லியோ பற்றிய முந்தைய பதிவைப் பார்த்த ஒரு நண்பர் இது வெறும் சினிமா தானே இதில் எதற்கு அறம் எல்லாம் எதிர்பார்க்கிறீர்கள், அதோடு பழைய படங்களில் insensitive விஷயங்களே இருந்ததில்லையா என்று கேட்டார், நல்ல கேள்வி அது.
சமூகத்தின் அறம் என்பது உருவாகி வருவது. பத்து வருடங்களுக்கு முன் கமெர்ஷியல் படங்களில் மிக இயல்பாக நடந்த பல "insensitive" விஷயங்களை இப்போது அவர்களை வைக்கத் தயங்க வைப்பது மட்டுமல்ல, நம் வாழ்விலேயே நம் முன்னோர்கள் இயல்பென செய்த பல விஷயங்களை, நாமே முன்பு செய்த பல insensitive விஷயங்களை தவறென தெரிந்து அதிலிருந்து இருந்து மாறச் செய்வது தான் சமூகத்தின் முன்னகர்வு. இது ஒரு தொடர் செயல்பாடு. தனது ஹீரோ செய்தால் எதுவும் தவறல்ல என என நடிகர்களைக்கொண்டாடும் ரசிகர்கள் சொல்வது பற்றி பிரச்சனையில்லை, அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் ஆனால் அவர்கள் எந்த friction இல்லாமல் காலமாற்றத்தோடு மாறியும் விடுவார்கள். ஆனால் இதெல்லாம் தவறல்ல என வெளியில் இருந்து சிந்திப்பவர்கள் நம்பினால் அது அபத்தமாகிவிடும்.
பல வருடங்களுக்கு முன் சிவகாசி படத்தில் பெண்களை உடையை வைத்து விஜய் கிண்டல் செய்யும்போது ரசித்த ரசிகர்களே, பின்னர் அவர் பெண்ணுரிமை பேசுவேன் என சிங்கப்பெண்ணே என்று பாடுவதையும் ஏற்றுக்கொண்டு எந்த பிரச்சனையுமின்ரி ஏற்றுக்கொண்டார்கள், "no means no" என அஜித் சினிமாவில் பேசியதையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
அந்த ரசிகர்கள் கஞ்சா வியாபாரத்தை glorify செய்வதும், கடமையைச் செய்யும் போலீஸை கொன்று வீசுவது ஹீரோயிசம் என்று சொல்வதையும், பள்ளிச் சிறுவர்கள் அப்பாவிடம் சிகரெட் அடிக்கும் உரிமை பற்றி பேசுவதும் தவறு என்ற இடத்துக்கு விரைவாகவே வந்துவிடுவார்கள். குழப்பம் அவர்களுக்கு இல்லை.
பொதுதளத்தில் இந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது? உதாரணமாக சில வருடங்களுக்கு முன் வனவிலங்கைக்கொல்வது ஹீரோயுசம் என்ற நிலையில் இருந்து இப்போது அதைக் காப்பது ஹீரோயுசம் என்று சமூகம் மாறுவது எங்கே? இலக்கியம், பத்திரிகைகள், சிந்தனையாளர்கள் அனைவருக்கும் இதில் பங்குண்டு.
இதைப்பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் எழுதிய கடிதம் இப்படி முடிந்திருந்தது.
//சின்ன வட்டத்தில் பேசப்படுகிறது என்று சொல்லப்படும் இந்த இலக்கியம் தான் தான் பொதுவெளியில் இந்த விழுமியங்களை கொண்டு சேர்க்கிறது என்று நினைக்கிறேன். இலக்கியம் சின்ன குமிழி அல்ல அது சிறிய சுழல். இந்தச் சுழலே இருந்தாலும் அதுவே சமூக ஏற்பு என்ற பெரும் அலைகளை உருவாக்குகின்றது என்று தோன்றுகிறது.///
-----
2021 ல் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வந்த என் கடிதம் இது
அன்புள்ள ஜெ,
சில தினங்களுக்கு முன் நண்பர்களுடன் ஒரு இலக்கிய உலக சர்ச்சையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் நினைத்தோம். இந்த இலக்கிய விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கும் இதே சமயத்தில் தான் சினிமாவும் அரசியல் சர்ச்சைகளும் மாபெரும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கின்றன.
இணையத்தில் ஒரு சின்ன குமிழியில் ‘சிலர்’ இந்த இலக்கியம் முக்கியமானதாகப் பேசிக்கொண்டிருக்கும்போது அதே இணையத்தில் மாபெரும் அலைகளாக சினிமாவும் அரசியலும் ட்ரென்ட் ஆகிக்கொண்டிருக்கிறது என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
இப்போது டி 23 ஆட்கொல்லி புலி பற்றிய செய்தி வந்திருக்கின்றது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த நீலகிரிப் பகுதியில் மட்டும் மூன்று புலிகள் இதே மனிதர்களைத் தாக்கிய காரணத்துக்குக்கான சட்டப்படி சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றன. அந்தப் புலி கொல்லப்படாமல் உயிரோடு பிடிக்கப்பட்டது பற்றி இன்று பொதுவெளியில் மகிழ்ச்சி தெரிகிறது.
அதே சமயம் புலி, சிங்கம் யானைகளை கொன்றால் வீரம் என்ற நிலையில் இருந்து சமூகம் இப்படி மாறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி. புலிகளைக் கொல்லும் புலிமுருகன் மாஸ் வெற்றிகரமான என்ற சினிமா கூட சமீபத்தில் தான் வந்திருந்தது. அந்த நிலையில் இருந்து பொதுச்சமூகம் மாறுவது ஆச்சர்யமளிப்பது.
