Unordered List

09 டிசம்பர் 2013

திருடுபோய்க் கொண்டிருப்பது

"டேய்ய்ய்....."

சென்னை சாந்தி தியேட்டர் வளாகத்தில் இருக்கும் சரவணபவனில் சாவகாசமாக ஒரு  மதிய உணவை முடித்துவிட்டு, நானுண்டு எனது செல்போனுண்டு என  நடந்து  வந்துகொண்டிருந்த நான் அந்தக் குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

அவருக்கு ஒரு நாற்பத்தைந்து வயது இருக்கலாம். கையிலிருந்த கருப்புப்பை அவர் ஒரு விற்பனைப்  பிரதிநிதியாக இருக்கலாமென  சொல்லியது, அவரது முகத்தில் கோபம் பரவியிருந்தது.

அவர் பார்த்த திசையில் நானும் பார்த்தேன். ஒரு பத்து பையன்கள் ஓடிக்கொண்டிருந்தனர். எதோ பள்ளி சீருடையில் இருந்தனர்.  அவர் மறுபடியும் கோபமாக குரல்கொடுக்க ஓடிக்கொண்டிருந்த இரு பையன்கள் நின்று நிதானமாகத் திரும்பினர், "என்ன" என்பது போல் தெனாவெட்டாக  அவரைப் பார்த்தனர்.

அதுவரை கோபமாக இருந்த அவர் முகம் கொஞ்சம் மாற்றமடைந்தது, அதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தோன்றியது. ஒரு அடி பின்னல் வைத்தார். அருகிலிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்து
"பட்டப்பகல்ல இப்படி எடுத்துட்டு ஓடுறாங்க.. எலோரும் பார்த்துகிட்டு இருக்கீங்களே.." என்று குமுறினார். இப்பொது குரல் மிகவும் மட்டுப்பட்டே இருந்தது, இருந்தாலும் இழப்பின் வலி அந்தக் குரலில் இருந்தது. எனக்கு நிலைமை கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.



இப்படி ஒரு அனுபவத்தைப் பற்றி எனது நண்பன் ஒருமுறை சொல்லியிருந்தான்.

பஸ்ஸில் சென்ற அவனது செல்போன் திருடப்பட்டு விட்டதை கவனித்து இருக்கிறான். உடனடியாக ஒரு கும்பல் இறங்குவதையும் கவனித்துவிட்டு, உடனடியாக அவனும் இறங்கியிருக்கிறான்.பேருந்து புறப்பட்டுவிட, ஐந்தாறுபேர் இருந்த அந்த கும்பலும் அவனும் மட்டும் அந்த பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறார்கள்.

இவன்  கவனித்ததைக் கவனித்த அவர்களில் வாட்டசாட்டமான   ஒருவன் "என்ன" என்று கேட்க. இவன் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு திரும்பியிருக்கிறான். வேறென்ன செய்ய?

அவர் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். இழப்பும் கையறு நிலையும் அவரது முகத்தில் தெரிந்தது.  இங்கே திருடு போயிருக்கிறது என்றும் அதற்குக் காரணம் யாரென்றும் தெரிந்தாலும் திருடுபோனது என்ன என்று எனக்கு தெரியவில்லை.



ஓடிக்கொண்டிருந்த அந்த பையன்கள் இப்போது மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். எங்களைப் திரும்பி பார்த்த அவர்களின் கண்களிலும் ஏளனம் கைகளில் கரும்பு.

ஆம், அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் கரும்பு இருந்தது. அப்போது தான் கவனித்தேன். அருகிலிருந்த அந்த கரும்பு ஜூஸ் எந்திரத்தின் அருகே சாக்கில் கட்டப்பட்ட ஓரிரு கரும்புகள் மட்டும் இவர்கள் எடுத்தது போக எஞ்சியிருந்தன. ஆளில்லாத கரும்பு ஜூஸ் வண்டியிலிருந்து எடுத்துகொண்டு அதாவது திருடிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். 
அந்த கரும்பு ஜூஸ் கடைக்காரர் அங்கே இல்லாததால், அங்கு நடந்தது யாருக்கும் ஒரு இழப்பாகத் தெரியவில்லை.

