Unordered List

15 மார்ச் 2012

உயர் கவித்துவமும் அங்கதமும்

மொழிபெயர்ப்பு புத்தகங்கள் என்றால் எனக்கு உடனே நினைவுக்கு வருவது, நான் படிக்க ஆரம்பித்த காலத்தில் படித்த,  ரஷ்யாவின் முன்னேற்றப் பதிப்பத்தின் புத்தகங்கள் தான். சைபீரியக் காடுகளையும், பனிக்கரடிகளையும், பனிபடர்ந்த நகரங்களையும் மற்றும் ஜெர்மானியருக்கு எதிரான வீரதீர சாகசங்களையும் மிகப் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்திய புத்தகங்கள் அவை.

பெரல்மானின் "பொழுதுபோக்கு பௌதிகம்" இன்னொமொரு மறக்க முடியாத புத்தகம். பள்ளிநாட்களில் அறிவியல் ஆர்வத்தை ஊட்டிய அந்தப் புத்தகம், இன்றளவும் அந்தத்தளத்தில் மிகச் சிறந்தது என சொல்வேன். அறிவியலை மிக எளிதாக நம் சிந்தனைக்குள்ளும் விதைத்து, நமது ஆர்வத்தை தூண்டும் புத்தகம் அது.  எங்களூர் கிளை நூலகம் மூலம் வங்காளம் உள்ளிட்ட பல இந்திய மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் படித்ததுண்டு.

-----

திடீரென  திருவண்ணாமலைக்குப் போக அழைப்பு வந்துபோது, நான் உடனே சரி என்று சொல்ல ஒரே காரணம் ஜெயமோகன் வருகிறார் என்பது தான். அது என்ன விழா என்று கூட அதிகம் யோசிக்கவில்லை.

செந்தில் மற்றும் ராஜகோபாலனுடன்  சென்னையிலிருந்து காரில் பயணம் ஆரம்பித்தோம். பொதுவான அரட்டைகளுடன், கொஞ்சம் இலக்கியமும் வழியில் அருந்திய டிகிரி காபியுமாக சரியாக விழா தொடங்கும் நேரத்தில் திருவண்ணாமலை அடைந்தோம்.
விழா அறிவிப்பு

எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் விழா. மிக துடிப்பான இளைஞரான  கருணாவின் கல்லூரி அது. சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய மேடை. பார்வையாளர்கள் அமர அருமையான ஏற்பாடுகள்.
விழா மேடை 

இந்திய இலக்கிய உலகின் பல நட்சத்திரங்கள் அலங்கரித்த மேடை அது. புத்தகங்களை சிறப்பாக வெளிக்கொண்டு வந்ததுடன் இவ்வளவு ஆளுமைகளை ஒரே மேடையில் அமரச் செய்த எழுத்தாளர் பவா செல்லத்துரை மிகவும் பாராட்டுக்குரியவர்.
பார்வையாளர்களில் ஒரு பகுதி 
மூன்று மொழிபெயர்ப்பு நூல்களின் அறிமுக மற்றும் வெளியீட்டுவிழா. கன்னட, மலையாள மற்றும் சர்வதேச இலக்கியங்கள். இந்த விழா உண்மையிலேயே பலருக்கு இலக்கிய உலகின் புதிய இடங்களை அறிமுகப் படுத்தியிருக்கும் என நம்பலாம்.

மேடையில் நிறைய பேர் இருந்தாலும், நேரம் அளவாக இருந்தாலும், புத்தகத்தை பற்றிய அறிமுக உரை. பின்பு மொழிபெயர்ப்பாளரின் ஏற்புரை என சுவையாகச் சென்றது விழா.

-- 
பால் சர்க்காரியாவின் நூலை அறிமுகப் படுத்தி பேசிய ஜெயமோகன், மொத்த கேரளா இலக்கிய சூழல் பற்றியே ஒரு அறிமுகம் தந்து, அதில் பால் சர்காரியாவின் இடம் எங்கே வருகிறது என தொட்டுக் காட்டினார்.
ஜெயமோகன்
புத்தக வெளியீடு 
 