சில வருடங்களுக்கு முன் நம் விஷ்ணுபுர விழாவில் வெளியிட்ட, ஜேனிஸ் பரியட் அவர்களிடன் சிறுகதைத் தொகுப்பான “நிலத்தில் படகுகள்” புத்தகத்தில் ஒரு கதை “ஆகாய சமாதிகள்”, இதைப் போன்ற ஆட்கொல்லி புலியைப் பற்றியது. அந்தக் கதையை நான் தமிழில் மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்திருந்தது. காட்டோடு இயைந்த வாழ்வில் இருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு ஆட்கொல்லி புலி கொல்லப்படுவதின் துயரம் அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும்.
வெண்முரசில் கர்ணன் அறிமுகப்படுத்தப்படும்போது வரும் ஒரு காட்சியும் இன்றும் என் நினைவில் இருக்கின்றது. கர்ணன் பல சிங்களோடு சண்டையிட்டு அவரது வீரம் நிறுவப்படும் காட்சியில் ஒரு சிங்கம் கூட கொல்லப்படுவதில்லை. சிங்கத்தோடு சண்டையிடுகிறான், வெல்கிறான் ஆனால் அதை அவன் கொல்லமாட்டான் என்பதில் வீரமும் அதே சமயம் பொறுப்புணர்வும் தெரிகின்றது.
சின்ன வட்டத்தில் பேசப்படுகிறது என்று சொல்லப்படும் இந்த இலக்கியம் தான் தான் பொதுவெளியில் இந்த விழுமியங்களை கொண்டு சேர்க்கிறது என்று நினைக்கிறேன். இலக்கியம் சின்ன குமிழி அல்ல அது சிறிய சுழல். இந்தச் சுழலே இருந்தாலும் அதுவே சமூக ஏற்பு என்ற பெரும் அலைகளை உருவாக்குகின்றது என்று தோன்றுகிறது.
லியோ படத்தின் கடைசி காட்சியில் சண்டை எல்லாம் முடிந்தபின், இங்கு நடந்தது வீட்டில் சொல்லிவிடவேண்டாம் என தனது மகனிடம் கேட்டுக்கொள்கிறார் பார்த்திபன், அப்படினா நான் சிகரெட் அடிப்பதை வீட்டில் சொல்லக்கூடாது என 18 வயது நிரம்பாத ஸ்கூல் படிக்கும் அவரது மகன் பார்த்திபனை நேராகப் பார்த்து தைரியமாகச் சொல்கிறான். மகன்கள் அப்பாவுக்கு பயப்படுவது அவரது செல்வத்தாலோ பலத்தாலோ அல்ல.
இது தகப்பனின் அவல நிலை, ஒரு கணத்த மவுனம் தியேட்டரில் இருந்திருக்கவேண்டும், ஆனால் தியேட்டரில் சிரிப்பலை, இங்கு இந்தப் படம் தோல்வியடைகிறது.
படத்தில் ஆரம்பக் காட்சியில் ஸ்கூலுக்கு மொபைல் கொண்டுபோவதையே கில்டி பீலிங்குடன் ப்ளீஸ் என கேட்கும் அந்த பள்ளி சிறுவன், கடைசியில் தான் சிகெரெட் குடிப்பேன் என அதே தகப்பனிடம் சொல்வதும், அதை கேட்கும் தகுதி உனக்கு இல்லை, அதோடு அம்மாவிடம் சொல்லாதே என சொல்வதும். அதை தட்டிக்கேட்கும் அற நிலையை ஹீரோ இழப்பதும் இந்த படத்தில் பயணத்தில் நிகழ்கிறது.
ஆனால் இந்த அவல நிலையை உணராமல் அப்பாவி ரசிகர்கள் கைதட்டுவது இந்தப் படம் சொல்லப்பட்டதில் இருக்கும் பிரச்சனையைக் காட்டுகிறது.
போதைமருந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவன் இப்போது அதை எந்த விலைகொடுத்தாலும் மறைத்து குடும்பத்துடன் வாழ நினைப்பது ஒரு நல்ல லைன் தான், ஆனால் இந்தப் படம் அந்த போதை உலகத்தைக்காட்டும்போது அதை ஹீரோயிசமாகக் காட்டியதில் லாஜிக் மற்றும் அறம் இரண்டிலுமே தவறிழைக்கிறது.
ஹீரோவுக்கு ஓபனிங் சாங் சண்டை இல்லாமல் தொடங்குவது நல்லது தான், ஆனால் அப்படி தொடங்கி, அவர் போதை வியாபாரத்தில் இருக்கும்போது "நான் ரெடி தான் வரவா" என பாடல் வைப்பது எவ்வளவு பெரிய அபத்தம். அங்கு அப்பாவிகளைக் கொல்வது போலீஸைக் கொல்வது எல்லாம் அநிருத்தின் பில்ட் அப் இசையோடு வருவது எல்லாம் லைன் மொத்தமான மிஸ் ஆகும் இடங்கள்.
இந்த பில்ட்-அப் பாட்டு பார்திபனுக்கு வைத்து, போதை கும்பல் வாழ்க்கையை ஒரு கில்டி பிண்ணனி போல வைத்திருந்தால் இந்தப் படம் இன்னுமே அறத்தை மீறாமலும் லாஜிக்லாகவும் இருந்திருக்கும்.
கதைப்படி லியோ என்பது ஹீரோ மறக்க நினைக்கும், அறுவருக்கும் கடந்தகாலம், அதுவும் இதே படத்தில் சொல்லபடுகிறது. எப்படி?
ட்ரெயிலரில் வந்த தே** வசனம் அதைத்தான் காட்டுகிறது, தனது கடந்தகால வெர்ஷனை உண்மைலேயே வெறுக்கிறான் பார்த்திபன். அது பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டிருந்தால் கடைசிக் காட்சியில் பள்ளிச்சிறுவன் சிகரெட் அடிப்பேன் என்றுசொல்லும்போது அதன் தீவிரம் கடத்தப்பட்டுருக்கும்.
