Unordered List

24 மார்ச் 2013

தமிழ் மனத்தின் கதறல் - பாலாவின் பரதேசி

ஹாலிவுட்டில் முன்னரே வெளியாகியிருந்தாலும் இயக்குனர் டராண்டினோவின் “ஜாங்கோ அன்செயிண்ட்” (django unchained) இந்த இந்த வாரம் தான் இந்தியாவில் வெளியாகிறது.  பாலாவின் “பரதேசி” உடன் இந்தப் படம் வெளியாவது ஒரு ஆச்சர்யமான coincidence தான்.

வரலாற்றில் இருப்பது பெருமிதம் மட்டும் அல்ல. அதில் இருப்பது  நமது முன்னோர்களின் கண்ணீரும் தான் என்பதை புரிந்துகொண்டு, மற்றவர்கள் பேசக்கூட தயங்கும் வரலாற்றின் சில கருப்பு பக்கங்களைப் புரட்டுபவை  என்பதே இந்த இரு படங்களுக்கு இடையே உள்ள பொது அம்சம்.

அமெரிகாவின் கருப்பு சரித்திரமான அடிமைமுறைபற்றி அதிரடியாகப் பேசும் படம் “ஜாங்கோ அன்செயிண்ட்”.   இதில் ஒரு முக்கிய பாத்திரம் வில்லன் வீட்டில் தலைமை அடிமையாக இருக்கும் கருப்பின ஸ்டீபன்.  சாமுவேல் ஜாக்சன் மிக சிறப்பாக நடித்திருப்பார்.   அடிமைத்தனத்தின் முழு வடிவமான அவர் அடிமை முறைக்கு எதிரான ஒரு சிறிய செயலைக்கூட பொருத்துக்கொள்ள முடியாதவராக இருப்பார்.



கதையின் படி  கருப்பினத்தைச் சேர்ந்த ஹீரொ, வெள்ளைக்கார வில்லனின் விருந்தாளியாக தங்க வருவார். வெள்ளையர்களுக்கும் அதில் சங்கடம் இருந்தாலும், வியாபார நிமித்தமாக அதை சகித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த ஸ்டீபனால் அதை சகித்துக்கொள்ளவே முடியாது.  வெள்ளையர்களை விட அவரது பதட்டம் மிக அதிகமாக இருக்கும். ஒரு கருப்பினத்தைச் சேர்ந்தவன் எப்படி விருந்தாளியாக இருக்க முடியும் என தனது வெள்ளைக்கார முதலாளியிடன் சண்டையிடும் அளவுக்குச் செல்வார். 

பரதேசி படத்தின் மத மாற்ற காட்சிகள் பற்றி பொங்குபவர்களைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. இவர்களது பதட்டம் ஆசர்யமளிக்கிறது.  மற்றவர்கள் சொல்ல முடியாத வரலாற்றைச் சொல்ல ஒருவருக்கு தைரியம் இருக்கும்போது அதைப் பார்ப்பதற்கு எதற்கு நமக்கு இந்தப் பதட்டம்.

கொஞ்சம் நகைச்சுவையுடன் வரும் அந்தப்பகுதிதான் உண்மையில் மிக சோகமான செய்தியைத் தருகிறது.  தமிழ் சினிமாவில் குத்துப்பாட்டு என்று இருக்கும் இலக்கணத்தையே மாற்றியெழுதியிருக்கிறார் பாலா. அந்தப் பாடலில் காட்டப்படும் மக்களின் நிலையும் பாடலின் முடிவாக நீளும் சோக இசையும் மனத்தை உலுக்குபவை. தன் தாய் நோயால் இறக்கும் தருவாயில் ஏதும் புரியாமல் பக்கத்தில் அமர்ந்திருக்கும் குழந்தையின் கையில் இருப்பது ஒரு புதிய பொம்மை.



”ஒரு வக்கீலாக இருந்த்துகொண்டு காந்தி ஏன் சட்டத்தை மீறுகிறார்?” என ஆச்சர்யப்படுவார் ஒரு வெள்ளையர். ஆளும் வர்க்கத்தின் தரப்பை இந்த காட்சியே சொல்லிவிடுகிறது.  

