Unordered List

07 டிசம்பர் 2013

ரயிலிரவு

மதியம் எக்ஸ்பிரஸ் அவென்யுவில் பாதுகாப்பு சோதனைகள் பலமாக இருந்தது. உள்ளே வரும் கார் டிக்கியை எல்லாம் திறந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சோதனை செய்வதிலும் ஏதோ ஒரு லாஜிக் இருக்கிறது போல. எனக்கு  முன்னால் இருந்த ஹோண்டா காரை சோதித்த அளவுக்கு எனது காரை சோதிக்கவில்லை என்பது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். இந்தக் காருக்கெல்லாம் இவ்வளவுதான்  வொர்த்  நினைத்து விட்டார்களா என்று யோசித்தேன். அடுத்த வருடத்துக்குள் இதற்காகவாவது ஒரு ஹோண்டா கார் வாங்க முடியுமா  என்று பார்க்கவேண்டும்.

இரவு எக்மோர் ரயில்  நிலையத்திலும் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன. அப்போது தான் ஞாபகம் வந்தது, அது டிசம்பர் 6 அல்லவா, இவ்வளவு சோதனைகள் கூட இல்லாவிட்டால் எப்படி. ஆனால் ரயில் நிலையத்தில் ஒரு கூடுதல் வசதி இருப்பதை அப்புறம் தான் கவனித்தேன்.  நீங்கள் விருப்பப்பட்டால் சோதனைக்கு உள்ளாகலாம். அல்லது சோதனை இல்லாமலே உள்ளே பிரவேசிக்கலாம். இப்படி இரு ஏற்பாடுகள்  இருந்தன அங்கு.

வழக்கமான வழியில் சென்றபோது மெட்டல் டிடெக்டர் உட்பட சோதனைகள் எல்லாம் பலமாக இருந்தது நடந்தது. சரி, ரயிலுக்கு கொஞ்சம் இருக்கிறதே என்று வெளியே வெளியேவந்து சாப்பிட்டேன்.  ரயில் நிலையம் ஓரமாக இருக்கும் ஆனந்தபவனில் இனிப்புகள் வாங்கிக்கொண்டு அந்த வழியாக உள்ளே சென்றால், அங்கே எந்த ஒரு சோதனையும் இல்லை. மிக நல்ல ஏற்பாடுதான்.


இன்னும் நேரம் இருந்ததால் நிலையத்தினுள் இருக்கும்  ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடையில் நின்று புத்தகங்களை மேய்ந்தேன். கையோடு ஒரு புத்தகம் படிக்க கொண்டுபோயிருந்தாலும் சிலசமயம் சில நல்ல  இப்படி சும்மா பார்க்கும்போது கிடைப்பதுண்டு. அதுமட்டுமில்லாமல்  பொதுவாக கூட்டத்திலிருந்து தப்பிக்கும் வழியாக நான் நினைப்பது புத்தகக் கடைகள் தாம்.  நெரிசலான அந்த ரயில் நிலையத்தில் அதிக கூட்டமில்லாத இடம்  அது தான்.

அப்போது  ஒரு பெண்   அவசரமாக அங்கு வந்தாள். நான் அவளைக் கவனித்ததேன் என்று சொல்லிவிட்டபிறகு அவள் ஒரு அழகானப் பெண் என்று வேறு தனியாகக சொல்லத் தேவையில்லை. ஜீன்ஸ் போட்ட மாடர்ன் அழகி அவள். என்ன புத்தகம் வாங்குகிறாள்  என்று லேசாக  கவனித்தேன். அவள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை, சட்டென இரு புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரும்பினாள், பார்த்து கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். அவை  குமுதமும் நக்கீரனும். அடப்  பாவமே!  இவள் திருமணமான பெண்ணாக இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.


எனது வழக்கப்படி ரயில் நகர ஆரம்பித்ததும் கடைசி நிமிடத்தில்  ஏறினேன். எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இன்னொருவர்  இருந்தார், அது எதிர்பார்த்தது தான். குளிர்சாதன பெட்டி முன்பதிவு  செய்திருந்ததில், அப்பொது  ஆர்.ஏ.சி. யில் இருந்தது.  எனவே  வேறு இருக்கை  கிடைக்கும்வரை நாங்களிருவரும் அந்த இருக்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

செங்கல்பட்டு தாண்டியவுடன் ஆள் வராத காலியிருக்கை இருந்தால் கொடுப்பதாக டீ.டீ .ஆர் வாக்களித்துச் சென்றார். 
நல்ல சிஸ்டம் தான். நாங்களிருவரும் ஆள் வராமல் காலியிருக்கை ஏற்படவேண்டுமென விரும்பிக்கொண்டு அமர்ந்திருந்தோம். இன்னொருவர் ரயில்லைத் தவறவிட்டு அப்படி இருக்கைக் வேண்டும் என விரும்ப ஆரம்பித்ததை கவனிக்க ஆச்சர்யமாக இருந்தது. அமர்ந்தபடியே கையிலிருந்த வெள்ளையானை புத்தகத்தைப் படிக்க ஆரம்பிதேன்.

"ஆச்சர்யமே இல்லை" என்றான் ஏய்டன்.     "உலகம் முழுக்க நான் பஞ்சங்களைப் பார்த்துவிட்டேன். எந்தப் பஞ்சத்திலும் சாகும் மனிதனுக்கு வாழும் மனிதன்  உதவிசெய்ததில்லை.பஞ்சத்தில் ஒருவன் சாவதக் கண்டதும் மற்ற அத்தனைபேரும் பதற்றமாகிவிடுகிரார்கள். அந்த நிலை தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.... மனிதர்களின் இயல்பான சுயநலம் கிளம்பிவரும். - வெள்ளை யானை நாவலிலிருந்து