குற்றவாழ்க்கையை தவறெனெத்தெரியாமல் உள்ளே இருபவர்கள், ஏதோ ஒரு கணத்தில் ஒரு நிகழ்வில் இதுவரை தான் காணத்தவறிய அதன் பாதிப்பைப் பற்றி, தெரிந்து அந்த குற்ரத்தில் இருந்து வெளியே வருவது என்பது ஒரு இயல்பான விஷயமாக இருந்திருக்கும். ஆனால் அதைச் செய்யாமல்,
குற்றப்பிண்னனியை, கஞ்சா வியாபாரத்தைக் கொண்டாடுவது அங்கு பில்டப் காட்சிகளிளும், இசையும் நரேஷனை நேரெதிராகக் கொண்டுசெல்கின்றன. கஞ்சா வியாபாரத்தைக் கொண்டாடிக் கொழுத்தும் லியோ அதன் கொடுமை பற்றி எந்த நிகழ்வும் இல்லாமல், தன் குடும்ப பூசல்களால் வெளிவருவதுபோல காட்டினால், நாளை அவர் காஷ்மீரில் கஞ்சா வியாபாரம் ஆரம்பிக்கமாட்டாரா என்ற மாதிரி இந்த நரேஷன் கொண்டு செல்வது தான் பிரச்சனை
செம ஸ்மார்ட்டான விஜய், டெக்னிகலான சண்டைகள் எல்லாம் இருந்தும் இது கனெக்ட் ஆகாதது இதனால் தான்.
தான் மறக்க நினைக்கும் போதைஉலக பிண்ணனிக்கு தன் பள்ளியில் படிக்கும் மகன் சிகரெட் மூலம் செல்வதை தடுக்க பார்க்கும் கையறு நிலையில் இருக்கும் பார்த்திபனின் கதை இது.
இந்தப் படத்தின் தலைப்பு லியோ என்று சொன்னபோதே. இது லியோ அல்ல பார்திபன் என திரும்ப எழுதப்பட்டிருக்க வேண்டும்.
பொதுவாக தீவிரவாத தாக்குதல் நடக்கும்போது ஒரு வாதம் வைக்கப்படும், அமெரிக்காவில் தீவிரவாதிகளால் கொல்லப்படுபவர்ககளை விட ரோடு ஆக்ஸிடெண்டால் இறப்பவர்கள் அதிகம், ஆனால் தீவிரவாதத்துக்கு கொடுக்கப்படும் விளம்பரமே பரபரப்புக்க்குக் காரணம் அதை பெருசா எடுத்துக்கூடாது என, ஆனால் அது அப்படி பார்க்கப்படக்கூடாது
இங்கு எண்ணிக்கையை விட செயல் தான் பிரச்சனை.
இங்கு ஓட்டப்படும் பைக்களில் சில வளர்ந்தநாடுகளுக்கு சமமான எஞ்சின் இருக்கலாம், ஆனால் நமது சாலைகள் வேறுமாதிரியானவை. சமீபத்தில் ஏதாவது டூவீலர் ஷோரூம் போயிருந்தால் ஒன்று கவனிக்கலாம், இப்போது பைக் விட ஸ்கூட்டர்கள் அதிகம் விற்பனையாகின்றன.
நம் சாலைகளில் கவனித்தால் ஸ்கூட்டர்கள் தான் அதிகம். குடும்பப்பெண்கள் குழன்தைளை பள்ளியில் விடவும், சாப்பாட்டு பையுடன் ஆபீஸுக்கி செல்லும் ஆட்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடத்தில், பவுர்புல் பைக், அதிரடி வேகம் என்பது பெரும் ஆபத்து. சாலையில் பொருப்புடம் இருப்பதும், எளிவர்களுக்கு இடம் அளிப்பதுமே இங்கு இந்த மக்களை இயங்கச்செய்யும்.
ஒருமுறை பாண்டிச்சேரியில் யு டர்ன் எடுக்கமுயன்ற ஒரு ஸ்கூட்டியை அதிவேகமாக வந்த ஒரு 200cc பைக் நடுவில் மோதி இரண்டாக உடைந்ததை நேரடியாகப் பார்த்தேன். அந்தப் பெண் என்ன ஆகியிருப்பார் என யோசித்துக்கொள்ளுங்கள். அந்தப் பெண் மீதும் தவறிருக்கலாம், ஆனால் அது ஊருக்குள் இருக்கும் சின்ன சாலை, அதில் அந்த பெண்ணுக்கு அது நடந்திருக்கூடாது
இதில் என்ன சட்டம் சார் மீறப்படுது என கேட்பது ஒருவிதமான ignorant மனநிலை. இண்டெர் நெட் முதலில் வந்தபோது அதற்கான சட்டங்கள் உருவாக்கப்படும் முன்னர் குற்றஙகளே நடக்கவில்லை என்று சொல்வதுபோன்றது அது.
புதிய விஷயங்கள் இறக்குமதிசெய்யப்பட்ட பின்னர் மெதுவாகவே அதற்கான சட்டங்கள் உருவாகும். அதுவரை நம்மை காப்பது ஒரு பொது அறமும், common senseம்
மிக எளிதாக அன்லிமிடடட் பபேயில் ஒருவர் ஒரு கிலோ ஐஸ்கீரீம் சாப்பிடுவதைத் தடுக்க எந்த சட்டமும் இல்லை, ஆனால் அப்படி ஒருவர் செய்வது மொத்த ஸிஸ்டத்தையும் குலைக்கும்.
அரசு சாலைகளை சரியாக மெயிண்டெயின் செய்யவில்லை என்பது சரியான தனி குற்றச்சாட்டு. அதை தனியாக டீல் செய்யவேண்டும்.
சில நாட்கள் முன், பாலகுமாரனை முன்வைத்து எழுதியது இதற்கு இப்போது நினைவுக்கு வருகிறது
---
ஒரு நண்பர் கேட்டார் என வீட்டில் பாலகுமாரன் புத்தகங்கள் எங்கே என தேடினால் பந்தயப்புறா கிடைத்தது.
