Unordered List

09 நவம்பர் 2011

சென்னையில் ஒரு மழை நாள் - படங்களுடன்

மழை பெய்கிறது. ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலே நிற்கிறார்கள். ஈரத்திலே உட்காருகிறார்கள்,
ஈரத்திலேயே நடக்கிறார்கள்.
ஈரத்திலேயே படுக்கிறார்கள்.
ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்.

மழையிலும் கடமையில் ஆட்டோக்காரர்கள்

சாலை முழுவதும் தண்ணீர்



இரவில் மழைநாள்

நொய்ந்த வீடு,
நொய்ந்த கதவு,
நொய்ந்த கூரை,
நொய்ந்த மரம்,
நொய்ந்த உடல்,
நொய்ந்த உயிர்,
நொய்ந்த உள்ளம்
-இவற்றைக் புடைத்து நொறுக்கிவிடுவான்.

வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்.
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.
உயிரை வலிமையுற நிறுத்துவோம்.
உள்ளத்தை உறுதி செய்வோம்.
நமக்குத் தோழனாகிவிடுவான்

மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான்.
அவன் தோழமை நன்று.



நான் கிளிக்கிய படங்கள். பாரதியின் வரிகளோடு

07 நவம்பர் 2011

குருவிக் கதை

சென்னை மெட்ரோ ரயில் வேலைக்காக மிச்சமிருந்த அந்த மரமும் வெட்டப் பட்டபோது தான் அந்தக் குருவி யோசிக்க ஆரம்பித்தது.

அந்தக் குருவி மட்டும் என்ன ஸ்பெஷல் என்று தானே யோசிக்கிறீங்க? அந்தக் குருவிக்கு மட்டும் மனிதர்கள் பேசுவதை புரிந்துகொள்ளும் சக்தி இருந்தது.

குருவி புது இடத்துக்கு குடிபோக முடிவு செய்து யோசித்துக் கொண்டிருந்தது. அப்போது தான் அவன் பேசுவதை கவனித்தது. அவனுக்கு குருவிஎன்றால் மிக இஷ்டமாம். அப்போது முடிவுசெய்தது போனால் அவன் வீட்டுக்குத் தான் குடிபோவது என்று. அடுத்தநாள் மாலை அவன்வீட்டு அடுப்பில் வெந்துகொண்டிருந்தது.

குருவிக்குத் தெரியவில்லை. அவன் குருவிஎன்றால் தனக்கு இஷ்டம் என்று சொன்னதின் உண்மையான அர்த்தம்.


கதையின் நீதி:

யாருக்கு எது எவ்வளவு தெரியணுமோ அவ்வளவு தெரிஞ்சாப் போதும். அதுக்கு மேல தெரிஞ்சா டண்டணக்கா தான்.



இன்னொரு கதை:
முயல் ஆமை போட்டி - நடந்தது என்ன?

03 நவம்பர் 2011

கடாபி மரணம் - பகீர் உண்மைகள்

லிபியாவில் நடந்துவரும் பரபரப்பான நிகழ்வுகள் உலகத்தின் அதாவது உலக ஊடகங்களின் பார்வையை அதன் பக்கம் திருப்பியுள்ளன. லிபியாவில் மனித உரிமைகளை மீட்கும்பொருட்டு உலகின் ஜனநாயக நாடுகளால் ஆதரிக்கப் படும் போராட்டம் வெற்றியடைந்து வருவதை உலகமக்கள் யாவரும் கவனித்து வருகின்றனர். சமகாலத்தில் இப்படியொரு ஜனநாயகப் புரட்சியை மேற்கு நாடுகள் நடாத்திக்காட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து நடுநிலையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துப்பாக்கி சண்டை, கட்டடிட்டங்கள் தகர்ப்பு மற்றும் குண்டு வெடிப்பு போன்ற லிபிய ஜனநாயக ஆதரவுப் படையின் ஜனநாயக செயல்பாடுகளைக் காட்டிவந்த ஊடகங்களுக்கு சென்ற வாரம் முத்தாய்ப்பு வைத்ததுபோல் ஒரு படக்காட்சி கிடைத்தது.



