Unordered List

03 ஜனவரி 2013

நடுவுல கொஞ்சம் நண்பர்களைக் காணோம்

ஒவ்வொரு வகையான நண்பர்களுக்கும் ஒவ்வொரு பாடி லாங்குவேஜ் உண்டு. தெரு நண்பர்கள், பள்ளி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், நண்பர்களில் அலுவலக நண்பர்கள் என. இவற்றை அப்படியே திரையில் பார்க்கும்போது பரவசமாகத் தான் இருக்கிறது.  இதில் எல்லா வகையிலுமே நெருக்கமான நெருக்கடியில் தோள்கொடுக்கும் நண்பர்கள் அமைவதுண்டு.

நண்பனின், அல்லது ஒரு நண்பனின் அலுவக நண்பனின் வீட்டில் படுத்துக்கொண்டு வெட்டிபேச்சு  பேசுவது, 2 வீலரில் சுற்றுவது, விளையாடுவது, சட்டென வரும் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளவது என இந்தப் படத்தில் பார்த்தது என்னையும் எனது சில நண்பர்களையும். யப்பா.. பேய் மாதிரி எடுத்திருக்காங்க இந்தப்படம்

இன்று இரவு தூங்கமுடியாது என நினைக்கிறேன். வீட்டிலிருந்து படித்த காலத்தில் கிடைத்த  பள்ளிக்கூட நண்பர்கள் ஒருவகை என்றால், கல்லூரி காலத்தில் கூட தங்கிப்  படித்த நண்பர்கள் இன்னொருவகை. எனது வாழ்க்கையில் நடந்த எல்லா முக்கிய நல்ல விஷயங்களின் பின்னாலும் நல்ல நண்பர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு நினைவுகளையும் இனிமையாக கிளறுகிறது இந்தப்படம்.

நண்பர்களின் உண்மையான மதிப்பு, அவர்கள் செய்திருக்கக்கூடிய ஒரு செயலை மற்றவர்கள் செய்யும்போது தெரிந்துவிடுகிறது.

" நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். எனது முக்கியமான, இப்போது காணாமல் போந  பல நண்பர்களை மீண்டும் தொடர்புகொள்ள வைத்ததற்கு.

04 அக்டோபர் 2012

ஒரு தண்ணீர் உடன்பாடு


"மனிதன் என்பவன் தரையில் வாழவேண்டும், கிடைக்கும் நேரத்தில் சிந்திக்கவேண்டும். அது மனிதனின் வேலை. தவளை வேண்டுமானால் தரையில் இருக்கும் நேரம்போக மற்ற நேரத்தில் தண்ணீரில் குதித்து மிதக்கலாம், ஏனென்றால் அதற்கு வேறு வேலை இல்லை. ஆனால் மனிதனாகப் பிறந்தவர்கள்  முதலில் மனிதனுக்கு தேவையான வேலைகளையே செய்து முடிக்காமல், தவளைகளின் வேலைகளைச் செய்வது வீண் வேலை இல்லையா? முதலில் மனிதன் செய்யவேண்டிய  வேலைகளைச் செய்யனும் தம்பிகளா .. அப்புறம் தவளையின் வேலைகளைச் செய்யலாம்,"  ஒரு நண்பனின் தோட்டத்து கிணற்றில் நண்பர்கள்  எல்லோரும் மிதந்துகொண்டிருக்க, கிணற்றின் படிகளில் பத்திரமாக  உட்கார்ந்துகொண்டு நான் உதிர்த்த 'அறிவுரைகள்'  தான் அவை. ஆனாலும் நான் கொஞ்சம் தைரியசாலி, நான் உட்கார்ந்த்திருந்தது எனது கால் தண்ணீரில் படும்படி இருந்த, தண்ணீருக்குள் மேலிருந்த கடைசிப்  படிக்கட்டு. என்னைபோலவே நீச்சல் தெரியாத இன்னொரு நண்பன் இருந்தது இன்னும் உயரமான படிக்கட்டு. அவனுக்கு என் அளவுக்கு தைரியம் பத்தாது.

நீச்சல் தவளைகளின் வேலை என்று நான் ஐயம் திரிபர நிறுவிக்கொண்டிருந்தாலும், அருவிக்குளியல் மனிதர்களுக்கானது என்பதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை, அருவிக்குளியல் வாய்ப்பை எப்பொதும் தவறவிடுவதில்லை.


