Unordered List

27 ஜூன் 2012

ஒவ்வொரு நொடியும் ஹீரோ..

எல்லா கண்களும் அவனைப் பார்க்கின்றன. அவனை விரும்புபவர் பலர், அவன் பலரால் விரும்பப்படுவதாலேயே அவனை வெறுப்பவர்கள் சிலர். அவன் செய்யும் சாதனைகள் வரலாகின்றன. செய்யத்தவறிய செயல்கள் வசையாகின்றன. சிறு தவறும் கடுமையான விளைவுகளை உருவாக்குகின்றன  எப்படியோ எல்லாருக்கும் அவனைப் பற்றி சொல்ல ஏதாவது இருக்கிறது. அவனே ஒரு ஹீரோ.
 
போர்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அப்படியான ஒரு ஹீரோ.
 
அரங்கில் விளையாடும் அத்தனை பேரில், தன்மீதுதான் அதிகமான கவனம் உள்ளது என்பது அவருக்கு எப்போதுமே தெரிந்திருக்கிறது. அந்தக் கவனத்தை எந்தவித போலி அடக்கமும் இன்றி  அவர் மிக விரும்பி ஏற்றுக்கொள்கிறார் என்று எனக்குத் தெரிகிறது, அதுவே அவர் மீது அதிகமான மரியாதையைத் தருகிறது.
 
டிவியில் அவரைப் பார்ப்பது நல்ல பொழுதுபோக்கு.தலையலங்காரம் உட்பட தன் தோற்றத்துக்குத் தரும் கவனம், தான் சம்பத்தப் பட்ட முக்கிய தருணங்களில் அவர் முகத்தில் வரும் அபாரமான உணர்சிகளும் அதை அதிகப் படுத்தும்.  கோல் வாய்ப்பை தவறவிடும் சமயங்களில் ரொனால்டோவின் முகபாவம் ஒரு மூன்று மணிநேர சோக சினிமா கொடுக்கும் சோகத்தை நமக்குக் கொடுத்துவிடும்.
 
டிவி கேமராக்கள் எப்போதும் அவரை விட்டு விலகுவதில்லை. அவரும் தான் கோல் போட்டபின் கேமரா எங்கிருந்தாலும் தேடி அதன் முன் ஏதாவது சொல்லத் தவறுவதில்லை.
 
வெற்றியோ தோல்வியோ, ஒவ்வொரு நொடியும் கவனத்தைத் தன்னிடம் வைத்திருக்கும் ஹீரோ நம்ம ரொனால்டோ.
 
இன்று மிக நேர்த்தியான அணியான ஸ்பெயின் அணியை எதிர்த்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றிபெற எனது வாழ்த்துக்களும், எதிர்பார்ப்பும்.
 
Euro Cup 2012: Portugal vs Spain- Semi-final
27-Jul-2012

19 ஜூன் 2012

அழகு அறிவு மூடநம்பிக்கை

உங்களுக்கு புத்தகங்களின்மீது ஆர்வமிருந்தால்,இது உங்களுக்கான நிகழ்ச்சி என்ற அறிவிப்புடன் தொடங்கியது அந்த வானொலி நிகழ்ச்சி. புத்தகம் படிப்பதே அருகிவரும் நிலைமையில் இப்படி ஒரு நிகழ்ச்சியா என்று சற்று ஆர்வமடைந்தேன்.Hello FM என்று நினைக்கிறேன். நடத்தியவர் தீபா வெங்கட். அருமையான குரலுடன் கூடிய அழகான பெண். ஒரு பெண் நடத்தும் அறிவார்ந்த நிகழ்ச்சி என்பதே ஒரு ஆச்சர்யம்  தானே.
 
இருந்தாலும் இவர்கள் புத்தகம் புத்தகம் என்று சொல்வது ஆனந்தவிகடனைத் தானா என்ற பீதி லேசாகத் தலைதூக்கியது. "யாராவது பரிந்துரைத்து நீங்கள் ஏதாவது புத்தம் படித்தீர்களா?  அந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்று கேள்வியைத் தொடங்கினார். சுவாரஸ்யமான கேள்விதான்.
 
இது நேயர்கள் தொலைபேசி உரையாடும் நிகழ்ச்சி. முதலில் ஒரு பெண் அழைத்தார்.
 
"நானெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் படித்து விடுவேன்" என்று அதிரடியாக ஆரம்பித்தார்.
 
"தினமும்  ஒரு புத்தகமா?அப்படின்னா வீட்லயே ஒரு சின்ன லைப்ரரி இருக்கணுமே" என்றார் தீபா
 
"லைப்ரேரி வீட்ல இல்லை. வீட்டு பக்கத்துல இருக்கு!!"
 
