Unordered List

10 டிசம்பர் 2011

போராளி - கலகலப்பு, கம்பீரம்

நாம் செய்ய நினைப்பதை திரையில் செய்பவன் தான் நமக்கு பிடித்த நாயகன். அப்படி நம்மைக் கவர்ந்துவிடுகிறான் இந்தப் போராளி.

ரசிகர்களுக்குப் பிடிக்கவேண்டுமே என யோசித்து வசனம் வைப்பவர்கள் பலர். ஆனால் பேசுவதெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்படி அமைவது சிலருக்குத் தான். சசிகுமாருக்கு இந்தப் படத்திலும் அப்படியொரு வரவேற்பு கிடைகிறது.

படத்தின் முக்கிய பலம் வசனங்கள், முக்கியமாக சசி பேசும் வசனங்கள். சில வசனங்கள் நானே எப்போதோ பேசியது போல இருந்தது. பல வசனங்கள், நாம் பேச நினைப்பதை அவர் பேசுவது போல இருந்தது. அரங்கத்தில் கிடைக்கும் கைதட்டல்களைப் பார்க்கும்பொழுது எல்லோருக்கும் இது பிடிகிறது எனது தெரிகிறது


போராளி என்ற பெயரையும், விளம்பரங்களில் சசிகுமாரின் டெர்ரர் பார்வையையும் பார்த்து கொஞ்சம் பயந்துகொண்டுதான் போகவேண்டியிருந்தது, ஆனால் படத்தில் கலகலப்புக்குக் கொஞ்சமும் பஞ்சம் இல்லை. இடைவேளைவரை சிரிப்பிலும் கைதள்ளளிலும் அரங்கம் அதிர்கிறது. இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் ரணகளங்கள் இருந்தாலும் இடையிடையில் கலகலப்புக்கும் பஞ்சமில்லை.

தீமைக்கும் நன்மை செய்யும் நாயகனாக வரும் சசி, தன்னைச் சுற்றி நடக்கும் சதிகளை ஜஸ்ட் லைக் தட் சமாளிக்கும் பாத்திரத்தில் ஜொலிக்கிறார். தன்னை விரட்டும் மக்களிடமிருந்து மனநல மருத்துவமனைக்கு, அங்கிருந்து சென்னைக்கு எனச் சொல்லும் இடமெல்லாம் தன் நேர்மையான பாசிடிவ் திங்கிங் மூலம் நண்பர்களை சேர்த்தபடி செல்கிறார். அந்த "விதியே போற்றி.." வரும் இடங்கள் அருமை.

உண்மையில் நமக்குத் தீமை செய்பவர்களை தண்டிப்பதில் எந்த பலனும் இல்லை. கீழான எண்ணங்களில் உழலும் அவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.

வெற்றி என்பது தீமை செய்பவர்களை தண்டிப்பதில் இல்லை. தீமை செய்பவர்களால் நம்மை அணுகமுடியாதபடி நம்மை வலுப்படுத்திக் கொள்வதே உண்மையான வெற்றி. இதை இந்தக் கதை அருமையாகச் செய்கிறது.

இடைவேளைக்குப் பிறகு வரும் சூரி காமடியில் கலக்குகிறார். அவரது வசன உச்சரிப்பு இயல்பான காமெடியாக அமைந்துவிடுகிறது. கொஞ்சம் நேரமே வரும் வசுந்தராவும் படத்துக்கு மிகப் பெரிய பலம்.

ஒவ்வொரு பாத்திரமும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்துள்ளனர். பேராசிரியர் ஞானசம்பந்தம் ஒரு சந்தோஷமான ஆச்சர்யம். மிக நிறைவாகச் செய்துள்ளார்.

கேரளா பின்புலத்தில் வரும் மனநல காப்பக காட்சிகள் படத்துக்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுக்கின்றன. இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. பாராட்டுக்கள்.

கலகலப்பான கம்பீரமான ஒரு படம் இந்தப் போராளி!

சசி மற்றும் சமுத்திரக்கனிக்கு ஒரு கேள்வி. அடுத்த கலக்கல் படம் எப்போ?