அவரை மீண்டும் கவனித்தேன். கண்டிப்பாக அவருக்கும் அந்த கரும்புகளுக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை, பிறகு ஏன் இவர் இவ்வளவு கோபமடைகிறார், இதனால் அவருக்கு என்ன இழப்பு  என்று யோசித்தேன்.

“விடுங்க சார்..கவனிக்காம அப்படியே விட்டுட்டு அப்புறம் போன பின்னாடி ஆத்திரப்பட்டு என்ன சார் பண்ண முடியும். கவனிச்சு வச்சிருந்துக்கணும்” என்று யாரொ அந்தக் கரும்புச்சாக்கை பார்த்தபடிகூற

"படிக்கிற பசங்க சார்"  என்று முனுமுனுத்தபடி அவர் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

07 டிசம்பர் 2013

ரயிலிரவு

மதியம் எக்ஸ்பிரஸ் அவென்யுவில் பாதுகாப்பு சோதனைகள் பலமாக இருந்தது. உள்ளே வரும் கார் டிக்கியை எல்லாம் திறந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சோதனை செய்வதிலும் ஏதோ ஒரு லாஜிக் இருக்கிறது போல. எனக்கு  முன்னால் இருந்த ஹோண்டா காரை சோதித்த அளவுக்கு எனது காரை சோதிக்கவில்லை என்பது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். இந்தக் காருக்கெல்லாம் இவ்வளவுதான்  வொர்த்  நினைத்து விட்டார்களா என்று யோசித்தேன். அடுத்த வருடத்துக்குள் இதற்காகவாவது ஒரு ஹோண்டா கார் வாங்க முடியுமா  என்று பார்க்கவேண்டும்.

இரவு எக்மோர் ரயில்  நிலையத்திலும் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன. அப்போது தான் ஞாபகம் வந்தது, அது டிசம்பர் 6 அல்லவா, இவ்வளவு சோதனைகள் கூட இல்லாவிட்டால் எப்படி. ஆனால் ரயில் நிலையத்தில் ஒரு கூடுதல் வசதி இருப்பதை அப்புறம் தான் கவனித்தேன்.  நீங்கள் விருப்பப்பட்டால் சோதனைக்கு உள்ளாகலாம். அல்லது சோதனை இல்லாமலே உள்ளே பிரவேசிக்கலாம். இப்படி இரு ஏற்பாடுகள்  இருந்தன அங்கு.

வழக்கமான வழியில் சென்றபோது மெட்டல் டிடெக்டர் உட்பட சோதனைகள் எல்லாம் பலமாக இருந்தது நடந்தது. சரி, ரயிலுக்கு கொஞ்சம் இருக்கிறதே என்று வெளியே வெளியேவந்து சாப்பிட்டேன்.  ரயில் நிலையம் ஓரமாக இருக்கும் ஆனந்தபவனில் இனிப்புகள் வாங்கிக்கொண்டு அந்த வழியாக உள்ளே சென்றால், அங்கே எந்த ஒரு சோதனையும் இல்லை. மிக நல்ல ஏற்பாடுதான்.


இன்னும் நேரம் இருந்ததால் நிலையத்தினுள் இருக்கும்  ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடையில் நின்று புத்தகங்களை மேய்ந்தேன். கையோடு ஒரு புத்தகம் படிக்க கொண்டுபோயிருந்தாலும் சிலசமயம் சில நல்ல  இப்படி சும்மா பார்க்கும்போது கிடைப்பதுண்டு. அதுமட்டுமில்லாமல்  பொதுவாக கூட்டத்திலிருந்து தப்பிக்கும் வழியாக நான் நினைப்பது புத்தகக் கடைகள் தாம்.  நெரிசலான அந்த ரயில் நிலையத்தில் அதிக கூட்டமில்லாத இடம்  அது தான்.

அப்போது  ஒரு பெண்   அவசரமாக அங்கு வந்தாள். நான் அவளைக் கவனித்ததேன் என்று சொல்லிவிட்டபிறகு அவள் ஒரு அழகானப் பெண் என்று வேறு தனியாகக சொல்லத் தேவையில்லை. ஜீன்ஸ் போட்ட மாடர்ன் அழகி அவள். என்ன புத்தகம் வாங்குகிறாள்  என்று லேசாக  கவனித்தேன். அவள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை, சட்டென இரு புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரும்பினாள், பார்த்து கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். அவை  குமுதமும் நக்கீரனும். அடப்  பாவமே!  இவள் திருமணமான பெண்ணாக இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.