கிராமத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து செல்லும் ஆரம்பக்காட்சியிலேயே நாம் அந்தக்கால கட்டத்துக்குச் சென்று விடுகிறோம். நமது சந்தோஷம், துக்கம், பேராசை, ஏமாளித்தனம், கோழைத்தனம், சோகம் என அனைத்தையும் அனுபவிக்கிறோம். 

அந்த எளிய மக்களும், வறண்ட பூமியும், அந்த பஞ்ச காலத்திலும் மக்களின் இயல்பான குறும்பும் கொண்டாட்டமும் கலந்த வாழ்க்கையும் நம் கண்முன் விரிகின்றன.

இந்த மக்கள் கூட்டம் ஒரு கங்காணியிடம் ஏமாந்து, தன் கூட்டத்தில் ஒருவன் சாகும் தருவாயில்கூட குரலெழுப்பமுடியாமல் செல்வது தான் நமது நாடு அடிமைப்பட்டிருந்ததின் வரலாறு.

எவ்வளவு கொடுமைகள் நடந்தாலும், நல்லது எதுவும்  நடக்காது என்று தெரிந்திருந்தாலும் கணக்கு தீர்க்கும் அந்த நாளை ஒவ்வொரு வருடமும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் மக்கள் உணர்த்துவது எதை?

பேரனையும் அவனது காதலியையும் அவர்களது குழந்தயையும் கூட பாதுகாக்கும் அந்தபாட்டி, அந்த அடிமை வாழ்விலும்கூட தனது குழந்தையுடன் தன்மானத்துடன் வாழும் பெண், தனது மனைவி பாதிக்கப்பட்டாலும் அவளை விரும்பும் கணவன் என மனித மனத்தின் உயரங்களையும் பார்க்கிறோம்.

மனத்தைக் கனக்கச்செய்யும் இந்தப் படத்தை ஏன் பார்க்கவேண்டும் என நான் கூட யோசித்ததுண்டு.  ஆனால் உண்மையில் இந்தப்படம் பார்த்தபின் தான் மன பாரம் குறைந்ததுபோல இருக்கிறது. கூட்டம் கூட்டமாக பக்கத்து நாட்டில் தமிழர்கள் கொல்லப்படும்போதும் ஏதும் செய்யமுடியாமல், அதைப் பற்றி பேசக்கூட முடியமல் இருந்த நமக்கும், இந்த படத்தின் பத்திரங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

கடைசியில் பரதேசியின் அந்தக்கதறல், நமது கதறல்.  நமக்காக பேச, நமக்காக வருத்தப்பட, நமக்காக கதற வந்தவன் இந்தப் பரதேசி.

11 மார்ச் 2013

அழித்தலில் ஆரம்பம்

தன்னைப் பார்க்க பல தர்க்கக் கேள்விகளுடன் வந்திருந்த அந்த ஞான யோகிக்கு சிவன் ஒரு மந்திரத்தை உபதேசித்தார்  

அந்த மந்திரத்தை அங்கே சென்றுகொண்டிருந்த ஒரு புழுவை நோக்கி சொல்லச் சொன்னார். யோகியும் சிவன் சொல்லியபடி செய்ய அந்த புழு அங்கேயே செத்துவிழுந்தது. அதிர்ந்தார்  யோகி.   

கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிய சிவன், மீண்டும் அந்த மந்திரத்தை அங்கே பறந்துகொண்டிருந்த ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியைப் பார்த்து சொல்லச்சொன்னார். ஏற்க்கனவே புழுவுக்கு அந்த மந்திரத்தால் ஏற்பட்ட நிலையைப் பார்த்திருந்த யோகி கொஞ்சம் தயங்கினார் இருந்தாலும் சிவனின்  சொற்படி அந்த மந்திரத்தை  வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து சொல்ல அதுவும் உடனடியாக இறந்தது.  

யோகி கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.  

"சிவனே என்ன இது"  என கதறினார்.  

சிரித்த சிவன் அடுத்து பார்த்தது அங்கு வந்த ஒரு மான்குட்டியை.  