இதை கேட்டதும் எனக்கே மிக ஆச்சர்யமாக இருந்தது, புத்தகங்களைப் பற்றி உரையாடும் 'அறிவார்ந்த' ஒரு வானொலி நிகழ்ச்சி. அதை நடத்தும் ஒரு பெண். அதில் பங்குகொள்ளும் தினமும் படிக்கும் ஒரு பெண். இது உண்மை தானா என்று.
 
பெண்கள் எல்லாம் தொலைகாட்சியின் ஆபாசமான மெகா தொடர்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே நடப்பது என்ன?
 
"சரி உங்களுக்கு புத்தகங்கள் பரிந்துரை செய்தது யாருங்க.."
 
"அதாவது நான் எப்போதுமே டீவீல பட்டி மன்றம் தவறாமல் பார்ப்பேன். அதுல சொல்ற புக்கெல்லாம் தவறாம படிப்பேங்க என்றார்.."
 
டிவியில் வரும் பட்டிமன்றங்கள் மூலம் அறிவு வளர்கிறதா. இது இவ்வளவு நாள் நமக்குத் தெரியாமல் போச்சே.  அட ஆண்டவா..
 
இதற்க்கு தீபா வெங்கட்டின் பதில்.. "ரெம்ப நல்ல சொன்னீங்க..ரெம்ப நல்ல பழக்கம். இதை இப்படியே தொடருங்கள்.  இப்போ இந்த பாட்டைக் கேளுங்க.."
 
அடுத்து அவர் ஒலிபரப்பிய பாடல்.. எவண்டி உன்னைப் பெத்தான்... பெத்தான்..
 
--
 
புத்தகம் படிப்பதே ஒரு அறிவார்ந்த விஷயம் என்று பரவிவரும் மூடநம்பிக்கையை தகர்க்க சேவைசெய்யும் முறையில், இதுபோன்ற நிகழ்சிகளின் சேவை நாட்டுக்குத் தேவைதான்.

04 ஜூன் 2012

ரேடியோவில் கேட்ட ஒரு வாழ்த்துச் செய்தி!

ரேடியோவில் கேட்ட ஒரு வாழ்த்துச்  செய்தி..
 
".... இந்த நாள். இன்று அவர் பிறந்தநாள் என்பது நாம் அனைவரும் மகிழ்ச்சியடையவேண்டிய திருநாளாகும். இந்த வானொலி மூலம்  அவருக்குப்  பிறந்தநாள் வாழ்த்துக்கூற விரும்புகிறேன். தமிழ் சினிமாவுக்கும், தமிழக மக்களுக்கும் அளப்பரும் பங்களிப்பற்றிய அவருடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நாமெல்லாம் கடமைப்பட்டுளோம். அவர் வாழும் இந்த .........."
 
இப்படி போகிறது அந்த வாழ்த்து செய்தி நானும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டே இருந்தேன். இவர் அவரை ஒரு தடவையாவது வாழ்த்துவாரா என்று. இல்லையே.. ஒரு தடவை கூட இல்லையே.. வாழ்த்த விரும்புகிறேன், ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறாரே தவிர கடைசி வரை வாழ்த்து மட்டும் சொல்லவில்லை,
 
இது வாழ்த்து அல்ல, வாழ்த்துக்கான திட்டமிடலோ?  இதெல்லாம் முடிந்தபின் தனியாக வாழ்த்துவாரோ தெரியவில்லை. இருந்தாலும் இது இது என்ன டைப் வாழ்த்து என்று  யோசிக்க நாமெல்லாம் கடமைப்பட்டுள்ளோம்..இல்லையா?

11 மே 2012

IPL அதிரடி : அடித்தவனும் பிடித்தவனும்



 நமக்குப் பிடித்த ஆட்டக்காரன் கேட்ச் கொடுத்து அவுட் ஆகும்போது நாம் வருத்தப் படுவது இயல்பானது மற்றும் புரிந்துகொள்ளக்கூடியது தான். ஆனால் அவர் பந்தை அடிப்பதற்கும், எதிராளி பிடிப்பதற்கும் இடையே உள்ளது ஒரு கால இடைவெளி, அதை அவதானிப்பவர்களுக்கு சில புரிதல்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. கேட்சுக்கு அடிக்கும்பொழுது வருத்தப்படும் ரசிகன், எதிராளி பிடிக்கும்பொழுது வருத்தப்படும் ரசிகனிடமிருந்து வித்தியாசமானவன்.