அதில் ஒரு சம்பவம்
இன்று ஆக்டிவா உருவாக்கிய புரட்சியால், ஸ்கூட்டர்கள் நிறைய வந்து பெண்கள் பெரும்பாலும் எளிதாக வேலைக்குப் போக, குழந்தைகளை பள்ளிகளுக்கு விட என இயல்பான ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இருந்தாலும் இன்றும் பெண்கள் ஸ்கூட்டர், கார் ஓட்டுவதைப் பற்றி கிண்டகளும் ஜோக்களும் நிறையவே இருக்கின்றன.
அப்படியென்றால் முதன்முதலில் மெபெட் வந்தகாலத்தில் எப்படி இருந்திருக்கும், அந்தக் காலத்தில் அதை ஓட்டிய பெண்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். எவ்வளவு பயம் இருந்திருக்கும், அதை இந்தக் கதையில் பாலகுமாரன் அவருக்கே உரிய இயல்பான நடையில் இறன்கி அடிக்க சொல்லியிருக்கிறார். வழக்கம் போல ஒரு பாலகுமாரன் ஸ்டைல் பீல் குட் நாவல்
நான் கார் ஓட்டப்பழகும்போது ஒருமுறை கார் ஆப் ஆக, நான் லேசா டென்ஷாகியசமயம் என் ட்ரெயினர் சொன்னது, சார், எவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாலும் கார் என இருந்தால் ஆப் ஆகத்தான் செய்யும், சின்னத் சின்னத் தவறுகள் நடக்கத்தான் செய்யும் அதை காட்டிக்காம டென்ஷனாகாம சமாளிக்கிறதுல தான் எக்ஸ்பீயன்ஸ் இருக்கு என.
--
இந்த பக்கத்தை வாசிக்கும்போது அது நினைவுக்கு வந்தது
ரோட்டில் ஓட்ட தயங்கும்/பயப்படும் பெண்களுக்கான பாலகுமாரன் அட்வைஸ் - "சர்தான் போடா"
(எழுத்தாளர் இ.ரா முருகன் படைப்புகளுக்காக நற்றுணை அமைப்பு நடத்திய நிகழ்வில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்) (24-செப்-2023)
இந்த உரையை லோகசுந்தரி பாட்டியின் ஹரித்துவார் பயணத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். அரசூரில் இருந்து வரும் ஒரு வயதானவர்களின் கோஷ்டி, அதே அரசூரில் பிறந்து, இப்போது டெல்லியில் அரசு அலுவலகத்தில் வேலைபார்க்கும் சின்ன சங்கரன் உடன் டெல்லியைச் சுற்றிப்பார்த்துவிட்டு ஹரித்துவாருக்கு ஒரு பயணம் செல்கிறது. அந்தக் குழுவை வழிநடத்திச் செல்பவர் லோகசுந்தரி பாட்டி.
முதலில் டெல்லியில் ரயிலில் இருந்து ஆட்டோவில் சின்ன சங்கரன் வீட்டுக்குச் செல்லும்போதே செல்லும்போதே ஒரு பரபரப்பு ஆரம்பிக்கிறது; அதில் ஒரு ஆட்டோ மட்டும் வழி தவறி ஒரு குழப்பம் உருவாகிறது. ஆனால் அது பிரச்சனையாகவில்லை, ஏனென்றால் அந்த ஆட்டோவில் இருந்தவர் இந்த லோகசுந்தரி பாட்டி. வட இந்தியாவில் பேச ஹிந்தியில் இருந்து, சரியாக சென்றுசேர கையில் முகவரி வரை அவர் மிகத் தயாராக இருப்பதால் பிரச்சனை இல்லாமல் அது தீர்கிறது. இந்தப் பயணம் முழுவதும், சூரத்தில் கத்திரிக்கோல் வாங்குவதில் இருந்து, ஹரித்துவாரில் திராவிட பண்டிதரை கண்டுபிடிப்பது வரை அவரே திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்கிறார்.
அவரின் அந்தப் பயணத்தின் நோக்கம் தான் என்ன? ஊர் சுற்றிப்பார்ப்பது, புனித யாத்திரை எல்லாம் இருந்தாலும் அந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் குடும்ப வாஹி. ஹரித்துவாரில் பல நூற்றாண்டுகள் முன் ஆரம்பித்து இன்று வரை தொடரும் குடும்ப கொடிவழிகளை (பிறப்பு/இறப்பு தகவல்களை) எழுதிவைக்கும் பழக்கம் அது.
இந்த கோஷ்டி அங்கு சென்றதும் அவரவரது குடும்ப வாஹிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் அனைத்துத் தகவல்களும் சரிபார்ப்பட்டு புதிய பிறப்பு/இறப்பு விபரங்கள் சேர்க்கப்படுகின்றன. 70 வருடங்களுக்கு முன், 100 வருடங்களுக்கு முன் என அங்கு முன்பு வந்து தகவல்களை சேர்த்த தங்கள் முன்னோர்களின் கையெழுத்துகளைப் பார்க்கும் அவர்கள் உணர்வெழுச்சி அடைகிறார்கள் அடைகிறார்கள். அனைத்து தகவல்களையும் சேர்த்த பின்னர் லோகசுந்தரிதேவிபாட்டியின் வாழ்வு அங்கேயே நிறைவு அடைகிறது கடைசி வார்த்தையாக தன் குடும்ப வாஹியில் இதையும் சேர்ந்துக்கொள்ளுங்கள் சொல்லியபடி.