"யோகியே அந்த மான்குட்டியை நோக்கி மந்திரத்தை சொல்லுக" என்றார்.

பலமுறை மறுத்த யோகி கடைசியில் சிவனின் சொல்லை மீறமுடியாமல் அந்த மானைப் பார்த்தும் மந்திரத்தைச் சொல்ல அதுவும் இறந்தது. ஒன்றும் புரியாமல் யோகி தவித்துக்கொண்டிருக்க ஒரு பெரியவர் கைக்குழந்தையுடன் சிவனிடம் ஆசிவாங்க வந்தார்.  

இப்போது சிவன் மந்திரத்தை சொல்லச் சொன்னது அந்த குழந்தையை நோக்கி. யோகியால் அதற்குமேல் முடியவில்லை. இதை என்னால் செய்ய முடியாது. இன்னொரு அழிவை என்னால் பார்க்க முடியாது என்று மறுத்துவிட்டார்.  

அப்போது அந்த அதிசயம் நடந்தது. அந்த குழந்தை யோகியை நோக்கி பேச ஆரம்பித்தது.  

"தயவு செய்து அந்த மந்திரத்தை சொல்லுங்கள்" என்றது.  

"புழுவாக இருந்த நான், வண்ணத்துப்பூச்சியானேன், பின்னர் அதிலிருந்து மான்குட்டியானேன், அதிலிருந்து மனிதனாகிவிட்டேன். இன்னொரு முறை நீங்கள் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நான் மனிதனிலிருந்து புனிதனாகிவிடுவேன்" என்றது அந்தக் குழந்தை.

யோகிக்கு அப்போதுதான் தான் செய்தது புரிந்தது. அழிவு என்று நினைப்பதெல்லாம் அழிவல்ல, அது இன்னும் மேலான ஒன்று பிறப்பதற்கான வழியாகவும் இருக்கலாம் என்று.  

----  

நேற்றைய மகா சிவராத்திரி இரவில் ஜக்கி வாசுதேவ் சொன்ன இந்தக் கதை நாம் நவீன  மேலாண்மைத் துறையில் அன்றாடம் பேசும் பல "comfort zone" போன்ற பல   கருத்துகளை எளிதாகத் தொட்டுச் செல்கிறது. யோசிப்பவர்களுக்கு இன்னும் அதிக அர்த்தங்களைக் கொடுக்கிறது இந்தக் கதை.  

சிவன் அழிப்பவன் தான். தான் என்று நாம் நினைக்கும் அனைத்தையும் ஒவ்வொரு கணமும் அழித்துக்கொண்டேயிருப்பவன். அழிவை நினைத்து அஞ்சாதவனுக்கு, தன்னுள் சிவன் இருப்பதை உணர்ந்தவனுக்கு நேற்றைய சுமையை சுமந்துசெல்லும் கட்டாயம் இல்லை. அவன் நித்தமும் புது மனிதன்.

04 பிப்ரவரி 2013

காலைச்சுற்றிய..பாம்பு இல்லை, இது வேற


எறும்பு கடிப்பதென்பது, அட்டை ’கடிப்பது’ போலன்று.

வனப்பயணங்களின் முக்கியமான பிரச்சனை அங்கு நம் ரத்தத்தை உறிஞ்சக்காத்திருக்கும் அட்டைகள். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரிரண்டு அட்டைகள் நம் உடலில் துழையிட்டு ரத்தம் உறிஞ்சுவதை தவிர்க்க முடியாது. அது உறிஞ்சும் இரத்தத்தை விட, அது கொடுக்கும் பதட்டமே வனச் சுற்றுலாவில் மிகப்பெரிய பிரச்சனை. புதிதாக பயணம் செல்பவர்கள் தங்கள் மொத்த அனுபவத்தையுமே இந்த பிரச்சனையில் இழந்துவிட வாய்ப்புண்டு.