கடாபியை தெருவில் பலர் தாக்கி அடித்துக் கொல்லுவதுபோன்ற காட்சி உலகமெங்கும் உள்ள எல்லாத்தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து வெளியானது. பிறகு அவர் இறந்துவிட்டதாக செய்தியும் வந்தது. இணையம் மூலமும் அக்காட்சி தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தது.

இந்தக் காட்சி சர்வாதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை என ஒபாமா அறிவித்தார். இதன் மூலம் ஜனநாயகத்தை எப்படி நிலைநாட்டுவது என உலகெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அறிந்துகொண்டனர்.

இது இப்படி இருக்க, கடாபியின் மனதில் உள்ள மர்மங்கள் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. அவரின் கார் மீது பிரான்ஸ் விமானம் குண்டு வீசியிருந்தாலும் பலர் அவரை தாக்கியிருந்தாலும், அவரது மரணத்துக்கு காரணம் என்னவென்பது புதிராகவே இருந்துவந்தது.

கடாபி மரணத்துக்குக் காரணம் என்ன அல்லது யார் எனபதே உலகின்முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி. போர்க்குற்றங்கள் செய்தார் என அமெரிக்கா முதலான மேற்கு நாடுகளால் எதிர்க்கப்பட்ட கடாபி இதுபோல் நிராயுதபாணியாக இருக்கும்போது மேற்குநாடுகள் ஆதரவுபெற்ற புரட்சிப்படையால் கொல்லப்பட்டது சரியா என்ற கேள்வியும் எழுந்தது. இது ஒரு போர்க் குற்றம் இல்லையா என சிலர் கேள்விஎழுப்பினர்.




இதற்குப் பதிலளித்த ஒரு முக்கிய 'நடுநிலை' ஊடக ஆய்வாளர் சில உண்மைகளை விளக்கியுள்ளார்.

அந்தப் படத்தை உற்றுநோக்கினால் ஆரம்பத்திலிருந்தே அவர் முகத்திலிருந்து ரத்தம் வருவதைப் பார்க்கமுடியும். எனவே ரத்தம் புரட்சிப் படையினர் அடித்ததினால் வந்தது என சொல்ல முடியாது.

ஆனால் புரட்சி படையினர் அவரை அடிப்பது அந்த படக்காட்சியில் தெரிகிறதே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் அடி கூட ரத்தம் வருவதற்கு உண்மைக் காரணம் இல்லை. உடம்பில் ரத்தம் இருப்பதே அது வருவதற்குக்காரணம் என்று விளக்கியுள்ளார்.

ரத்தம் இல்லாத ஒரு உடம்பிலிருந்து யாராலும் ரத்தம் வரவைக்க முடியாது என்று தன்னால் நிருபிக்க முடியும் என்றும் அந்த ஆய்வாளர் கூறியுள்ளார்.

இதன் மூலம் பல இதுவரை வெளிவராத பல உண்மைகள் தெளிவடைகின்றன.

கடாபி உயிரிழந்ததுக்குக் காரணம் கூட அவரிடம் உயிர் இருந்தது தான் என இதன் மூலம் தெரிந்துள்ளது. புரட்சிப் படையினர்வசம் சிக்குவதற்கு முன்னரே அவர் இறந்திருந்தால் அவர் புரட்சிப் படையினரிடம் மாட்டிக்கொண்டபின் இறந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அதே ஆய்வாளர் கூறியுள்ளார்.

இதன் மூலம் கடாபியின் மரணத்துக்குக்காரணம் அவரிடம் உயிர் இருந்ததே, அதாவது அவரது மரணத்துக்கு பொறுப்பு அவரே என்று ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ளது.

29 செப்டம்பர் 2011

சமவாய்ப்பெல்லாம் சமமா?

சச்சின் ஒரு புயலைக் கிளப்பியுள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் அணிக்கு இரண்டு இன்னிங்க்ஸ் மூலம் மொத்தம் நான்கு இன்னிங்க்ஸ் வைத்துக் கொள்ளும்படி மாற்றம் தேவையென்று. காரணம்? விளையாடும் இரு அணிகளுக்கும் சமவாய்ப்பு போல தெரிந்தாலும் உண்மையில் சமவாய்ப்பு இருப்பதில்லை. டாஸ் தான் பல போட்டிகளின் முடிவை தீர்மானிக்கிறது.

