Unordered List

16 மார்ச் 2012

சாதனை நாயகன் சச்சின்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றொரு முக்கிய தினம். உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரரான  சச்சின் அடித்துள்ள நூறாவது சதம் இன்று. சச்சின் விளையாடும் எந்தொரு நாளுமே கொண்டாட்டம் தான் என்றாலும், இந்த நூறு இந்தக் கொண்டாட்டத்தை அதிகப் படுத்தும் ஒரு தருணம்.
 
சாதகமான காலம் மற்றும் சோதனையான காலம், இரண்டிலுமே அவர் காட்டிய சமநிலை எல்லாத் துறையினரும் கற்றுக்கொள்ளவேண்டிய பண்பாகும். விளையாட்டுத் திறமை மட்டுமலாமல், தனது குணநலன்கள் மூலம் சமகாலதின் மிகச் சிறந்த ஆளுமையாக சச்சின் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
 
வாழ்த்துகள் சச்சின்..
 
சாதனைகளால் மகிழ்ச்சி பரவட்டும். பரவும் மகிழ்ச்சியால் சாதனைகள்  பெருகட்டும்..

15 மார்ச் 2012

உயர் கவித்துவமும் அங்கதமும்

மொழிபெயர்ப்பு புத்தகங்கள் என்றால் எனக்கு உடனே நினைவுக்கு வருவது, நான் படிக்க ஆரம்பித்த காலத்தில் படித்த,  ரஷ்யாவின் முன்னேற்றப் பதிப்பத்தின் புத்தகங்கள் தான். சைபீரியக் காடுகளையும், பனிக்கரடிகளையும், பனிபடர்ந்த நகரங்களையும் மற்றும் ஜெர்மானியருக்கு எதிரான வீரதீர சாகசங்களையும் மிகப் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்திய புத்தகங்கள் அவை.

பெரல்மானின் "பொழுதுபோக்கு பௌதிகம்" இன்னொமொரு மறக்க முடியாத புத்தகம். பள்ளிநாட்களில் அறிவியல் ஆர்வத்தை ஊட்டிய அந்தப் புத்தகம், இன்றளவும் அந்தத்தளத்தில் மிகச் சிறந்தது என சொல்வேன். அறிவியலை மிக எளிதாக நம் சிந்தனைக்குள்ளும் விதைத்து, நமது ஆர்வத்தை தூண்டும் புத்தகம் அது.  எங்களூர் கிளை நூலகம் மூலம் வங்காளம் உள்ளிட்ட பல இந்திய மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் படித்ததுண்டு.

-----

திடீரென  திருவண்ணாமலைக்குப் போக அழைப்பு வந்துபோது, நான் உடனே சரி என்று சொல்ல ஒரே காரணம் ஜெயமோகன் வருகிறார் என்பது தான். அது என்ன விழா என்று கூட அதிகம் யோசிக்கவில்லை.

செந்தில் மற்றும் ராஜகோபாலனுடன்  சென்னையிலிருந்து காரில் பயணம் ஆரம்பித்தோம். பொதுவான அரட்டைகளுடன், கொஞ்சம் இலக்கியமும் வழியில் அருந்திய டிகிரி காபியுமாக சரியாக விழா தொடங்கும் நேரத்தில் திருவண்ணாமலை அடைந்தோம்.
விழா அறிவிப்பு

எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் விழா. மிக துடிப்பான இளைஞரான  கருணாவின் கல்லூரி அது. சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய மேடை. பார்வையாளர்கள் அமர அருமையான ஏற்பாடுகள்.
விழா மேடை 

இந்திய இலக்கிய உலகின் பல நட்சத்திரங்கள் அலங்கரித்த மேடை அது. புத்தகங்களை சிறப்பாக வெளிக்கொண்டு வந்ததுடன் இவ்வளவு ஆளுமைகளை ஒரே மேடையில் அமரச் செய்த எழுத்தாளர் பவா செல்லத்துரை மிகவும் பாராட்டுக்குரியவர்.
பார்வையாளர்களில் ஒரு பகுதி 
மூன்று மொழிபெயர்ப்பு நூல்களின் அறிமுக மற்றும் வெளியீட்டுவிழா. கன்னட, மலையாள மற்றும் சர்வதேச இலக்கியங்கள். இந்த விழா உண்மையிலேயே பலருக்கு இலக்கிய உலகின் புதிய இடங்களை அறிமுகப் படுத்தியிருக்கும் என நம்பலாம்.