மற்றவர்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என கவனித்தேன். அடிக்கடி பயணம் செய்யும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டேயல்ல என உணர்ந்தேன்

”அட்டை தானே அதனால் நமக்கு பாதிப்பேதும் வந்துவிடாது, மாறாக அது உறிஞ்சும் ரத்தத்தினால், அது சில காலம் உயிர் வாழும். நம்மால் சில உயிர்கள் வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே. இதற்காக பயந்து நம் உற்சாக மனநிலையை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்” என்பது அவர்கள் வாதம்.
காலில் அட்டை 

இதை என்னால் ஒரளவு ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், என்னை பொறுத்தவரை, இந்தப் பிரச்சனையில், பயம் என்பதைவிட அதைப்பார்க்கும் அருவறுப்பு என்றுதான் சொல்லவேண்டும்.  மூக்குப்பொடியெண்ணை, உப்பு மற்றும் காலுறை என்று எல்லா முன்னேற்பாடுகளுடன் தான்  செல்ல முடிந்தது . இதையும் தாண்டி வந்தால் வேண்டுமானால் அந்த பெருந்தண்மை வாதத்தை துணைக்கொள்ளலாம். அட்டை உறிஞ்சும் இரத்தத்துக்கும் சேர்த்து இன்னும் கொஞ்சம் சாப்பிடால் போகிறது.

ஆனால் இந்த வாதங்கள் எறும்பு விஷயத்தில் பயன்படாது. உண்மையில் எறும்பு நம்மிடம் எதிர்பார்ப்பது பெருந்தன்மையையும் அல்ல. அந்த எறும்பு நம்மிடம் காட்டுவது அப்பட்டமான எதிர்ப்பு. பொதுவாக கடிக்கும் எறும்பு அதன் உயிரை பணயம் வைத்துதான் அதைச் செய்கிறது. தனது கூட்டத்துக்கு தேவை என்று நினைத்தால் தனது உயிரை பணயம் வைத்து எதிர்ப்பைக் காட்டும் எறும்பிடம் எந்த பெருந்தன்மையும் எடுபடுவதில்லை.

--

மென்மையான இளையராஜா பாடல்கள் போகும் வேகத்தை இனிமையாக்க, உள்ளே மெல்லிய குளிர்பரவ நெடுஞ்சாலையில் காரோட்டிக்கொண்டிருக்கும் எனது கால்களில் சுர்ரென ஒரு உணர்ச்சி.

எப்போது காலில் ஏறியிருக்கும் இந்த எறும்பு. என்ன செய்வது இப்போது? காரை நிறுத்திதான் இந்த எறும்பைப்பார்க்கவேண்டும். காரின் குளிச்சியையோ இளையராஜாவின் இனிமையோ வேகத்தின் துடிப்பையோ அந்த எறும்பு அறிந்த்திருக்க நியாயமில்லை. ஆனால் நான் அறிந்திருக்கிறேனே. இந்த எறும்புகாக பயணத்தின் வேகத்தை குறைப்பதா.

சரி, எப்படியோ ஏறிவிட்டது. காரை நிறுத்தி இறக்கிவிடலாம். ஆனால் அது காலுறைக்குள் இருக்கும் அது அவ்வளவு எளிதாக இறங்காது. அது எதிரியைத் தாக்கும் வேகத்துடன் தன் முழு பலத்துடன் கடித்துக்கொண்டிருக்கிறது. இந்த எறும்புக்கு அதன் எதிரி நானல்ல, எனது உத்தேசம் வேறு  என்பதை எப்படிப்புரியவைப்பது.

என்னைத்தாக்க இவ்வளவு தூரம் பயணம் செய்து வரும் அதை நினைக்க வலியைவிட ஆச்சர்யம் அதிகரிக்கிறது.

அட்டையாக இருந்தால் பெருந்தமைவாதத்துடன் கையாளலாம். எறும்பை இப்போது என்ன செய்வது.

சரி, அது எறும்புதானா? வனப்பயணங்களில் இன்னொன்றும் நடப்பதுண்டு. அது காலில் ஏறும் எறும்பை அட்டையாக நினைத்து பதறுவது.