அவரது பேச்சு, என் நினைவிலிருந்து..
  • கேரளாவின் சாக்கியார் கூத்து எனப்படும் அங்கத விமர்சனக் கலை மரபின் பண்பாட்டுத்  தொடர்ச்சியாக பஷீர் மற்றும் வி.கே.என் படைப்புகளை பார்க்கலாம்.
  •  இந்தக் கதைகளைப் புரிந்துகொள்ளவே ஒரு மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது. மிக நுட்பபான இருண்ட வாழ்க்கைத் தரிசனம் கொண்ட கதைகளைக் கூட நகைச்சுவையுடனே சொல்லும் திறனுள்ள படைப்பாளிகள்.  நகைச்சுவையாகவேத் தோன்றும் இக்கதைகள் எங்கே உருமாறுகிறது என்பதை அறிவதே ஒரு அறிவார்ந்த வாசக அனுபவம் தான். 
  • வாழ்க்கையை ஒரு விளையாட்டுத்தனத்துடன் அணுகும் பஷிரின் அணுகுமுறையும், புத்திசாலித்தனமான மொழி விளையாட்டுக்களைக் கையாளும்  வி.கே.என்-இன் அணுகுமுறையும் இயைந்துள்ள வெற்றிகரமான கலவையாக பால் சர்க்காரியாவின் படைப்புகள் உள்ளன. 
  • பஷீர் மற்றும் வி.கே.என்-இன் தொடர்ச்சியாக வரும் பால் சர்காரியாவின் சிறப்பு அவர் படைப்புகளில் உள்ள உயர் கவித்துவமும், மிக நுட்பமான அங்கதமும்.  
  • ஆன்மீக விவாதத்துக்கு  மிக முக்கியமானது நகைச்சுவை உணர்ச்சி. இது பால் சர்காரியாவிடம் உள்ளது. எனவே அவரின் படைப்புகள் பல இயல்பாகவே அந்த ஆன்மீக  உச்சத்தை அடைகின்றன. 
-----
வேங்கைச் சவாரி கதைகளை அவை ஜெயமோகனின் வலைத்தளத்தில் வந்த போதே படித்திருந்தாலும், மற்ற இரு புத்தகங்களும் எனக்கு மிகவும் புதியவை.  இந்த விழா தந்த உற்சாகத்தில் எல்லாப் புத்தகங்களையும் வாங்கிக்கொண்டேன்.

---

விழா முடிந்ததுமே அவசர வேலையாக ஜெயமோகன் கிளம்பிச்   சென்றுவிட்டதால், ஒரு இலக்கிய அரட்டை இரவை எதிர்பார்த்துவந்த எங்களுக்கு ஏமாற்றமே. ஆனால் எழுத்தாளர்  யுவன் சந்திரசேகர் அறையில் அரட்டை ஆரம்பித்தது. ஜடாயு, சிறில், கோபி, ராஜகோபாலன் மற்றும் செந்திலுடன் மொழிபெயர்ப்பு பற்றிய பல கருத்துக்களும் கேள்விகளுமாக இரவு கழிந்தது.

நண்பர்களுடன் 

மயிலு 
அடுத்தநாள் ஊர் சுற்றலில் சபர்மதி வலைத்தளம் நடத்துபவரும், ஜெயமோகனின் "அண்ணா ஹஜாரே" உள்ளிட்ட பல முக்கிய கட்டுரைகளை ஆங்கில மொழியாக்கம் செய்தவருமான நண்பர் கோகுலும் இணைந்துகொண்டார்.

காரில் கிரிவலம், ரமணாஸ்ரமம், கோவில் என சென்றது அன்றைய ஆன்மீகப் பயணம். ஆன்மிகம், கோவில் மற்றும் சிற்பக்கலை பற்றி பெரிதும் அறிந்த ஜடாயு தன் தகவல்களால்  இந்தப் பயணத்தை மிக சுவையாக ஆக்கினார்.

காலையில் ஆரம்பித்த எங்கள் பயணம் எழுத்தாளர் பவா செல்லத்துரை வீட்டில் நடந்த அவரது குழந்தையின் பிறந்தநாள் விருந்துடன் இனிதே நிறைவு பெற்றது.

--

கொஞ்சம் கொஞ்சம் தொட்டுப் பார்த்தவரையில் இந்த மூன்று புத்தகங்கள்..  

அயல் மகரந்தச் சேர்க்கை - (சர்வதேசப் படைப்பாளிகளின் பேட்டிகளும் படைப்புகளும்.) - சர்வதேச இலக்கியம் பற்றி அறிமுகம் கொள்ள. குறைந்த பட்சம் ஜல்லியடிக்க மிக முக்கியமான புத்தகம். 

வேங்கைச் சவாரி - (விவேக் ஷேன் பேக் -கன்னட கதைகள் ) - யுவன் சந்திரசேகர் தனது உரையில் சொல்லியதுபோல், சில மர்மங்களை சொல்லாமல் சொல்லும் கதைகள்.

அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும் - (பால் சர்காரியா - மலையாளக் கதைகள்) - எளிய நடையில் சொல்லப்பட்ட ஆன்மீக தரிசனத்துடன் கூடிய கதைகள் 

---

புத்தகங்கள் கிடைக்குமிடம்:  http://www.vamsibooks.com/