அடிக்கும்பொழுதே வருத்தப்பட்டுவிட்டவன் பிடிக்கப்படும்பொழுது வருத்தப்படத் தேவையில்லை.  பிடிப்பவன்மீது வருத்தப்படுபவன், தனது பிரச்சனைக்கு மற்றவரைக் காரணம்கூறி, உண்மையான பிரச்சனையைச் சந்திக்கப் பயப்படுபவனாக இருக்கலாம்.



------------


கம்பீர் ஜெயிப்பது மகிழ்ச்சிதான், ஆனால் அதற்காக சேவாக் தோற்கவேண்டியிருக்கிறது என்பதிலிருக்கிறது இந்த விளையாட்டின் அவலம். நல்ல வேளையாக நிஜ வாழ்க்கையானது இந்த விளையாட்டு அளவுக்கு சிக்கலானதாக இல்லை.

எந்த இரு மனிதருக்கும் உண்மையில் ஒரே தேவை இருக்கவே முடியாது. எனவே இன்னொருவரை தோற்கடிக்காமலெயே இயல்பான வெற்றிகளை அடையமுடிகிறது.

விளையாட்டு களத்தில் வெற்றியை மற்றோருவரிடமிருந்து மோதி பறிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் வாழ்கையில் வெற்றி எதிராளி இல்லாத வழியை கண்டடைவதில்  இருக்கிறது. எதிராளியோடு மோதுவதில் நேரத்தை இழப்பவன், தனது வாழ்கையை இழக்கிறான்.




04 மே 2012

மூன்று இட்டலிக்கு எவ்வளவு தண்ணீர்?

காரைக்குடி பேருந்து நிலையத்தில் இரவு உணவுக்காக பேருந்து  நின்றது. காரைக்குடியில் எப்போதுமே தரமான உணவுக்கு பிரச்சனையில்லை, அது பேருந்து நிலையமானாலும். உணவு முடித்தேன். மூன்று இட்டலி, சுவைக்குக் குறைவில்லை. பதினெட்டு ரூபாய். பேருந்தில் செல்லவேண்டுமே என பக்கத்துக் கடையில் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கினேன். அதுவும் பதினெட்டு ரூபாய்.

எனக்கு என்னவோ இது மிகவும் யோசிக்கவேண்டிய விஷயமாகத் தெரிந்தது. இலைபோட்டு சட்னி சாம்பாருடன் பரிமாறப்படும் இட்டலிக்குத் தரும் அதே பணத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்குத் தருகிறோமா?

மூன்று இட்டலிகள், சாம்பார் மற்றும் சட்னிக்கு கண்டிப்பாக ஒரு லிட்டரை விட அதிகமாக தண்ணீர் செலவாகியிருக்கும். அதை நம்மால் சாப்பிட முடிகிறது. ஆனால் தனியாக தண்ணீருக்கு பெப்சி நிறுவனத்துக்கு பணம் தருகிறோம் என்பதே ஒரு சிந்திக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. இதன் மூலம் அந்த இட்டலி வியாபாரியை, அவரது உழைப்பை அவமதிக்கிறோமா?

இதை அந்த இட்டலி வியாபாரி யோசிக்க ஆரம்பித்தால் நமக்கு அடுத்த தடவை இப்படி ஒரு விலையில் உணவு கிடைக்குமா எனத் தெரியவில்லை.

பேருந்தில் ஏறியபின் மற்ற பயணிகளையும் கவனித்தேன்.  பேருந்தில்  எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அந்தக் கடையில் தான் இட்டலி சாப்பிட்டாரா எனத் தெரியாது. ஆனால் நான் வாங்கிய  அதே தண்ணீர் பாட்டிலைத் தான் வாங்கியிருந்தார்.

பொதுவாக இதுபோன்று பயணங்களில் தண்ணீர் பாட்டில் வாங்குபவர்கள் வீட்டில் சாதாரண தண்ணீரைத் தான் குடிக்கிறார்கள். வீட்டில் Aquafina தண்ணீர் குடிப்பவர்கள் அரிது. பயணத்தில் மட்டும் மிக மிகச் சுத்தகரிக்கப் பட்டநீரைத் தான் குடிக்கவேண்டும் என்பது எழுத்தப்படாத சட்டமா அல்லது பதினெட்டு இருபது எனபது மிக சாதரணமாக நினைக்கும் அளவுக்கு இதியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதா என்பது ஒரு ஆய்வுக்குரிய விஷயம்.

பேருந்து நிற்குமிடத்தில் எங்கும் சிதறிக்கிடக்கும் காலி தண்ணீர் பாட்டில்களைப் பார்க்கும்போது இதில் உள்ள பிரச்சனை பணம் மட்டுமல்ல இந்தக் கலாச்சாரம் உருவாக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடும் தான் எனத் தோன்றுகிறது.