சரி. இதன் மூலம் சமவாய்ப்பு கிடைத்துவிடுமா? அதெப்படி அதிலும் கண்டிப்பாக டாஸ் மூலம் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கத் தான் செய்யும். என்ன இப்போது 50 ஓவர் வித்தியாசம் 25 ஓவர் வித்தியாசமாகக் குறையும்.

இதைகேட்ட நமக்கு தோன்றுவது என்ன? ஏன் 25 ஓவர்? பத்து பத்து ஓவராக 10 இன்னிங்க்ஸ் விளையாடினால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா? அதிக நேரம்.. அதிக விளம்பரம்.. அதிக பணம். :)



இன்னும் கூட இன்னும் யோசிக்கலாம் ஐந்து ஐந்து ஓவராக 20 இன்னிங்க்ஸ் கூட விளையாடலாம். ஒவ்வொரு ஓவராக? அல்லது ஒவ்வொரு பந்தாக?

----


கிரிக்கெட்டில் அவர்களுக்கு சமவாய்ப்பு கிடைப்பது இருக்கட்டும். உண்மையில் நமக்கு எல்லா இடத்திலேயும் சமவாய்ப்பு கிடைகிறதா? இதைப் பற்றி யாரவது யோசித்ததுண்டா? இதற்கு என்ன செய்யலாம்?

  • ரயிலில் சொல்லும்போது எல்லோருமே விரும்புவது லோயர் பெர்த் தான். சைடு லோயர் அல்லது சைடு அப்பர் யாருக்குமே பிடிப்பதில்லை. அப்படியென்றால் சைடு பெர்த் எல்லாம் விலை குறைவா? கண்டிப்பாக இல்லை. எல்லோரும் செலுத்துவது ஒரே அளவு பணம். அனால் சிலருக்கு வசதி, சிலருக்கு அவதி. ஏன் சைடு பெர்த் பயணக் கட்டணத்தைக் குறைக்கக் கூடாது?
  • பேருந்துகளில் வசதியாக உட்கார்ந்து வருபவர்களுக்கும், கடைசி சீட்டில் வருபவர்களுக்கும் அல்லது நின்றுகொண்டு வருபவர்களுக்கும் ஒரே கட்டணம்.

  • திரையரங்குகளில் நல்ல இடத்திற்கும் ஒரே கட்டணம். ஓரமாக இருக்கைகளுக்கும் ஒரே கட்டணம்.

  • ஒரு மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போது சரியான நேரத்தில் பார்ப்பவருக்கும் அல்லது காத்திருந்து பார்ப்பவர்களுக்கும் ஒரே கட்டணம்.
இதற்கெல்லாம் ஏன் வசதியை வைத்து கட்டணம் நிர்ணயிக்கக் கூடாது?

அதிகம் படிக்கிற பசங்களுக்கு வாங்கும் அதே கட்டணத்தை கொஞ்சமாகப்படிக்கும் பசங்களிடமும் வாங்குவதும் ஒரு அநியாயம் தான் என்கிறார் எனக்குத் தெரிந்த ஒரு கலூரி மாணவர்.

எது மக்கள் கொஞ்சம் யோசித்தால் சரிதான்!

08 செப்டம்பர் 2011

பினாயக் சென் - ஒரு தண்டனை, பல கண்டனங்கள், சில கேள்விகள்


பினாயக் சென்!


ஒரு சிறந்த மருத்துவர். சட்டிஸ்கர் மக்களுக்காக பல சேவைகளைச் செய்தவர். சட்டிஸ்கர் அரசு தொடர்ந்த வழக்கில் தண்டனை பெற்றவர். அவரது ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் மீண்டும் முக்கிய இடம் பெற்றுள்ளன.


தண்டனையும் பெரியது, தேசத் துரோகம். கண்டனமும் பெரியது, சர்வதேசக் கண்டனங்கள்.