அவரது இவ்வளவு பரபரப்பான பயணமும் துல்லியமான கவனமான திட்டமிடுதலும், உண்மையைச் சொன்னால் அவரது முழு வாழ்வுமே இந்த வரலாற்றின் பக்கங்களில் எழுதப்படுவதற்காக என்ற உணர்வு நமக்கு எழுகிறது. இந்த கொடிவழியிலேயே அவரது நிறைவு இருக்கிறது.
இதை வாசிக்கும்போது எனக்கு ஏனோ வைத்தீஸ்வரன்கோவில் நினைவுக்கு வந்தது. நம் எல்லோருடைய வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய ஏடுகள் எப்போதோ எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன என நம்பிக்கை இருக்கும் வைத்தீஸ்வரன் கோவில் போன்ற இடமும், எல்லோர் வாழ்க்கையின் வரலாறுகளின் நிறைவை எழுதி வைக்க ஹரித்துவார் போன்ற இடமும் ஒரே கலாச்சாரத்தில் காலம்காலமாக இருந்துகொண்டிருக்கின்றன என்பதே ஒரு ஆச்சர்யம் தான்.
வரலாறுகள் என்பது இந்திய கலாச்சாரத்துக்கு மட்டுமே உரித்தானவையல்ல, வரலாறுகள் வாய்மொழி கதைப்பாடல்களாக இருப்பது பல பண்டைய கலாச்சாரங்களிலும் இருப்பது தான், ஆனால் அவை பெரும்பாலும் ஒரு நாயகனின் பாடலாக இருக்கும். ஆனால் சாமானிய குடும்பங்கள் வரலாறாவதும் பெருங்கதையாவதும் தான் இங்கு தனித்தன்மையாக இருக்கிறது
குடும்ப தகவல்களும் கூட சீனா, ஜப்பான் உடபட பல பண்டைய கலாச்சாரங்களில் இருந்திருக்கிறன. ஆனால் அவையெல்லாம் ஒருவகையில் அரசோடு இணைந்தும் இருக்கின்றன. ஆனால் அரசுகள் மாறக்கூடியவை, அரசுகள் வீழும்போது அந்த முறையும் தொடர்பற்று அழியும் வாய்ப்பிருக்கிறது. எனவே அரசுக்கு வெளியே இதற்கென ஒரு இடம் இருப்பது ஒரு வேர்களின் தொடர்ச்சியை பதிவு செய்வதில் இருக்கும் மனநிலையைக் காட்டுகிறது.
இதைப் பற்றி யோசிக்கும்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது
Modern state பற்றி என்பதன் வரையறை என்ன, அது முதலில் உருவாகி வந்த கலாச்சாரங்கள் என சீனாவையும் இந்தியாவையும் சொல்லும் பிரான்ஸிஸ் புகுயோமா, அதன் தன்மையாக சொல்வது அதிகாரத்துக்கும் சட்டங்களுக்கும் இருக்கும் உறவை. சீனாவில்Qin dynasty காலத்திலேயே இவை தனித் தனியாக இருந்தாலும் அரசு நினைத்தால் சட்டங்களை எப்போதும் மாற்றிக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது, அது மாடர்ன் ஸ்டேட் என்பதன் வரையறையை குறைக்கிறது. ஆனால் அவர் வரலாற்றில் இந்தியாவின் தனித்தன்மையாக சொல்வது, இந்தியாவில் அரசு அதிகரமும் சட்டங்களும் தனித்தனி குழுக்களுடம் இருந்தது தான்.
ஹரித்துவரின் தொடர்ச்சி பல பேரரசுகள் மாறிய பின்னரும் தொடர்வதும் இந்த விலகி இருக்கும் தன்மையினால் தான். சொல்லப்போனால் எழுத்தாளர் இரா.முருகன் எழுதியிருக்கும் இந்த அரசூர் வம்ச நாவல்களின் தனிச்சிறப்புமே இந்த விலகியிருக்கும் தன்மை தான்.
ஒரு மாபெரும் வரலாற்றை, சாமானிய மனிதர்களின் வாழ்வை, மெடா நரேடிவ் என பெரிய கேன்வாஸில் வைத்து எழுத்தாளர் இரா முருகன் ஒரு மிகப்பெரிய சித்திரத்தை நமக்கு உருவாக்கியளிக்கிறார்.
–
அரசூரில் தொடங்கிய ஒரு வம்சத்தின் பல தலைமுறைக் கதைகளை சொல்லும் இந்தக் கதை க்ராண்ட் நரேடிவ் அல்லது மெடா நரேட்டடிவ் மேஜிஜல் ரியலிசம் மூலம் சொல்லப்படுகிறது.
ஆசிரியரே இந்த நாவலின் முன்னுரையில் சொல்லியிருப்பது போல இந்தக் கதையாடல் முறையின் காலம் முடிந்துவிட்டது என்ற கருத்தும் இருக்கின்றது. பெரிய நரேடிவில் சொல்லப்படும்போது எல்லாமே முன் தீர்மானிக்கப்பட்டவையாகத் தோன்றலாம். பக்கத்தில் இருந்து பார்க்கும் ஊரில் சாக்கடையும் ட்ராபிக்கும் நாம் விமானத்தில் இருந்து பார்த்தால் மிக அழகாகத் தெரிவது போல. ஆனால் அதையும் இந்த நாவல் கவனமாக ஈடு செய்கிறது.
யோசித்துப்பார்த்தால், நாம் இன்று வந்தடைந்திருக்கும் பல வரலாற்று இடங்கள் தற்செயல்களாலும் அபத்தங்களாலும் ஆனவை.
நம் இந்திய வரலாற்றிலேயே அப்படி ஒரு உதாரணம் சொல்லலாம், இந்த நாவலில் மயில் ஒரு முக்கியப் பாத்திரமாகவே வருவதால் மயில் பற்றியே அப்படி ஒரு வரலாறு நம்மிடம் இருக்கிறது, அதைப் பார்க்கலாம்.