இப்படியாக இயற்கையுடனான ஒரு உடன்பாட்டை நான் கடைப்பிடித்து வந்தாலும், இயற்கை என் அளவுக்கு உடன்பாட்டை மதிப்பதில்லை என்று எனக்கு மெல்ல மெல்ல தெரியவந்தது. சில அருவிகளை, அதுவும் காட்டுக்குள் இருக்கும் அருவிகளை நீந்தித் தான் அடையவேண்டும் என்ற கட்டாயத்துடன் அமைத்திருந்தது இயற்கை. கொல்லி மலையில் பல கிலோமீட்டர்கள் கீழே இறங்கி அடைந்த ஆகாய கங்கையில் இந்த நிலை. பிறகு சென்ற பர்கூர் காட்டருவியிலும் அதே நிலை, இங்கே சென்னைக்கு அருகிலுல்ல தடாவிலும் கூட.இயற்கையின் சதியை மீண்டும் மீண்டும் சந்தித்தது எனக்கு எதையொ உணர்த்தியது. அந்தக் காலத்து படங்களில் மூன்றுமுறை அடிவாங்கி, வாயில் கசியும் ரத்தத்தை தொட்டுப் பார்த்தபின் வீரம் வரும் ஹீரோ போல உணர்ந்தேன். ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிலைமை. இயற்கையானது எப்போதும் இயங்கும் மகாதர்மத்துக்குக்  கட்டுப்பட்டது. என்னை நீச்சல் அடிக்கவைத்தே தீருவது என்று எங்கும் பரவியிருக்கும் அந்த மகாதர்மம் முடிவு செய்துவிட்டால் அதற்கு ஒரு நோக்கம் இருக்கத் தானே செய்யும். அந்த நோக்கத்தை யாரறிவார்? இயற்கையை அதன் வழியிலேயே எதிர்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

இயற்கையின் சதி


உடனடியாக செயலில் இறங்கினேன். நமக்கு எந்த விஷயம் தெரியவேண்டுமானாலும் முதலில் யாரைக் கேட்பது. ஆம் நான் முதல் செயல் நமது கூகிள் அண்ணாவிடம் கேட்டது தான். கூகிள் என்னை youtube-க்கு அனுப்பி வைத்தது. சிலமணிநேரங்கள் அதில் செலவழித்து கிட்டத்தட்ட ஒரே இரவில் நீச்சலைக் கற்றுக்கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும். இவ்வளவு எளிதான ஒரு விஷயத்தை ஏன் இவ்வளவு நாட்களாக செய்யவில்லை என்ற வியப்பும் உருவாகியது. இதிலும் அந்த மகா தர்மத்தின் விளையாட்டு இருக்கக்கூடுமென உணர்ந்தேன்.

அடுத்த கட்டமாக youtube மூலம் ’கற்றுக்கொண்ட’ வித்தையை ஒரு நீச்சல் குளத்தில் காட்டுவது என்று முடிவு செய்தேன். ஒரு விஷயம் தெரிந்தபின் அதை சந்தேகப்படுவது தவறு என்று தெரிந்திருந்தாலும், காலத்தின் கட்டாயத்தால் நீச்சல் குளத்துக்கு செல்லவேண்டிய சூழல் உருவானது. காலாண்டு விடுமுறை காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவனுடன் கூட்டணி அமைத்து நீச்சல்குளம் சென்றேன்.

பல வருடங்களாக நீச்சல் அடித்துவந்தாலும், நான் படித்தறிந்த பல நுணுக்கங்கள் அவனுக்குத் தெரியவில்லை எனபது மிக ஆச்சர்யம் தான். போகும் வழியில் அந்த நுணுக்கங்களை அவனுக்குக் சொல்லிக்கொடுத்தபடியே சென்றேன். அதில் அவ்வப்போது சில சந்தேகங்களையும் கேட்டு அவனது ஆர்வத்தைப் பறைசாற்றிக்கொண்டு வந்தான் அவன். அந்த ஆர்வத்துக்குக் காரணம் வீட்டில் என்ன செய்வதுஎன்று தெரியாமல் இருந்த அவனை நீச்சல் குளம்  கூட்டிச்சென்று வருகிறேன் என்று கொடுத்த வாக்குறுதியா அல்லது உண்மையான ஆர்வமா என்றறியேன். அனால் குளத்தில் இறங்கியவுடன் அவன் சொன்னது "அங்கிள், நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க ஆனால், ரெம்ப ஆழம் போயுடாம, இந்த சுவத்தைப் பிடித்தபடி பண்ணுங்க" என்றான். அவனும் கவனிக்கிறான் போல.

ஆனால் அந்தத் நீச்சல் குளம், youtube போல அந்த அளவுக்கு எளிதல்ல என்று தோன்றியது. நீச்சல் அவ்வளவு எளிதாக வரவில்லை அங்கு. காரில் வந்த  நேரம் முழுவதும் நான் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த அவன் இப்போது பேச ஆரம்பித்தான், நீச்சல் அடிப்பதைப் பற்றி. சிறிது நேரத்தில் அங்கு இருந்த பல சிறுவர்கள் மிக உற்சாகமாக எனக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தனர். நேரம் தான்.

அப்புறம் இரு நாட்கள் முயற்சிகளுக்குப் பின் நீச்சல் ஒருமாதிரியாக பிடிபட ஆரம்பித்தது வேறு கதை.ஆனால் நீச்சலை இதுமாதிரியாக ‘பார்த்துக்' கற்றுக்கொள்வதை பலரால் ஒப்புக்கொள்ள இயலவில்லை.தண்ணீரில் தள்ளிவிட்டால் தானாக வந்துவிடப்போகிறது என்பது தான் பலரது கருத்து. ஆனால் அது அப்படியில்லை.