02 பிப்ரவரி 2013

கடல் - அலைகளைக்கடந்து ஆழம்


”எனக்கு நிம்மதியா இருக்குறதை விட உஷாரா இருக்குறதுதான் பிடிக்கும்” 


”சாத்தான் யேசுவோட அண்ணன். அப்படின்னா அவனுக்கு யேசுவோட நிறைய தெரியும். என்னோட சேத்து இங்க இருக்குற 12 பேரு சைத்தானுக்க ஆளுங்க”

என்று பேசும் பெர்க்மான்ஸ்(அர்ஜுன்) தான் இந்த படத்தின் அச்சு. தான் தான் மிகுந்த அறிவாளி, சைத்தானின் பிரதி என நினைக்கும் அவரை, தான் எதிரியாக நினைக்கும் அனைவரையும் அவர்கள் யோசிக்க இடம் கொடுக்காமல் தனது திறமையால் தோற்கடித்துக்கொண்டே வரும் அவரை, தன் அறிவால் யோசிக்க கூட முடியாத ஒரு சிறு பெண், எளிய அன்பினால் வெற்றி கொள்வதே இந்தக் கடல்.

--


அர்ஜுனின் பாத்திரம் எந்த ஒரு ஹீரோவும் விரும்பும் ஒரு வில்லன் பாத்திரம், பெர்க்மான்ஸ். ஃபாதரான அரவிந்த் சாமியுடனான ஆரம்ப வார்த்தைப் போர்கள் மிகக் கூர்மையானவை. மிகத் திறமையான அவர் ஒரே  சறுக்கலினால்  புகழிலிருந்து வீழும் ஒரு Fallen Angel.  ஒரு முறை தோற்கும் பெர்க்மான்ஸ், அதன்பின் ஒரு முழு வில்லனாக மாறுவது அதிரடி.

அர்ஜுனைப் (பெர்க்மான்ஸ்) பற்றி தெரிந்திருந்தாலும், தனது நல்லியல்பால் மீண்டும் மீண்டும் ஏமாறும் ஃபாதர் அரவிந்த்சாமியும் சரியான எதிர் பாத்திரம்.

ஃபாதர் வளர்க்கும் கைவிடப்பட்ட பையனாக ஹீரோ தாமஸ், கெளதம்

ஃபாதரால் பெர்க்மான்ஸ் திருந்த ஒரு வாய்ப்பு வருகிறது. ஆனால் அது நடக்கவில்லை. ஃபாதர் ஜெயிலுக்குப்போனபின், அதற்குக்காரணமான அனைவரையும் அடித்து நொறுக்கும் தாமசால் பெர்க்மான்ஸ்க்கு ஒரு பிரச்சனை வர வாய்ப்பு வருகிறது, ஆனால் அதுவும் நடக்கவில்லை.  ஹீரோ வில்லனை பழிவாங்குவான் என்ற எதிர்பார்ப்பைத் தகர்த்து, அவனும் விரும்பி பெர்க்மான்ஸ் உடன் சேரும்போது, சாத்தானின் முழு வெற்றி. அடுத்தது என்ன என்ற ஒரு திகைப்பு உருவாகிறது.

ஃபாதரின் திறமையாலும் வெல்ல முடியாத, தாமசின் சக்தியாலும் வெல்ல முடியாத பெர்க்மான்ஸ் யாரால் தான் வெல்லப் பட முடியும் என்ற கேள்விதான் இந்தப் படத்தின் முடிச்சு.


அறிவு வளர்ச்சி சிறு வயதிலேயே நிற்க, அந்தக் குறையை, தனது அன்பாலும், மருத்துவ சேவையாலும் இட்டு நிரப்பும் பெண்ணாக பியா என்ற பீட்ரைஸ்(துளசி).

நான் ஒரு பாவி என்று கதறும் தாமசிடம், பியா கொஞ்சமும் புன்னகை குறையாமல், “நான் யார்கிட்டையும் சொல்ல மாட்டேன், நீ இனிமே அப்படி பண்ணாத சரியா” என்று கூறுவதும், அந்த பரிபூரண மன்னிப்பை தாங்க முடியாமல் தாமஸ் கதறுவதும் கவிதை.