மயில் இந்தியாவின் தேசியப் பறவை. இன்று அது இல்லாமல் இன்னொன்றை தேசியப்பறவையாக நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அப்படி நினைப்பதை Hindsight அல்லது suvivur ship bias என்று கூட சொல்லலாம்.
நம்மில் பலர் சின்ன வயதில் மயிலை நேரடியாகப் பார்க்காதவர்களின் நோட்டுப்புத்தங்களில் கூட மயில்கள் குட்டிபோட்டுக்கொண்டிருந்திருக்கும், அந்த அளவு நம்மோடு பின்னிப்பிணைந்த மயில் இல்லாமல் எப்படி இன்னொரு பறவை தேசியப் பறவையாக இருக்கமுடியும் என்றே இன்று நினைக்கத் தோன்றலாம்.
ஆனால் உண்மையில் அது அவ்வளவு எளிதான தேர்வாக இருக்கவில்லை. தேசியப் பறவை என்றால் சில நிபந்தனைகள் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. 1. அது நம் நாட்டுக்கு மட்டுமே தனித்தன்மையானதாக இருக்க வேண்டும் 2. அழகானதாக கம்பீரமானதாக இருக்கவேண்டும். 3. அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும். இந்த எல்லா நிபந்தனைகளிலுமே மயிலை விட இன்னொரு பறவை முன்னணியில் இருந்தது. மயில் கூட இந்தியாவில் மட்டுமே இருக்கக்கூடிய பறவை அல்ல.
ஆனால் அந்தப் பறவை கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் இந்த மூன்று நிபந்தனைகளும் இல்லை. இன்னொரு காரணம். அதன் காரணம் இந்தப் பறவையின் பெயர், க்ரேட் இண்டியன் பஸ்டார்ட்.
இண்டியன் பஸ்டார்ட் என்ற பெயரை எப்படி உச்சரிப்பார்களோ என்று பயந்தே அந்தப் பறவை போட்டியில் இருந்து விலக்கிவைக்கப்பட்டு மயில் தேசியப்பறவையானது.
வரலாற்றின் இந்த தற்செயல்களையும் அபத்தங்களையும் இந்த நாவலில் மிக எளிதாக நாம் பார்த்துக்கொண்டேயிருக்கிறோம்.
டெல்லியில் அரசில் வேலைபார்க்கும் சின்ன சங்கரன் அரசூரில் இருக்கும் தன் நண்பரான தியாகராஜ சாஸ்திரியிடம் முதன் முறையாக நாடு சுதந்திரம் பெற்றதைப் பற்றி பேசுகிறான். தியாகராஜ சாஸ்திரியை பொறுத்தவரை சுந்ததிர தினம் என்றால் அவர் நினைவில் இருப்பது, காலையில் பெருமாள் கோவில் தெரு சுப்பமனி சிதார்த்தம், நடுத்தெரு ராஜப்பா பேத்திக்கு காதுகுத்தி ஆயுக்ஷேமம், அனுமார் கோவில் ராயர் சமராதனை, அங்கு உரைக்க உரைக்க சாப்பாடு.
சின்ன சங்கரனுக்கு விமான டிக்கெட் கிடைத்து மீண்டும் வசந்தியோடு வருவதும்கூட இப்படி ஒரு தற்செயல்களின் வலை தான்.
–
இந்த நாவலில் கதைப்பின்னல் முக்கியமாக கவனிக்கத்தக்கது வரலாற்றின் துண்டுகளும், பல்வேறு காலகட்டங்களும், கலாச்சாரங்களும் பின்னிப்பினைந்து வந்துகொண்டேயிருக்கின்றன.
ஆப்பிரக்க தேசத்து தூதராக வரும் வைத்தாஸ் ரெட்டி, இங்கிலாந்தில் இருந்து வரும் கொச்சு தெரசா, மும்பையில் திலீப், டெல்லியில் சின்ன சங்கரன என பல நிலப்பரப்பு மட்டுமல்ல பல காலம் தாண்டியும் கதை சொல்லப்படுறது. கதையின் மாய யதார்த்த முறையில் ஆல்பர்ட் ப்ரபு, குஞ்ஞமனி, பகவதி பாட்டி என என பல பாத்திரங்கள் கதையின் உள்ளேயே வந்துகொண்டிருப்பது ஒரு பெரிய அனுபவத்தை நமக்கு அளிக்கிறது.
இந்த ஒவ்வொன்றும் அவற்றுக்கான மொழிநடை மற்ரும் நுண்தகவல்களோடு ஒவ்வொரு அத்தியாயமும் இன்னொரு அத்தியாயத்தில் வேறுபட்டு இருக்கின்றது. இந்த பல நூற்றாண்டு கால வரலாற்றில் நம் ஊரில் தினத்தந்தி பஜ்ஜிக்கு போல அங்கு இங்கிலாந்தில் பொறித்த மீனுக்கு கார்டியன் பேப்பர் என்ற அளவில் நுண்தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இதன் நிகழ்வுகள் வெவ்வேறு காலவெளியில் நடப்பதால் அவற்றுக்கான தனிப்பட்ட மொழிநடையில் இந்தக்கதை சொல்லப்படுகிறது. அதற்கும் மேல் வைத்தாஸின் நாவலாக பல பகுதிகளும், பகவதி பாட்டியின் டைரியாக வரும் பகுதிகளும் இந்த அனுபவத்தை இன்னும் மேலே கொண்டு சொல்கின்றன.