நீச்சல் மனித உடலின் ஒரு இயற்கையான செயல்பாடுதான் என்றாலும், மனிதர்கள் எல்லோருமே ஒரே மாதிரி நீச்சல் அடிப்பதில்லை என்பதை நாம் உணர வேண்டும். அதற்குக் காரணம், பெரும்பாலானவர்கள் தாங்கள் முதலில் குத்துமதிப்பாக கற்றுக்கொண்ட முறையையே மீண்டும் மீண்டும் செய்துவருவது தான். எல்லா கற்றலும் போல இதிலும், உள்நோக்கிய அல்லது வெளிநோக்கிய கற்றல் சாத்தியம். தங்கள் உடலைக் கவனித்து, அதன் இயல்பை உணர்ந்த்து அதைச் செய்வது உள்நோக்கிய கற்றல், அல்லது மற்றவர்களையும் youtube வீடியோ போன்றவற்றை கவனித்து அதை முறையாக பயிற்சி செய்து, அவற்றை நமது உடலின் தசை நினைவிலேற்றும் வெளிநோக்கிய கற்றல். இந்த இரண்டு முறைக்கும் வராமல் தனக்குத் தெரிந்த ஒரே முறையில் நீந்துவது கற்றலில் வராது.

தெரியாது என்று என்று தெரிந்துகொள்வதுதான் அறிதலின் இரண்டாம் நிலை என்று சொல்வார்கள் , அதுதான் முக்கியமான நிலையும் கூட. இந்த இரண்டாம்  நிலைக்கு வந்துவிட்டால் சிலபல முயற்சிகள் மற்றும் பயிற்சிகள் மூலம் அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்று விற்பன்னராகிவிடலாம். ஆனால் நீச்சல் கற்றுக்கொள்வதில் ஒரு ஆச்சர்யம் இருக்கிறது. கற்றுக்கொண்ட பிறகுதான் தெரிகிறது, இது நமக்கு முன்னரே தெரியுமென்று. தெரிந்ததை தெரியும் என்று தெரிந்துகொள்ளத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும்.

13 செப்டம்பர் 2012

ஒரு வீட்டுப் பிரச்சனை


கதவைத் திறந்ததும் காருக்குக் கீழிருந்து எட்டிப்பார்த்தது அந்த நாய்க்குட்டி, கண்களில் ஒரு கேள்விக்குறியுடன். புதிதாக ஒரு வீட்டுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் நாய் பார்க்கும் விரோதப் பார்வையோ, அல்லது தனது சொந்தக்காரனைப் பார்த்தவுடன் பார்க்கும் அன்புப் அல்லது அடிமைப் பார்வையோ அல்ல அது. அந்தப் பார்வையில் இருந்தது அப்பழுக்கற்ற கேள்வி மட்டுமே.

அந்த அதிகாலையில்  அந்த நாய்க்குட்டியின் அமைதியைக் குலைத்துவிட்ட குற்றவுணர்வு கொஞ்சமிருந்தாலும், எனக்கு வேறு வழியில்லை. அங்கே தான் நான் சென்றாக வேண்டும். அது எனது வீடு, அதாவது நான் வாடகை தந்து குடியிருக்கும் வீடு. முடிந்தவரை நாயை தொந்தரவு செய்யாமல் வீட்டைத் திறந்து உள்ளே சென்றேன். காருக்குக் கீழிருந்து எட்டிப்பார்த்த நாய் தலையை உள்ளிழுத்துக்கொண்டது.


நான் வீட்டைவிட்டுக் கிளம்பி நான்கு நாட்களாகிவிட்டிருந்தது, நான்கு நாட்களாக நண்பர்களுடன் கர்னாடக காட்டுப்பகுதிகளுக்கு ஒரு பயணம். நான்குநாட்கள் பயணம் முடிந்து அந்த அதிகாலையில் தான் ஊர்திரும்பினேன். இதற்குமுன்பு இந்த நாயைப் பார்த்தமாதிரி ஞாபகமில்லை. இந்த நான்கு நாட்களுக்குள் தான் இந்த நாய் இங்கு வந்திருக்கவேண்டும். எனது வீடும் காரும்தான் நான்கு நாட்களாக அதன் இருப்பிடமாக இருந்ததா, அல்லது இன்று தான் அது அந்த இடத்தைக் கண்டடைந்து இருக்குமா. அந்த போர்டிகொவும் எனது சிவப்பு ஸ்விஃப்ட் காரும் நாய் வசிக்க வசதியான இடம் தான், அதுவும் இந்த மழைக்காலத்தில் மிகவும் கதகதப்பாகவே இருக்கக்கூடும்.

எனது கார் என்று சொல்லிக்கொண்டாலும் அந்தக் கார் ஒரு வங்கியின் கடன் பணத்தில் வாங்கியது. இந்த வருடம் முடிவில்தான் கடன் தவணை முடிகிறது. அத்ன்பின் தான் அது எனக்கு முழு சொந்தம் என்று சொல்ல முடியும். இந்த வீடும் வீடு என எனது நண்பர்களால் அறியப்பட்டு இருக்கிறது. அனால் இதை எனது வீடு என்று சொல்வதில் வீட்டின் சொந்தக்காரருக்கு ஆட்சேபனை  இருக்கக்கூடும். எனினும்  இந்த வீட்டுக்கு நான் வாடகை கொடுப்பதால் எனது வீடு தான் இது. வீட்டுக்காரக்கு சரியென்றால் இந்த வீட்டை வாங்கிவிடலாம் என்ற ஒரு யோசனையும் இருக்கிறது. ஆனால் அதைக் கேட்கபோய் என்னை காலி செய்ய சொல்லிவிட்டால் இது போல ஒரு வீடு அலுவலகம் பக்கத்திலேயே கிடைக்காது என்ற பயம் அந்த யோசனையைத் தடுத்தபடியே உள்ளது. அலுவகம் மாறும்போது கேட்கலாம், காலிசெய்ய சொல்லிவிடுவாரே என்ற பயம் இருக்காது. ஆனால் வேறு ஊருக்கு மாறும்போது இந்த வீட்டைக் கேட்டு என்ன பயன். நானும் வேறு யாருக்காவது வாடகைக்கு கொடுத்துவிட்டு வீட்டுக்காரனாக இருப்பதற்கு அவரே வீட்டுக்காராக இருப்பது அந்த வீட்டுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

கார் வாங்கிவிட்டேனே தவிர அதை இந்த ஊரில் ஓட்டுவது அவ்வளவு மகிழ்ச்சியான செயலில்லை. பைக் போதும் இந்த ஊருக்கு. பைக் தான் எனது உற்ற தோழன். இருந்தாலும் கார் ஒரு அவசியத் தேவையாகிவிட்டது. ஏனென்றால் தோழியுடன் பயணிக்க கார் தான் ஒரே வழி. தோழியுடன் பைக்கில் செல்வது இந்த சமுதாயத்துக்கும் அல்லது தோழிக்கும் கூட உவப்பான செயலில்லை. இந்த சமுதாயக் கட்டாயங்கள்தான் கார் விற்பனைக்கு காரணம் என நினைக்கத் தோன்றுகிறது. ஆட்டோவே உரசாமல் செல்ல முடியாத குறுகிய மற்றும் நெரிசல்மிக்க சாலைகள் உள்ள சென்னையில் விலையுயர்ந்த கார்கள் இவ்வளவு விற்பனையாவதன் மூலம் இதை புரிந்துகொள்ளமுடிகிறது.

இவ்வளவு இருந்தாலும், இந்த வீடு அல்லது கார் உன்னுடையதா என்று யாரும்  கேட்டால், சற்றும் யோசிக்காமல் அல்லது சற்றே யோசித்து நான் சொல்லும்  பதில்,ஆம் என்பது  தான். இந்த பின்னணிக் கதைகள் கேட்க அவர்களுக்கு பொறுமை இருக்குமா என்று தெரியாது, கேட்டால் கண்டிப்பாக புரியும். அனால் இதை தெரிந்து அவர்களுக்கு ஆகப் போவது ஏதுமில்லை என்பதால் அவர்களுக்குச் சொல்வதுமில்லை. ஆனால் இந்த  நாய்குட்டிக்கு? அதற்கு இந்த விஷயம் தெரிந்தே ஆகவேண்டுமல்லவா? நான் தான் இந்த வீட்டுக்காரன் என்று அந்த நாய் தெரிந்துகொள்வது மிக்க அவசியம் அல்லவா? அந்த நாய் அங்கு தங்க எனது அனுமதிதான் தேவை என்று அதற்க்குத் தெரியவேண்டுமல்லவா? அந்த நாய்க்குட்டியின் கண்களிலிருந்த கேள்வி அது தானேஅதற்கு எப்படி இதைச் சொல்லி புரியவைக்கப்போகிறேன் என்று யோசித்தபடி அந்த அதிகாலை நேரத்தில் ஒரு குட்டித் தூக்கத்துக்கு இருந்த சாத்தியத்தை பயன்படுத்திக்கொண்டேன்.

பத்துமணிக்கு அலுவலகம் செல்லும்போது காருக்குக்கீழ் மறக்காமல் எட்டிப்பார்க்க அந்த நாய்க்குட்டியைக் காணோம். என்னைப் பார்த்ததும் ஓடியிருக்கலாம். ஆனால் அந்த விஷயத்தை என்னால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, அந்த நாய் சென்றது கூட எனக்குப் பிரச்சனையில்லை. இந்த ஊரில் நம்மைவிட நாய்க்கு பல இடங்கள் எளிதாகக் கிடைக்கும். ஆனால் அந்த நாய் என்ன நினைத்துக்கொண்டு ஓடியிருக்கும் என்றகேள்விதான் என் மனத்தைக்குடைந்தபடியிருந்தது. அதை எப்போதும் அதற்கு புரியவைக்கமுடியாதபடியாகிவிட்டதே என்ற சோகமும்.

இரு நாட்கள் கழித்து ஒரு நடுஇரவில் மழை சத்தம் கேட்டு விழித்தேன். வெளியில் காயும் எனது ஜட்டிகள் ஞாபகம் வந்தது. என் வழக்கப்படி  எல்லா ஜட்டிகளயும் ஒரே நாளில் துவைத்து காயபோடிருந்தேன். நாளை கண்டிப்பாக தேவைப்படும். எனவே உடனடியாக  இறங்கி ஓடி அதை மழையில் நனையாமல் எடுத்தேன். எதேச்சையாக பார்வை கார் பக்கம் திரும்பியதில் நாய்க்குட்டி காருக்கு அடியிலிருந்து எட்டிப்பார்த்தது. அதே  நாய்க்குட்டி.

அந்த நாய்க்குட்டி உண்மையில் ஓடிப்போகவில்லை போல, நான் வழக்கமாக பார்க்கும் நேரத்தில் அது இல்லை என்பதால் அது அந்த வீட்டில் இல்லை என்று சொல்ல முடியாதில்லையா. நான் கூடத்தான் அது பார்க்கும் நேரத்தில் வழக்கமாக அந்த வீட்டில் இல்லை. எது எப்படியிருந்தாலும் ஜட்டியை மழையிலிருந்து பாதுகாத்துவிட்ட திருப்தியுடன் தூங்கச் சென்றேன்.

அப்படியானால் அந்த நாய் அதற்க்குத் தேவைப்படும் நேரத்தில் அங்கு வருகிறது, எனக்குத் தேவைப்படும் நேரத்தில் நான் வருவது போல, எனக்குத் தேவைப்படும் நேரத்தில் எனது காரை நான் எடுப்பது போல. எனவே அந்த வீடும் காரும் எனது என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அந்த நாயுடையதும் என்பது தானே?

இதில் எனக்குப் பிரச்சனை இல்லையென்றாலும் இருந்தாலும் ஒரு கேள்வி என் மனத்தை சுற்றியபடியேயிருந்தது. தனக்கு சொந்தமான வீட்டுக்கு வந்துசெல்லும், அந்தக் காரை அவ்வப்போது எடுக்கும் என்னைப்பற்றி அந்த நாய் என்ன நினைத்துக்கொண்டிருக்கும்?

08 செப்டம்பர் 2012

இரவு, மழை மற்றும் வனம் -ஜெயமோகனுடன் மழைப்பயணம்



சிலவருடங்களுக்கு முன் தேக்கடியில் ஒரு யானைச்சவாரி செல்ல வாய்ப்புக்கிடைத்தது. நாம் வழக்கமாக ஊருக்குள் பார்க்கும் நோஞ்சான் யானைகள் போலல்லாமல் கொஞ்சம் புஷ்டியான யானை. யானைமேல் ஒரு சிறிய கைப்பிடி கம்பியுடன் கூடிய துணி மட்டுமே போடப்பட்டு அதன்மேல் அமர்ந்து மரங்களடர்ந்த காட்டு வழியில் சவாரி. யானைப் பாகன் கூடவே நடந்துவந்தாலும்,  தவறேதும் நடந்துவிடாது என்ற நம்பிக்கை இருந்தாலும், உடலும் மனமும் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருத்ததை உணர முடிந்தது. அந்த யானை அந்த பாகன் சொல்வதைக் கேட்பது போல தோன்றினாலும் அது அவன் பேச்சைக் கேட்காதது போலவும் தோன்றியது. என்னைச் சுமந்துகொண்டு நடந்துகொண்டே யானை ஒவ்வொருமுறை பிளிறியபோதும் எனது உடலின் ஒவ்வொரு அணுவும் அதை உணர்ந்தது.

இரவு,மழை மற்றும் வனம் ஆகியவையும் அப்படித்தானோ என நினைக்கத் தோன்றுகிறது.  என்னதான் நமது பாதுகாப்புகளோடும் நம்பிக்கைகளோடும் நாம் நம்மை சௌகர்யமாக உணர்ந்தாலும் அவை எந்நேரமும் தளைமீறி நம்மை அடித்துச்செல்லும் சாத்தியங்களுடனேயே உள்ளன. இதுவே நம் மனம் மழையிலும் இரவிலும் வனத்திலும் எப்போதும் எதிர்பாரா எதையோ எதிர்பார்க்கும்  உச்சகட்ட விழிப்புநிலையிலோ அல்லது எதற்குமே கலங்காத கனவு நிலையிலோ இருக்கவும், அந்த எதிர்பாராத்தன்மைதரும் கவர்ச்சியே மனித மனம் இரவையும் மழையையும் அல்லது காட்டையும் தேடியோடவும் காரணம் என நினைக்கிறேன்.



கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பாகவே திட்டமிடப்பட்ட பயணம் அது. கோதாவரி நதியில் மூன்று நாட்கள் இலக்கிய கூடல் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அலுவலகத்திலும் நண்பர்களிடமும் போதுமானவரை கோதாவரிப்புராணம் பாடியாகிவிட்டது. வனவெளி நோக்கி

புறப்படும் அந்த நாளும் வந்தது, ஒரு அதிரடி செய்தியுடன். பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக கோதாவரிப் பயணம் சாத்தியமில்லை என்பதால்  பெங்களூரு பக்கத்தில் எதோ ஒரு ஊருக்கு செல்வதாகச் செய்தி. எதிர்பாராத திருப்பங்கள் தானே ஒரு நல்ல பயணத்துக்கு அறிகுறி, அதனால் அதிகம் கவலையில்லை. அதுவுமிலாமல் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் ஜெயமொகனுடன் பயணம் எங்கு சென்றாலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. பயணத்தின் எல்லா சாத்தியங்களையும் அறிந்தவர் அவர். அவருடன் இருக்கும் எந்த நேரத்திலும் கற்றுக்கொள்ள ஏதாவது இருந்துகொண்டேயிருக்கும்.


*****

சென்னையிலிருந்து ஜெயமோகன் உட்பட பத்து பேர் ரயிலில் பெங்களூரு சென்றோம். ஈரோட்டிலிருந்து வந்தவர்களோடு இணைந்து அங்கிருந்து சிமோகா நோக்கிப் பயணம்.  வழியில் துங்கா நதியின் ஒரு கால்வாயைப் பார்த்ததும் ஒரு திடீர்க் குளியல். அங்கே உருவானது பயணத்தின் மனநிலை. அங்கே ஆரம்பித்து பயணம் முழுவதும் கூடவே வந்தது தண்ணீர். கழுத்தளவு தண்ணீரில் மூழ்கியபடி சுற்றியிருந்த மரங்களூடே பறந்த விதவிதமானப் பறவைகளைப் பார்த்தது மனத்தையும் பறக்கவைத்தது.

பறவைகள் மற்றும் சில


அடுத்தது சென்றது துங்கா மற்றும் பத்ரா நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை. தண்ணீருக்குள் ஒரு தெய்வம், வேண்டுதலுடன் கொஞ்சம் மக்கள். சற்று அருகில் துணிதுவைக்கும் சிலர். அந்த பின்னணியில் படித்துறையில் ஜெயமோகனின் பேச்சு. கள்ளி யட்சி கதை மற்றும் சில.
குட்லி - கூடுதுறை

சிமோகாவை விட ஆகும்பே செல்வது சரியாக இருக்கும் என்று அங்கு முடிவெடுக்கப்பட்டு ஆகும்பே நோக்கி பயணம் தொடந்தது. ஆகும்பே செல்லும்வழி மிக அழகானது சாலையின் இருபுறமும் நிறைந்திருந்த நீர்நிலைகள், அடர்ந்த மரங்கள்  மற்றும் பறவைகள். வேனிலிருந்து பார்ப்பது போதவில்லை, இறங்கி நடக்க ஆரம்பித்தோம், இருட்டும்வரை நடந்தோம். பிறகு மீண்டும் வேன் பயணம். 

ராஜ நாகத்தின் தலைநகரம், தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று ஆகும்பே பற்றி எதிர்பார்ப்புகள் உருவாகிக்கொண்டிருந்தன. இரவில் வேனிலிருந்து இறங்கிய எங்களை மழை வரவேற்றது. எதிர்பார்ப்பில் ஒரு பகுதி உண்மையானது. ராஜநாகம் எதுவும் எங்களை வரவேற்றதா என்று அந்த இருட்டில் தெரிய நியாயமில்லை தான்.

வழியில்..

அந்த இரவு, நண்பர்களுடன் பேசலாமே என்று அந்த அறைக்குச் சென்றேன். வெளிச்சமில்லை. முழு இருட்டு. சில குரல்கள் கேட்டன, அமைதியாக வந்து அமரும்படி. அமானுஷ்ய அனுபவங்களின் கலந்துரையாடல் அது. சற்று நேரத்தில் ஜெயமோகனும் இணைந்துகொள்ள சபை இன்னும் தீவிரமடைந்தது. அமானுஷ்ய கனவுகளுக்கான உடல்நிலை மற்றும் சூழ்நிலைக் காரணங்கள் என சற்று அறிவியல்பூர்வமாக ஆரம்பித்த அந்த உரையாடல் இலக்கியத்தில் பேய்கள்,  குழந்தை ஆவிகள் பற்றிய கதைகள் அதன் பின்னுள்ள மனநிலை என பலபுறமும் சுற்றியடித்தது. வாழ்கையில் வைத்துப்பார்க்க முடியாத சில உணர்சிகளை வாழ்க்கைக்கு வெளியே வைத்துப் பாக்கும் பழங்குடிமனத்தின் தொடர்ச்சியாக பேய்க்கதைகளை பார்க்கலாம் என்ற அவரின் மேற்கோள் நினைவுக்கு வந்தது. அந்த இருளில் அவர் சொன்ன  அந்த மோதிரவிரல் கதை அனைவரின் இதயத்துடிப்பின் எல்லைகளை சோதித்துப்பார்த்தது.

அடுத்தநாள் அதிகாலை நடைக்கு ஜெயமோகன் உடன் செல்லும் குழுவை தவறவிட்டுவிட்டேன். எந்நேரமும் பெய்யும் மழையால் வீடுகளின் ஓடுகளில் கூட புல்செடிகள் வளர்ந்துள்ள அந்த ஊரில் தனியாக கொஞ்சம் நேரம் தெருக்களில் அலைவதும் நல்ல அனுபவம். பிறகு சிறிதுநேரம் நண்பர்களுடன் அரட்டை.
ஆகும்பே 


காலையில் அருவிப் பயணம். எங்களைத் தவிர வேறு யாரும் அப்போது அங்கு வந்ததாகத் தெரியவில்லை.  அடர்ந்த காட்டுவழியே சில கிலோமீட்டர்கள் நடை. தரையெங்கும் இலைகள் சருகுகள் அதில் ரத்தத்தை உறிஞ்சக்காத்திருக்கும் அட்டைகள். சற்றுநேரம் அட்டைகளை நினைத்துக்கொண்டே தரையை பார்த்தே நடந்தபின் நிமிர்ந்து பார்த்ததில் அந்தக் காட்டின் பிரமாண்டம் அதிரவைத்தது. கண்ணை மறைக்கும் பனிமூட்டத்தினூடே உருவாகிவந்த காட்டுப்பாதையில் அருவியை நோக்கி அந்த நடைப்பயணம்.

"சத்தமில்லாமல் நடங்க.. அதிர்வு உணர்ந்து ராஜநாகம் வரலாம் என நண்பர்கள் பீதியூட்டியபடியே வந்தனர். என்ன நடக்குமோ எனற அந்த பயம் தான் பயணத்தை இன்னும் சிறப்பாக்குகிறது. ஒரு முகட்டிலிருந்து வீழும் அருவியில் அது வீழ்வதற்கு சற்றுமுன் ஒரு குளியல். கூட்டம் ஏதுமில்லாமல் குளிக்க முடிந்ததற்காக எங்கள் நல்ல நேரத்துக்கும், தண்ணீருக்குள் அட்டைகளை அனுமதிக்காத இயற்கைக்கும் நன்றி சொல்லிக்கொண்டே ஒரு குளியலை அனுபவித்தோம். கைகெட்டும் தூரத்தில் அருவியாக வீழவிருக்கும் நீரில் குளிப்பது ஒரு அனுபவம்.
வனம்

அன்று இரவு நடையும் ஜெ. யின் பேச்சைக் கேட்டுக்கொண்டே நடக்கும் வழக்கமான நடைதான். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் அந்த இரவில் பெய்த நல்ல மழை. நான் உட்பட பலபேர் ரெயின்கோட் எல்லாம் ஏதும் அணியவில்லை. கடும் மழையில் சொட்ட சொட்ட நனைந்துகொண்டே நடை.

நடை சற்று நேரத்தில் ஒரு காட்டு வழிக்குள் திரும்பியது. எந்த வெளிச்சமும் அங்கில்லை, அங்கு அதிகம் இருந்தது ராஜநாகம் மற்றும் யானைகள் பற்றியும் இருந்த பயம். அந்த இரவில் முகத்திலிருக்கும் பயம் யாருக்கும் தெரியாதென்றாலும் இன்னும் தைரியமாக காட்டிக்கொள்ள நகைச்சுவை உரத்த சிரிப்பு என நடை அந்த காட்டுவழியில் தொடர்ந்தது. நேயர் விருப்பமாக யட்சிகதைகள் கேட்கப் பட்டது. ஜெயமோகனும் அந்த சூழ்நிலையின் தீவிரத்தை அதிகரிக்கும் விதமாக சில யட்சிக்கதைகளைத் தந்தார். எட்டாவது கை கதை கேட்டு எங்களை நாங்களே ஒரு முறை எண்ணிப்பார்த்துக்கொண்டோம்,  வந்த தலைகள் எல்லாம் இருக்கிறதா, எதாவது குறைகிறதா அல்லது எதாவது புதிய தலைகள் சேர்ந்துகொண்டதா என்று. இரவு, மழை மற்றும் காடு என எல்லாமுமே உச்சத்திலிருந்த உச்ச தருணம் அது.

ஞாயிறு காலை நடையிலும் மழை எங்களுடன் இணைந்துகொண்டது. மொழி, இலக்கியம், தத்துவம், கலை என பல தளங்களைத் தொட்ட உரையாடல் அது.

பெங்களூரு திரும்பும் வழியில் பேலூர் கோட்டை. இதுபோன்ற ஒரு சிற்பக்கலையை முதன்முறையாகப் பார்க்கிறேன். அங்கிருந்த அவ்வளவு நேரமும் ஒரு கனவு போல்த்தான் இருந்தது. யாரோ எப்போதோ உருவாகிய அந்தக் கனவு இப்போது நமக்கேயான கனவாகத் தோன்றும் அதிசயத்தை உணர முடிந்தது. ஒவ்வொரு சிலைக்கும் ஜெயமோகன் தரும் விளக்கங்களுடன் அந்தக் கனவு இன்னும் விரிவடைந்தது.  இந்தப்பயணத்தின் முக்கிய பங்காளியான மழை அங்கும் கூடவே வந்து அந்த சூழ்நிலைக்கு இன்னொரு பரிணாமம் தந்தது.
பேலூர்


கிட்டத்தட்ட திட்டமிட்டபடி எதுவுமே நடக்காத பயணம் இது. மழையையும் இரவையும் துணையாகக்கொண்ட இந்த பயணம் அப்படித்தானே இருக்கமுடியும். மழையும் இரவும் காடும் யாருக்கு கட்டுப்படுகின்றன?