பயத்தைக் காட்டியும், அதிகாரத்தின் மீது ஆசையைக் காட்டியும், தனது அப்பாவைக் கொல்லும்போது கூட தாமசை எதிர்த்துப்பேச முடியாமல் தாமசைக் கட்டிப்போட்டிருக்கும் பெர்க்மான்ஸ், பியாவின் எளிய அன்புக்கு முன்னால் பதறுவது, அவள் தாமசை மீட்டுச் செல்வதைப் பார்த்து கையறு நிலையடைவது பின்னர் படு தோல்வியடைவது படத்தின் உச்சம்.

---

கடலோர மக்களின் மொழியை மிக இயல்பாக கேட்க முடிகிறது. சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும், அந்த சூழ்நிலை மூலம் அர்த்தம் புரிந்துகொள்ள முடிகிறது. இது படத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது.

துணை நடிகர்களின் பங்களிப்பு அபாரம். ஃபாதருக்கு உதவியாக வருபவர்(யேசுவையே நேருல பார்த்தவரு), மீன் விற்கும் பெண் என பலர்.

பல பாத்திரங்கள் சில நிமிடங்களே வந்தாலும், அவர்களுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கும் சாத்தியங்களை தொட்டுக் காட்டிச் செல்கின்றன.  அர்ஜுனின் காதலியாக வருபவர் போல. பார்வையாளர்கள் தங்கள் கற்பனையால் இட்டு நிரப்பிக்கொள்ள.

முக்கிய நடிகர்களின் தேர்வு இந்தப்படத்தின் மிகப்பெரிய ஏமாற்றம். துளசி, கெளதம் இருவருமே இந்தப் படத்தின் பிரச்சனைகள். இவர்களிருவரும் வரும் காட்சிகள் பல ஸ்கூல் டிராமா மாதிரி இருக்கிறது. அதனாலேயெ பல முக்கிய காட்சிகள்  போதுமான இம்பாக்ட் கொடுக்க முடியவில்லை. அரவிந்த் சாமியும் பரவாயில்லை ரகம் தான். மணிரத்னத்துக்கா நடிகர்கள் பஞ்சம். அந்தக்கால ரஜினி-கமல் நடிக்க வேண்டிய கதை இது.

எப்படியும் இன்னும் ஒரு அரைமணிநேர கதை கத்தரிக்கு பலியாகிவிட்டது என எண்ணத் தொன்றுகிறது. பின்பாதி, தவ்வி தவ்விச் செல்கிறது. பல இடங்களில் தொடர்ச்சி இல்லை. இந்தக் கத்திரிரிக்குக் காரணம், நாயகியின் ‘திறமையான’ நடிப்பாகத் தான் இருக்கும் என்பது எனது எண்ணம்.

---

சில குறைகளை மீறியும் படத்தின் பேசுதளத்தாலும், ஆழமான கதையாலும் இது ஒரு முக்கியமான படம்.

அலைகளைக்கடந்து ஆழம் அறிபவர்களுக்கானது இந்தக் கடல்.

14 ஜனவரி 2013

புத்தகக் கண்காட்சி - ஓர் எச்சரிக்கை மற்றும் சில தகவல்கள்

புத்தகக்கண்காட்சிக்கு உடற்பயிற்சிக்கல்லூரி பொருத்தமான இடம்தான். புத்தகக் கண்காட்சிக்கு போவதற்க்கு முன்னால் கொஞ்சம் நாள் நடைப்பயிற்சி செய்துவிட்டு போவது உத்தமம். அவ்வளவு பெரிய அரங்கை சுற்றி வருவதற்கு உங்கள் கால்களில் கொஞ்சம் தெம்பு அவசியம். காலில் தெம்பு இல்லாமல் உட்கார இடம்தேடி பொறியில் சிக்கியவர்கள் பலர். அதில் ஒரு மிகப்பெரிய சதியும் இருக்கிறது. நான் சென்றது போன சனிக்கிழமை. இரண்டு மணிநேரம் சுற்றி, களைத்த கால்களுடனும், வாங்கிய புத்தக சுமையுடனும்(அப்படித்தான் சொல்லணும்) கொஞ்சம் இளைப்பார இடம் தேடினால் எங்கும் இடம் இல்லை. சில இடங்களில் ஸ்டாலில் உள்ளவர்களே இருக்கை இல்லாமல் நாள் முழுவதும் நிற்பதையும் கவனிக்க முடிந்தது.