ஒரு காட்சி: வெகுநாட்களுக்குப் பிறகு ஊருக்கு வரும் சின்ன சங்கரன் அரசூரில் ஒரு சின்ன சந்தில் நின்று, இங்கு சின்ன வயதில் பாட்டியோடு வந்தோம் என நினைவிருக்கிறது, யாரைப்பர்க்க வந்தோம் என நினைவில்லையே என யோசிக்கிறார், அப்போது அங்கு ஒவ்வொரு ப்ராபலிட்டியாக காட்சிகள் தோன்றுகின்றன, அப்போது பழைய பாத்திரங்கள் மட்டுமல்லாமல், இப்போது அவருக்கு அறிமுகமான, பழைய டெல்லியில் மோடா கடை வைத்திருக்கும் சர்தார் குர்னாம் சிங், எதிர்வீட்டு பஞ்சாப்காரி அவர்களையும் ஒரு கடந்த கால நினைவில் மனம் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி
நீலகண்டன் இறந்தபின் கற்பகம் நினைவில் வரும் நீலகண்டன் எந்த வயது நீலகண்டன், இறக்கும்போது இறந்த நீலகண்டனா அல்லது முன்பு இருந்த பலமான நீலகண்டனா என்பவற்றிலெல்லாம் மன விளையாட்டுகளை மிக இயல்பாக காட்சிப்படுத்தட்டிருக்கின்றன.
வரலாற்று சம்பவங்கள் வரலாறாகச் சொல்லப்படாமல், இந்த நாவலின் நடையில் அங்கங்கு தொட்டுக்காட்டியபடியே சொல்லப்படுகின்றன. ரேடியோவில் க்ரிக்கெட் கமெண்டரி, நேருவின் ரஷ்யா தொடர்புகள், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் கொச்சு தெரசா, அவளது பாகிஸ்தான் கணவன் முசாபர், ஆங்கிலேய பாதர் உடபட விசா வாங்கும் நடைமுறைகள், உள்நாட்டு விமான பயணங்கள் என அந்த காலகட்டத்தை நாம் உணர்கிறோம். இப்படி நேரடி வரலாறுகள் ஒருவகை என்றால் ஆப்பிரிக்காவில் நடந்த ராணுவபுரட்சி, அரசுகள் செயல்படும்முறை என இன்னொரு பார்வையும் வைக்கப்படுகிறது.
அந்த விமான பயணத்தில் மாயமாக மறையும் பரமேஸ்வரன் நீலகண்டன் இந்த அரசூர் யுனிவர்ஸில் எந்த ப்ளாக்ஹோல் வழியாக எங்கு சென்றார் என பின்வரும் நாவல்களில் தான் தெரியும்.
முன்பே சொன்னது போல இங்கிலாந்தின் Calderdale இருந்து டெல்லி வரை மயில் இந்த இழையை தொடர்கிறது. இந்த நாவலில் மயிலின் வர்ணனை ஒன்று வரும். மயில் தூரத்தில் இருந்து பார்க்க மிக அழகானது, ஆனால் அதன் அலகுகளையும் கால்களையும் அதன் அகவலையும் நெருக்கமாக பார்க்கும்போது ஒரு அதிர்ச்சியை அளிக்கவல்லது என. அதே மர்மமும் சுவாரஸ்யமும் கொண்ட குறியீடாக மயில் இந்த நாவல் முழுவதும் அமைந்திருக்கிறது.
"எதுவும் நிரந்தரம் இல்லை இங்குயெ மயிலிறங்க சாவு தொலையும், அங்கே மயிலாட சாந்தி வரும்" என பைராகி சொல்வதும், அர்ஜூன நிருத்தம் பற்றிய ரெபர்ன்ஸும்
நுண்ணிய பகடிக்கு இன்னொரு இடத்தையும் சொல்லலாம் என நினைக்கிறேன்.
சில பேட்டிகள் அல்லது உரைகள் மிக அறிவார்ந்தவை போல தோற்றமளித்தாலும் அதில் உண்மையான கருத்தை விட மாட்டிக்கொள்ளாமல் இருக்கும் சாமர்த்தியமே இருக்கும். ஒருவர் சரியாக பேசுகிறாரா இல்லையா என்பதை விட அவர் மாட்டிக்கொள்ளாமல் சாமர்த்தியமா பேசுகிறார் என்பதே ஒரு திறமை போல பேசப்படும், அதுபோன்ற ஒன்று இது.
வைத்தாஸின் ஒரு ஆங்கில பத்திரிகை பேட்டி. பேட்டி ஆரம்பிக்கும் முன்னரே அவர் ஒரு முடிவு செய்துகொள்கிறார். அதாவது கேள்விக்கு தொடர்போடு எதுவும் பேச தேவையில்லை, ஆனால் punchஆக மேற்கோள் காட்டும்படி சில வாக்கியங்கள் அமைந்தால் போதும் என.
எல்லாவற்றுக்குமே சாமர்த்தியமாக மாட்டிக்கொள்ளாமல் பேசும் அவரிடம் நிருபர், அப்படினா உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் பெயரைச் சொல்லுங்கள் என கேட்கும்போது
இன்னும் எழுதாத எழுத்தாளார்களின் எழுதப்படாத நாவல்கள் சிறப்பானவை, அவை என்னுடைய எல்லா பட்டியல்களிலுகும் இருக்கின்றன என்கிறார்.
இன்றைய இடம்:
இந்த முன்னுரையிலேயே ஆசிரியர் சொல்வதுபோல நாம் முன்னோர்களின் தொடர்சியாக இருப்பதை நினைவுகூறும்போது நாம் அதிலிருந்து வித்தியாசப்பட்டு வளர்வதையும் விழைகிறோம்.
இன்றைய நிலையில் இந்த வித்தியாசப்படுத்துதலின் எல்லையையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒருவரை பார்த்து அவன் அல்லது அவள் என்று சொல்வது கூட அவர்களது தனியுரிமையை மீறும் செயல், அவன் அல்லது அவள் என்பது பிறப்பால், உயிரியலால் வருவதல்ல அது அவரவர் முடிவு செய்வது. தனிமனித உணர்வு என்பது வரலாற்றிலிருந்தும் குடும்பத்திலிருதும் மட்டும் விடுபடுவது மட்டுமல்ல தன் உடலினின் அடையாளாத்திலிருந்து கூட விடுபடுவது என்ற உணர்வும், வரலாற்றை அறிவதின் நிறைவும் சேர்ந்தே உணரும் காலகட்டதில் இருக்கிறோம்.