மேடையில் நிறைய பேர் இருந்தாலும், நேரம் அளவாக இருந்தாலும், புத்தகத்தை பற்றிய அறிமுக உரை. பின்பு மொழிபெயர்ப்பாளரின் ஏற்புரை என சுவையாகச் சென்றது விழா.

-- 
பால் சர்க்காரியாவின் நூலை அறிமுகப் படுத்தி பேசிய ஜெயமோகன், மொத்த கேரளா இலக்கிய சூழல் பற்றியே ஒரு அறிமுகம் தந்து, அதில் பால் சர்காரியாவின் இடம் எங்கே வருகிறது என தொட்டுக் காட்டினார்.
ஜெயமோகன்
புத்தக வெளியீடு 
 

அவரது பேச்சு, என் நினைவிலிருந்து..
  • கேரளாவின் சாக்கியார் கூத்து எனப்படும் அங்கத விமர்சனக் கலை மரபின் பண்பாட்டுத்  தொடர்ச்சியாக பஷீர் மற்றும் வி.கே.என் படைப்புகளை பார்க்கலாம்.
  •  இந்தக் கதைகளைப் புரிந்துகொள்ளவே ஒரு மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது. மிக நுட்பபான இருண்ட வாழ்க்கைத் தரிசனம் கொண்ட கதைகளைக் கூட நகைச்சுவையுடனே சொல்லும் திறனுள்ள படைப்பாளிகள்.  நகைச்சுவையாகவேத் தோன்றும் இக்கதைகள் எங்கே உருமாறுகிறது என்பதை அறிவதே ஒரு அறிவார்ந்த வாசக அனுபவம் தான். 
  • வாழ்க்கையை ஒரு விளையாட்டுத்தனத்துடன் அணுகும் பஷிரின் அணுகுமுறையும், புத்திசாலித்தனமான மொழி விளையாட்டுக்களைக் கையாளும்  வி.கே.என்-இன் அணுகுமுறையும் இயைந்துள்ள வெற்றிகரமான கலவையாக பால் சர்க்காரியாவின் படைப்புகள் உள்ளன. 
  • பஷீர் மற்றும் வி.கே.என்-இன் தொடர்ச்சியாக வரும் பால் சர்காரியாவின் சிறப்பு அவர் படைப்புகளில் உள்ள உயர் கவித்துவமும், மிக நுட்பமான அங்கதமும்.  
  • ஆன்மீக விவாதத்துக்கு  மிக முக்கியமானது நகைச்சுவை உணர்ச்சி. இது பால் சர்காரியாவிடம் உள்ளது. எனவே அவரின் படைப்புகள் பல இயல்பாகவே அந்த ஆன்மீக  உச்சத்தை அடைகின்றன. 
-----
வேங்கைச் சவாரி கதைகளை அவை ஜெயமோகனின் வலைத்தளத்தில் வந்த போதே படித்திருந்தாலும், மற்ற இரு புத்தகங்களும் எனக்கு மிகவும் புதியவை.  இந்த விழா தந்த உற்சாகத்தில் எல்லாப் புத்தகங்களையும் வாங்கிக்கொண்டேன்.

---

விழா முடிந்ததுமே அவசர வேலையாக ஜெயமோகன் கிளம்பிச்   சென்றுவிட்டதால், ஒரு இலக்கிய அரட்டை இரவை எதிர்பார்த்துவந்த எங்களுக்கு ஏமாற்றமே. ஆனால் எழுத்தாளர்  யுவன் சந்திரசேகர் அறையில் அரட்டை ஆரம்பித்தது. ஜடாயு, சிறில், கோபி, ராஜகோபாலன் மற்றும் செந்திலுடன் மொழிபெயர்ப்பு பற்றிய பல கருத்துக்களும் கேள்விகளுமாக இரவு கழிந்தது.

நண்பர்களுடன் 

மயிலு 
அடுத்தநாள் ஊர் சுற்றலில் சபர்மதி வலைத்தளம் நடத்துபவரும், ஜெயமோகனின் "அண்ணா ஹஜாரே" உள்ளிட்ட பல முக்கிய கட்டுரைகளை ஆங்கில மொழியாக்கம் செய்தவருமான நண்பர் கோகுலும் இணைந்துகொண்டார்.

