Unordered List

29 ஜூலை 2013

மனிதகுல மானமும் சில குருவிகளும்

அந்தக் குருவியை அதற்குமுன் அங்கே நான் கவனித்து இல்லை, அதுவும் என்னை அந்த அதிகாலை நேரத்தில் கவனித்திருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் அன்று காலை அந்த சந்திப்பு நடந்தது.

அந்தக் குருவி துயிலெழுந்த நேரமோ அல்லது அதன் நிமித்தமோ நானறியேன். ஆனால் நான் எழுந்தது காலை சுமார் நாலறை மணி. அதற்கான காரணம் சமீபத்தில் வெளிவந்துள்ள சிங்கம் 2 திரைப்படம், இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் அந்தத்திரைப்படத்தின் விளம்பரங்கள்.

தற்போதைய நிலைமையில் நகரில் பயணம் செய்யும் எவரும் கடுமையாக முறைக்கும் சூர்யாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது, எந்தப் பக்கம் திரும்பினாலும் சூர்யா நம்மைப் பார்த்து முறைத்தபடியிருக்கிறார், அவருக்குப் பின் அனுஷ்கா பட்டாசாக சிரித்தபடி இருப்பது கொஞ்சம் ஆறுதல்.

உண்மையில் அந்த விளம்பரம் என்னைக் கவர்ந்ததுக்குக் காரணம் சூர்யாவின் முறுக்கேறிய தோற்றமா அல்லது, அனுஷ்கா பற்றிய எண்ணமா என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் நாட்களாகவே உடற்பயிற்சியைத் தொடர்வதைப் பற்றி யோசித்துகொண்டிருந்த எனக்கு உடனடி காரணமாக இருந்தது அந்த விளம்பரம் தான் என்று  உறுதியாகவே சொல்ல முடியும்.

பக்கத்திலிருக்கும் பூங்காவில் அதிகாலையில் ஓட்டம், பின்னர் கொஞ்சம் உடற்பயிற்சிகள் என திட்டம் உருவானது.

அதிகாலையில் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்தவனை வரவேற்றது ஒரு குருவியின் குரல். நான் வருவேன் என்று எதிர்பார்த்து அது அங்கே இருக்கவில்லை என்பதும் என்னை வரவேற்பது அதன் உத்தேசமில்லை என்பதும் தெளிவு. இருந்தாலும், அதன் இனிமையான குரல் அந்த அதிகாலைவேளையில் எனக்கு மிகச் சிறப்பான வரவேற்பாக அமைந்தது என்பது உண்மை.


இது வேற குருவி


அந்த வரவேற்பை மனதுள் ரசித்துக்கொண்டே பூங்கா செல்ல எனது பைக்கை உயிர்ப்பிக்க முயற்சிசெய்தேன். பலநாட்கள் எடுக்கப்படாததாலும் கடந்த இரு நாட்களாக பெய்த மழையாலும் பைக்கின் ஸெல்ப் ஸ்டார்ட் வேலை செய்ய மறுத்தது. பிறகென்ன உதைத்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். மூன்றாவது உதையில் பைக் உயிர்பெற்று அந்த அதிகாலை அமைதியை கிழித்து உறுமியது. சொல்லிவிட்டுப்போகலாம் என குருவியைப் பார்க்க அங்கே அது இல்லை. இந்த பைக் களேபரத்தில் பயந்து பறந்துவிட்டது போல.

அட என்ன  செய்துவிட்டேன். அதிகாலை காலை வேளையில் ஒரு குருவியை மிரளச் செய்துவிட்டேனே, அதுவும் எனக்கு வரவேற்பாக அமைந்த குரலுக்கு சொந்தமான குருவியை. குருவியின் சத்தம் எனக்கு வரவேற்பாக அமைய, நான் உருவாக்கிய சத்தம் அதற்கு மிரட்டலாக அமைந்துவிட்டதே என்ற குற்ற உணர்வுடன் வண்டியைக் கிளப்பினேன்.

இதே நினைப்புடன் பூங்காவை அடைந்து ஓட்டத்தை தொடங்கினேன். காலையின் மெல்லிய வெளிச்சமும், லேசானக் குளிரும், நேற்றைய மழையின் ஈரமும் அந்த இடத்தை ரம்யமாக ஆக்கிகொண்டிருந்தன. அதிகாலையில் எந்த ஒரு இடமும் நாம் பார்க்காத  இன்னொரு பரிணாமத்தில் இருக்கிறது. 

லேசான ஈரம் கொண்ட பாதையில் இருந்த சரளைக்கற்களில் ஷூ அணிந்து ஓடும்போது ஒரு சீரான ஓசையை உருவாக்கிக்கொண்டிருந்தது. தூரத்தில் தவளைகளின் ஒலிகளும் பின்னணி போல வந்து கொண்டிருந்தன.  ஆனால் இந்த எல்லா ஓசைகளுக்கும் சிகரம்போல இருந்தது அங்கிருந்த குருவிகளின் ஒலிகள்.