எனது வழக்கப்படி ரயில் நகர ஆரம்பித்ததும் கடைசி நிமிடத்தில்  ஏறினேன். எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இன்னொருவர்  இருந்தார், அது எதிர்பார்த்தது தான். குளிர்சாதன பெட்டி முன்பதிவு  செய்திருந்ததில், அப்பொது  ஆர்.ஏ.சி. யில் இருந்தது.  எனவே  வேறு இருக்கை  கிடைக்கும்வரை நாங்களிருவரும் அந்த இருக்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

செங்கல்பட்டு தாண்டியவுடன் ஆள் வராத காலியிருக்கை இருந்தால் கொடுப்பதாக டீ.டீ .ஆர் வாக்களித்துச் சென்றார். 
நல்ல சிஸ்டம் தான். நாங்களிருவரும் ஆள் வராமல் காலியிருக்கை ஏற்படவேண்டுமென விரும்பிக்கொண்டு அமர்ந்திருந்தோம். இன்னொருவர் ரயில்லைத் தவறவிட்டு அப்படி இருக்கைக் வேண்டும் என விரும்ப ஆரம்பித்ததை கவனிக்க ஆச்சர்யமாக இருந்தது. அமர்ந்தபடியே கையிலிருந்த வெள்ளையானை புத்தகத்தைப் படிக்க ஆரம்பிதேன்.

"ஆச்சர்யமே இல்லை" என்றான் ஏய்டன்.     "உலகம் முழுக்க நான் பஞ்சங்களைப் பார்த்துவிட்டேன். எந்தப் பஞ்சத்திலும் சாகும் மனிதனுக்கு வாழும் மனிதன்  உதவிசெய்ததில்லை.பஞ்சத்தில் ஒருவன் சாவதக் கண்டதும் மற்ற அத்தனைபேரும் பதற்றமாகிவிடுகிரார்கள். அந்த நிலை தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.... மனிதர்களின் இயல்பான சுயநலம் கிளம்பிவரும். - வெள்ளை யானை நாவலிலிருந்து

26 ஆகஸ்ட் 2013

செத்தவன் சொன்னது


அவனை எனக்கு முன்பே தெரியாதென்பதில்லை, அவன் செத்துவிட்டான் என்பதில் யாருக்கும் சந்தேகமேதுமில்லை, ஆனால் அவன் மரணத்தில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே அவனே பேச ஆரம்பித்ததும் ஒரு வகையில் நல்லதே.

எல்லோரையும் போலவே சிறுவயதில் அவனுக்கும் அந்த பயம் இருந்திருக்கிறது, சிறுவயதில் தான் பயம் என்று சொன்னதும், விவரம் தெரிந்தபின் அந்த பயத்தைக்கடந்துவிட்டான் என்று பொருளல்ல. விவரம் தெரிவதென்பது பயங்களை சிறப்பாக ஒளித்துவைப்பது என்பது தானே. பயத்தை ஒழிப்பது கடினமே தவிர ஒளிப்பது இல்லையே.

ஆனால் எலோருக்கும் இருக்கும் அந்த மரண பயத்தை அவன் எப்படிக்கடந்தான் எனக்கேட்டேன். மரண பயத்தை வெல்ல ஒரே வழி மரணம்தான் என்றான். நல்ல பதிலாகத்தான் தோன்றியது. அதை எப்படி நிகழ்த்திக்கொண்டான் எனக்கேட்டேன்.

சில திருமணங்கள் தானாக நடப்பது போலத் தோற்றமளித்தாலும், எல்லாமே நடத்தி வைக்கப்படுபடுபவைதான். சில வெளிப்படையாகத்தெரியும் சில தெரியாது, மற்றபடி வித்தியாசமேதுமில்லை. அதுபோலத்தான் மரணங்களும். மற்ற மரணங்களைப்பற்றி அவன் பேச அவனது தார்மீகம் இடம்கொடுக்கவில்லையென்றாலும், அவனது சொந்த மரணத்தைப் பற்றி பேச அவனை யார் தடுப்பது. தற்கொலைதான் இங்கே குற்றம், மரணமல்ல.