ஏன் இந்த தண்டனை? எதற்கு இந்தக் கண்டனம்? கொஞ்சம் காலமாக இது தொடர்பான செய்திகளை தேடி வாசிக்கும்போது, பின்வரும் செய்திகள் கிடைக்கின்றன.


யார் இவர்? பினாயக் சென் ஒரு நல்ல மருத்துவராக பணியாற்றியுள்ளார். சட்டிஸ்கர் அரசை விமர்சனம் செய்துவந்துள்ளார்.


என்ன குற்றம்? அவருக்கு நக்சல் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட ஆராதங்களின் அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.


யாருடைய கண்டனம்? மனித உரிமை அமைப்புகள், பல சர்வேதேச அமைப்புகள் மற்றும் நமது ஊடகங்கள் எல்லாம் இந்தத் தீர்ப்பை கடுமையாக கண்டனம் செய்துள்ளன.


-----------


நான் சென்னையில் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் இந்தக் தண்டனையை கண்டிப்பதாகக் கூறினார். அரங்கு நிறைந்த கைதட்டலோடு அனைவரும் அதை ஆதரித்தனர். ஆனால் அதைப் பற்றி அங்கு தொடர்ந்து பேசாததால் அவர்கள் எந்த அடிப்படையில் கண்டனம் தெரிவித்தார்கள் எனத் தெரியவில்லை.


சட்டிஸ்கர் மாநில பிரச்சனைக்கு சென்னையில் இருக்கும் விழிப்புணர்வு மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. நானும் அங்கு கைதட்டிக் கொண்டிருந்தாலும் எந்த அடிப்படையில் இந்தக் கண்டனம் என்ற கேள்வி எழாமல் இல்லை.


பழங்குடியினர் பிரச்சனை, சுரண்டப் படும் வளங்கள், தீவிரவாதம் மற்றும் தேச பாதுகாப்பு என பலமுகங்கள் கொண்ட இந்தப் பிரச்சனை இந்தியர்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய பிரச்சனை தான்.


இந்தத் தீர்ப்புக்கு வரும் கண்டனங்களை, அவரின் விடுதலைக்கான கோரிக்கைகளை இந்த மூன்று விதமாக பிரிக்கலாம்.


1 . இது சட்டத்திற்கு புறம்பான கைது. அல்லது ஜோடிக்கப்பட்ட வழக்கு. பினாயக் சென் மாவோயிச தீவிரவாதிகளுடன் தொடர்பு இல்லாதவர்.


2 . அவர் சில நக்சல் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தது உண்மை தான். ஆனால் இந்தச் சட்டமே தவறானது. எனவே சட்டம் திருத்தப் பட வேண்டும் .


3 .மற்றதைப் பற்றி கவலை இல்லை. இவர் நல்லவர். மக்களுக்கு நன்மை செய்தவர். பிரபலமானவர். எனவே இவரை விடுதலை செய்யவேண்டும். (அவர் செய்ததது சட்டப் படி தவறாக இருந்தாலும்.)


முதல் காரணமாக இருந்தால் கண்டிப்பாக அவர் தகுந்த விசாரணைக்குப் பின் விடுதலை செய்யப்படவேண்டும். நக்சல் அமைப்போடு தொடர்பு இல்லாதவரைக் கைது செய்வதால் அரசுக்கும் எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை. தகுந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கு நடத்தப் படவேண்டும். கண்டிப்பாக கண்டனங்கள் தெரிவிக்க வேண்டும்.


ஆனால் விடுதலைக் கோரிக்கையின் காரணம் இரண்டாவது அல்லது மூன்றாவது சொல்லப்பட்ட விஷயமாக இருந்தால், கண்டிப்பாக கண்டனங்கள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்தக் கண்டனத்தின் மூலம் சட்ட மீறலும் தீவிரவாதமும் ஆதரிக்கப் படுகின்றனவா என்பதை யோசிக்கவேண்டும்.



நாம் படிக்கும் பல செய்திகள் எந்த அடிப்படையில் வருகின்றன என்பதே குழப்பமாக இருக்கிறது.


பார்க்கலாம்.. தீர்ப்பு எந்த அடிப்படையில் வருகிறது என்று!!!


Related links: