Unordered List

11 மே 2012

IPL அதிரடி : அடித்தவனும் பிடித்தவனும்



 நமக்குப் பிடித்த ஆட்டக்காரன் கேட்ச் கொடுத்து அவுட் ஆகும்போது நாம் வருத்தப் படுவது இயல்பானது மற்றும் புரிந்துகொள்ளக்கூடியது தான். ஆனால் அவர் பந்தை அடிப்பதற்கும், எதிராளி பிடிப்பதற்கும் இடையே உள்ளது ஒரு கால இடைவெளி, அதை அவதானிப்பவர்களுக்கு சில புரிதல்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. கேட்சுக்கு அடிக்கும்பொழுது வருத்தப்படும் ரசிகன், எதிராளி பிடிக்கும்பொழுது வருத்தப்படும் ரசிகனிடமிருந்து வித்தியாசமானவன்.

அடிக்கும்பொழுதே வருத்தப்பட்டுவிட்டவன் பிடிக்கப்படும்பொழுது வருத்தப்படத் தேவையில்லை.  பிடிப்பவன்மீது வருத்தப்படுபவன், தனது பிரச்சனைக்கு மற்றவரைக் காரணம்கூறி, உண்மையான பிரச்சனையைச் சந்திக்கப் பயப்படுபவனாக இருக்கலாம்.



------------


கம்பீர் ஜெயிப்பது மகிழ்ச்சிதான், ஆனால் அதற்காக சேவாக் தோற்கவேண்டியிருக்கிறது என்பதிலிருக்கிறது இந்த விளையாட்டின் அவலம். நல்ல வேளையாக நிஜ வாழ்க்கையானது இந்த விளையாட்டு அளவுக்கு சிக்கலானதாக இல்லை.

எந்த இரு மனிதருக்கும் உண்மையில் ஒரே தேவை இருக்கவே முடியாது. எனவே இன்னொருவரை தோற்கடிக்காமலெயே இயல்பான வெற்றிகளை அடையமுடிகிறது.

விளையாட்டு களத்தில் வெற்றியை மற்றோருவரிடமிருந்து மோதி பறிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் வாழ்கையில் வெற்றி எதிராளி இல்லாத வழியை கண்டடைவதில்  இருக்கிறது. எதிராளியோடு மோதுவதில் நேரத்தை இழப்பவன், தனது வாழ்கையை இழக்கிறான்.




04 மே 2012

மூன்று இட்டலிக்கு எவ்வளவு தண்ணீர்?

காரைக்குடி பேருந்து நிலையத்தில் இரவு உணவுக்காக பேருந்து  நின்றது. காரைக்குடியில் எப்போதுமே தரமான உணவுக்கு பிரச்சனையில்லை, அது பேருந்து நிலையமானாலும். உணவு முடித்தேன். மூன்று இட்டலி, சுவைக்குக் குறைவில்லை. பதினெட்டு ரூபாய். பேருந்தில் செல்லவேண்டுமே என பக்கத்துக் கடையில் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கினேன். அதுவும் பதினெட்டு ரூபாய்.

எனக்கு என்னவோ இது மிகவும் யோசிக்கவேண்டிய விஷயமாகத் தெரிந்தது. இலைபோட்டு சட்னி சாம்பாருடன் பரிமாறப்படும் இட்டலிக்குத் தரும் அதே பணத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்குத் தருகிறோமா?

மூன்று இட்டலிகள், சாம்பார் மற்றும் சட்னிக்கு கண்டிப்பாக ஒரு லிட்டரை விட அதிகமாக தண்ணீர் செலவாகியிருக்கும். அதை நம்மால் சாப்பிட முடிகிறது. ஆனால் தனியாக தண்ணீருக்கு பெப்சி நிறுவனத்துக்கு பணம் தருகிறோம் என்பதே ஒரு சிந்திக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. இதன் மூலம் அந்த இட்டலி வியாபாரியை, அவரது உழைப்பை அவமதிக்கிறோமா?

இதை அந்த இட்டலி வியாபாரி யோசிக்க ஆரம்பித்தால் நமக்கு அடுத்த தடவை இப்படி ஒரு விலையில் உணவு கிடைக்குமா எனத் தெரியவில்லை.

பேருந்தில் ஏறியபின் மற்ற பயணிகளையும் கவனித்தேன்.  பேருந்தில்  எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அந்தக் கடையில் தான் இட்டலி சாப்பிட்டாரா எனத் தெரியாது. ஆனால் நான் வாங்கிய  அதே தண்ணீர் பாட்டிலைத் தான் வாங்கியிருந்தார்.

பொதுவாக இதுபோன்று பயணங்களில் தண்ணீர் பாட்டில் வாங்குபவர்கள் வீட்டில் சாதாரண தண்ணீரைத் தான் குடிக்கிறார்கள். வீட்டில் Aquafina தண்ணீர் குடிப்பவர்கள் அரிது. பயணத்தில் மட்டும் மிக மிகச் சுத்தகரிக்கப் பட்டநீரைத் தான் குடிக்கவேண்டும் என்பது எழுத்தப்படாத சட்டமா அல்லது பதினெட்டு இருபது எனபது மிக சாதரணமாக நினைக்கும் அளவுக்கு இதியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதா என்பது ஒரு ஆய்வுக்குரிய விஷயம்.

பேருந்து நிற்குமிடத்தில் எங்கும் சிதறிக்கிடக்கும் காலி தண்ணீர் பாட்டில்களைப் பார்க்கும்போது இதில் உள்ள பிரச்சனை பணம் மட்டுமல்ல இந்தக் கலாச்சாரம் உருவாக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடும் தான் எனத் தோன்றுகிறது.

02 மே 2012

அவனும் இவனும் மற்றுமொரு ஆட்டுத்தொடையும்

அவனைச் சொல்ல ஏதுமில்லை, நான் தான் நேரம்கெட்ட நேரத்தில் போய் நின்றேன். சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். நானும் பார்த்தேன். எந்தக் கடைக்குச் சென்றாலும் கடைக்காரர் கேட்கும் முன் நாமாகக் கேட்கக்கூடாது என்பது நமது கொள்கை.

"என்ன சார்.. "

"ஒரு அரைக் கிலோ.." தொங்கிக் கொண்டிருந்த ஆட்டுத் தொடையைப் பார்த்தபடியே சொன்னேன். மதியம் மூன்றுமணிக்கு சாப்பிட்டுக் கொண்டிருப்பவனை தொந்தரவு செய்கிறோமே என்று கொஞ்சம் குற்றஉணர்வு. அவனும் நிமிர்ந்து நான் பார்த்துக்கொண்டிருந்த ஆட்டுக்காலைப் பார்த்தான். என்னை பார்த்தவன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.

தொங்கிக்கொண்டிருந்த ஆட்டுத் தொடையின் ஒரு பாகத்தைத் தான் அவன் காலையில் சமைத்து சாப்பிட்டுகொண்டிருக்கிறானோ என நினைத்தேன். ஒரே ஆட்டின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு வீடுகளில் உணவாக, ஒரு பகுதி மட்டும் அதே இடத்திலேயே உணவாகிறது. இதுதான் பகிர்ந்துண்டு வாழ்வது இல்லையா.

ஆனால் அவன் அமர்ந்திருந்த நிலையில், அவனது முகத்தைத்தான் பார்க்கமுடிந்ததே தவிர அவன் என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்பதை  என்னால் பார்க்கமுடியவில்லை என்பதால் எனது ஊகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதையும் இந்த இடத்தில குறிப்பிடவேண்டியிருக்கிறது.

எனக்கும் எந்த அவசரமும் இருக்கவில்லை. சாப்பிட்டுவிட்டே வரட்டும். அவன் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தால், இந்த மட்டன் சுவையாக இருக்கிறது என்று தானே அர்த்தம். எனவே நல்லது தான். உண்மையில் அவன் என்னைப் பார்த்தவுடனேயே தன் உணவை நிறுத்தியிருந்தால் தான் நான் யோசிக்கவேண்டியதாக இருந்திருக்கும். அவனே சாப்பிடமுடியாத அந்த ஆட்டுத் தொடையை நான் வாங்கிபோய் என்ன செய்வது?

ஆனால் தான் சாப்பிடும்பொழுது வரும் வாடிக்கையாளர்களை கவனிக்கவாவது ஒரு அப்ரசண்டீசை அவன் நியமிக்கவேண்டும் என அறிவுறுத்தலாம் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே,

"டேய்.." என ஒரு பலமான குரல் கொடுத்தான்.

உள்ளிருந்து இவனைவிட சற்று இளையவனாக இன்னொருவன் வந்து நின்றான்.

ஓகோ உள்ளே ஆளை வைத்துக்கொண்டுதான் இவ்வளவு நேரம் இருந்தானா? இவன் சாப்பாட்டைத் தொடரப் போகிறான், வந்தவன் எனக்கு வெட்டித் தரப்போகிறான் என்று நினைத்தேன். அப்படியே நடந்திருந்தால் எனக்கு எந்தக் குழப்பமுமில்லாமலிருந்திருக்கும். ஆனால் அப்படி நடப்பதில்லையே..

ஆமாம் அங்கு நடந்ததோ வேறு..

அவன் வந்ததும் இவன் சட்டென எழுந்து கையைக் கழுவிவிட்டு, ஆட்டுத் தொடையை வெட்ட ஆரம்பித்தான். அவன்..

27 ஏப்ரல் 2012

நானா?

யாவர்க்கும் இனியன் நீ
யாவர்க்கும் எளியன் நீ
யாவர்க்கும் வலியன் நீ

16 மார்ச் 2012

சாதனை நாயகன் சச்சின்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றொரு முக்கிய தினம். உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரரான  சச்சின் அடித்துள்ள நூறாவது சதம் இன்று. சச்சின் விளையாடும் எந்தொரு நாளுமே கொண்டாட்டம் தான் என்றாலும், இந்த நூறு இந்தக் கொண்டாட்டத்தை அதிகப் படுத்தும் ஒரு தருணம்.
 
சாதகமான காலம் மற்றும் சோதனையான காலம், இரண்டிலுமே அவர் காட்டிய சமநிலை எல்லாத் துறையினரும் கற்றுக்கொள்ளவேண்டிய பண்பாகும். விளையாட்டுத் திறமை மட்டுமலாமல், தனது குணநலன்கள் மூலம் சமகாலதின் மிகச் சிறந்த ஆளுமையாக சச்சின் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
 
வாழ்த்துகள் சச்சின்..
 
சாதனைகளால் மகிழ்ச்சி பரவட்டும். பரவும் மகிழ்ச்சியால் சாதனைகள்  பெருகட்டும்..