அவனது மரணத்துகாக தங்கள் உயிர், பொருள் ஆவியனைத்தும் கொண்டு உழைத்தவர்கள் பலர். அதனால் யாரால் வந்தது வந்தது அந்த மரணம் என்று யாருக்கும் தெளிவாகத்தெரியவில்லை. அதுவே அவனது மரணத்தின் மர்மம். மரணத்தை அவன் மிக விரும்பியேற்றுக்கொண்டான் என்றாலும், மரணத்தைவிட அந்த மர்மம் அவனுக்கு மிக விருப்பமாக ஆனதாகத்தெரிவித்தான். இதில் என்ன வேடிக்கையென்றால், இன்னும் பலர் அவனது மரணத்துக்காக முயற்ச்சிசெய்து கொண்டிருப்பதுதான். ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டவனை இன்னும் பலர் கொல்ல முயற்சிப்பதைப்பார்பதே அவனது வேடிக்கை. இதுவே அவன் பேச ஆரம்பித்ததின் நிமித்தமுமாகக்கூட இருக்கலாம்.

(இன்னும் சொல்வான்)

16 ஆகஸ்ட் 2013

அதிகாலை வெளிச்சம்

அறையில் இருள் பரவியிருந்தது, போர்வையினுளிருந்து அனிச்சையாக கையை நீட்டி இருளுக்குள் துழாவி, எனது செல்பேசியை எடுத்தேன். அறையில் பரவியிருந்த இருளின் ஒரு துளியே அதிலும் இருந்தது. சரிதான் அதில் சார்ஜ் இல்லை என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அதை இருளுக்குள் புதைத்துவிட்டு, நான் போர்வைக்குள் புதைந்தேன். அது நள்ளிரவாகயிருந்திருக்கவேண்டும்.

எனக்கு எப்போதுமே கடிகாரம் பயன்படுத்தும் பழக்கமில்லை. கைக்கடிகாரம் தான் மனித நாகரிகத்தின் கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய அபத்தம் என்பது எனது கருத்து. பள்ளி, அலுவலகம் செல்வதற்கு மணி பார்த்தால் கூட பரவாயில்லை. ஆனால் மனிதர்கள் சாப்பிடுவதையும் தூங்குவதையும் கூட அது தான் தீர்மானிக்கிறது எனபதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. மனிதர்கள் இயற்கையின் கடிகாரத்தை புறக்கணிப்பதே பல பிரச்சனைகளுக்குக் காரணம் எனபதும் எனது துணிபு. இதற்கான தார்மீக எதிர்ப்பாகவே நான் கைக்கடிகாரத்தை துறந்தது. இப்போதெல்லாம் செல்பேசி உடலின் பகுதியாகவே ஆகிவிட்டிருக்கிறபடியால் உண்மையில் தனியாக கைகடிகாரம் இல்லாதது ஒரு பிரச்சனையாகவும் இருப்பதில்லை.

முழு விழிப்படைந்து எழுந்தபோது காலைப்புத்துணர்ச்சியை உணர்ந்தேன். அந்த ஐந்துமணி வெளிச்சம் கண்களுக்கு இதமாக இருந்தது. ஒன்பது மணிக்குத்தான் அலுவலகத்துக்குச் செல்ல புறப்பட வேண்டுமென்றாலும், காலையில் ஓட்டப்பயிற்சிக்காக வழக்கப்படுத்திக்கொண்டது இந்த ஐந்து மணி பழக்கம். தாமதமாகத் தூங்கினால் காலையில் இருக்கும் கண்ணெரிச்சல் அறவே இல்லாதது கொஞ்சம் ஆச்சர்யமளித்தது. அந்த ஆச்சர்யத்துக்கு ஜன்னல் வழியாக வந்த மழைச் சத்தமும் மெல்லிய குளிரும் பதில்களாக அமைந்தன. குளிர்நேரங்களில் மக்கள் அதிக புத்துணர்ச்சியோடு இருப்பது இயல்பு தானே. இயற்கை எப்போதுமே சரியான பதில்களைத் தந்துகொண்டு தான் இருக்கிறது. நாம்தான் சரியாகக் கேட்பதில்லை என நினைத்துக்கொண்டேன்.