இந்த நாவலில் முதலில் லோகதேவிபாட்டி பார்த்த குடும்ப வாஹியில் தனியாக நின்ற குஞ்ஞமணி, காலம் தவறி இந்த கதைக்குள் ஆங்காங்கே வருவதும் மீழ்வதும் இந்த நாவலின் ஒரு நிறைவாழ்வை, ஒரு மாபெரும் தொடர்ச்சியின் நிறைவை அளிக்கிறது.
வரலாறு என்பது எப்படி நிகழ்தது என்பதல்ல, எப்படி நினைவில் கொள்ளப்படுகிறது என்று சொல்லப்படுவது போல, நிஜ வரலாறு பல சிக்கல்களும் தற்செயல்களும் கசப்புகளும் நிறைந்தவை. அதையே அரசியல் நரேஷன் தங்களுக்கு சாதகமான நரேஷனில் கொண்டு செல்ல்லும். தாங்கள் மிக நல்லவர்கள், வரலாற்றின் துரோகங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம், அதற்குக் காரணம் எதிரியின் சதி, நமக்கு எதிரி இவர் என சுட்டிக்காட்டுவது போன்ற இயல்புகள் அவற்றுக்குண்டு, அதற்கான அரசியல் காரணங்களும் இருக்கலாம்.
ஆனால் இந்த நாவல் தருவது எந்த எதிரிகளும் இல்லாத சாமானியர்களின் வாழ்வின் வழியாக வரலாற்றை அதன் எல்லா உணர்ச்சிகளோடும், நுண் தகவல்களோடும் காட்டி பேரரசுகள் இருந்தாலும் வீழ்ந்தாலும் தொடரும் ஹரித்துவார் தொடர்ச்சி போல, ஒரு தொடரும் இழையாக தொடரும் வரலாறிற்ன் நிறைவைத் தருகிறது இந்த நாவல்.
ரோஹித் அவுட் ஆனதும் கோலி தட்டிக்கொடுத்து அனுப்பும் போட்டோ நேற்று பரப்ரப்பாக பகிரப்பட்டது. என்ன சார் இது ஒருவர் சென்சுரி அடுச்சி இருக்காரு ஆனால் அவரை முன்னிலைப் படுத்தமல், அவர் அவுட் ஆனதும் ஆறுதலா தட்டிக்கொடுப்பதை ஒரு பெரிய விஷயமா பார்ப்பதா என கேட்டார் நண்பர் ஒருவர். அந்த போட்டோ பரபரப்பாக பார்க்கப்பட்டதற்கு காரணம் இல்லமால் இல்லை.
இதுவரை இரண்டு மேட்ச் முடிந்தநிலையில் இரண்டிலுமே 50 அடித்திருக்கிறார் கோலி, உறைய விட்டு வாளெடுத்தா கோலியின் பேட் ரத்த ருசி பார்க்காமல் விடுவதில்லை. ஆனால் நேற்றைய மேட்ச் நினைவில் இருக்கப்போவது ரன்களுக்காக அல்ல், அதை விட முக்கிய விஷயம் இருக்கிறது.
நேற்று ரசிகர்கள் ஆப்கன் அணி கடைசியில் நவீன் பேட்டிங் வரும்போதே அது ஆரம்பித்தது, ரசிகர்கள் அவன் மீது கடும் கிண்டலில் இறங்கினர், ஏனென்றால் ஏற்கனவே ஐபில் ல் அவர் கோலியோடு ஏற்பட்ட ஒரு சச்சரவில் இறங்கியது தான் மீண்டும் பீல்டிங் வரும்போது அதே கிண்டல்கள்.
விராத் கோலி பேட்டிங் இறங்கியதும் அதை கவனித்து நவீனை அணைத்து, பிரச்சனை ஏதும் இல்லை என ரசிகர்களுக்குக் காட்டினார். விளையாட்டு என்பது தீவிரத்துடன் விளையாடப்படவேண்டியது, அதில் அவ்வப்பொது அந்த தருணத்தின் தீவிரத்தால் சச்சரவுகள் வருவது இயல்பு அது தான் விளையாட்டின் அழகு, ஆனால் அதை வன்மமாம மனதில் வைத்திருக்கக்தேவையில்லை.
நேற்று அடித்த ரன்களை விட நவீனை மன்னித்து தட்டிக்கொடுத்து ரசிகர்களுக்கு விளையாட்டின் நற்பண்பை காட்டியதே இந்த நேற்றைய விளையாட்டின் உண்மையான பெரிய மொமெண்ட்.
அவரே சண்டை போடுவாராம், அவரே கட்டியணைப்பாராம் என சிலர் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் நேற்று கோலி காட்டிய பெருந்தன்மை தனி நிகழ்வல்ல,
2019ல் ஆஸ்திரேலிய முன்னால் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரசிகர்களால் கிண்டல் செய்யப்படும்போது அவருக்கு ஆதரவாக நின்றவர் என்பதும் நமக்குத் தெரியும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் அவர் முன்பு பால் டெம்பரிங் செய்த குற்றச்சாட்டுக்காக ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானபோதும் இதே கோலி, அப்படி கிண்டல் செய்வது தவறு என ரசிகர்களுக்கு உரிமையாக பாடம் எடுத்தவர்
நிஜவீரன் தாக்குபவன் மட்டுமல்ல, யார் வேண்டுமானால் தாக்கமுடியும். காப்பவனே நிஜ வீரன். ஆஸ்திலியாவுக்கு எதிரான மேட்சியில் அணியைப் காப்பாற்றியதை விட, இந்த மேட்சில் sprit of cricket காப்பாற்றியது க்ரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னும் நிறைவளிப்பதாக இருக்கிறது.