Unordered List

16 ஆகஸ்ட் 2013

அதிகாலை வெளிச்சம்

அறையில் இருள் பரவியிருந்தது, போர்வையினுளிருந்து அனிச்சையாக கையை நீட்டி இருளுக்குள் துழாவி, எனது செல்பேசியை எடுத்தேன். அறையில் பரவியிருந்த இருளின் ஒரு துளியே அதிலும் இருந்தது. சரிதான் அதில் சார்ஜ் இல்லை என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அதை இருளுக்குள் புதைத்துவிட்டு, நான் போர்வைக்குள் புதைந்தேன். அது நள்ளிரவாகயிருந்திருக்கவேண்டும்.

எனக்கு எப்போதுமே கடிகாரம் பயன்படுத்தும் பழக்கமில்லை. கைக்கடிகாரம் தான் மனித நாகரிகத்தின் கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய அபத்தம் என்பது எனது கருத்து. பள்ளி, அலுவலகம் செல்வதற்கு மணி பார்த்தால் கூட பரவாயில்லை. ஆனால் மனிதர்கள் சாப்பிடுவதையும் தூங்குவதையும் கூட அது தான் தீர்மானிக்கிறது எனபதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. மனிதர்கள் இயற்கையின் கடிகாரத்தை புறக்கணிப்பதே பல பிரச்சனைகளுக்குக் காரணம் எனபதும் எனது துணிபு. இதற்கான தார்மீக எதிர்ப்பாகவே நான் கைக்கடிகாரத்தை துறந்தது. இப்போதெல்லாம் செல்பேசி உடலின் பகுதியாகவே ஆகிவிட்டிருக்கிறபடியால் உண்மையில் தனியாக கைகடிகாரம் இல்லாதது ஒரு பிரச்சனையாகவும் இருப்பதில்லை.

முழு விழிப்படைந்து எழுந்தபோது காலைப்புத்துணர்ச்சியை உணர்ந்தேன். அந்த ஐந்துமணி வெளிச்சம் கண்களுக்கு இதமாக இருந்தது. ஒன்பது மணிக்குத்தான் அலுவலகத்துக்குச் செல்ல புறப்பட வேண்டுமென்றாலும், காலையில் ஓட்டப்பயிற்சிக்காக வழக்கப்படுத்திக்கொண்டது இந்த ஐந்து மணி பழக்கம். தாமதமாகத் தூங்கினால் காலையில் இருக்கும் கண்ணெரிச்சல் அறவே இல்லாதது கொஞ்சம் ஆச்சர்யமளித்தது. அந்த ஆச்சர்யத்துக்கு ஜன்னல் வழியாக வந்த மழைச் சத்தமும் மெல்லிய குளிரும் பதில்களாக அமைந்தன. குளிர்நேரங்களில் மக்கள் அதிக புத்துணர்ச்சியோடு இருப்பது இயல்பு தானே. இயற்கை எப்போதுமே சரியான பதில்களைத் தந்துகொண்டு தான் இருக்கிறது. நாம்தான் சரியாகக் கேட்பதில்லை என நினைத்துக்கொண்டேன்.

அணைந்திருந்த செல்பேசியை மின்னிணைத்துவிட்டு பல்துலக்க ஆரம்பித்தேன். காலைகடன்களை முடித்து குளியலறையிலிருந்து வந்து செல்பேசியை எடுத்து உயிர்ப்பிக்க உடனே அது கதறியது.

என் நண்பனின் அழைப்பு அது.

"ஏண்டா உனக்கு எவ்ளோ நேரம் ட்ரை பண்ணுறது. உன் வீட்டுக்கு வெளியேதான் நிக்கிறேன். சீக்கிரம் வா" என்றான்.

சில சமயங்களில் இவனது கடமை உணர்ச்சிக்கு இப்படிதான் வெளிப்படும். இந்த மழையிலும் வழக்கமாகச் செல்லும் ஜாக்கிங் செய்தே ஆகவேண்டும் என்று நினைக்கும் அவனது கடமை உணர்வு கண்டு நெஞ்குருக்கொண்டே காலை ஓட்டப்பயிற்சிக்குத் தயாரானேன். அவன் ஆர்வத்துக்கும் காரணம் இல்லாமலில்லை. மழையை எதிர்பார்த்து மழைக்கான ஜெர்க்கின்களை நேற்றுதான் நானும் அவனும் வாங்கியிருந்தோம், அது உடனே பயன்பாட்டுக்குவருவதில் ஒரு மகிழ்ச்சி. மழை நேரத்திலும் அதிகாலை ஓட்டப்பயிற்சிக்கு சென்றே ஆகவேண்டும் என்கிற அவனது ஆர்வத்துக்கும் இதுதான் காரணமாக இருக்கவேண்டும்.

நல்ல வேலையாக அப்போது  அதைச்  செய்தேன். வெளியே செல்ல கதவைத் திறக்கும் முன்பாக ஜன்னல் வழியாக அவனைப்பார்த்தேன், மழைக்கு அவன் எப்படி தயாரகியிருக்கிறான் என்று பார்க்க.

அவன் தயாராகத்தான் இருந்தான். குடையைப்பிடித்தபடி, என் வீட்டுக்கதவை பார்த்துக்கொண்டு.  அலுவலகம் செல்லும் உடைகளுடன்.