அணைந்திருந்த செல்பேசியை மின்னிணைத்துவிட்டு பல்துலக்க ஆரம்பித்தேன். காலைகடன்களை முடித்து குளியலறையிலிருந்து வந்து செல்பேசியை எடுத்து உயிர்ப்பிக்க உடனே அது கதறியது.

என் நண்பனின் அழைப்பு அது.

"ஏண்டா உனக்கு எவ்ளோ நேரம் ட்ரை பண்ணுறது. உன் வீட்டுக்கு வெளியேதான் நிக்கிறேன். சீக்கிரம் வா" என்றான்.

சில சமயங்களில் இவனது கடமை உணர்ச்சிக்கு இப்படிதான் வெளிப்படும். இந்த மழையிலும் வழக்கமாகச் செல்லும் ஜாக்கிங் செய்தே ஆகவேண்டும் என்று நினைக்கும் அவனது கடமை உணர்வு கண்டு நெஞ்குருக்கொண்டே காலை ஓட்டப்பயிற்சிக்குத் தயாரானேன். அவன் ஆர்வத்துக்கும் காரணம் இல்லாமலில்லை. மழையை எதிர்பார்த்து மழைக்கான ஜெர்க்கின்களை நேற்றுதான் நானும் அவனும் வாங்கியிருந்தோம், அது உடனே பயன்பாட்டுக்குவருவதில் ஒரு மகிழ்ச்சி. மழை நேரத்திலும் அதிகாலை ஓட்டப்பயிற்சிக்கு சென்றே ஆகவேண்டும் என்கிற அவனது ஆர்வத்துக்கும் இதுதான் காரணமாக இருக்கவேண்டும்.

நல்ல வேலையாக அப்போது  அதைச்  செய்தேன். வெளியே செல்ல கதவைத் திறக்கும் முன்பாக ஜன்னல் வழியாக அவனைப்பார்த்தேன், மழைக்கு அவன் எப்படி தயாரகியிருக்கிறான் என்று பார்க்க.

அவன் தயாராகத்தான் இருந்தான். குடையைப்பிடித்தபடி, என் வீட்டுக்கதவை பார்த்துக்கொண்டு.  அலுவலகம் செல்லும் உடைகளுடன். 

29 ஜூலை 2013

மனிதகுல மானமும் சில குருவிகளும்

அந்தக் குருவியை அதற்குமுன் அங்கே நான் கவனித்து இல்லை, அதுவும் என்னை அந்த அதிகாலை நேரத்தில் கவனித்திருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் அன்று காலை அந்த சந்திப்பு நடந்தது.

அந்தக் குருவி துயிலெழுந்த நேரமோ அல்லது அதன் நிமித்தமோ நானறியேன். ஆனால் நான் எழுந்தது காலை சுமார் நாலறை மணி. அதற்கான காரணம் சமீபத்தில் வெளிவந்துள்ள சிங்கம் 2 திரைப்படம், இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் அந்தத்திரைப்படத்தின் விளம்பரங்கள்.

தற்போதைய நிலைமையில் நகரில் பயணம் செய்யும் எவரும் கடுமையாக முறைக்கும் சூர்யாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது, எந்தப் பக்கம் திரும்பினாலும் சூர்யா நம்மைப் பார்த்து முறைத்தபடியிருக்கிறார், அவருக்குப் பின் அனுஷ்கா பட்டாசாக சிரித்தபடி இருப்பது கொஞ்சம் ஆறுதல்.

உண்மையில் அந்த விளம்பரம் என்னைக் கவர்ந்ததுக்குக் காரணம் சூர்யாவின் முறுக்கேறிய தோற்றமா அல்லது, அனுஷ்கா பற்றிய எண்ணமா என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் நாட்களாகவே உடற்பயிற்சியைத் தொடர்வதைப் பற்றி யோசித்துகொண்டிருந்த எனக்கு உடனடி காரணமாக இருந்தது அந்த விளம்பரம் தான் என்று  உறுதியாகவே சொல்ல முடியும்.

பக்கத்திலிருக்கும் பூங்காவில் அதிகாலையில் ஓட்டம், பின்னர் கொஞ்சம் உடற்பயிற்சிகள் என திட்டம் உருவானது.

