஆச்சர்யத்துடன் நாம் பார்க்கிறோம்.

வாழ்க்கை முழுவதும் சிறையிலிருக்கப்போகும் தம்பியை பதினைந்து நாள்  பரோலில் மட்டுமே எடுக்கிறார் அந்த அமைச்சர், இதுவே அதிகபட்சமாக அவர் செய்யக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் அந்த அப்பாவி அமைச்சரின் அவல வாழ்க்கையில் இன்னும் சில பிரச்சனைகளும் வருகின்றன.

----------

அதே ஊரில் தமிழ் சினிமாவின் பார்முலா படி வேலைக்குப் போகாமல் ஒருவர் சுற்றிக்கொண்டு இருக்கிறார், எனவே அவர் தான் ஹீரோ என்று நமக்கு புரிகிறது.

ஹெல்மெட் கூட போடாமல் ஊரெல்லாம் பைக்கில் சுற்றி வருகிறார்.
ஒருநாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் மீது உச்சா போகிறார். அதை மாடியிலிருந்து ஹீரோயின் பார்த்து கண்டிக்க, அவர் நேராக ஹீரோயின் வீட்டுக்குள் சென்று உச்சா அடிக்கிறார், பாத்ரூமில் தான். இதைக் கண்டு ஹீரோயின் இம்ப்ரெஸ் ஆகி காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். வாவ்.

பிறகு அவர் ஒரு இடத்தில வேலைக்கு போய், முதல் நாளே ஒரு போட்டோ எடுத்து ஒரு விளம்பர ஐடியா கொடுக்கிறார், உண்மையிலேயே அது மிக மொக்கையாக இருக்கிறது என்பது நமக்கே தெரிகிறது. அதை அந்த மேனேஜர் பக்குவமாக எடுத்துச் சொல்லியும் கேட்காமல், அங்கிருத்து சில அழகு மீன்களை திருடிக்கொண்டு சென்று விடுகிறார்.

இப்படிப்பட்ட பொறுப்பான ஹீரோவுக்கு, அந்த அப்பாவி அமைச்சர் மீது கோபம் ஏற்படுகிறது. ஆனால் அமைச்சர் எந்த தப்புமே செய்யவில்லையே என்ன செய்வது என்று யோசித்து,  பரோலில் வந்த அமைச்சரின் தம்பியை சட்டவிரோதமாக கடத்தி அமைச்சரை சிறை செல்ல வைக்கிறார். போலீசும் அமைச்சரைக் கடுமையாக நடத்தி அவரை சட்ட விரோதமாக கொலை செய்கிறது.

அடுத்தடுத்த பிரச்சனைகளில் அமைச்சரின் தம்பியை ஹீரோ கொலை செய்ய அதையும் போலீஸ் சட்டவிரோதமாக  மறைக்கிறது.

---

எந்த நிலையிலும் பதவியை துஷ்பிரயோகம் செய்யாத வித்தியாசமான அமைச்சரைச் சுற்றிவரும் கதையே இவன் வேற மாதிரி.

அவர் அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவோ, சட்டத்தை மீறியதாகவோ எந்த ஒரு காட்சியும் இல்லை.  அமைச்சர் தம்பியும் தான் செய்த தவறுகளுக்கு சட்டத்தின்முன்   தண்டனையை அனுபவிக்கிறார்.
ஆனால் ஹீரோ சிறிய சட்ட மீறல்களில் ஆரம்பித்து கொலைகள் வரை செய்தாலும் எந்த தண்டனையும் அவருக்கு இல்லை. எந்த மனசாட்சி உறுத்தலும் இன்றி அவர் சிரிக்க படம் முடிகிறது.

இவன் வேறு மாதிரி -  உண்மையிலேயே ஒரு வித்தியாசமான படம், திருந்த நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம்.