இன்னிலையில் பாலைவனச் சோலை போல கிடைத்தன வசதியான இருக்கைகைகள். உட்கார்ந்த அப்புறம் தான் கவனித்தேன் அது ஒரு கவி அரங்கு என்று. பீதியுடன் கவனித்தால் அதில் நடுவர் ‘வாலிபக்கவிஞர்’ வாலி. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு எனது எச்சரிக்கை இதுதான். ஒன்று உட்காராமலே சுற்றும் அளவுக்கு காலில் தெம்புடன் செல்லுங்கள், அல்லது வாலிபக் கவிஞர் போன்றவர்களின் அரங்குகளை தாங்கும் அளவுக்கு மனத் தெம்புடன்.


  • புதிய இடம் வசதியாகத் தான் இருக்கிறது. வாகன நிறுத்ததிலிருந்து நடக்க வேண்டிய தூரம் தான் கொஞ்சம் அதிகம். இருந்தாலும் நடக்கும் தூரம் தெரியாமலிருக்க, போகும் வழிக்கு சுண்டல் வாங்கி சாப்பிட்டபடியே செல்லலாம். அப்படி ஒரு வசதி செய்யப்படிருக்கிறது. இந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.


  • ஜெயமோகன் வழிகாட்டுதலில், கடலூர் சீனுவை பதிப்பாளராகக் கொண்டு உதித்துள்ள சொல்புதிது பதிப்பகம் ஸ்டால் 504-இல் எழுத்துப் பதிப்பகத்தில் இயங்கி வருகிறது. தீவிர இலக்கிய வாசகரான சீனு, வாசகர்களுக்கு பொதுவாக புத்தகங்கள் பற்றி தகவல்கள் சொல்வதையும் கவனித்தேன். 


  • தமிழினி பதிப்பகத்தில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் இருந்தார். புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு எழுத்தாளர்களின் வருகை இன்னும் மகிழ்சி தரும் விஷயம். இந்த வருகைகள்தான் இந்த கண்காட்சியை ஒரு கொண்டாட்டமாக மாற்றுகின்றன.

  • மதி நிலையத்தில் இருந்த ‘நாலாயிர திவ்யப்ப்ரபந்தம்’ இருநூறு ரூபாய்தான். பதம் பிரித்து கொடுக்கப்படுள்ள பாடல்கள், விளக்கம் இல்லாமலே புரியும்படி உள்ளன. அப்படியே புரியாத சில வார்த்தைகள் இருந்தாலும் இருக்கவே இருக்கிறது கூகிள்.

  • காலச்சுவடு பதிப்பகத்தில் புதுமைப்பித்தன் கதைகளை வாங்கச் சென்றேன். அது நானூற்று ஐம்பது ரூபாய். அவர்கள் அவரது முழுத்தொகுப்பே தொள்ளாயிரம் ரூபாய் தான் என்று ஒரு டீல் தந்தார்கள். சிறப்பு தான்.

  • புத்தகக் கண்காட்சியின் இன்னொரு அம்சம் அங்கே எதிர்பாரமல் சந்திக்கும் நண்பர்கள். அப்படி சிலரை சந்திக்க முடிந்த்தது.

  • அதெல்லாம் சரி, புத்தகக் கண்காட்சிக்கு உள்ளே எதற்கு அந்த அப்பளக் கடை என்று தெரியவில்லை. அப்பளமும், வத்தல்களும் பரபரப்பாக விற்பனை ஆகிறது. இது எதாவது இலக்கிய குறியீடொ என்னவோ தெரியவில்லை. 

இன்னொரு முறையாவது செல்லவேண்டும். இந்த இருநாட்களாக காலையில் ஜாக்கிங் செய்ய ஆரம்பித்துவிட்டேன். இன்னொரு கவியரங்கத்தை தாங்க முடியாது என்பதால். புத்தகங்களால் ‘உடனடி’ நல்ல பழக்கம் வாரது என்று யார் சொன்னது.