அதிகாலையில் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்தவனை வரவேற்றது ஒரு குருவியின் குரல். நான் வருவேன் என்று எதிர்பார்த்து அது அங்கே இருக்கவில்லை என்பதும் என்னை வரவேற்பது அதன் உத்தேசமில்லை என்பதும் தெளிவு. இருந்தாலும், அதன் இனிமையான குரல் அந்த அதிகாலைவேளையில் எனக்கு மிகச் சிறப்பான வரவேற்பாக அமைந்தது என்பது உண்மை.


இது வேற குருவி


அந்த வரவேற்பை மனதுள் ரசித்துக்கொண்டே பூங்கா செல்ல எனது பைக்கை உயிர்ப்பிக்க முயற்சிசெய்தேன். பலநாட்கள் எடுக்கப்படாததாலும் கடந்த இரு நாட்களாக பெய்த மழையாலும் பைக்கின் ஸெல்ப் ஸ்டார்ட் வேலை செய்ய மறுத்தது. பிறகென்ன உதைத்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். மூன்றாவது உதையில் பைக் உயிர்பெற்று அந்த அதிகாலை அமைதியை கிழித்து உறுமியது. சொல்லிவிட்டுப்போகலாம் என குருவியைப் பார்க்க அங்கே அது இல்லை. இந்த பைக் களேபரத்தில் பயந்து பறந்துவிட்டது போல.

அட என்ன  செய்துவிட்டேன். அதிகாலை காலை வேளையில் ஒரு குருவியை மிரளச் செய்துவிட்டேனே, அதுவும் எனக்கு வரவேற்பாக அமைந்த குரலுக்கு சொந்தமான குருவியை. குருவியின் சத்தம் எனக்கு வரவேற்பாக அமைய, நான் உருவாக்கிய சத்தம் அதற்கு மிரட்டலாக அமைந்துவிட்டதே என்ற குற்ற உணர்வுடன் வண்டியைக் கிளப்பினேன்.

இதே நினைப்புடன் பூங்காவை அடைந்து ஓட்டத்தை தொடங்கினேன். காலையின் மெல்லிய வெளிச்சமும், லேசானக் குளிரும், நேற்றைய மழையின் ஈரமும் அந்த இடத்தை ரம்யமாக ஆக்கிகொண்டிருந்தன. அதிகாலையில் எந்த ஒரு இடமும் நாம் பார்க்காத  இன்னொரு பரிணாமத்தில் இருக்கிறது. 

லேசான ஈரம் கொண்ட பாதையில் இருந்த சரளைக்கற்களில் ஷூ அணிந்து ஓடும்போது ஒரு சீரான ஓசையை உருவாக்கிக்கொண்டிருந்தது. தூரத்தில் தவளைகளின் ஒலிகளும் பின்னணி போல வந்து கொண்டிருந்தன.  ஆனால் இந்த எல்லா ஓசைகளுக்கும் சிகரம்போல இருந்தது அங்கிருந்த குருவிகளின் ஒலிகள்.

குருவிகளை கவனித்த தருணத்தில் மீண்டும் அந்தக் குருவியின் நினைவு. என்ன இருந்தாலும் காலையில் என்னை வரவேற்ற குருவியை மிரளச்செய்தவன் தானே நான். இன்னா செய்தவனுக்கும் இனிமையை அள்ளி வளங்கிகொண்டிருந்த  குருவியினத்தைப்பார்கையில் உண்மையில் சந்தோஷத்தை விட ஒரு மனிதனாக ஒரு குற்ற உணர்ச்சியே தோன்றியது.

பலவிதமான குருவிகளின் சப்தங்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு அற்புத இசைவெளி அங்கே உருவாகிக்கொண்டிருந்தது. அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில் மழையில் புத்துணர்ச்சியடைந்த பசேலென்ற மரங்கள் பார்க்கும்  கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. அந்த மரங்களுக்கு உயிர்கொடுப்பது போலிருந்ததும் அவற்றின் மீது பறந்து விளையாடிய குருவிகளின் நடனங்கள்தான். சப்தம் கேட்டு அருகே இருந்த நீர்த்தேக்கதைக் கவனித்தேன், கரையோர மரத்திலிருந்து  நீரை உரசியபடி சென்ற அந்தக் குருவி  அப்படியே  நீரில் மிதக்க அதைச் சுற்றி வட்ட வட்டமாக அலைகள் உருவானது,  அமைதியாக இருந்த தண்ணீரும் துயிலெலுந்ததுபோல சிலிர்த்துக்கொண்டது.