காரில் கிரிவலம், ரமணாஸ்ரமம், கோவில் என சென்றது அன்றைய ஆன்மீகப் பயணம். ஆன்மிகம், கோவில் மற்றும் சிற்பக்கலை பற்றி பெரிதும் அறிந்த ஜடாயு தன் தகவல்களால்  இந்தப் பயணத்தை மிக சுவையாக ஆக்கினார்.

காலையில் ஆரம்பித்த எங்கள் பயணம் எழுத்தாளர் பவா செல்லத்துரை வீட்டில் நடந்த அவரது குழந்தையின் பிறந்தநாள் விருந்துடன் இனிதே நிறைவு பெற்றது.

--

கொஞ்சம் கொஞ்சம் தொட்டுப் பார்த்தவரையில் இந்த மூன்று புத்தகங்கள்..  

அயல் மகரந்தச் சேர்க்கை - (சர்வதேசப் படைப்பாளிகளின் பேட்டிகளும் படைப்புகளும்.) - சர்வதேச இலக்கியம் பற்றி அறிமுகம் கொள்ள. குறைந்த பட்சம் ஜல்லியடிக்க மிக முக்கியமான புத்தகம். 

வேங்கைச் சவாரி - (விவேக் ஷேன் பேக் -கன்னட கதைகள் ) - யுவன் சந்திரசேகர் தனது உரையில் சொல்லியதுபோல், சில மர்மங்களை சொல்லாமல் சொல்லும் கதைகள்.

அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும் - (பால் சர்காரியா - மலையாளக் கதைகள்) - எளிய நடையில் சொல்லப்பட்ட ஆன்மீக தரிசனத்துடன் கூடிய கதைகள் 

---

புத்தகங்கள் கிடைக்குமிடம்:  http://www.vamsibooks.com/

10 மார்ச் 2012

தகுதியானவர் தானா இந்த டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சாப்பெல் சமீபத்தில் ஒரு தத்துவ முத்தை உதிர்த்தார். அதாவது "இந்தியர்களுக்கு தலைமைப் பண்பு என்பதே இல்லை. யார் என்ன சொன்னாலும் தலையாட்டும்படி அவர்களை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதுவே அவர்களின் தோல்விகளுக்குக் காரணம்." என்பதே அது.

அவருக்கு எப்படி இந்த மனப்பதிவு உருவானது என்று யோசித்தபொழுது, தான் பார்த்த டிராவிட் ஒருவரை வைத்து மொத்த இந்தியாவையும் மதிப்பிட்டு விட்டாரோ என்று நினைக்கத் தான் தோன்றுகிறது.


டிராவிட்டின் திறமை பற்றியோ, பல முக்கிய விளையாட்டுகளில் அவரது பங்களிப்பு பற்றியோ நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாகப் பெருமைப்படக்கூடிய ஒரு பங்களிப்புதான் அது. ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவரது இடம் என்ன?

கிரிக்கெட் விளையாட்டில் அவரது முழுப் பங்களிப்பை ஆராயும்பொழுது, அவரிடம் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தபொழுது என்ன செய்தார் என்பதையும், அது இந்திய அணிக்கு நன்மை பயத்ததா எனபதையும் ஆராயாமல் இருக்க முடியாது.

பிக் த்ரீ சொல்லப்படும் சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் மூவருமே இந்திய அணி வரலாற்றில் முக்கியமானவர்கள். இம்மூவரிடமுமே அணித் தலைமை மாறி மாறி வந்ததுண்டு. அணித் தலைவராக இல்லாத காலத்தில் கூட சச்சினின் கருத்து முக்கிய முடிவுகளில் கேட்கப்படுவதுண்டு என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

சச்சின் தலைவராக இருந்தபொழுது கங்குலி மற்றும் டிராவிட்டின் வளர்ச்சிக்கு அவரது ஆதரவு இருந்தது. உண்மையில் டோனி அணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்டக் கூட சச்சினின் பங்களிப்பு இருந்தது.

கங்குலி தலைவராக இருந்தபொழுதும் அவர் அணிக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தார். சின்னச் சின்ன சச்சரவவுகள் இருந்தபோதிலும். இந்திய அணியின் நலன்களுக்காக பல சர்ச்சைகளில் கங்குலி சிக்கினாலும், அவையெல்லாம் இந்திய அணிக்ககாகத் தான் என்பதால் ரசிகர்களுக்கு அவரது அந்தச் செயல்பாடுகள் மகிழ்ச்சியே அளித்தன.