குருவிகளை கவனித்த தருணத்தில் மீண்டும் அந்தக் குருவியின் நினைவு. என்ன இருந்தாலும் காலையில் என்னை வரவேற்ற குருவியை மிரளச்செய்தவன் தானே நான். இன்னா செய்தவனுக்கும் இனிமையை அள்ளி வளங்கிகொண்டிருந்த  குருவியினத்தைப்பார்கையில் உண்மையில் சந்தோஷத்தை விட ஒரு மனிதனாக ஒரு குற்ற உணர்ச்சியே தோன்றியது.

பலவிதமான குருவிகளின் சப்தங்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு அற்புத இசைவெளி அங்கே உருவாகிக்கொண்டிருந்தது. அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில் மழையில் புத்துணர்ச்சியடைந்த பசேலென்ற மரங்கள் பார்க்கும்  கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. அந்த மரங்களுக்கு உயிர்கொடுப்பது போலிருந்ததும் அவற்றின் மீது பறந்து விளையாடிய குருவிகளின் நடனங்கள்தான். சப்தம் கேட்டு அருகே இருந்த நீர்த்தேக்கதைக் கவனித்தேன், கரையோர மரத்திலிருந்து  நீரை உரசியபடி சென்ற அந்தக் குருவி  அப்படியே  நீரில் மிதக்க அதைச் சுற்றி வட்ட வட்டமாக அலைகள் உருவானது,  அமைதியாக இருந்த தண்ணீரும் துயிலெலுந்ததுபோல சிலிர்த்துக்கொண்டது.

காலைவேளை குருவிகளின் வேளைபோலும், அனைத்தையும் உயர்ப்பிப்பது குருவிகளின் கடமை,  இவ்வேளையில் குருவிகளைத் தவிர்த்து ஒரு அனுபவம் இல்லை,  நாளின் எல்லா விஷங்களையும் குருவிகள் தான் ஆரம்பித்து வைக்கின்றன என்று தோன்றியது.   இந்தக் குருவியினத்துக்கு நான் மட்டுமல்ல மனிதர்கள் உட்பட ஒட்டுமொத்த சூழலும் கடன்பட்டிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்.

அப்போதுதான் அவர்களைக் கவனித்தேன், மூன்று இளைஞர்கள். ஜிம்மில் இருக்கும் திரட்மில்லில் ஓடும் பாவத்துடன் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தனர்.  மூவரின் காதுகளிலிருந்தும் வயர்கள் புறப்பட்டு அவர்களின் சட்டைகளுக்குள் மறைந்தன. இன்னும் கவனித்ததில்  பெண்கள் நடைப்பயிற்சிக்கு வந்தால் ஐபாட் உடன் தான் வரேவேண்டும் என்று தீர்மானம் இருப்பது தெரியவந்தது.

இசையைப் பற்றி அப்போது ஒரு ஆச்சரியம் தோன்றியது.  ஒரு மழைக்கால அதிகாலையில் உருவாகும் குருவிகளின் ஒலிகளைகூட துச்சமென மதித்து புறக்கணிக்கும் அவர்களிடம் அதைவிட அரிதான எதோ இசை இருக்கிறது என்பதே மிகவும் ஆச்சர்யமூட்டும் சிந்தனையாக இருந்தது. அந்த இசை என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் எழாமல் இல்லை.

வேறு சிலர், அவர்களுக்கு ரகசியத்தில் நம்பிக்கை இல்லை. தங்களிடம் இருந்த மொபைல் போன் மூலம், தங்களுக்கான இசையைத் தங்களைச் சுற்றி வளையம் போல அமைந்து நடந்து சென்றனர்.  ஐபாடு, மொபைல் போன் அல்லது ஒரு சைனா செட்டாவது இல்லாமல் இவர்கள் வெளியே வருவது இல்லை, பிறகெப்படி குருவி அவர்களிடம் நெருங்குவது.

இன்னொருவர், இவரிடம் ஹெட்போன் இல்லை. பொதுவாக நாம் அரசு அலுவலகங்களில் காணக் கிடைக்கும் இறுகிய  அதிகார முகத்துடன் நடந்துகொண்டிருந்தார், அங்கே அவர் எழுந்தளியிருப்பதே அவ்விடத்துக்குப் பெருமை என்ற தோரணையுடன். இவருடன் அவர் நடக்கும் வேகத்துக்கு ஈடுகொடுத்தபடி இருவர் கூடவே ந்டந்துகொண்டிருந்தனர். அந்த இருவரின் ”ஆமாம்” சத்தங்களைத்தாண்டி குருவியின் சத்தம் அவரை அடைவது சந்தேகம் தான்.

தனது இனிமையால் எல்லோரையும் வென்றுவிடலாம் என நினைக்கும் குருவியினத்தை, தங்கள் புறக்கணிப்பாலேயே  மனிதர்கள் வென்றுவிடுகிறார்கள் என்றறிந்த திகைப்புடன் திரும்பிய நான், என் பைக்கின் கண்ணாடியில் தன்முகம் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குருவியை பார்த்துக்கொண்டு நின்றேன்.

"அப்பா...இங்க சூப்பரா எவ்வளவு குருவி இருக்கு!!.."  எனக்குப் பின்னால் குருவியைக் கவனிக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன். அந்தச் சிறுவன் தன் அப்பாவிடம் கேட்டான்.

 "இதை நம்ம வீட்டுக்குப் பிடிச்சுக்கிட்டுப் போகலாமா?"