காலைவேளை குருவிகளின் வேளைபோலும், அனைத்தையும் உயர்ப்பிப்பது குருவிகளின் கடமை,  இவ்வேளையில் குருவிகளைத் தவிர்த்து ஒரு அனுபவம் இல்லை,  நாளின் எல்லா விஷங்களையும் குருவிகள் தான் ஆரம்பித்து வைக்கின்றன என்று தோன்றியது.   இந்தக் குருவியினத்துக்கு நான் மட்டுமல்ல மனிதர்கள் உட்பட ஒட்டுமொத்த சூழலும் கடன்பட்டிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்.

அப்போதுதான் அவர்களைக் கவனித்தேன், மூன்று இளைஞர்கள். ஜிம்மில் இருக்கும் திரட்மில்லில் ஓடும் பாவத்துடன் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தனர்.  மூவரின் காதுகளிலிருந்தும் வயர்கள் புறப்பட்டு அவர்களின் சட்டைகளுக்குள் மறைந்தன. இன்னும் கவனித்ததில்  பெண்கள் நடைப்பயிற்சிக்கு வந்தால் ஐபாட் உடன் தான் வரேவேண்டும் என்று தீர்மானம் இருப்பது தெரியவந்தது.

இசையைப் பற்றி அப்போது ஒரு ஆச்சரியம் தோன்றியது.  ஒரு மழைக்கால அதிகாலையில் உருவாகும் குருவிகளின் ஒலிகளைகூட துச்சமென மதித்து புறக்கணிக்கும் அவர்களிடம் அதைவிட அரிதான எதோ இசை இருக்கிறது என்பதே மிகவும் ஆச்சர்யமூட்டும் சிந்தனையாக இருந்தது. அந்த இசை என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் எழாமல் இல்லை.

வேறு சிலர், அவர்களுக்கு ரகசியத்தில் நம்பிக்கை இல்லை. தங்களிடம் இருந்த மொபைல் போன் மூலம், தங்களுக்கான இசையைத் தங்களைச் சுற்றி வளையம் போல அமைந்து நடந்து சென்றனர்.  ஐபாடு, மொபைல் போன் அல்லது ஒரு சைனா செட்டாவது இல்லாமல் இவர்கள் வெளியே வருவது இல்லை, பிறகெப்படி குருவி அவர்களிடம் நெருங்குவது.

இன்னொருவர், இவரிடம் ஹெட்போன் இல்லை. பொதுவாக நாம் அரசு அலுவலகங்களில் காணக் கிடைக்கும் இறுகிய  அதிகார முகத்துடன் நடந்துகொண்டிருந்தார், அங்கே அவர் எழுந்தளியிருப்பதே அவ்விடத்துக்குப் பெருமை என்ற தோரணையுடன். இவருடன் அவர் நடக்கும் வேகத்துக்கு ஈடுகொடுத்தபடி இருவர் கூடவே ந்டந்துகொண்டிருந்தனர். அந்த இருவரின் ”ஆமாம்” சத்தங்களைத்தாண்டி குருவியின் சத்தம் அவரை அடைவது சந்தேகம் தான்.

தனது இனிமையால் எல்லோரையும் வென்றுவிடலாம் என நினைக்கும் குருவியினத்தை, தங்கள் புறக்கணிப்பாலேயே  மனிதர்கள் வென்றுவிடுகிறார்கள் என்றறிந்த திகைப்புடன் திரும்பிய நான், என் பைக்கின் கண்ணாடியில் தன்முகம் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குருவியை பார்த்துக்கொண்டு நின்றேன்.

"அப்பா...இங்க சூப்பரா எவ்வளவு குருவி இருக்கு!!.."  எனக்குப் பின்னால் குருவியைக் கவனிக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன். அந்தச் சிறுவன் தன் அப்பாவிடம் கேட்டான்.

 "இதை நம்ம வீட்டுக்குப் பிடிச்சுக்கிட்டுப் போகலாமா?"