தொடர்புடையவை:
ஜெயமோகன் தளத்தில் - மழைக்கோதை
வனவெளி நோக்கி

23 ஆகஸ்ட் 2012

வனவெளி நோக்கி

பயணத்துக்கு முன்னால் உள்ள சில நாட்கள் மிகமுக்கியமானவை, சிலசமயம் பயண நாட்களை விடவும். அதுவும் தெரியாத இடத்துக்குப்பயணம் என்றால் இன்னும் சிறப்பு. செல்லவிருக்கும் இடங்களைப்பற்றிய தகவல்கள் மூலம் ஒரு சித்திரம் மனதுக்குள் உருவாகும் நேரம் அது.

அனுபவம் என்பது  நம் மனதில் உள்ள கடந்தகாலத்தின் பிம்பம் என்றால், எதிர்பார்ப்பு என்பது வருங்காலத்தின் பிம்பம். முக்கிய வித்தியாசம் என்னவென்றால் அனுபவம் சிலநேரம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதாக இருக்கும், குரூப் போட்டொ போல. ஆனால் எதிர்பார்ப்பால் உருவாகும் சித்திரம் அப்படியல்ல அது தனியுடைமை.

பயணத்தின்போது  உண்மை அனுபவம் மனதில் உருவான அந்த சித்திரத்தை மாற்றி எழுதுகிறது, அது  ஆச்சர்யமாகவோ அல்லது ஏமாற்றமாகவோ. எப்படி இருந்தாலும் நம் நாமத்தில் உருவான அந்தச் சித்திரம் நமக்கே நமக்கானது. அது வேறு எங்கும் காணமுடியாதது வேறு யாரும் யோசிக்கக்கூட முடியாதது. அதுவே இந்த பயண எதிர்பார்ப்பை இன்னும் முக்கியமானதாக்குகிறது. அதுவே அதன் தனிச் சிறப்பு.



ஆனால் எல்லோரும் செய்வது அனுபவத்தை அல்லது கடந்த காலத்தை நினைவில் நிறுத்தும் முயற்சிதான்.பொதுவாக சுற்றுலாத் தளங்களில் மக்கள் அந்த இடத்தை அனுபவப்பதைவிட அந்த அனுபவத்தை ஆவணபடுத்துவதில் காட்டும் முனைப்பை கவனிக்கலாம். முக்கியமான எல்லா இடங்களிலும் புகைப்படம்  எடுத்தால்தான் அந்தப் பயணம் நிறைவு. நான் முதன்முறை இங்கிலாந்து சென்றிருந்தசமயம் ஒரு வாரயிறுதி நாட்களில் லண்டன் செல்ல வாய்ப்பு இருந்தும் அந்தப் பயணத்தை ரத்து செய்தேன், கையில் காமெராவும் புகைப்படம் எடுக்க நண்பர்களும் இல்லாததால். புகைப்படம் எடுக்காமல் சுற்றிப்பார்த்து என்ன பயன்? அடுத்தமுறை பயணத்தில் சரியான ஏற்பாடுகளுடன் லண்டன் சென்றதெல்லாம் வேறு கதை.

யாருடன் செல்கிறோம் என்பதும் பயணத்தின் அனுபவத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிக்கிறது. வழக்கமான மக்கள் கூடுமிடங்களை மட்டுமே பார்த்து, அதையே சுற்றுலா எனப் பழகியவர்களை இயற்கைப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களைடையும் ஏமாற்றம் மற்றவர்களையும் பாதிக்கக்கூடும். எனவே பொருட்காட்சிகளை மட்டுமே பார்த்துப் பழகியவர்களை உண்மையான பயணத்துக்கு தவிர்த்துவிடுவது எல்லோருக்கும் நலம்.



இயற்கைப் பகுதிகளில் நடக்கும் பயணத்தில் ஆக்கப்பூர்வமான உரையாடல்களும் சேர்ந்துகொண்டால் அது ஒரு வாழ்நாள் அனுபவமாகிறது. உரையாடிய விஷயங்களை யோசிக்கும்தோறும் இயற்கைப் பகுதிகளின் நினைவும், இயற்கையை நினைக்கும்போது உரையாடிய விஷயங்களின் நினைவுமாக கிடைக்கும் அனுபவம் விலைமதிக்க முடியாதது.

சரி ஒரு சிறப்பான பயணத்தில் என்ன எதிர்பார்க்கலாம்? சிறப்பான பயணத்தின் முக்கிய கூறு அதிலுள்ள unpredictableness. ஒரு மாதமாக திட்டமிட்டு, புறப்படும் தினமான  இன்று  எல்லாத் திட்டங்களையும் தகர்த்து எதிர்பாராத மாற்றங்களுடன் ஆரம்பிக்கிறது இந்த வனப் பயணம்.

வனவெளியில் பயணம் ஒரு வழிகாட்டியுடன் செல்லும்போது சிறப்படையும். ஆனால் இந்த வனப் பயணம் மனவெளியின் வழிகளைக் காட்டுபவருடன்.