ஆனால் டிராவிட் வசம் அதிகாரம் வந்துடனேயே, சச்சின் மற்றும் கங்குலிக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவாக்கப் பட்டது. சச்சின் இருநூறு அடிக்கக் கூடாது என்பதற்காகவே டிக்ளேர் செய்த காமெடி எல்லாம் நடந்தது.

இவர்கள் ஒருவர் மட்டுமேல்லாமல் மொத்தமாக இந்திய அணியே மிக நம்பிக்கையற்ற நிலையை அடைந்தது. இந்திய அணியை ஒழிக்கும் நோக்கத்துடன் வந்தோரோ என நாம் நினைக்கும் சாப்பெல் செய்த அனைத்து செயல்களுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவியவர் டிராவிட். சச்சின் மற்றும் கங்குலியை ஓரம்கட்டும் தன் தனிப்பட்ட நோக்க்கதுக்காக அணியின் நலன்களைக் கூட பலியிட்டவர் என்ற குற்றச்சாட்டும் அவர்மீது உண்டு.


திறமை மற்றும் அர்ப்பணிப்பு மட்டுமே அளவுகோல்கள் என்றால் டிராவிட் ஒரு திறமையாக வீரர் தான். ஆனால் ஒரு மூத்த வீரர் என்றமுறையில் தன் தனிப்பட்ட விளையாட்டு மட்டுமல்லாமல் அணியின் வளர்ச்சிக்கும் உதவவேண்டும் என்பது எதிர்பார்ப்பு என்றால், டிராவிட்டின் பங்கு நிச்சயம் கேள்விக்குரியதே.



08 மார்ச் 2012

தடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி

மெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம்.

மெட்ரோ ரயில் திட்டத்தால் என்னென்ன பலன்கள் வரப்போகிறதோ அது வந்தபின்தான் தெரியும். ஆனால் இந்தத் திட்டம் இதுவரை பல முக்கிய சாலைகளில் வெற்றிகரமாக கடும் போக்குவரத்து நெரிசலை உருவாக்கியுள்ளது. இந்தநிலையில் அண்ணாசாலை ஒருவழிச் சாலையாக மாறப்போகிறது என்ற அறிவிப்பு வந்தது. இதுவும் இன்னொரு கடுமையான நெரிசலை உருவாக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை பார்ப்பதில் கொஞ்சம் ஆர்வமும் நமக்கு இருந்தது.






மாற்றத்துக்கு முன் GB Road சந்திப்பு

ஆனால் உண்மையில் இந்த மாற்றத்தால் இந்தப்பகுதிகளில் வாகன நெருக்கடி பெருமளவு குறைந்துள்ளது என்பதே மக்கள் கருத்து . புதிய முறைப்படி பல சிக்னல்கள் எடுக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட சிக்னல் நிறுத்தங்களே இல்லாமல் பயணம் செய்வது உணர்வே கிடைக்கிறது. ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சிறப்பாக செய்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஆனால் இந்த மாற்றங்களால் பாதிக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிறிய தூரத்தைக் கடப்பதற்குக்கூட பெரிய சாலைகளைச் சுற்றிவரவேண்டிய கட்டாயத்துக்கு பலர் ஆளாயிருக்கக் கூடும். ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக நாம் நினைப்பது சில கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தான்.





மாற்றத்துக்குப் பின் GB Road சந்திப்பு

பல கடைகள் தங்கள் வியாபாரத்தை இழந்துள்ளன. பல கடைகள் மொத்தமாகவே மூடப்பட்டும் உள்ளன. உதாரணமாக ஜி.பி ரோடு. வாகன அலங்காரப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் நிரம்பியுள்ள இந்தத் தெரு எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும், ஆனால் இந்த போக்குவரத்து மாற்றங்களால் கார்களை கடைமுன் நிறுத்தி வேலைசெய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய வியாபரத் தளமான இந்தத் தெரு களையிழந்து தான் இருக்கிறது.

சென்னையில் சமகாலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய பணி இந்த மெட்ரோ ரயில். சென்னைவாசிகளான நமக்கு இது தற்காலிகமாக பல வசதிக்குறைவுகளைத் தந்தாலும் ஒரு மிகப்பெரிய பணி நம் கண்முன்னால் நடப்பது நிறைவளிப்பதாகவே இருக்கிறது.